சத்குரு:

பஹல்காம் தாக்குதல்

பஹல்காமில், காஷ்மீரில் இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல், நாம் நம்முடைய அப்பாவி மக்களைப் பாதுகாப்பதற்கும், நாட்டினுடைய பொதுவான பாதுகாப்பிற்கும், என்ன செய்ய வேண்டும் என்பதைப் பொறுத்தவரையில் ஒரு புது அத்தியாயத்துடைய துவக்கமாக இருக்கும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
வேறுவிதமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாட்டையே தோல்வியடைய செய்வதுதான் தீவிரவாதத்துடைய நோக்கம்.

தீவிரவாதத்துடைய நோக்கம் போர் அல்ல. ஒரு சமூகத்தை பயத்தால் முடமாக்குவது. அவர்களுடைய நோக்கம் மக்கள் மத்தியில் பீதியை உருவாக்குவது. சமூகத்தைப் பிளவுபடுத்துவது. நாட்டுடைய பொருளாதார வளர்ச்சியைத் தடம்புரள வைப்பது. போராட்டத்தை உருவாக்குவது. ஒவ்வொரு நிலையிலும் வன்முறையையும், சட்டம் ஒழுங்கில்லாத நிலையையும் உருவாக்குவது. வேறுவிதமாக சொல்ல வேண்டும் என்றால் ஒரு நாட்டையே தோல்வியடைய செய்வதுதான் தீவிரவாதத்துடைய நோக்கம்.

உலகத்தில் நடக்கும் எல்லாவிதமான வன்முறையிலும் மத நோக்கத்தில் நடக்கும் வன்முறைதான் மிகவும் ஆபத்தானது. வேறு எதற்காக சண்டை போடுகிற மனிதர்களிடமும் நீங்கள் பேசமுடியும். ஆனால் ஒரு மனிதர் தன்னுடைய கடவுளுக்காக சண்டை போடுவதாக நம்பும்போது அவரிடம் பேசிப் புரியவைக்கவே முடியாது. மக்கள் பணத்திற்காக, சொத்திற்காக, செல்வத்திற்காக, இல்லையென்றால் வேறு ஏதோ ஒன்றிற்காக சண்டை போடும்போது, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஏனென்றால் அவர்கள் உயிர்நோக்கத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கடவுளுக்காக சண்டை போடுவதாக நினைக்கிறவர்களாக இருந்தால் அவர்களுடைய ஒரே நோக்கம் இறப்பதும், நம் எல்லோரையும் அவர்களோடு கொண்டுபோவதும் தான்.

ஆயிரம் வருடமாக வெளியில் இருந்து படையெடுப்புகளுக்கு பிறகு, வெளியில் இருந்து நம்மை ஆக்கிரமித்தார்கள், மிகவும் கொடுமையான ஏழ்மையைப் பார்த்ததற்கு பிறகு இந்த நாடு இப்போது பொருளாதார நல்வாழ்வின் வாசலில் இருக்கிறது. இந்த வாய்ப்பும் சாத்தியமும் நமக்கு சும்மா வரவில்லை. மிகுந்த வலி, வேதனை, நமக்கு முன்னாடி பல தலைமுறைகளாக மக்கள் செய்த தியாகத்தினால் இது வந்திருக்கிறது. அதனால் இந்த முயற்சிகள் எல்லாவற்றையும் கனிய வைப்பதும் அவர்கள் கனவுகளை நனவாக்குவதும் நம் கடமை.

தேவையனது இரும்புக்கரங்கள்

இந்த நாடு வல்லமை பெறுவதை விரும்பாத சில சக்திகள் இருக்கின்றார்கள். இந்த தேச விரோத அம்சங்களுடைய தீய திட்டங்களை நாம் தோற்கடிப்பதற்கான நேரம் இது. நமக்கு இப்போது தளராத உறுதியும் இரும்புக்கரமும் தான் தேவைப்படுகிறது. இந்த நாடு என்பதைப் பாதுகாக்க உறுதி எடுக்காத மக்களை நாம் இனியும் மென்மையாக நடத்த முடியாது. நாம் இந்த நாட்டுடைய அரசுரிமையைப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் என்றால், பாரபட்சம் இல்லாமல் கொலை செய்து கூடவே இறந்தும் போவதற்கு நினைக்கின்ற இந்த சக்திகளை, இந்த நாட்டுடைய அடிப்படைகளோடு ஒத்துப்போகாத நம்பிக்கைகள் வைத்திருக்கின்ற இந்தப் பிரிவுகளை நாம் இரும்புக்கரத்தோடு கையாள வேண்டும். நீண்டகால நோக்கத்தில் தளராத உறுதியோடு கையாள வேண்டும்.

