பலவீனமானவர்கள் மீது அடக்குமுறை - கையாள்வது எப்படி? (Bullying in Tamil)
சமூகத்தில் பலவீனமானவர்கள் மீது வலிமையானவர்கள் மேற்கொள்ளும் அடக்குமுறை குறித்த ஒரு கேள்விக்கு சத்குரு பதிலளிக்கும் தருணத்தில், இந்தப் பிரச்சனையின் மூலக்காரணத்தை ஆராய்வதுடன், மனிதர்கள் அதற்கு எப்படி தீர்வு காண்பது என்பதையும் விளக்குகிறார்.

கேள்வி: சத்குரு, இன்றைக்கு உலகத்தில் அதிகமான வன்முறை நிகழ்ந்துகொண்டுள்ளது. என் மகள்கூட பள்ளிகளில் கொடுமைப்படுத்துதல் குறித்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தாள். ஆகவே, வன்முறையின் மூலக்காரணம் என்ன என்பதை அவளுக்கு விளக்க விரும்பினேன். எனக்கு அது குறித்து அதிகம் தெரியவில்லை. தயவுசெய்து தாங்கள் அது குறித்து பேசமுடியுமா? என்னைப்போன்றவர்கள் பள்ளிகளுக்கு எப்படி உதவி செய்யமுடியும்?
தந்திரமாக நிகழ்த்தப்படும் அடக்குமுறை (Bullying in Tamil)
சத்குரு: பாருங்கள், பள்ளியில் அவர்கள் பயிற்சியளிக்கவில்லை என்றால், எப்படிப் பார்த்தாலும் அச்சுறுத்தல் நிறைந்திருக்கும் இந்த உலகத்தில் அவர்கள் எப்படி வாழ்வார்கள்? அதிக சக்தி வாய்ந்தவர்கள், குறைந்த சக்தி கொண்டவர்களை எப்போதும் கொடுமைப்படுத்துகின்றனர். அது தேசங்களின் வடிவத்தில் இருக்கலாம் அல்லது ஜாதிகளின் வடிவத்தில் இருக்கலாம், அல்லது தனிமனிதர்களின் வடிவத்தில் இருக்கலாம் - எல்லா நேரமும் அடக்குமுறை நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது, அப்படித்தானே? நாம் எப்படிப்பட்ட உலகத்தைக் கட்டமைத்திருக்கிறோம் என்றால், குறைந்தபட்சம் சமூகத்தின் கண்களில், நீங்கள் அடக்குமுறையைக் கற்கவில்லை என்றால், நீங்கள் எங்கும் சென்று சேர்வதில்லை.Subscribe
உங்களது அடக்குமுறை உடற்தசை வலிமையின் மட்டத்தில் கீழ்நிலையில் இருக்கிறது, அல்லது அது சூட்சுமமான வழிகளில் இருக்கிறது, ஆனால் இந்த வன்முறை எல்லா இடங்களிலும் நிகழ்ந்துகொண்டுள்ளது. நீங்கள் இதனைப் புரிந்துகொள்ள வேண்டும், உலகமும், சர்வதேச சூழலும், வீதி முனையிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டிருக்கவில்லை. அதே வழியில்தான் இருக்கிறது, இல்லையா? பல வழிகளிலும் வலிமையானவர்கள் பலவீனமானவர்களின் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். அது இன்னமும் நேரடியாக இல்லாமல், மிகத் தந்திரமான முறையில் நடத்தப்பட்டுக்கொண்டு, குகை மனிதனுடைய உலகின் “வலிமையுள்ளது பிழைக்கிறது” என்ற வழியில்தான் உள்ளது.
ஈஷா லீடர்ஷிப் அகாடமியின் நோக்கம்
தற்போது உலகம் அடக்குமுறை வழியில்தான் சென்றுகொண்டிருக்கிறது. ஆதலால் நாம் பள்ளிகளில் தலைவர்களை உருவாக்கிக்கொண்டுள்ளோம். நன்றாக அடக்குபவர்கள் நாளைய தலைவர்களாக வரலாம். ஆம். ஆகவே இதன் ஒரு பகுதியாக, இப்போது நாம் “ஈஷா லீடர்ஷிப் அகாடமி” தொடங்கும் செயல்முறையில் இருக்கிறோம். நிச்சயமாக, அது அடிப்படையான MBA பாடத்திட்டங்களைக் கொண்டிருக்கும், ஆனால் முக்கியமாக, எல்லா நிலைகளிலும் தலைவர்களை உருவாக்குவது இதற்கான தொலைநோக்கமாக இருக்கிறது.
ஒரு வீட்டுத்தலைவிக்கு வார இறுதியில் “நிர்வாகமும், தலைமையும்” என்ற கோர்ஸை நாம் தொடங்கக்கூடும். ஏனென்றால் ஐந்து – பத்து மக்களின் மீது தாக்கம் ஏற்படுத்தக்கூடிய எவரும் தலைவர்தான். உள்ளூரில் சிறிய அளவில் காய்கள் விற்பனை செய்பவர் அவர் தினசரி 50-60 மக்களைச் சந்திக்கிறார். ஆகவே அவருக்காக, ஒரு வாரகால அளவுக்கு நிர்வாகவியலும், தலைமைப்பண்புக்கான கல்வியும் நாம் நடத்தக்கூடும். ஏனென்றால் நாம் சரியான விதமான தலைவர்களை இன்னமும் உருவாக்கவில்லை; அடக்குமுறையாளர்கள்தான் தலைவர்கள் என்று கருதப்படுகின்றனர். கருணையுள்ள மனிதர்கள் – மனிதகுலம் குறித்த பரந்த தொலைநோக்கு உடையவர்கள் தலைவர்களாகக் கருதப்படுவதில்லை; அவர்கள் இந்த உலகத்தில் தத்துவவாதிகளாகக் கருதப்படுகின்றனர். அவர்கள் தொலைநோக்குப் பார்வையாளர்கள் என்று நிராகரிக்கப்படுகின்றனர்.
