எபிஜெனெடிக்ஸ் எனும் உயிரியலின் ஒரு பிரிவு, மனிதனின் நடத்தைகளும் வாழ்க்கை அனுபவங்களும் அவரது டி.என்.ஏ-வை பாதிக்கின்றன என்பதையும், அதனால் தலைமுறை தலைமுறையாக அவை கடத்தப்படலாம் என்பதையும் ஆராயும் ஒரு துறை, இன்று விஞ்ஞானிகளால் ஆராயப்பட்டு வருகிறது. எனினும், யோகக் கண்ணோட்டத்தில், கடந்த காலத்தின் தாக்கம் நமது மூதாதையர்களையும் தாண்டி, இந்த கிரகத்தில் தோன்றிய முதல் உயிரினம் வரை செல்கிறது. இந்த கட்டுரையில், நெடுங்காலமாக பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டும் வரும் கர்மா என்ற சொல்லின் உண்மைப் பொருளை சத்குரு விளக்குகிறார். அதன் தாக்கங்கள் எவ்வளவு ஆழமாக வேரூன்றியுள்ளன என்பதை விவரிப்பதோடு, இந்த சிக்கலான அமைப்பை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான வழியையும் காட்டுகிறார்.

சத்குரு:

கர்மா என்றால் செயலோ அல்லது செயலின் தடயமோ நம்முள் நிலைத்திருப்பது. உங்கள் தந்தை செய்த செயல்கள் உங்கள் சூழ்நிலையில் மட்டுமல்லாமல், உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்கள் பெற்றோரிடமிருந்து விடுபடுவது அவ்வளவு எளிதல்ல! நீங்கள் 18 அல்லது 20 வயதில் இருந்தபோது, உங்கள் தந்தை அல்லது தாயை முற்றிலுமாக எதிர்த்தீர்கள், ஆனால் நீங்கள் 40 அல்லது 45 வயதை அடைந்தபோது, அவர்களைப் போலவே பேசத் தொடங்குகிறீர்கள், அவர்களைப் போலவே நடந்துகொள்ளத் தொடங்கி இருப்பீர்கள், மேலும் அவர்களைப் போலவே தோற்றமளிக்கிறீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எல்லா பெரிய கற்பனைகளும், உங்கள் ஆளுமையைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எல்லா பெரிய கருத்துகளும் மிகவும் தவறானவை.

இது வாழ்வதற்கான நம்பிக்கையற்ற முறை, ஏனெனில் இந்த தலைமுறை முந்தைய தலைமுறை வாழ்ந்ததைப் போலவே நடந்துகொண்டு, செயல்பட்டு, வாழ்ந்து, வாழ்க்கையை அனுபவிக்கப் போகிறது என்றால், இது வீணடிக்கப்பட்ட தலைமுறையே. இந்த தலைமுறை முந்தைய தலைமுறை கற்பனை கூட செய்திராத விதத்தில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். நீங்கள் தெருவில் ஏதாவது பைத்தியக்கார வேலை செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை, நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் விதம் முற்றிலும் மாற்றப்படலாம். அதை அடுத்த நிலை அனுபவத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.

மூலக் கூக்குரல்

ஆனால் கர்மா என்பது உங்களுடையதோ, உங்கள் தந்தையினுடையதோ அல்லது உங்கள் தாத்தாவினுடையதோ மட்டும் அல்ல. முதல் உயிரினம், அந்த பாக்டீரியா அல்லது வைரஸ், அந்த ஒற்றை செல் உயிரினத்தின் கர்மாவும் கூட இன்றும் உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்கள் உடலில் இருக்கும் பாக்டீரியாவின் வகையும் கூட, உங்கள் பெற்றோர்கள் அல்லது தாத்தா பாட்டிகளிடம் இருந்த பாக்டீரியாவின் வகையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட நடத்தை முறையைக் கொண்டுள்ளது. எனவே, உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எல்லா பெரிய கற்பனைகளும், உங்கள் ஆளுமையைப் பற்றி நீங்கள் கொண்டிருக்கும் எல்லா பெரிய கருத்துகளும் மிகவும் தவறானவை. இதனால்தான் நாங்கள் உங்களிடம் இது எல்லாமே மாயை என்று சொன்னோம், ஏனெனில் உங்களுக்குள் விஷயங்கள் நடக்கும் விதம், கிட்டத்தட்ட நீங்கள் செய்யும் அனைத்துமே கடந்த கால தகவல்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

