சத்குரு:

கர்மா என்ற சொல் மக்களின் மனதில் பல்வேறு விதமான புரிதல்களை ஏற்படுத்துகிறது. கர்மா என்றால் செயல். வெவ்வேறு நிலைகளிலான செயல். உடல், மனம், உணர்வு மற்றும் சக்தி ரீதியான செயல்கள் உள்ளன, இவற்றை நாம் கர்மா என்று அழைக்கலாம். செயல் இந்த நான்கு பரிமாணங்களை விட ஆழமாக ஊடுருவும் போது, அதை கிரியா என்று அழைக்கிறோம்.

பதினெட்டு அல்லது இருபது வயதில் இருந்தபோது, உங்கள் தந்தை அல்லது தாயை முற்றிலுமாக எதிர்த்தீர்கள், ஆனால் நீங்கள் நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதை அடைந்தபோது, அவர்களைப் போலவே நடந்துகொள்ளத் தொடங்கி இருப்பீர்கள்.

எனவே கர்மாமற்றும் கிரியா இரண்டுமே செயலையே குறிக்கின்றன. ஆனால் கர்மா என்பது அமைப்பில் எஞ்சியிருக்கும் வகையிலான தடத்தையோ அல்லது தாக்கத்தையோ ஏற்படுத்தும் வகையான செயல். அதாவது அந்த செயலின் பதிவும் வேதியியல் மாற்றங்களும் நம்முள் தங்கிவிடுகின்றன. கிரியா என்ற செயல் முற்றிலும் வேறுபட்ட ஒரு பரிமாணத்தில் பதிவாகி, நம்மிடம் தேங்கியுள்ள கர்மாக்களை அகற்றத் தொடங்கும்.

கர்மா பல்வேறு வகைகளையும், பல்வேறு அடுக்குகளையும், பல்வேறு பரிமாணங்களையும் கொண்டது. உங்கள் தந்தை செய்த செயல்கள் உங்களுக்குள் பல்வேறு வழிகளில் செயல்பட்டுக்கொண்டும் உங்களை செயல்படுத்திக்கொண்டும் இருக்கின்றன. இது உங்கள் சூழ்நிலையில் மட்டுமல்ல, உங்கள் உடலின் ஒவ்வொரு செல்லிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உங்களில் பலர் கவனித்திருக்கலாம், நீங்கள் பதினெட்டு அல்லது இருபது வயதில் இருந்தபோது, உங்கள் தந்தை அல்லது தாயை முற்றிலுமாக எதிர்த்தீர்கள், ஆனால் நீங்கள் நாற்பது அல்லது நாற்பத்தைந்து வயதை அடைந்தபோது, அவர்களைப் போலவே நடந்துகொள்ளத் தொடங்கி இருப்பீர்கள். நீங்கள் அவர்களைப் போலவே பேசுகிறீர்கள் மற்றும் செயல்படுகிறீர்கள். இது நம்பிக்கையற்ற வாழ்க்கை முறை, ஏனெனில் வாழ்க்கை மீண்டும் அதேபோல் திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டிருந்தால், இந்தத் தலைமுறை முந்தைய தலைமுறையைப் போலவே நடந்துகொண்டும், செயல்பட்டும், வாழ்ந்தும், வாழ்க்கையை அனுபவித்தும் கொண்டிருக்கப் போகிறது என்றால், இது ஒரு வீணான தலைமுறையாகும்.

இந்தத் தலைமுறை, முந்தைய தலைமுறை கற்பனை கூட செய்து பார்க்காத விதத்தில் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும். ஏதோ முட்டாள்தனமான ஒன்றைச் செய்வதன் மூலம் அல்ல, மாறாக நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் விதம் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உயிரின் பதிவுகள்

ஆனால் கர்மா என்பது உங்களுடையதோ அல்லது உங்கள் முன்னோர்களுடையதோ மட்டுமல்ல. முதல் ஒற்றை செல் உயிரினமான அந்த சிறிய பாக்டீரியா அல்லது வைரஸின் கர்மாவும் கூட இன்று உங்களுக்குள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சாதாரண அளவுள்ள உடலில் உங்களிடம் சுமார் 10 டிரில்லியன் மனித செல்கள் உள்ளன. ஆனால் உங்கள் உடலில் நூறு டிரில்லியனுக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் உள்ளன – பாக்டீரியாக்கள் உங்கள் செல்களை விட பத்து மடங்கு அதிகமாக உள்ளது! உங்கள் முகத்தின் தோலில் மட்டுமே 18 பில்லியன் பாக்டீரியாக்கள் உள்ளன. அவற்றை உங்களால் பார்க்க முடியாததற்கே நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அப்படி என்றால் நான் தப்பிக்க முடியாத வகையில் சிக்கிக்கொண்டேனா?" சிக்கிக்கொண்டது உண்மைதான், ஆனால் தப்பிக்க முடியாத வகையில் அல்ல.