இது மாறவேண்டியுள்ளது, ஆனால் அது ஒரு இரவில் மாறப்போவது கிடையாது. அதற்கு மனிதகுலத்துடனும், தனிமனிதர்களுடனும் நிறைய செயல்படத் தேவைப்படுகிறது. பொதுவான அறிக்கைகள் – வீதிகளில் கோஷங்கள் உதவி செய்யாது. அதற்கு, தனிமனிதர்களுடன் ஒருமுனைப்பாகச் செயல்படவேண்டியுள்ளது. அந்த விதமான செயல் செய்வதற்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இங்கு நாங்கள் கட்டமைத்துக் கொண்டிருப்பவை எல்லாம், உலகத்தின் இந்தப் பகுதிகளில் ஒருபோதும் செய்யப்பட்டிராத, இணைத்துக்கொள்ளுதலின் விழிப்புணர்வுக்கான ஒரு உள்கட்டமைப்புதான். மற்றும் கிழக்கில், கடந்த காலத்தில் மிக அதிகமாக அது செய்யப்பட்டது, ஆனால் கடந்த சில நூறு வருடங்களில் எதுவுமில்லை.
தேவைப்படும் ஆன்மீக செயல்முறை
முக்கியமாக குழந்தைகள் அடக்குமுறையில் இறங்குகின்றனர், ஏனென்றால் உலகம் அப்படித்தான் செயல்படுகிறது என்று அவர்கள் புரிந்துகொண்டுள்ளனர். அனைவரும் அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, யாரோ ஒருவரைத் தோற்கடிக்கின்றனர்; யாரோ ஒருவரை உயர்த்துவதற்கு மக்கள் அவர்களுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதில்லை. அவர்கள் யாரையாவது உயர்த்தினாலும், அங்கே ஒரு கயிறு இணைக்கப்படுவதால், அவர்கள் விரும்பும் எந்த நேரத்திலும் உங்களைக் கீழே இறக்கிவிடமுடிகிறது. உங்களை ஒரு ஹைட்ரஜன் பலூனாக்கி, பறக்கவிட்டு, மேலெழும்பச் செய்வதை ஒருவரும் விரும்புவதில்லை. அதனுடன் இணைக்கப்பட்ட கயிறு ஒன்று அவர்களிடம் உள்ளது. மக்களை அந்த மாதிரி விடுதலை செய்வதற்கு, நமக்கு சக்திமிக்க, பிரிவினைகள் இல்லாத ஒரு ஆன்மீக செயல்முறை தேவைப்படுகிறது, அதனால் ஒவ்வொரு மனிதரும் அவருக்கே உரிய வழியில் மலர்ச்சியடைய முடியும். எந்தவொரு தனிமனிதரும், என் வழி அல்லது உன் வழி என்று எதிலும் இருக்கவேண்டியதில்லை. வாழ்க்கை இயல்பாக உள்ளபடியே, அவர் இணைத்துக்கொள்ளும் தன்மையில் இருக்கும்வரை, அவருக்கே உரிய வழியில் அவர் மலரமுடியும்.
வாழ்க்கை இணைத்துக்கொள்ளும் தன்மையுடையது. இணைத்துக்கொள்ளுதல் ஒரு கருத்தாக்கம் அல்ல, இணைத்துக்கொள்ளுதல் ஏதோ ஒருவிதமான தத்துவம் அல்ல – இணைத்துக்கொள்ளுதல் வாழ்வின் / உயிரின் வழி. படைப்பு, அதன் இணைத்துக்கொள்ளும் தன்மையிலிருந்து நிகழ்ந்துகொண்டு இருக்கிறது, தனிப்பட்ட தன்மையிலிருந்து அல்ல. ஒற்றை அணுகூட இங்கே தனிப்பட்டு இருக்கமுடியாது: உங்கள் வடிவத்தைத் தக்கவைப்பதற்குக்கூட.
நீங்கள் தனிப்பட்டிருப்பது நகைப்புக்குரியது, ஆனால் ஒட்டுமொத்த உலகமும், குறைந்தபட்சம் உலகிலிருக்கும் வர்த்தக சக்திகள், எப்போதும் உங்களிடம் நீங்கள் தனிப்பட்டவர் என்று கூறிக்கொண்டுள்ளது, இல்லையா? இந்த தனிப்பட்ட தன்மையை நாம் வளர்த்தெடுத்துவிட்டால், அடக்குமுறை இயற்கையானது. அச்சுறுத்தல், கொடுமைப்படுத்துதல், அடக்குமுறை என்பதெல்லாம் யாரோ ஒருவர் தீயவராக இருப்பதால் மட்டும் நிகழ்வதில்லை. தனிப்பட்ட தன்மை வளர்க்கப்பட்டுவிட்டது என்றால், பிறகு கொடுமைப்படுத்துதல் இயல்பானது. இணைத்துக்கொள்ளுதல்தான் இதற்கான ஒரே பதிலாக இருக்கிறது. “நான் உன்னை நேசிக்கிறேன், நீ என்னை நேசிக்கிறாய்” என்ற ரீதியில் இணைத்துக்கொள்ளுதல் அல்ல. வாழ்வைத் தெள்ளத்தெளிவாக, அது ஒரு இணைத்துக்கொள்ளும் செயல்முறை என்று பார்ப்பது; அது அனைத்தையும் உள்ளடக்குவது என்று உணர்வுபூர்வமாகப் பார்ப்பது. இங்கு இருப்பதற்கு வேறு வழி இல்லை.