இஞ்சி பயன்கள் (Benefits of Ginger in Tamil)
நம் பாரம்பரிய சமையலில் சைவ மற்றும் அசைவ பதார்த்தங்களில் சுவைக்காக மட்டுமல்லாமல் மருத்துவ பலன்களுக்காகவும் சேர்க்கப்படும் இஞ்சியின் வரலாறு குறித்தும், அதன் வேதியியல் தன்மை குறித்தும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் அற்புதம் குறித்தும் மற்றும் இஞ்சியைப் பயன்படுத்தி செய்யப்படும் சுவைமிகு பதார்த்தங்கள் குறித்தும் இந்த பதிவு அமைகிறது!

பண்டைய காலத்தில் இஞ்சியின் பயன்பாடு
பன்னெடுங்காலமாய், இஞ்சி இந்தியா மற்றும் சீனாவில் விளைவிக்கப்பட்டு, சமையலில் முக்கிய பொருளாகவும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பழைய மருத்துவ குறிப்புகளைப் பார்த்தால், இஞ்சி பச்சையாகவும் காயவைத்தும் மருத்துவமுறைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என அறியப்படுகிறது.
கி.மு 4ஆம் நூற்றாண்டு சீன நாட்டு குறிப்புகளின் படி இஞ்சி வயிறு சம்பந்தமான உபாதைகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும், வயிற்றுப்போக்கு, காலரா, பல் வலி, ரத்தக்கசிவு போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருந்து வந்துள்ளது தெரிகிறது. சீன மூலிகையாளர்களும் கூட இஞ்சியை இருமல் மற்றும் சளி தொந்தரவுகளுக்கு மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள்.
5ஆம் நூற்றாண்டில் ஸ்கர்வி எனப்படும் விட்டமின் சி குறைபாட்டினால் உண்டாகும் நோய்க்கு இஞ்சியை மருந்தாக சீனர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்தியாவில் ஆயுர்வேத குறிப்புகளில் இஞ்சி மிக முக்கிய மூலிகைப் பொருளாக முன்னிறுத்தப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவ பயிற்சியாளர்கள் இஞ்சியை ஜீரணசக்தியை பெருக்குவதற்காகவும் பசியைத் தூண்டுவதற்காகவும் உடலின் நுண்ணிய பாதைகளை சுத்திகரிப்பதற்காகவும் சக்திவாய்ந்த மருந்தாகவும் பரிந்துரைக்கின்றனர். உடல் தசைகளுக்கு வலுவூட்டக் கூடிய ஊட்டச்சத்துகளை மேம்படுத்துகிறது. மேலும், இஞ்சி ஆயுர்வேதத்தில் மூட்டு வலிகளுக்கும், சுவாசப் பிரச்சனைகளுக்கும் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
இத்தகைய அளப்பரிய பயன்பாடுகளால் இஞ்சி ஐயாயிரம் வருடங்களாக சமையலில் மசாலாப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கீழ்க்கண்ட இக்கால நோய்களுக்கும் இயற்கை மருத்துவ தீர்வாக இஞ்சி உள்ளது.
இஞ்சி பயன்கள்
#1 பிரபல ஜீரண மருந்து:
வயிற்றுக் கோளாறுகளுக்கு நிவாரணம்..
தொன்மையான கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக, பல்லாண்டு காலமாகவே இஞ்சி சிறந்த ஜீரண ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடலிறக்க பிரச்சனையில் வயிற்றுப்பகுதி தசைகளுக்கு வலுசேர்த்து உதவுவதுடன், வாயு சம்பந்தமான பிரச்சனைகளை களைந்து வயிற்று மந்தம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
உணவிற்கு முன் இஞ்சித் துண்டுகளுடன் உப்பு சேர்த்து சாப்பிடும்போது உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கப்பட்டு ஜீரணத்திற்கு உறுதுணையாக அமைவதோடு வயிறு தொடர்பான பிரச்சனைகளும் தவிர்க்கப்படுகின்றன. முழு உணவிற்குப் பின், இஞ்சி டீ குடிப்பதன் மூலம் வாயுத் தொந்தரவுகள் குறைகிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகள் தீவிரமாக இருக்கும்போது இஞ்சி சாப்பிட்டு வருவதால் ஃபுட் பாய்சனிங் தவிர்க்கப்படுகிறது.
நாட்பட்ட அஜீரணக் கோளாறான டைஸ்பெப்ஸ்யாவிற்கு (dyspepsia) பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுவலியை குணமாக்குவதோடு, பாக்டீரியாவால் உண்டாகும் வயிற்றுப்போக்கையும் குணமாக்குகிறது.
#2 குமட்டலுக்கான சிகிச்சை:
பயண வாந்திக்கு நிவாரணம்...
