PCOS in Tamil: இளம்பெண்கள் கர்ப்பப்பை பிரச்சனைகளில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?
ஆண்களை விட இன்றைய பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் ஏன் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதை கூறும் சத்குரு, PCOS போன்ற கர்ப்பப்பை பிரச்சனைகள் வருவதற்கான காரணங்களையும், அதற்கான தீர்வாக ஹடயோகா விளங்குவதையும் பற்றி விரிவாக பேசுகிறார்.

சத்குரு: இன்றைக்கு உலகம் செயல்படுகிற விதத்தாலும் வாழ்க்கையில் பல அம்சங்கள் அமைக்கப்பட்டுள்ள விதத்தாலும் ஆண்களை விட பெண்கள் தங்களுடைய ஆரோக்கியத்தின் மேல் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால், இயற்கை மிக மிக விரிவான இனப்பெருக்க அமைப்பை பெண்ணுக்கு உண்டாக்கிக் கொடுத்திருக்கிறது.
இளம்பெண்களின் கர்ப்பப்பை பிரச்சனைகள் (PCOS in Tamil)
நாம் எல்லோருமே பெண்ணுடைய கருவறையில் இருந்து தான் பிறந்திருக்கிறோம். இதனால் மிக மிக விரிவான அமைப்பு அவர்களுக்குள் இருக்கிறது. கடந்த காலத்தில், ஒரு பெண் தன்னுடைய 15, 16 வயதிலிருந்தே அவர்களுடைய இனப்பெருக்க அமைப்பை பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்.
அவர்கள் வாழ்க்கை முழுக்க பயன்படுத்துவார்கள் அல்லது இனப்பெருக்க காலம் முடியும் வரைக்கும் பயன்படுத்துவார்கள். ஏதோவொரு விதத்தில் அது பயன்பாட்டிலேயே இருக்கும். ஒரு பெண்ணுக்கு ஆறு, ஏழு அல்லது எட்டு குழந்தைகள் இருப்பார்கள். அவர்களின் வாழ்நாள் முழுக்க குழந்தை பிறப்பு நடந்துகொண்டே இருக்கும். இதனால் இனப்பெருக்க உறுப்புகள் குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தப்பட்டது.
இந்த காரணத்தினால், இன்றைக்கு பெண்களுக்கு ஏற்படுகிற சிக்கல்களை அந்த காலத்துப் பெண்கள் சந்திக்கவில்லை. அது மட்டுமல்லாமல் ஆண்களும் பெண்களும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபட்டார்கள். கடுமையான உடல் உழைப்பால் வயிற்றை சுற்றி கொழுப்பு சேரவில்லை. ஒரு இளம் வயது பெண்ணிற்கு வயிற்றில் கொழுப்பு சேர்ந்தால், அவர் நோயை அழைக்கிறார் என்று அர்த்தம். இதில் மாற்று கருத்துக்கே இடமில்லை! அது எவ்வளவு சீக்கிரமாக வரும்? அல்லது தள்ளிப்போகும் என்பதற்கு பல்வேறு மரபணு சார்ந்த காரணங்களும், வாழ்க்கை சூழ்நிலையும் காரணமாக இருக்கிறது.
ஆனால், வயிற்றில் கொழுப்பு சேர்ந்தால் அந்த இளம் பெண் நிச்சயமாக பிரச்சனையை கூப்பிடுகிறார் என்றுதான் அர்த்தம். நிச்சயமாக பிரச்சனை வரும்.
உடல் உழைப்பின் முக்கியத்துவம்
Subscribe
போதுமான உடல் உழைப்பு இல்லாதது தான் இதற்கு காரணம். உடல் உழைப்பு என்று நான் சொல்லும்போது... அவர்கள் அலுவலகத்தில் வேலை செய்யலாம், ஆனால் அதை உடல் உழைப்பு என்று சொல்லமுடியாது. அது உடலுக்குத் தேவையான உடற்பயிற்சியை தருவதில்லை. வயலில் வேலை பார்த்தால், அது வேறு விஷயம்! இன்று நகரப் பெண்களுக்கு ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு முக்கியமான காரணம் தேவையான உடற்பயிற்சி இல்லாததுதான்.
அப்படியே அவர்கள் செய்தாலும் காலையில் அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமும் செய்கிறார்கள். மற்ற நேரமெல்லாம் உட்கார்ந்து கொண்டே இருக்கிறார்கள். வயிற்றுப் பகுதிக்கு போதுமான உடற்பயிற்சி இல்லாதது தான் முக்கியமான காரணம். அது ஒரு காரணம், இன்னொரு காரணம் இனப்பெருக்க அமைப்புகள் போதுமான அளவுக்கு பயன்படுத்தப்படுவதில்லை.
பெண்களுக்கு உதவும் ஹடயோகா
21 வயதுக்கு முன்பாக ஒருவர் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை என்றால் நிச்சயமாக அவர்கள் ஹடயோகா செய்ய வேண்டும். நீங்கள் ஜிம்முக்கு போகலாம் ஓடலாம் என்னென்னவோ செய்யலாம். ஓடுவது ஓரளவுக்கு துணையாக இருக்கும் ஆனால் நீங்கள் சும்மா ஜிம்முக்கு மட்டும் சென்றால் தசைகள் இருக்கும் fit ஆகத் தெரிவீர்கள், ஆனால் அது போதுமானதாக இருக்காது.
