மஹாபாரதம் பகுதி 68: சுழலும் வாழ்க்கை மற்றும் கர்மாவில் இருந்து விடுபடுங்கள்
வாழ்க்கை ஏன் ஒரு சுழற்சியில் இருக்கிறது? கர்மாவின் சக்கரங்கள் இடையறாது ஓடிக்கொண்டே இருக்கிறதா? தனது கர்மாவைக் கரைப்பதில் ஒருவர் கடைபிடிக்கும் தர்மம் என்ன பங்காற்றுகிறது? ஒருவரின் தர்மம் ஏற்கனவே விதிக்கப்பட்டிருப்பதோடு மாற்றவும் முடியாததா? சரியான சாதனாவை மேற்கொள்வது ஒருவரின் தர்மத்தை கண்டறிய உதவுமா? வாழ்வியல் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு ஆழமாகவும், தெளிவாகவும் இந்த பகுதியில் நமக்கு பதிலளிக்கிறார் சத்குரு.

கேள்வியாளர்: சத்குரு, வாழ்க்கையின் சுழற்சி பற்றி பேசிக்கொண்டிருந்தீர்கள், ஏன் இந்த சுழற்சிகள்? அதோடு, தர்மம் என்பது நாம் தேர்ந்தெடுப்பதா அல்லது நாம் கண்டறிவதற்காக காத்துக்கொண்டிருக்கும் ஒன்றா?
சத்குரு:மனிதர்களின் சிந்தையில் உதிப்பதற்கு முன்பாகவே இயற்கை சக்கரத்தை உருவாக்கி வைத்திருந்தது. மனிதர்கள் சக்கரத்தை கண்டுபிடிக்கவில்லை - வெறுமே தங்கள் கண்களைத் திறந்து அதை பார்க்க வேண்டியிருந்தது. எப்போதும், எல்லா இடங்களிலும், எத்தனையோ விதங்களில் சக்கரம் இருந்தே வருகிறது. பொருள்தன்மையான அனைத்தும் இயல்பாகவே ஒரு சுழற்சியில் இருக்கிறது. இந்த பூமிப் பந்து முக்கோண வடிவாக இல்லை - வட்டமாகத்தான் இருக்கிறது. கிட்டத்தட்ட இந்த பிரபஞ்ச பெருவெளியில் உள்ள அனைத்து பொருட்களுமே வட்டமாகவே இருக்கிறது. பொதுவாக வட்டவடிவமான பொருட்கள் குறைந்தபட்ச உராய்வுடன் நகரும். இருப்பதிலேயே திறம்பட்ட இயக்கம் வட்டவடிவம் என்பதால் அனைத்தும் இயற்கையாகவே சுழற்சியில் இருக்கிறது. இதைவிட மிகச் சிறப்பான இயக்கவியல் வேறெதுவும் இல்லை.
