சத்குரு:

வயிற்றுப் பிழைப்பிற்கான வழி அல்ல தொழில். செயலின் மூலமாக ஒரு வாழ்வையே உருவாக்குவதுதான் தொழில்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தொழில் நடத்தும் ஒருவருக்கு பணம் எவ்வளவு தேவை என்று எனக்குத் தெரியும். ஆனால், பணம் வேண்டும் என்று ஆசைப்படுவதாலேயே பணம் வருவதில்லை. ஒன்றை சரியாக செய்வதனால் பணம் வருகிறது. என்னுடைய புரிதலில் நீங்கள் பணத்தைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், விளைவைப் பற்றித்தான் கவலைப்படுகிறீர்களே தவிர, செயலைப் பற்றிக் கவலைப்படுவதில்லை என்று பொருள். செயலைப் பற்றிக் கவலைப்படாமல் விளைவைப் பற்றியே கவலைப்படுபவர்கள், அதைப் பற்றிய கனவில் மட்டுமே இருப்பார்களே தவிர, செயல்படமாட்டார்கள்.

எனவே உங்களுக்கு எவ்வளவு பணம் வர வேண்டும் என்று தொடர்ந்து சிந்தித்துக்கொண்டே இருப்பதைவிட, நீங்கள் எதை உருவாக்க முடியும் என்று பாருங்கள். நீங்கள் உருவாக்குகின்ற விஷயம் மதிப்பு வாய்ந்ததாக இருக்குமேயானால், பணம் தானாக வரும். உங்கள் வாழ்வினுடைய நிறைவில் நீங்கள் சேகரித்த எதையும் எடுத்துச் செல்ல இயலாது. ஆனால் நீங்கள் உருவாக்கியவைதான் ஒரு அர்த்தம் தேடிக் கொடுக்கும்.

நவீன கால தொழிலதிபர்கள் வாழ்க்கையை நீங்கள் பார்த்தீர்களேயானால், இன்போசிஸ் நாராயண மூர்த்தி போன்றவர்கள் பணத்தைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட்டவர்கள் இல்லை. எதோ ஒன்றை உருவாக்குவதிலேயே மிகுந்த கவனம் செலுத்தினார்கள். அவர்கள் உருவாக்கியவை அனைவருக்கும் மதிப்பு மிக்கவையாக அமைந்ததால், பணம் தானாக வந்தது. எல்லாவற்றையும் விட நீங்கள் மிகவும் மதிக்கின்ற ஒன்றை நீங்கள் உருவாக்குகினால், அது எல்லோர் வாழ்விற்கும் ஒரு பெரிய மதிப்பை ஏற்படுத்தும் என்பதும் உங்களுக்குத் தெரியுமேயானால், அதை உருவாக்குவதே ஒரு மிகப் பெரிய ஆனந்தத்தை உங்களுக்குத் தரும்.

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்கள் என்பது காலச் சூழலைப் பொருத்தது. இன்ஃபோசிஸ் போன்ற நிறுவனங்களினுடைய வெற்றிக் கதைகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஏற்பட்டவை. ஒரு சூழலில் தொழிற்நுட்பங்களும், பல வளர்ச்சிகளும் இவை எல்லாம் நிகழ அனுமதிக்கின்றன. நீங்கள் அவற்றை தேடிக்கொண்டு போவதில் பொருள் இல்லை. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், மனிதர்களினுடைய வாழ்க்கைக்கு எப்படி மதிப்புக் கூட்ட விரும்புகிறீர்கள் என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். மற்றவர்கள் வாழ்க்கைக்கு ஒரு பெரிய மதிப்பையும் அர்த்தத்தையும் ஏற்படுத்தக் கூடிய ஒன்றை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் பணத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. பணம் தானாகவே உங்களைத் தேடி வரும்.

சமீபத்தில் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி ஒரு மாநாட்டிற்-கு வந்திருந்தார். அப்போது சில விஷயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். ஒரு எளிய தொழில் முனைவோராகத் துவங்கி, இன்று உலகமே மதிக்கத்தக்கவராக அவர் உயர்ந்திருக்கிறார். இன்போசிஸைத் துவங்கியபோது அவர் தேர்ந்தெடுத்த பங்குதாரர்கள் 6 பேர் அவரை விட வயதில் மிக இளையவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களைப் பங்குதாரர்களாக ஆக்கியபோது, தனக்கு இணையான பங்கையும், முக்கியத்துவத்தினையும் அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

இதை மற்றவர்கள் மிகவும் கேலியாகப் பார்த்தார்கள். அவரில் பெரும்பாலான பங்குதாரர்களுக்கு மென்பொருள் துறையில் ஓராண்டு அனுபவம்கூடக் கிடையாது. ஆனால், அவர்களுக்கு இவ்வளவு பெரிய பங்கினை இவர் தருகிறாரே என்று யோசித்தார்கள். அப்போது நாராயண மூர்த்தி சொன்னார், ‘‘பரவாயில்லை, நான் பணத்திற்காக இதைச் செய்யவில்லை. அவர்களுடைய நூறு சதவிகித ஈடுபாட்டினை நான் எதிர்பார்க்கிறேன். இதனை ஒரு வெற்றிகரமான நிறுவனமாக ஆக்குவதற்கு அவர்கள் பாடுபட வேண்டுமே தவிர, அவர்களின் மனதிலே வேறு எண்ணங்களே வரக்கூடாது’,’ என்றார். அது உள்ளபடியே பலன் அளித்தது. ஏனென்றால், நீங்கள் 50 ஆயிரம் கோடி பெருமானம் உள்ள நிறுவனத்தில் 15 சதவிகிதம் பங்கு வைத்திருப்பது என்பது, வெறும் 5 கோடி ரூபாய் வணிகத்தை நடத்துவதை விடச் சிறந்தது என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியம், நமக்காக வேலை பார்ப்பவர்கள் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அதிலே ஈடுபடுத்திச் செயல்படுவது ஆகும். எல்லோரும் முழு அர்ப்பணிப்போடு செயல்படாவிட்டால் பெரிதாக எதையும் கொண்டுவர இயலாது. நானும் எட்டு மணி நேரம் வேலை செய்கிறேன், நீயும் எட்டு மணி நேரம் வேலை செய் என்றால், அதில் பலன் இருக்காது. தொழில்முனையும் ஒருவர், தன் தொழிலை வாழ வேண்டும். வெறுமனே வயிற்றுப் பிழைப்பிற்கான வழி அல்ல தொழில் என்பது. செயலின் மூலமாக ஒரு வாழ்வையே உருவாக்குவதுதான் தொழில். தங்கள் எல்லைகளைத்தாண்டி நூறு சதவிகிதம் ஒருவர் தன்னை முழுமையாக செயல்படுத்துகிறபோது பல நன்மைகள், அதிசயங்கள் நடக்கும்.

எனவே, இதில் உங்களுக்கு உந்து சக்தியாக இருக்கக் கூடியது, உங்களைவிட பல மடங்கு பெரிய ஒன்றை உருவாக்குவதாகத்தான் இருக்க வேண்டும். பணம் என்பது அவ்வாறு நீங்கள் செயல்படுவதினுடைய ஒரு விளைவு மட்டுமே!