நீங்கள் தீவிரமாக ஹடயோகா செய்ய வேண்டும். ஒரு பெண் குழந்தை 12 வயதிலிருந்து ஹடயோகா செய்ய ஆரம்பித்தால், பருவத்தின் பல்வேறு கட்டங்களில், பிரச்சனை என்று மக்கள் நினைக்கும் பல்வேறு விஷயங்களைக் கூட, இந்த பெண் மிகவும் சுலபமாகக் கடந்து போய்விடுவார். குழந்தை பெற்றுக்கொள்ளாமலேயே ஒரு பெண் தன்னுடைய இனப்பெருக்கம் சார்ந்த ஆரோக்கியத்தை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றால், ஹடயோகா மிக மிக முக்கியமானது.
ஒரு சில பயிற்சிகளை அவர்கள் செய்வது மிகவும் முக்கியம். குறிப்பாக நெஞ்சு பகுதிக்கும், வயிற்றுப் பகுதிக்கும் குறிப்பிட்ட விதமான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். வேறு எந்தவொரு பயிற்சி முறைகளும் ஹடயோகா வேலை செய்வது மாதிரி வேலை செய்யாது. ஹடயோகா, அந்தப் பகுதிகளுக்கு சிறப்பான பயிற்சி தரும்.
குறிப்பிட்ட சில ஆசனங்களையும் செயல்முறைகளையும் நாம் கற்றுத்தர முடியும். அதை அவர்கள் தொடர்ந்து செய்து வந்தால், தேவையில்லாத மருத்துவ உபாதைகளுக்குள் அவர்கள் போக வேண்டியதில்லை.
மனநிலை சார்ந்த காரணங்கள்
ஏனென்றால், இன்றைக்கு நோய்வாய்படுகிறவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே வருகிறது. இதில் இன்னொரு பரிமாணமும் இருக்கிறது. இன்றைக்கு நகரப் பெண்கள் ஏதோவொரு காரணத்தினால் எப்போது பார்த்தாலும் மன உளைச்சலிலேயே இருக்கிறார்கள்.
ஒரு சமயத்தில் குடும்பத்தைப் பற்றி கவலைப்பட்டார்கள்; அடுத்து குழந்தைகள்; அடுத்து கணவர். அதுவும் இல்லை என்றால், நண்பர்களால் கவலைப்படுகிறார்கள். உலகத்தில் எந்த இடத்திலிருந்து வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நண்பர்கள் உங்களைக் காயப்படுத்திவிட முடியும். ஒரு மெசேஜ் போதும், அடுத்த மூன்று நாளைக்கு நீங்கள் கவலைப்படுவீர்கள். காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். நான் யாரையும் எதையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை. எல்லோருமே கவலையிலேயே இருக்க வேண்டும் என்று ஒரு விதி மாதிரி இன்றைக்கு ஆகிவிட்டது. இதையும் கூட மிகவும் சுலபமாக வழிக்குக் கொண்டுவர முடியும்.
தீர்வாகும் யோகா
யோகா செய்வதின் மூலமாக உடம்பின் அடிப்படை ரசாயனத்தையே சமநிலைப்படுத்த முடியும். இது வருங்காலத்திற்கான சிறப்பான தீர்வாகவும் அமையும். இல்லையென்றால் நோய்வாய்ப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். கிராமப் பெண்கள், ஆதிவாசி பெண்கள் இவர்கள் எல்லோரையும் சேர்த்தாலும் கூட, இன்றைக்குப் பொதுவாக, குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது 22 ஆகிவிட்டது. வரப்போகிற 25 வருடங்களில் அது 35க்கு போய்விட வாய்ப்பு இருக்கிறது அது நல்லதும் கூட...!
ஆனால், குழந்தை பெற்றுக்கொள்ளும் வயது 35 ஆகிவிட்டதென்றால், இளம் பெண்கள் தங்களை சரியாக பார்த்துக் கொள்ளவில்லை என்றால், அவர்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள் பல மடங்காக ஆகிவிடும். தன்னை நன்றாக பார்த்துக் கொள்வதென்றால், மருந்து சாப்பிடுவது பற்றி நான் சொல்லவில்லை. டாக்டரிடம் போவது பற்றி சொல்லவில்லை. உடம்பில் ஒரு சமநிலையை ஏற்படுத்த யோகப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும்.
உடலில் ரசாயன சமநிலை என்பது இருக்கிறது; ஹார்மோன் சமநிலை என்பது இருக்கிறது. சுரப்பிகள் சுரப்பதும் சமநிலையோடு நடக்க வேண்டும். இது எல்லாமே சமநிலையுடன் நடந்தால், தேவையில்லாமல் நோய்வாய்ப்படுவது ஏற்படாது.
எப்போதுமே ஒரு குறிப்பிட்ட சாரார் நோய்வாய்ப்படத்தான் செய்வார்கள். அது வேறு பிரச்சனை! ஆனால், இப்போது இயற்கைக்கு மாறான அளவுகளில் நோய் வருகிறது. சமூகம் தேவையில்லாத அளவுக்கு நோய்வாய்ப்படுகிறது. அதை குறைத்துக்கொள்ள வேண்டும், இது மிக மிக முக்கியம்!