Subscribe
பொருள்தன்மையான படைத்தலின் இயல்பு ஏன் சுழற்சியில் இருக்கிறது
எங்கெல்லாம் ஸ்தூல வடிவில் பொருள்தன்மையும் இயக்கமும் இருக்கிறதோ, அது இயல்பாகவே வட்டமான வடிவத்தை எடுக்கும், ஏனென்றால் இப்படித்தான் இந்த பிரபஞ்சமே இருக்கிறது. இது படைத்தவனின் புத்திசாலித்தனம். இவையே இயற்பியலின் விதிகள். சூரியனை சுற்றி வரும் பூமியின் பாதை நீள்வட்ட வடிவில் இருப்பதால், இப்போது இந்த பிரபஞ்ச வெளியில் மிக வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதையே நீங்கள் மறந்துவிடும் அளவிற்கு பூமி மிக இலகுவாக நகர்கிறது. மிகக் குறைந்தபட்ச உராய்வுடன் பூமி நகர்ந்தாலும், உராய்வு இருக்கத்தான் செய்கிறது. மிகச்சிறிய அளவிலான இந்த உராய்வின் காரணமாக கால ஓட்டத்தில் இந்த பிரபஞ்சம் உருக்குலையும். அனைத்திற்கும் ஒரு ஆரம்பமும் முடிவும் இருக்கிறது. இது ஒரு இயற்பியல் விதி. நீங்கள் இங்கே இருப்பதே பொருள்தன்மையான ஒரு ஸ்தூல சரீரம் உங்களுக்கு இருப்பதால் தான். ஸ்தூல சரீரம் உள்ள உயிர்களுக்கு ஒருவிதமான விதிகள் இருக்கிறது, ஸ்தூல சரீரமற்ற உயிர்களுக்கு வேறுவிதமான விதிகள் இருக்கிறது. இதனால் தான் அர்ஜுனனிடம் ஊர்வசி, "நான் மனிதப் பிறவி அல்ல, எனவே உங்களுடைய விதிகள் எனக்கு பொருந்தாது. எனக்கான விதிகள் வேறுவிதமானவை, ஏனென்றால் எனக்கு ஸ்தூல வடிவம் இல்லை. என்னுடைய சரீரம் ஆகாயத் தன்மையானது, வெறுமனே பொருள்தன்மையான ஸ்தூல உடல் அல்ல" என்று கூறுகிறாள்.
மனிதனாக இருப்பதில் உள்ள தனித்த சவால்
இன்றைய நவீன விஞ்ஞான மொழியில் அழைப்பதென்றால் மனிதர்கள் ஓரளவு ஹைபிரிட் தொழில்நுட்ப தன்மையானவர்கள். பொருள்தன்மையான ஒரு பரிணாமம் உங்களுக்கு இருக்கிறது, அதேநேரத்தில் மற்றொரு பரிணாமமும் இருக்கிறது இதனால் தான் நீங்கள் சிரமப்படுகிறீர்கள். வெறுமனே பொருள்தன்மையான உயிராக மட்டுமே இருந்தால் அதற்கான விதிகள் மிக எளிமையானதாக இருந்திருக்கும். ஒரு மனிதன் என்பவன் ஒரு விமானத்தைப் போல, அது ஒரு வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது, அதன் இருக்கைகள் வேறொரு வேகத்தில் செல்கிறது, அதில் உள்ள பயணிகளின் வேகம் முற்றிலும் வேறு ஒன்றாக இருக்கிறது. இது உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த பூமி பந்தும் உங்கள் உடலும் ஒரு வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது, உங்கள் மனதின் வேகம் வேறாக இருக்கிறது, உங்கள் உயிர் முற்றிலும் வேறு ஒரு வேகத்தில் பயணிக்கிறது. ஆனால் இந்த மூன்றையும் நீங்கள் சமநிலையில் வைக்க வேண்டியிருக்கிறது.
உங்கள் உயிர் பொருத்தமான இடத்தில் நிலை நின்று, உங்கள் மனம் அதற்கு ஒத்திசைவாக இருந்தால், நீங்கள் ஒரு மிகச்சரியான உயிராவீர்கள். அது ஓரிடத்தில் நிலைகொள்ளவில்லை என்றால், நீங்கள் அலைக்கழிந்து உங்களிடம் என்ன தவறு இருக்கிறது என்பதைக்கூட அறிய முடியாமல் திணறுவீர்கள். அதாவது, என்னிடம் ஏதோ தவறு இருக்கிறதே என்று பார்க்குமளவு உங்களிடம் பணிவு இருந்தால். பெரும்பாலான மனிதர்கள் தங்களிடம் அருவெறுக்கத்தக்க ஏதோ ஒன்று இருக்கிறது என்பதையே உணர்வதில்லை; தாங்கள் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். வாழ்க்கையின் எந்த ஒரு அம்சமானாலும் சரி, அதன் முழுமையையும் ஆழத்தையும் அறியும் வரை தொடரும் விருப்பத்தோடு நீங்கள் இருந்தால், அதுவே படைத்தலின் மூலத்திற்கு, படைத்தவனிடமே உங்களை அழைத்துச் செல்லும் பாதையாகும்.