குமட்டல், வாந்தி போன்ற அஜீரணக் கோளாறுகளுக்கு நல்ல மருந்தாக இஞ்சி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் காலைநேர உபாதை, பயணத்தினால் உண்டாகும் மலச்சிக்கல் மற்றும் புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சையின்போது உண்டாகும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கும் குணமளிக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் நடத்திய சமீபத்திய ஆய்வின்படி கீமோதெரபிக்கு முன்னதாக தினமும் 0.5 முதல் 1 கிராம் அளவிற்கு இஞ்சி சேர்த்துக் கொண்டு வரும் நோயாளிகளில் 91% பேருக்கு குமட்டல் வாந்தி போன்ற பாதிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்திருப்பதைக் காண முடிந்தது.
அதோடு அஜீரணக் கோளாறுடன் தொடர்புடைய தலைசுற்றல், மயக்கம் ஆகியவையும் குறைகிறது.
இஞ்சியிலுள்ள வேதிப்பொருட்கள் மூளையில் செயல்பட்டு நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்தி குமட்டல் வாந்தி மயக்கத்தை கட்டுப்படுத்துகிறது என்பதை சில ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
#3 மூட்டு வலி, மூட்டு சவ்வு பிரச்சனைகளுக்கு தீர்வு
இஞ்சியில் உள்ள ‘ஜிஞ்சரால்’ எனப்படும் பொருள் மூட்டு மற்றும் தசைவலிகளுக்கு நல்ல நிவாரணத்தை வழங்கும் தன்மை படைத்ததாக உள்ளது. மெடிசினல் ஃபுட் எனும் மருத்துவ இதழில் வெளியாகியுள்ள ஆராய்ச்சிப்படி, இஞ்சி செல்லுலர் நிலையில் குறிப்பிட்ட தூண்டுதலை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.
மேலும், பல அறிவியல் ஆய்வுகளின்படி, மூட்டுகளில், குறிப்பாக ருமட்டாய்ட் மூட்டு பிரச்சனைகளின் ஆரம்பநிலைகளில் சிறந்த வலி நிவாரணியாக இஞ்சி செயல்புரிவதை குறிப்பிடுகிறது. இஞ்சியை தொடர்ந்து எடுத்து வரும் ஆஸ்டியோஆர்திரிட்டிஸ் மூட்டு பிரச்சனையுள்ள பல நோயாளிகளிடம் பரிசோதித்து பார்த்ததில் அவர்களின் வலி வெகுவாக குறைந்து, கால்களின் இயக்கமும் மேம்பாடு அடைந்துள்ளது.
ஹாங்காங்கில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், மூட்டு வலியுள்ள நோயாளிகளுக்கு தசை இறுக்கத்தை சரிசெய்யவும், வலியைக் குறைக்கவும் மசாஜ் தெரப்பியில் இஞ்சி எண்ணெயும், ஆரஞ்சும் உபயோகப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
உடற்பயிற்சியின்போது ஏற்படும் சுளுக்கு, தசைவலி போன்றவற்றை குறைக்க இஞ்சி உதவுகிறது. ஜார்ஜியா பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஒரு ஆய்வில், 34 மற்றும் 40 தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய இரு குழுக்களுக்கு பச்சையாகவும் வறுத்தும் இஞ்சியை தொடர்ந்து 11 நாட்களுக்கு வழங்கி, அவர்களை கவனித்தனர். ஜேர்னல் ஆஃப் பெய்னில் வெளியான முடிவுகளின்படி, உடற்பயிற்சியால் விளைந்த தசைவலியை 25% அளவிற்கு குறைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
#4 வலி நிவாரணி: மைக்ரேன் தலைவலி, மாதவிடாய் வலிக்கு நிவாரணம்
மைக்ரேன் தலைவலியை போக்கும் தன்மை இஞ்சிக்கு உண்டு என்பதை ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ‘பைட்டோ ரீசர்ச்’ பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஈரானில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, இஞ்சி பொடியாலான ‘சுமாட்ரிப்டன்’ எனும் மருந்து மைக்ரேன் தலைவலியின் அறிகுறிகளுக்கு நல்ல பலனை வழங்குகிறது என்பதுதான்.
