கேள்வி:

சத்குரு, நீங்கள் ஓட்டுநராக இருக்கும் இந்த பேருந்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஏதோ ஒரு கட்டத்தில், நீங்கள் பேருந்தில் இருந்து இறங்கிவிட முடிவு செய்யலாம். உங்களுடன் இரண்டு வகையான பயணிகள் இருக்கிறார்கள். எங்கு போகிறோம் என்பதில் மட்டும் கவனம் செலுத்துபவர்கள் - நீங்கள் பேருந்தை ஆட்டோ-பைலட்டில் போட்டாலும் அவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது. ஆனால் ஓட்டுநரின் மீது மட்டுமே கவனம் செலுத்தும் பயணிகளும் உங்களுடன் இருக்கின்றனர், அவர்களுக்கு போகும் இடம் முக்கியமல்ல. நீங்கள் பேருந்தை ஆட்டோ-பைலட்டில் போட்டால் அவர்கள் என்ன ஆவார்கள்?

சத்குரு:

மக்களுக்கு ஓட்டுநரின் மீது ஆர்வம் வந்ததற்கு காரணம், அவர் நீங்கள் போக வேண்டிய இடத்தின் பிரதிநிதியாக இருப்பதால் தான். ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்ற கனவு உங்களுக்கு இருந்தால், அந்த பேருந்தை ஓட்டும் நபரும் உங்கள் கனவின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறார். உங்கள் கண்களில் கண்ணீருடன் நீங்கள் "சத்குரு" என்று நினைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் நான் அடுத்த கிராமத்திற்கு சென்றால், நான் யார் என்பதில் அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்காது, ஏனென்றால் அவர்களுக்கு எங்கும் போவதில் விருப்பமில்லை. அவர்கள் அதைப்பற்றி யோசித்துக்கூட பார்த்ததில்லை, அதனால் நான் எதன் பிரதிநிதியாக இருக்கிறேனோ அது அவர்களுக்கு எந்தவித அர்த்தத்தையும் தருவதில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கேள்வி என்னவென்றால், நீங்கள் எப்போது போகப் போகிறீர்கள் - எனக்கு முன்னே போவீர்களா? அல்லது எனக்கு பின் தான் போவீர்களா? என்பதுதான்.

உங்களுக்கு முக்கியமானது போகவேண்டிய இடம் தான்

உங்களுடைய ஆர்வம் போகவேண்டிய இடத்தின் மீதுதான் இருக்கிறது, ஆனால் அந்த இடம் கண்ணுக்கு தெரியாத ஒன்றாக இருக்கிறது, அதேசமயம் ஓட்டுநருடன் உங்களால் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது. அதனால்தான், உங்களை பொறுத்தவரை ஓட்டுநர் முக்கியமானவராக மாறிவிட்டார். ஆனால் உண்மையில், உங்களுக்கு முக்கியமானது போகவேண்டிய இடம் தான். மனம் ஒரு விஷயத்தை புரிந்து, தெரிந்து, உணர்ந்துகொள்ளும் விதம் இப்படித்தான் இருக்கிறது: "ஓட்டுநர் இல்லை என்றால், நாம் போகவேண்டிய இடத்தை உண்மையில் அடைந்துவிடுவோமா?” ஆட்டோ-பைலட் தொழில்நுட்பத்தின் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆட்டோ-பைலட்டில் போட்டால் அது போய் சேராது என்று நீங்கள் நினைக்கிறீர்கள், ஆனால் அது உண்மை இல்லை.

கேள்வி என்னவென்றால், நீங்கள் எப்போது போகப்போகிறீர்கள் - எனக்கு முன்னே போவீர்களா அல்லது எனக்கு பின் போவீர்களா? என்பதுதான். ஒருவேளை நான் உங்களை விட அதிக காலம் வாழலாம் - எப்போது போவது என்று நான் இன்னும் முடிவு செய்யவில்லை. அப்படியென்றால் எனக்கு முடிவில்லாத நேரம் இருக்கிறது என்று அர்த்தமா? அப்படி இல்லை. ஒருவர் விரும்பினால், அதை சம்பாதித்துக்கொள்ள முடியும். ஆனால், இன்னும் சில வருடங்களை கடக்கவே பெரிய அளவில் கடின உழைப்பு தேவைப்படும், நான் அப்படிச் செய்யும் ஆள் இல்லை.

குருவின் மறைவுக்குப் பின் சீடரின் நிலை என்ன?

ஒருவேளை நான் நாளைக்கே போய்விட்டால், உங்கள் ஆன்மீகப் பயணம் முடிந்துவிடுமா? நிச்சயமாக இல்லை. அதை வெளியில் இருந்து இயக்குவதற்கு பதிலாக, உள்ளுக்குள் இருந்தே இயக்க முடியும். நீங்கள் பெற்ற தீட்சைகள், அது ஷூன்யாவோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் சரி, அவை வெறும் வழிமுறைகளோ அல்லது குறிப்புகளின் தொகுப்போ அல்ல - அவற்றுள் உயிர்சக்தி முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது. அதை உங்கள் வயிற்றுக்குள் ஒரு விதையாக மட்டுமே வைத்திருந்தால், அதை உங்களால் உணர முடியாது. அது ஒரு மரமாக வளர்வதற்கு தேவையான சூழ்நிலையை நீங்கள் உருவாக்க வேண்டும். மரமாக வளர்ந்ததை உங்களால் உணராமல் இருக்க முடியாது.

கடந்த காலத்தில் வாழ்ந்த பெரும்பாலான குருமார்களின் துரதிர்ஷ்டவசமான நிதர்சனம், அவர்கள் துவங்கிய ஆன்மீக செயல்பாடுகள் அவர்கள் மறைந்தபின் தான் அதிக வேகம் எடுத்துள்ளன. உடலளவில் இங்கு இல்லாத நிலை, மற்ற பரிமாணத்தை மிகவும் சக்திவாய்ந்ததாக மாற்றுகிறது - அது எப்போதும் மற்ற பரிமாணத்தை பெருமளவில் மேம்படுத்துகிறது. நான் நாளைக்கே போய்விட்டாலும், அதுவும் உங்கள் நன்மைக்காக தான் இருக்கும், அதனால் கவலைப்படத் தேவையில்லை. ஆனால் அது நாளைக்கு நடக்கப்போவதில்லை - உங்களை ஏமாற்றுவதற்கு மன்னித்துவிடுங்கள்.

குறிப்பு:

குருபூஜை வகுப்பு பற்றிய விவரங்களை இங்கு பார்க்கலாம்.