3 ஜுலை 2023, இரவு 9:30 மணி IST
வெயில்கால கதிர்திருப்பத்திற்குப் பின் வரும் முதல் பௌர்ணமி (ஆனி மாதம்) குரு பௌர்ணமி எனப்படுகிறது. ஆதியோகியாம் சிவனிடம் இருந்து அவரது 7 சிஷ்யர்களான சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானம் பரிமாறப்பட்ட முதல் நாள், ஆதியோகியாம் சிவன் ஆதிகுருவாக பரிணமித்த திருநாள், குருபௌர்ணமித் திருநாள். ஆதிகுரு பரிமாறிய ஞானத்தை சப்தரிஷிகள் உலகமெங்கும் கொண்டு சேர்த்தனர். இன்றும்கூட உலகின் எந்த மூலையில் ஆன்மீக செயல்முறை பின்பற்றப்பட்டாலும் அது ஆதியோகி சிவன் உருவாக்கிய அடித்தளத்தில் இருந்தே வேர்விட்டுள்ளது.
குரு எனும் வார்த்தைக்கு சமஸ்கிருதத்தில் "இருளை அகற்றுபவர்" என்று பொருள். குரு என்பவர், தேடுதலில் இருப்பவரின் அறியாமையை நீக்கி, அவருக்குள் இயங்கும் படைப்பின் மூலத்தை உணர வழி செய்பவர். நம் பாரம்பரியத்தில் குருபௌர்ணமி அன்று, தேடுதலில் இருப்பவர்கள் தம் நன்றியை குருவிற்கு வெளிப்படுத்தி அவரிடம் ஆசி பெறுவார்கள். யோக சாதனாவில் ஈடுபடவும், தியானம் செய்யவும் குருபௌர்ணமி உகந்த நாள்.