ஒரு மருத்துவ ஆய்வில், கடுமையான அறிகுறிகள் கொண்ட 100 மைக்ரேன் பாதிப்பாளர்களை பொதுவாக தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ‘சுமாட்ரிப்டன் அல்லது இஞ்சிப் பொடி வழங்கப்பட்டது. இரண்டுமே ஒரேபோல் திறமிக்கதாக இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இஞ்சி ப்ராஸ்டாக்ளான்டின்ஸை தடுப்பதன் மூலம் மைக்ரேனில் செயல்புரிகிறது. தசை இறுக்கத்தை தளர்த்தி, இரத்த குழாய்களில் பாதிப்பை கட்டுப்படுத்துவதோடு சில ஹார்மோன்களிலும் தனது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மைக்ரேன் தலைவலியால் பாதிப்புக்குள்ளாக ஆரம்பிக்கும்போது இஞ்சி டீ குடிப்பதால் தீவிர வலியைத் தடுக்க முடிவதோடு அதன் பக்கவிளைவுகளான குமட்டல் மற்றும் தலைசுற்றல் போன்றவற்றை தடுக்கமுடியும்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு உண்டாகும் வலியை குறைக்க இஞ்சி உதவுகிறது. ஈரானில், 70 மாணவிகளிடத்தில் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட ஆய்வில், மாதவிலக்கின் முதல் 3 நாட்களில், ஒரு குழுவினருக்கு இஞ்சி வில்லைகளும், இன்னொரு குழுவினருக்கு ப்ளாசிபோவும் கொடுக்கப்பட்டது. 47.05% ப்ளாசிபோ எடுத்துக் கொண்டவர்களைக் காட்டிலும் 82.85% இஞ்சி வில்லைகளை எடுத்துக்கொண்டவர்களிடம் வலிக்கான அறிகுறிகள் குறைந்திருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பல கலாச்சாரங்களில், தீப்புண்களின் மேல் இஞ்சிச் சாறை தெளிக்கும் வழக்கம் இருக்கிறது. மூட்டுவலி, முதுகுவலி போன்ற பிரச்சனைகளுக்கு இஞ்சி எண்ணெயை உபயோகிக்கும் வழக்கம் நிலவுகிறது.
#5 புற்றுநோய்க்கு எதிரி: புற்றுநோய் செல்களை திறம்பட அழிக்கிறது
நவீன விஞ்ஞானத்தில் பலவித புற்றுநோய்களுக்கு இஞ்சி ஒரு நல்ல தீர்வாக இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
மிஷிகன் காம்ப்ரிஹென்ஸைவ் புற்றுநோய் மையத்தில் (University of Michigan Comprehensive Cancer Center) மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் இஞ்சி, கர்ப்பப்பை புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமல்லாமல், இந்தப் புற்றுநோய் நோயாளிகளிடம் பொதுவாகக் காணப்படும் பிரச்சனையான, கீமோதெரபி சிகிச்சைக்குப்பின் புற்றுநோய் உருவாகாமல் தடுக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இஞ்சி பொடியையும் தண்ணீரையும் கலந்து கர்ப்பப்பை புற்றுநோய் செல்களில் ஆராய்ச்சியாளர்கள் உபயோகித்து சோதனை செய்தனர். அவர்கள் செய்த ஒவ்வொரு சோதனையிலும் இஞ்சிப் பொடி கலந்த நீருடன் புற்றுநோய் செல்கள் தொடர்புக்கு உள்ளாகும்போது அவை அழிவதைக் கண்டனர். அல்லது, அவைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டோ (autophagy) அல்லது தற்கொலை செய்துகொண்டோ (apoptosis) மடிகின்றன.
Subscribe
பயோமெடிசின் மற்றும் பயோ டெக்னாலஜி பத்திரிக்கையில் வெளியாகியுள்ள ஆராய்ச்சி முடிவின்படி, இஞ்சி தாவரத்திலிருந்து பெறப்படும் வேதிப்பொருள், சாதாரண செல்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாமல் மார்பகப் புற்றுநோய் செல்கள் பெருகுவதை தடுக்கிறது. இந்தப் பொருட்கள் சைட்டோடாக்சிட்டி எனப்படும் தனித்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கீமோதெரபி மூலம் மேற்கொள்ளப்படும் மற்ற பல புற்றுநோய் கட்டிகளுக்கான சிகிச்சை கடினமானதாக உள்ளது. அவை சிகிச்சையை எதிர்த்து தாக்குப்பிடித்து நீடித்து இருப்பதாக உள்ளன.
மார்பகப் புற்றுநோய் செல்கள் வளர்வது மட்டுப்படுகிறது. மேலும், இஞ்சி எளிதில் மாத்திரை வடிவத்தில் உபயோகப்படுத்தும் வகையில் இருப்பதுடன், அவற்றால் மிகக் குறைவான பக்கவிளைவுகளே உண்டாகின்றன. மேலும், இதன் மருத்துவ செலவும் மிகக் குறைவு.