உங்களில் ஒரு குறிப்பிடத்தக்க சதவீதம் உண்மையில் பாக்டீரியாக்கள்தான். மேலும் உங்களிடம் உள்ள பாக்டீரியாக்களின் வகை, உங்கள் முன்னோர்களிடம் இருந்த பாக்டீரியாக்களின் வகையைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட நடத்தை முறையைக் கொண்டுள்ளது. உங்கள் உடலிலும் மற்றவர்களின் உடலிலும் ஒரு பாக்டீரியா நடந்துகொள்ளும் விதம் மிகவும் வித்தியாசமானது, மேலும் இது இந்த பதிவைப் பொறுத்தே அமைகிறது.

நீங்கள் உங்களுடைய பெற்றோர்களிடம் இருந்து பெறும் பாக்டீரியாக்கள் கூட ஒரு குறிப்பிட்ட தன்மையுடன் வருகின்றன. இந்த பாக்டீரியாக்கள் ஒருவிதமான கர்மாவைக் கொண்டிருக்கின்றன. அவை உங்களுடைய வாழ்க்கையின் தன்மையை ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடத்திச் செல்கின்றன. எனவே கர்மா என்பது நீங்கள் செய்த நல்லதையோ அல்லது கெட்டதையோ பற்றியது அல்ல. கர்மா என்பது உயிரின் பதிவுகளே. இந்த உடலின் கட்டமைப்பே ஒரு செல் உயிரினத்தில் இருந்து மற்ற எல்லா வடிவங்கள் வரையிலான உயிரின் பதிவு இருப்பதால் தான்.

உங்கள் மூளைக்குள் ஊர்வன இனப் பிராணியின் மூளை இருக்கிறது என்பது மருத்துவ உண்மை, இது ஏறக்குறைய ஒரு முதலையின் மூளை அளவிற்கு இருக்கிறது. இப்போது நீங்கள் ஏன் எல்லோரிடமும் எரிந்து விழுகிறீர்கள் என்று புரிகிறதா?

உங்களைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த எல்லா பெரிய கற்பனைகளும் பொய்யானவையே. இதனால்தான் நாங்கள் உங்களிடம், "இது எல்லாமே மாயை" என்று சொன்னோம். ஏனெனில் உங்களுக்குள் விஷயங்கள் நடக்கும் விதம், கிட்டத்தட்ட நீங்கள் செய்யும் அனைத்துமே கடந்த கால தகவல்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

"அப்படி என்றால் நான் தப்பிக்க முடியாத வகையில் சிக்கிக்கொண்டேனா?" சிக்கிக்கொண்டது உண்மைதான், ஆனால் தப்பிக்க முடியாத வகையில் அல்ல. பசுபதனாக - அதாவது ஒற்றை செல் உயிரினம் முதல் உயர்நிலை உயிரினம் வரையிலான விலங்கியல் தன்மையின் ஒருங்கிணைந்த வெளிப்பாடாக இருப்பதிலிருந்து, பசுபதியாக மாறும் வாய்ப்பு உள்ளது - அதாவது இவை அனைத்தையும் கடந்து மேம்பட முடியும் என்ற சாத்தியம். மனித உடல் அமைப்பிற்குள், அமைப்பின் அடிப்படை கட்டமைப்பு (அது எலும்பியல் கூடு அல்ல, சக்தியின் கட்டமைப்பு) அல்லது சக்தியின் அடிப்படை திட்டவரைவில் 112 சக்கரங்கள் அல்லது சந்திப்பு புள்ளிகள் உள்ளன, அங்கு இவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.

இந்த அனைத்து சக்கரங்களும் நம்மிடம் தேங்கியுள்ள கர்மாவின் தாக்கத்தின்படியோ அல்லது இந்த வாழ்க்கை செயல்முறையை நடைபெறச் செய்யும் அமைப்பிற்குள் உள்ள கடந்த கால நினைவுகளின்படியோ செயல்படுகின்றன. ஆனால் உடலின் கட்டமைப்பிற்கு வெளியே இரண்டு சக்கரங்கள் உள்ளன, அவை பொதுவாக பெரும்பாலான மக்களிடம் மிகக் குறைந்த அளவிலோ அல்லது கிட்டத்தட்ட செயலற்ற நிலையிலோ இருக்கின்றன. ஆனால் போதுமான பயிற்சி செய்தால், அவை செயல்படத் தொடங்கும்.

114-வது சக்கரம் ஒரு குறிப்பிட்ட முறையில் துடிக்கிறது, இது பண்டைய காலம் முதலே ஔரோபோரோஸ் என விவரிக்கப்பட்டுள்ளது, அதாவது தனது வாலையே விழுங்கும் பாம்பின் சின்னம். இந்த சின்னத்தை ஏறக்குறைய எல்லா பண்டைய கலாச்சாரங்களிலும் காணலாம். இந்தியாவில் இதை கோவில்கள் முழுவதிலும் காணலாம், கிரேக்கம், எகிப்து மற்றும் மெசபடோமிய கோவில்களிலும் - ஏறக்குறைய எல்லா இடங்களிலும் காணலாம். இங்கு இருப்பதை விட அப்பாற்பட்டதில் அதிக கவனம் செலுத்திய அனைத்து பண்டைய கலாச்சாரங்களிலும் ஔரோபோரோஸ் சின்னத்தைக் காணலாம்.