யாரோ ஒருவர் வீதியில் பார்க்கின்ற அப்பாவி மக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு துப்பாக்கியோ, குண்டோ வைத்திருந்தார் என்றால் அவர்களை நாம் மிகவும் கடுமையாக கையாள வேண்டும். நாம் இங்கே ஒரு நாடாக இருக்க வேண்டும் என்றால் இந்த நாட்டுடைய அரசுரிமையை எப்படித் தக்க வைத்துக்கொள்வது என்பதன் அடிப்படைகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு சமூகமும் நாடும் செயல்படுவதற்கு அச்சுறுத்தலாக இருக்கின்ற யாராக இருந்தாலும், அவர்களை நாம் வீழ்த்த வேண்டும். நீண்டகால தீர்வுகள் வேறு. ஆனால் கடவுளுக்காக சண்டை போடுவதை முற்றிலுமாக நாம் ஒழிக்க வேண்டும். இது சமூகத்துடைய எந்த சாரார்களிடம் இருந்து வந்தாலும் சரி.

வெளியில் இருந்து வரும் உதவி

இந்தத் தீவிரவாதிகள் எப்போதுமே அரசியல் பகடைக்காய்களோ இன்னொருவர் கரங்களில் இருக்கின்ற கருவிகளோ கிடையாது. இதுபோன்ற சக்திகளுக்கு இணங்குபவர்கள் எப்போதும் இருக்கிறார்கள். ஆனால் யாரோ ஒருவர் எங்கள் கடவுளுக்காக சண்டை போட்டு கொல்லுவோம் என்று சொல்லும்போது, நீங்கள் அதில் நேரடியாக கலந்துகொள்கிறீர்களோ இல்லையோ, உங்களுடைய வழிதான் ஒரே வழி என்று நீங்கள் நம்புகின்ற வரைக்கும் நீங்களும் அதனுடைய அங்கம்தான். நம் நாட்டிலேயே, நம் மத்தியில் இதுபோன்ற நம்பிக்கைகளும் நோக்கங்களும் இருப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. எங்கேயோ நாம் என்ன நினைக்கிறோம் என்றால் இந்த எல்லைக்கு வெளியில் இருக்கிற சக்திகள் இது எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறோம்.

ஆனால் வெளியில் இருந்து உதவி ஏன் வருகிறது என்றால், இதுபோன்ற நோக்கங்களுடன் இருக்கிற மக்கள் இங்கே இருப்பதனால் தான். இன்னும் பரந்த நீண்டகால தீர்வு இந்த எல்லா சூழ்நிலைகளுக்கும் இருக்கிறது. நாம் இந்த நாட்டினுடைய கட்டுறுதியைப் பேணிக்காக்க வேண்டும். பலவிதமான சமூக, கலாச்சார, மத பின்னணிகளில் இருக்கிற மக்களுக்கு மத்தியில் நாம் வலுவான பிணைப்பை உருவாக்க வேண்டும். நமது கல்வி, பொருளாதார வாய்ப்புகள், செல்வம், நல்வாழ்வு இவை எல்லாவற்றையும் எல்லா நிலைகளிலும் எல்லோருக்கும் சரிசமமாக கிடைப்பது போல பார்த்துக்கொள்ள வேண்டும். சமூகப் பொருளாதார முன்னேற்றம் என்பது எல்லோருக்கும் சென்று சேரவேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் இந்த பயங்கரவாதத்தினுடைய திசையில் போகாமல் இருப்பார்கள். இந்த எல்லா விஷயங்களையும் காலப்போக்கில் நாம் கவனித்துக்கொள்ள வேண்டும். ஆனால் உடனடி நோக்கங்களுக்கு இந்த பயங்கரவாத செயல்களை மிகவும் வலுவாக நாம் ஒழிக்க வேண்டும். இந்த சட்டமின்மையை நாம் உடனே முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்.

பெரிய அளவில் பார்க்கும்போது நமது நாட்டிற்குத் தேவைப்படுவதும், உலகத்திற்குத் தேவைப்படுவதும் எல்லாவற்றையும் தனக்குள் ஒரு பாகமாக இணைத்துக்கொள்ளும் தனிமனிதர்களும், சமூக அமைப்புகளும்தான். இந்த இணைத்துக்கொள்ளும் தன்மை ஆன்மீக செயல்முறைக்கு அடிப்படையான ஒரு இயல்பு மட்டுமல்ல, இதுதான் உயிரினுடைய அடிப்படையும் இலக்குமே. இதுபோன்ற ஒரு காலத்தில் நாட்டினுடைய ஒவ்வொரு குடிமகனும் இதை உணர வேண்டும். நமது நாட்டிற்குள் நீயா, நானா என்பது இருக்கக்கூடாது. நமது மத நம்பிக்கைகள் என்னவாக இருந்தாலும் சரி, நமது அரசியல் சார்புகள் என்னவாக இருந்தாலும் சரி, நாம் ஒரே பாரதம். நாம் ஒன்றாக இருப்பதால்தான் நாம் முன்னேறி ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாம் அதுபோன்ற ஒரு வாசலில் இப்போது இருக்கிறோம். நாம் அடுத்த பத்து வருடத்தில் சரியான விஷயங்களைச் செய்தால் ஒரு மகத்தான பாரதத்தை உருவாக்க முடியும். நாம் இதனை நிகழச் செய்வோம்.