2011ல் ஜியார்ஜியா பல்கலைக்கழகம் மூலிகையின் புற்றுநோய் எதிர்ப்பு, வலி நிவாரணி மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் கூறுகளின் அடிப்படையில் இஞ்சியின் மீது மேற்கொண்ட பரிசோதனையில் பராஸ்டேட் புற்றுநோயில் இஞ்சி செயல்புரிவதாக கண்டறிந்தது. தி பிரிட்டிஷ் ஜேர்னல் ஆஃப் நியூட்ரிசன் எனும் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள அந்த ஆராய்ச்சியின் முடிவுகளின்படி இஞ்சி சாறு நலம்தரும் செல்களை பாதிக்காமல், ப்ராஸ்டேட்டில் உள்ள புற்றுநோய் செல்களைக் கொல்கிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இன்றைய நவீன அறிவியலில் இஞ்சி பெருங்குடலிலுள்ள வீக்கங்கள் மற்றும் புற்றுநோயின் மீது செயல்பட்டு பாதிப்பைக் குறைக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மிசிகன் பல்கலைக்கழகத்தின் ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் 2 கிராம் இஞ்சித் துண்டு வேர்களை அல்லது ப்ளாசிபோவை 30 பேர் அடங்கிய நோயாளிகள் குழுவிற்கு 28 நாட்களுக்கு கொடுத்து வந்தனர். 28 நாட்கள் கழித்து அவர்கள் பெருங்குடல் வீக்கங்கள் உள்ள நோயாளிகளிடம் மாறுதல்களைக் கண்டதோடு, பெருங்குடல் புற்றுநோய் தடுப்புமுறையில் இயற்கையான வழிமுறையாகவும் இருக்கிறது.
இஞ்சியிலுள்ள மூலப்பொருட்கள் மலக்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கட்டிகள் மற்றும் கணையப் புற்றுநோய் ஆகியவற்றிலும் நல்ல பலனை அளிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. Beta-Elemene எனப்படும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துப்பொருள்தான் இதற்குக் காரணம்.
#6. நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை நோய் என்ற வியாதியில் ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைத்து, இன்சுலினின் சுரப்பை அதிகரிக்கும் குணம் உள்ளது.
இஞ்சியில் சர்க்கரை நோயை தடுக்க மட்டுமல்லாமல் அதை குணப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னி பல்கலைக் கழகத்தில் செய்த ஆராய்ச்சியில், 2ம் தர சர்க்கரை நோய் உள்ளவர்களின் ரத்தத்தில் கலக்கும் க்ளைசெமிக்கை(Glycemic) சமநிலைப்படுத்தும் குணம் உள்ளது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. ‘ப்லான்டா மெடிக்கா’ என்ற பத்திரிக்கையில் வெளியான இந்த ஆய்வின்படி இஞ்சிச் சாற்றினால் இன்சுலினின் உதவியில்லாமலே, தசை அணுக்கள் க்ளுக்கோசை உறியக்கூடிய தன்மையை பெறுகிறது என்றும் இத்தன்மை இரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பை கட்டுப்படுத்தும் என்றும் வெளியிட்டுள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து 30 நாட்கள் காய வைத்த இஞ்சியைப் பொடியை 3 கிராம் அளவு உட்கொண்டால், ரத்தத்தில் க்ளுகோசின் அளவு, ட்ரைக்ளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால் அளவுகளையும் கணிசமாக கட்டுப்படுத்தலாம் என்று மற்றொரு மருத்துவ ஆராய்ச்சி கூறுகிறது.
சுருக்காமாகச் சொன்னால் கணைய நீரை இரத்தத்தில் விடுத்து, கார்போஹைட்ரேட்டுகளை ஜீரணித்து வளர்சிதை மாற்றங்களை சரிவர நடத்தி, கொழுப்புச் சத்தை உபயோகிக்க இஞ்சி உதவுகிறது. இஞ்சி க்ளுகோசை சிறிது சிறிதாக பிரித்து, ரத்தத்தில் கலக்க விடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகமாகாமல் பாதுகாக்கிறது.
இஞ்சிக்கு சர்க்கரை வியாதியை தடுக்கும் குணமும் இருப்பதாக மேலும் பல ஆய்வுகளும் கூறுகின்றன. சர்க்கரை வியாதி உள்ளவரின் ஈரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் போன்ற எல்லா உறுப்புகளையும் பாதுகாக்கும் சக்தி இஞ்சிக்கு உண்டு. கண்ணில் உண்டாகும் புரை என்ற சர்க்கரை நோயால் உண்டாகும் ஒரு வித வியாதியையும் வராமல் தடுக்கும் குணம் இஞ்சிக்கு உண்டு.
#7. இதயத்தை குணப்படுத்தும் - பல விதமான இதய சம்பந்தப்பட்ட சூழ்நிலைகளை குணமாக்கும்.