நான் உங்களிடம், 'நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம், நாங்கள் உங்களைக் கவனித்துக் கொள்கிறோம் என்று சொல்கிறேன். வெறுமனே அமர்ந்து தினமும் 12 மணி நேரம் தியானம் செய்யுங்கள்' என்று சொன்னால், ஆரம்பத்தில் அது பெரிய பாக்கியமாகத் தோன்றலாம். ஆனால் ஒரு மாதத்திற்குப் பிறகு, உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அந்தப் பைத்தியக்காரத்தனத்தை நீங்கள் கடந்துவிட்டால், எல்லாவற்றையும் கடந்துவிடுவீர்கள். ஆனால் பெரும்பாலான மக்கள், அந்தப் பைத்தியக்காரத்தனம் தங்களுக்குள் எழும்போது விட்டுவிடுகிறார்கள். பித்துப் பிடித்ததைப்போல மாறி பயந்து ஓட முயல்வார்கள். ஏனெனில் அது எளிதான விஷயம் அல்ல. இது உங்கள் தந்தை, உங்கள் தாத்தா, உங்கள் முன்னோர்கள் மற்றும் அந்த பாக்டீரியாக்களின் கூக்குரல். பல மில்லியன் உயிர்கள் அனைத்தும் தங்கள் வெளிப்பாட்டைத் தேடி கூச்சலிடுவர். அவை அனைத்திற்கும் தங்களை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும். அவை உங்களை அவ்வளவு எளிதாக விட்டுவிடாது. உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் அவை துடிப்பதால் நீங்கள் அவற்றை புறக்கணிக்க முடியாது.

"அப்படியென்றால் நான் தப்பிக்க முடியாத வகையில் சிக்கிக்கொண்டேனா?" சிக்கிக்கொண்டது உண்மைதான், ஆனால் தப்பிக்க முடியாத வகையில் அல்ல. பசுபதனாக - அதாவது, ஒற்றை செல் உயிரினம் முதல் உயர்நிலை உயிரினம் வரையிலான விலங்கியல் தன்மையின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாக இருப்பதிலிருந்து, பசுபதியாக மாறும் வாய்ப்பு உள்ளது. "பசு" என்றால் உயிர், "பதி" என்றால் இறைவன், அதாவது அனைத்து உயிர்களுக்கும் இறைவன் - ஒருவர் இவை அனைத்தையும் கடந்து மேம்பட முடியும்.

விஷயங்களைக் கட்டுப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள்

கர்மா உங்கள் எதிரி அல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். எது என்னவென்ற விழிப்பற்று இருக்கும் நிலைதான் உங்கள் எதிரி. கர்மா என்பது உயிரின் பதிவு. ஒரு செல் உயிரினத்திலிருந்து மற்ற எல்லா வடிவங்கள் வரை, உயிரின் பதிவு இருப்பதால்தான் நீங்கள் இந்த உடலை இப்படி கட்டமைக்க முடிந்துள்ளது. இப்போது உங்கள் பௌதீக உடலில் நீங்கள் இருப்பதற்கான அடிப்படையே உங்கள் கர்மாதான். உங்கள் எல்லா கர்மாவும் உங்களிடமிருந்து நீக்கப்பட்டால், இந்த க்ஷணமே நீங்கள் உங்கள் உடலை விட்டுவிடுவீர்கள். இது உங்களுடைய பிளக்கைப் பிடுங்கி செயலிழக்கச் செய்வது போன்றது. கர்மா என்பது பசை போன்றது, அதுவே உங்களை உடலோடு இணைத்து வைத்திருக்கிறது.

நீங்கள் உங்கள் உடலையோ அல்லது மனதையோ மாற்ற வேண்டியதில்லை, நீங்கள் செய்ய வேண்டியது கட்டுப்பாட்டு அமைப்பு எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது தான். இப்போது, நீங்கள் காரில் அமர்ந்தால், நீங்கள் சீட்-பெல்ட் அணிந்து கொள்கிறீர்கள். சீட்-பெல்ட் என்பது ஒரு நல்ல விஷயம், அது உங்கள் உயிரைக் காப்பாற்றக்கூடும். ஆனால் நீங்கள் விரும்பும்போது திறக்க முடியாத வகையில் சீட்-பெல்ட் அணிந்துகொண்டால், இது உங்களுக்கு சிறையாக மாறிவிடும். நீங்கள் காருக்குள் நுழையும்போது, கதவை மூடுகிறீர்கள். இது ஒரு நல்ல விஷயம். ஆனால் நீங்கள் காருக்குள் சென்று கதவைத் திறக்க முடியவில்லை என்றால், அது மிக மோசமானது. கைப்பிடி எங்கே இருக்கிறது என்பதை மட்டும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு, உங்களிடம் மலை அளவு கர்மா இருந்தாலும் கூட, எந்தப் பிரச்சனையும் இல்லை.

பிரச்சனை கர்மாவால் வந்ததல்ல, நீங்கள் அதில் சிக்கிக்கொண்டதாலும் அதில் பின்னிப்பிணைந்து போனதாலும் தான் வந்துள்ளது. உங்களுக்கும் உங்கள் உடலுக்கு இடையேயும், உங்களுக்கும் உங்கள் மனதிற்கு இடையேயும் சிறிது இடைவெளி வந்தால், கர்மா எதுவாக இருந்தாலும், அது உங்கள் மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நீங்கள் இன்னும் உடலுடன் இணைந்து வாழ்வதற்கு அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம், உங்களின் தனித்துவமான குணங்களைத் தொடர்ந்து வைத்திருக்கலாம், ஆனால் அது உங்களை கட்டிப்போடும் விலங்காக இல்லாமல், முன்னேற உதவும் படிக்கல்லாக மாறிவிடும்.

குறிப்பு:

சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.