தனது வாலையே விழுங்கும் பாம்பின் சின்னம், Ouroboros, Snake and Infinity symbol

இன்று, நவீன கணிதம் முடிவிலியின் அடையாளமாக ஔரோபோரஸை பயன்படுத்துகிறது. 114வது சக்கரம் முடிவிலி வடிவில் துடிக்கிறது. உள்ளிருக்கும் இந்தப் பரிமாணத்தை உங்கள் சக்திகள் தொடும்போது, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும், எதைச் செய்தாலும் அது உச்சபட்ச விடுதலையின் செயல்முறையாகவே மாறுகிறது, ஏனெனில் செயல் இனி உங்களுடையது அல்ல, அது முடிவிலியின் இயல்பைக் கொண்டது. ஒருவரின் சக்திகள் 112 சக்கரங்களுக்குள் இருந்தால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் எச்சத்தை விட்டுச் செல்கிறது, எனவே உங்கள் மீது இனிமையான எச்சத்தை விட்டுச் செல்லும் சரியான செயல்களை செய்வதே சிறந்தது.

மூலக் கூக்குரல்

செயல்பாடு உங்களை சிக்க வைக்கிறதா அல்லது உச்சபட்ச விடுதலைக்கான செயல்முறையாக இருக்கிறதா என்பது அடிப்படையில் ஒருவரது யோக சாதனாவின் நிலையையும், செயல் செய்யப்படும் மனப்பான்மை மற்றும் விருப்பத்தையும் பொறுத்தது. மக்கள் தங்கள் வாழ்க்கையில் தேவையான செயல்பாடுகளை செய்யாமல் யோக சாதனாவை செய்ய முயற்சித்தால், சாதனா ஒரு பெரிய துன்பமாக இருக்கும்.

நீங்கள் தினமும் 12 மணி நேரம் தியானத்தில் அமர முயற்சித்தால், ஆரம்பத்தில் அது பெரிய பாக்கியமாகத் தோன்றும். ஆனால் ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும். அந்த பைத்தியக்காரத்தனத்தை நீங்கள் கடந்துவிட்டால், எல்லாவற்றையும் கடந்துவிடுவீர்கள். ஆனால் பெரும்பாலான மக்கள், தங்களுக்குள் அந்த பைத்தியக்காரத்தனம் எழும்போது விட்டுவிடுகிறார்கள், ஏனெனில் அது எளிதான விஷயம் அல்ல. இது உங்கள் தந்தை, உங்கள் தாத்தா, உங்கள் முன்னோர்கள் மற்றும் அந்த பாக்டீரியாக்களின் கூக்குரல். அவர்கள் அனைவரும் வெளிப்பாட்டைத் தேடி கூச்சலிடுவர். அவர்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள். நீங்கள் அவர்கள் அனைவரையும் அழித்துவிடலாம், ஆனால் அது நிறைய யோக சாதனா தேவைப்படும் கடினமான பாதை. அல்லது நீங்கள் உங்களை அவற்றிடமிருந்து விலக்கிக் கொள்ளலாம் - அவை கத்தட்டும், ஆனால் நீங்கள் கேட்காததால் அது உங்களுக்கு ஒரு பொருட்டல்ல. இவை இரண்டு வெவ்வேறு வழிகள், ஆனால் உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவிலும் துடிப்பதால் உங்களால் அவர்களை புறக்கணிக்க முடியாது.

இதிலிருந்து உங்களை விலக்கிக்கொள்ள நிறைய செயல் செய்ய வேண்டியிருக்கும். அல்லது வெறும் பக்தி மட்டுமே போதுமானது. நீங்கள் தானாகவே செய்ய வேண்டும் என்றால், அதற்கு அதிக உழைப்பு தேவைப்படும். நீங்கள் அருளின் துணையுடன் பயணிக்க விரும்பினால், உழைப்பு தேவையில்லை, ஆனால் நீங்கள் ஓட்டுநர் இருக்கையில் இருக்க மாட்டீர்கள். எனவே நீங்கள் பல அபாயங்கள் அடங்கிய ஓட்டுநர் இருக்கைக்கு வரவேண்டும் அல்லது நிபுணத்துவம் வாய்ந்த ஓட்டுநர் வாகனத்தை ஓட்டுவார், நீங்கள் பின் இருக்கையில் அமர்ந்து தூங்கலாம். நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு சென்றடைந்துவிடுவீர்கள் என்கிறபோது, எப்படி சென்றடைகிறீர்கள் என்பது ஒரு பொருட்டே அல்ல.

குறிப்பு:

சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.