அதிகப்படியான பொட்டாசியம், மாங்கனீசு, குரோமியம், மெக்னீசியம், மற்றும் துத்தநாகம் போன்ற கனிமத் தன்மைகளை கொண்ட இஞ்சி, அழற்ச்சிகளை நீக்கும் குணம் மிகுந்தது. பல காலமாக இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களை குணப்படுத்தும் தன்மை மிக்கது இஞ்சி.
சீன மருத்துவத்தில், இதயத்தை பலப்படுத்தும் மருத்துவ குணம் இஞ்சிக்கு உண்டு என்பதால் இஞ்சியிலிருந்து எடுத்த ஒருவித எண்ணையை இருதய நோய்களை குணப்படுத்த உபயோகிக்கின்றனர்.
இந்த மூலிகையில் உள்ள ஒரு வித கனிமம் கொழுப்புத்தன்மையை குறைக்க, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்த, ரத்த நாளத்தில் உள்ள அடைப்புகளை நீக்க என்று பல இருதய நோய்களை குறைக்கும் மற்றும் நீக்கும் தன்மை கொண்டுள்ளதாக நவீன ஆய்வுகளும் கூறுகின்றன.
#8. மூச்சு சீரின்மையை குணமாக்கும் தன்மை - ஆஸ்துமா போன்ற வியாதிகள் குணமடையும்.
இஞ்சியிலுள்ள தன்மைகள் மூச்சு சீரின்மையை சரி செய்யக் கூடியது என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காச நோய் உள்ளவர்களுக்கு உகந்த மருந்து என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. நுரையீரலில் ப்ராண வாயுவை எடுத்துச் செல்லும் தசைகள் அழற்சியுற்று, எதிர்ப்பு சக்தியை இழந்து, மூச்சு விட சிரமமாக இருக்கும் நிலையை காச நோய் என்று சொல்லுவார்கள்.
சமீபத்தில் அமெரிக்க பத்திரிக்கையான ரெஸ்பிரேட்டரி ஸெல் அண்ட் மாலிகுலார் பயாலாஜியில் வெளியான ஒரு விஷயம் இஞ்சி இரண்டு விதமாக காச நோயை குணப்படுத்துகிறது என்று விளக்கியது. முதலில் ஜவ்வு போல இருக்கும் காற்றோட்டமான தசைகளில் அடைத்து இருக்கும் என்சைம்களை நீக்கவும், இரண்டாவதாக காற்று வழிகளை தளர்த்தும் மற்ற என்சைம்களை தூண்டிவிடவும் செய்கிறது.
ஊக்கமருந்திலோ அல்லது நோய் எதிர்ப்பு மருந்துகளிலோ இருக்கும் சில குணங்கள் இஞ்சியில் உள்ளது. அதாவது ஆன்டி-ஆக்ஸிடன்ட், நோய்-எதிர்ப்பு சக்தி மற்றும் வலி நிவாரண குணங்கள்தான் இஞ்சியை ஒரு இயற்கை மருந்தாக பார்க்கத் தூண்டுகிறது.
தடுப்பாற்றல் - இருமல் மற்றும் ஜலதோஷத்தை தடுக்கும்.
ஜலதோஷம் மற்றும் ஜுரத்திலிருந்து தடுக்கும் அற்புதமான ஆற்றல் கொண்டது இஞ்சி. மூச்சுத் திணறல் மற்றும் மூச்சுக் குழாய் அழற்சிகளை ஆற்றும் குணம் கொண்ட இஞ்சி, இருமல், தொண்டை அழற்சி மற்றும் ப்ரொங்கைடிஸ் போன்ற உபாதைகளை குணமாக்கும்.
ஜலதோஷத்தினால் உண்டாகும் சைனஸ் போன்ற அடைப்புகளிலிருந்தும், நுண்ணிய பல ரத்த நாளங்களையும் தூய்மைப்படுத்துகிறது இஞ்சி. இஞ்சிச் சாறுடன் எலுமிச்சம் பழச்சாறும் தேனும் கலந்து குடிப்பதால் ஜலதோஷம் மற்றும் ஜுரம் போன்ற அன்றாடம் வரும் நோய்களிருந்து விடுதலை கிடைக்கிறது என்று கீழை மற்றும் மேலை நாடுகளில் காலம் காலமாக வழங்கப்படுகிறது.
இஞ்சியில் தெர்மோஜெனிக் எனும் வெப்ப ஆக்க குணம் இருப்பதால், உடலை சூடாக வைத்திருப்பதில் இது உதவுகிறது. முக்கியமாக வியர்வை நாளங்களை திறந்து வியர்வையை வெளியேற்றுவதனால், இது உடலை டி-டாக்ஸிஃபை (detoxify) செய்து, ஜலதோஷத்துக்குண்டான குணக்கேடுகளை நீக்கி, பாக்டீரியா மற்றும் பல தொற்று நோய்களிலிருந்து விடுதலை அளிக்கிறது.