உங்களுடைய தனிப்பட்ட தர்மம் ஏன் இளகியதாக இருக்க வேண்டும்
உங்களுடைய அடிப்படையான தர்மம் என்பது நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளக் கூடியதல்ல. வாழ்க்கைக்கான விதிகள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ளது - நீங்கள் வெறுமே அதை உணர வேண்டும். ஆனால் நீங்கள் அதை உணர வேண்டுமென்றால் உங்களுக்குள் நீங்கள் ஒரு தர்ம நிலையில் இருக்க வேண்டும். உங்களுக்கென ஒரு தர்மம் ஏன் இருக்க வேண்டுமென்றால், உங்களிடம் உங்களுக்கான தனிப்பட்ட கர்மா இருக்கிறது. உங்களுக்கென தனித்த கர்மப் பிணைப்புகள் இருப்பதால், உங்களுக்கென தனியாக சிறிதளவு தர்மத்தை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆனால் உங்கள் தர்மத்தையே மிகப்பெரிதாக ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய மிகச் சிறிய தர்மத்தை விட இந்த எல்லையற்ற பிரபஞ்சத்தின் தர்மம் மிக முக்கியமானது. உங்களுடைய மிகச் சிறிய தர்மம் தொடர்ந்து உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் சீர்செய்யப்பட்டே வரவேண்டும். நேற்று எது உங்களுக்கு தர்மமாக இருந்ததோ, அது இன்றும் அப்படியே இருக்கமுடியாது. உச்சபட்ச விதி என்பது எக்காலத்திற்கும் நிலையானது. ஆனால் உங்களுக்கென நீங்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ள தர்மத்தை நிலையான தர்மத்துடன் பொருந்தச் செய்ய வேண்டுமென்றால், அதை தொடர்ந்து கவனித்து வரவேண்டும். இதுதான் சாதனா என்பதன் அர்த்தம்.
சரியான சாதனா எப்படி உங்கள் தனிப்பட்ட தர்மத்தை சீர்செய்கிறது
தேவையான பக்தியுடன் நீங்கள் தினமும் உங்கள் சாதனாவை செய்து வந்தால், ஒவ்வொரு நாளும் பயிற்சி வித்தியாசப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். மிகச் சிறிய விஷயங்களையும் கவனிக்கும் திறனோடு நீங்கள் இருந்தால், பயிற்சியின் அனுபவம் மட்டுமல்ல, பயிற்சியே வித்தியாசமாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். தினமும் பயிற்சி செய்வதால் நீங்கள் மேம்படுகிறீர்கள் என்று இதற்கு அர்த்தமல்ல. ஒருவேளை ஆரம்பத்தில் ஒரு மாதம் வரை வேண்டுமானால் அப்படி இருக்கக்கூடும். இதுதான் சாதனாவின் அழகு. உங்களுக்கு சரியான முறையில் சாதனா வழங்கப்படும் போது உங்கள் தர்மத்தை பிரபஞ்ச விதிகளுக்கு ஏற்ப பொருந்தும்படி செய்வது பற்றி நீங்கள் பெரிதாக கவலைப்படத் தேவையில்லை. அது தொடர்ந்து தன்னைத்தானே சரிசெய்துகொள்ளும்.
யோகா என்றால் ஒன்றிணைதல், அதற்கு சாதனா ஒரு கருவி. இந்த பிரபஞ்சத்துடன் ஒன்றிணைதலை அடைவதற்கும், ஒத்திசைவாக இருப்பதற்கும் யோக சாதனா ஒரு கருவியாக இருக்கிறது. உங்கள் கர்ம பதிவுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு நாளும் இயல்பாகவே சாதனா தன்னை சீரமைத்துக்கொள்கிறது. நீங்கள் சீரமைக்கத் தேவையில்லை. தனக்கென தனித்த ஒரு புத்திசாலித்தனத்தை சாதனா தன்னகத்தே கொண்டிருக்கிறது.
தொடரும்...
மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.