சமீபத்திய ஜெர்மானிய ஆய்வு ஒன்று வியர்வையில் வீரியமான கிருமிநாசினி ஒன்று இருப்பதாகவும் அதற்கு டெர்மிஸைடின் என்றும் பெயரிட்டனர். இது வேர்வை சுரப்பிகளில் உருவாகிறது என்றும், வியர்வை மூலமாக தோல் வழியே வெளியேற்றப்பட்டு, ஈ-கோலி மற்றும் ‘கேண்டிடா அல்பிகன்ஸ்’ போன்ற கிருமிகளிலிருந்து காப்பாற்றுகிறது என்று வெளியிடப்பட்டுள்ளது.
எல்லாவற்றையும் விட, இஞ்சியில் உள்ள இந்த தன்மைகள் அடர்ந்த நிலையில் இருப்பதால், உடல் அதை இலகுவாக உறிஞ்சிக் கொள்ளுகிற படியால், அதை அதிக அளவில் எடுத்துக் கொள்ள தேவையில்லை.
#10. வீரியமான ஆன்டி-ஆக்ஸிடென்ட் - டிஎன்ஏ சிதைவை தாமதமாக்கும்
ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் என்பது சில அடிப்படை மூலக்கூறுகளிலிருந்து - அதாவது மூப்பு மற்றும் பல வயதினால் ஏற்படும் சிதைவுகள், புற்று நோய், இருதய நோய், சர்க்கரை வியாதி, மூட்டு வியாதி, அல்ஜெமெர் - போன்ற வியாதிகளிலிருந்து காப்பதற்கு மிக முக்கியமான ஒரு கனிமம்.
எல்லாவிதமான இயற்கை திரவியங்களுக்குள்ளும் ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது என்றாலும், இஞ்சியில் கூடுதலாக அதன் வீரியம் உள்ளதாகத் தெரிகிறது. 25 வெவ்வேறு வகையான ஆன்டி-ஆக்ஸிடென்ட்ஸ் இஞ்சியில் உள்ளது. இதனாலேயே பல மூலக் கூறுகளிலிருந்தும், பல உடல் உறுப்புகளை இஞ்சி பாதுகாக்கிறது.
இஞ்சியில் உள்ள வேதிப் பொருட்கள்
இஞ்சியானது மஞ்சளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாகும். பீட்டா-கரோட்டின், கேப்சைசின், காஃபிக் ஆசிட் மற்றும் கர்குமின் போன்ற பலவித கூட்டுப்பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
இஞ்சியிலுள்ள ஜிஞ்சிரால், ஷோகால் மற்றும் சிங்கரோன் போன்ற கூட்டுப்பொருட்களிலிருந்து இஞ்சி பிரித்தெடுக்கப்படுகிறது.
இஞ்சிரால் என்பது பச்சை இஞ்சியில் உள்ள உயிர்ப்புள்ள ஒரு கூட்டுப்பொருளாகும். மேலும், மிளகாயில் உள்ள கூட்டுப்பொருளான கேப்சைசினுடன் தொடர்புடையது. ஜிங்கரோன் என்பது ஜிஞ்சராலை சமைக்கும்போது கிடைக்கும் பொருளாகும். ஜிஞ்சரால் உலரும்போது கிடைக்கும் பொருள் ஷோகால்.
பிறப்பிடமும் வாணிப வழித்தடமும்
தெற்கு ஆசியாவின் அடர்ந்த வனப்பகுதிகளில் பெரும்பாலும் காணப்படும் இஞ்சி, இந்திய துணைக்கண்டத்தை பிறப்பிடமாக கொண்டது என அறியப்படுகிறது! பலவகை பாரம்பரிய ரகங்களில் இந்தியாவில் அதிகப்படியாக விளையும் இஞ்சி செடிகள், இப்பகுதிகளில் இஞ்சி செடிகள் நீண்டகாலமாக இருந்துவந்துள்ளதை காட்டுகிறது!
கி.பி முதலாம் நூற்றாண்டில் மிளகு போன்ற ஆசிய வியாபார பொருட்களுடன் இஞ்சியும் முதன்முதலில் ஆசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது! 2000 வருடங்களுக்கு முன் அரபு வணிகர்கள் மத்திய கிழக்கு பகுதிகளுக்கும், செங்கடலை கடந்து கிரேக்கம் மற்றும் ரோமானிய தேசத்திற்கு கொண்டு சென்றனர்.
இறக்குமதி செய்யப்படும் இஞ்சியை அலெக்ஸாண்ட்ரியாவில் கரையிறக்குவதற்காக வரி விதிக்கப்பட்டதை பண்டைய ரோமானிய பதிவுகள் காட்டுகின்றன. ரோமாபுரியின் வீழ்ச்சிக்கு பின் இஞ்சியின் உபயோகம் 11ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் இல்லாமல் இருந்தது! அதன்பின் மீண்டும் இஞ்சி உபயோகத்திற்கு வந்தது! இஞ்சி சமையலுக்கான பொருளாக மட்டும் அவர்களை கவரவில்லை; பலவித மருத்துவ குணங்களாலும் வாணிப மதிப்பினாலும் அவர்கள் அதனை பெரிது விரும்பினர்.
1128ல் பிரெஞ்சு காரர்களான மெர்செல்லியர்கள் இஞ்சி இறக்குமதிக்கு வரி விதித்தனர்; அதனைத் தொடர்ந்து 1296ல் பாரிஸிலும் வரி விதிக்கப்பட்டது! 13 மற்றும் 14ஆம் நூற்றாண்டுகளில் ஒரு ஆடுக்கு பண்டமாற்றாக ஒரு பவுண்டு இஞ்சி வழங்கப்பட்டது! 14ஆம் நூற்றாண்டு முதல் ஐரோப்பாவில் பரவிய இஞ்சி உபயோகம், மிளகிற்கு அடுத்தடியாக முக்கியமான சமையல் பொருளாக மாறியது!
இடைக்காலங்களில், இனிப்பு பலகாரங்களில் சேர்ப்பதற்காக பதப்படுத்தப்பட்ட வடிவத்தில் இஞ்சி இறக்குமதி செய்யப்பட்டது! இங்கிலாந்து இராணி எலிசபெத் அவர்கள் இஞ்சி பிரியராக இருந்தார் என்று சொல்லப்படுகிறது! தற்போது கிறிஸ்துமஸ் விழாக்களில் ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும் ஒரு வழக்கமாக மாறியிருக்கும் ஜிஞ்சர்பிரெட் விற்பனையாளர்கள் அவரால்தான் ஊக்குவிக்கப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது! இந்த மருத்துவ குணமிக்க செடி ஐரோப்பாவிலிருந்து ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளர்களுடன் புதிய இடத்திற்கு வந்தது! அதன்பின் மேற்கு ஐரோப்பிய பூர்வகுடிகளுடன் அமெரிக்காவில் குடிகொண்டது!
இஞ்சி உற்பத்தி இன்று
இன்று உலகெங்கிலும் வெப்பமண்டல நாடுகளில் பெருமளவில் இஞ்சி பயிர்செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதில் இந்தியா சீனாவுக்கு அடுத்ததாக பெரும் உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் ஏற்றுமதியாளராகவும் பெரும்பங்கு வகிக்கிறது.
கரீபியன் தீவுகள் இஞ்சி உற்பத்தியில் குறிப்பிடத் தகுந்ததாக உள்ளது. குறிப்பாக ஜமைக்காவில் இந்தியாவில் விளையும் இஞ்சிக்கு நிகரான தரத்துடன் இருக்கிறது. பிரேசில் போன்ற தென்அமெரிக்க நாடுகள் மற்றும் நைஜீரியா மற்றும் சியாரா லியோன் போன்ற ஆப்பிரிக்க நாடுகள் ஆகியவை இஞ்சி உற்பத்தி செய்கின்றன. ஆஸ்திரேலியாவிலும் ஃபிஜி தீவிலும் இதே அளவிற்கு விளைவிக்கப்படுகின்றன.
சில கவனிக்க வேண்டிய குறிப்புகள்:
- 2 வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு இஞ்சி கொடுக்கப்படக்கூடாது.
- பொதுவாக, இளைஞர்கள் 4 கிராம்களுக்கு மேல் ஒரு நாளில் இஞ்சியை எடுத்துக்கொள்ளுதல் கூடாது. (சமையலில் சேர்க்கப்படுவதையும் சேர்த்து)
- கர்ப்பிணி பெண்கள் தினமும் 1 கிராமிற்கு மேல் இஞ்சி எடுத்துக்கொள்ளுதல் கூடாது.
- உலர்ந்த அல்லது பச்சையான இஞ்சியை கொண்டு இஞ்சி டீ செய்து ஒருநாளைக்கு 2 வேளைகள் குடித்து வரலாம்.
- கடுமையான எரிச்சலைக் குறைப்பதற்காக பாதிக்கப்பட்ட இடத்தில் இஞ்சி எண்ணெயை ஒருநாளுக்கு சில முறைகள் மசாஜ் செய்யலாம்.
- மற்ற வடிவத்தில் எடுத்துக்கொள்வதைவிட இஞ்சி மாத்திரைகள் நல்ல பலன் தரக்கூடியதாக உள்ளன.
- பிற மருந்து பொருட்களுடன் இயைந்து இஞ்சி செயல்புரிகிறது, இரத்தசோகை போன்றவற்றையும் சேர்த்து.
- மருத்துவரிடம் கலந்தாலோசித்த பின்னர் இஞ்சி மாத்திரைகளை உட்கொள்வது பக்க விளைவுகளை தவிர்க்க உதவும்.
மருத்துவ குணத்துடன் சில உணவு செய்முறை
இஞ்சி பானங்கள்
செய்முறை #1: இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.
- இஞ்சியை நன்கு இடித்து சாறெடுத்து 15 நிமிடங்கள் ஒரு டம்ளரில் வைத்திருக்கவும்.
- அதன் கசடுகளை விட்டுவிட்டு தெளிவான சாறை மட்டும் எடுத்து குளிர்சாதன பெட்டியில் 5-6 நாட்கள்வரை வைத்திருக்கவும்.
- 2 தேக்கரண்டி இஞ்சி சாறோடு 2 தேக்கண்டி தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டு வரவும்.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒருமுறையும் தொடர்ந்து 48 நாட்களுக்கு இதனை எடுத்து வரலாம்.
செய்முறை #2: ஜீரணக் கோளாறுகளை குணமாக்குகிறது
- புத்தம் புதிய இஞ்சியை நன்கு கழுவி எடுத்து அதன் மேற்தோலினை நீக்கிவிடவும்.
- இஞ்சியை சிறு துண்டுகளாக நறுக்கி, பெரியவாயுள்ள பாத்திரத்தில் போட்டு தேனில் ஊறவைக்கவும்.
- பாத்திரத்தின் மூடியை மெல்லிய வெள்ளைப் பருத்தி துணியால் மூடி சூரிய வெளிச்சத்தில் 12 நாட்கள்வரை வைக்கவும்.
- பின் தினமும் 2-4 துண்டுகள்வரை காலை மற்றும் மாலையில் எடுத்துக்கொண்டால் அஜீரணக்கோளாறுகள் சரியாகும்.
செய்முறை #3: சளித்தொல்லைகள் சரியாகும்
4 தேக்கரண்டி இஞ்சி சாறு, 4 தேக்கரண்டி தேன் மற்றும் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து எடுத்துக்கொள்ளவும். இது சளியால் உண்டாகும் ஜலதோஷம் மற்றும் மூக்கடைப்பிற்கு நல்ல தீர்வாகும்.
இஞ்சி - எலுமிச்சை தேநீர் (Ginger Lemon Tea in Tamil)
இந்த ஆரோக்கிய தேநீரானது உங்களுக்கு தெம்பும் புத்துணர்ச்சியும் தருவதோடு, காஃபைனினால் உண்டாகும் எந்தவித பக்க விளைவுகளும் அற்றதாக இருக்கிறது.
ஒரு பாத்திரத்தில் 4.5 கப் அளவிற்கு தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
2 இஞ்சித்துண்டுளோடு 25-30 துளசி இலைகளைச் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ளவும்.
இடித்து வைத்த கலவையை கொதிக்கும் நீரில் சேர்க்கவும், அதோடு 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை (தேவைப்பட்டால்) சேர்க்கலாம்.
2-3 நிமிடங்களுக்கு தொடர்ந்து கொதிக்கவிடவும்.
பின் கப்களில் டீயை ஊற்றி, அதோடு 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறையும் தேவையான அளவு சர்க்கரையையும் கலந்து சூடாக பரிமாறலாம்.
தர்பூசணி – இஞ்சி - புதினா பானம்
இஞ்சி, தேன் மற்றும் தர்பூசணி கலந்த கோடைக்கு ஏற்ற ஒரு குளிர் பானம் உங்களுக்காக!
தேவையான பொருட்கள்:
- தர்பூசணி பழத்தின் கால்பங்கு
- 1 சிறிய இஞ்சித்துண்டு
- 1/4 கப் புதிய புதினா இலைகள்
- உப்பு தேவையான அளவுக்கு
- மிளகு தூள் ருசிக்காக
- 3 தேக்கரண்டி தேன்
செய்முறை:
தர்பூசணி பழத்தின் தோல் மற்றும் விதைகளை நீக்கி, வெட்டி வைத்துக்கொள்ளவும்.
தர்பூசணி பழத் துண்டுகளை மிக்ஸி ஜாரில் போடவும்.
இஞ்சி தோல் நீக்கி, இடித்து ஜாரில் போடவும்.
புதினா இலைகளை சேர்த்து, உப்பு, மிளகுத்தூள் மற்றும் தேன் கலக்கவும்.
அனைத்தையும் சேர்த்து கூழாகும் வரை அரைக்கவும், பின் வடிகட்டி வழியாக ஊற்றி வைக்கவும்.
பின் குவளைகளில் ஊற்றி பரிமாறலாம்.