எங்கிருந்தாலும் தரிசனம்
தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.
தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.
மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…
யோகீஷ பூதேஷ சர்வேஷ மஹேஷ்வராய
ஆம்கார நிராகார லிங்கேந்திர முக்தேஷ்வராய
நாகேந்திர நீலேந்திர ஷிவாய மஹேஷ்வராய
ஆதி அனந்தம் ஜன்ம நாஷனம் த்ரிகுணசம்ஹாரம்
ஷிவ ஷிவ ஷிவ மஹாதேவ...
உங்கள் மனம் மேம்பட்டிருந்தால் வாழ்க்கையில் வலி, இன்பம், வெற்றி, தோல்வி, அன்பு, என்று எதுவாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நீங்கள் செல்லமுடியும். ஆனால் மனம் எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும் மனதிற்கு புலப்படாதது ஒன்று இருக்கிறது, அது உங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகவும் இருக்கிறது, அதுதான் இறப்பு.
Subscribe
இறந்தபின் கடவுளின் மடியில் அமரலாம், சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் செல்லலாம் என்றெல்லாம் சாவைப் பற்றி நீங்கள் கிசுகிசு வேண்டுமானால் கேட்டிருக்கலாமே தவிர, அதை அனுபவத்தில் உணர்ந்து புரிந்தவர்கள் கிடையாது. ஆன்மீகப்பாதை என்பது துவங்குவதே, நமக்கு, அல்லது நமக்கு நெருக்கமானவர்கள் எவருக்காவது சாவு நெருங்கும்போதுதான்.
சமூகத்திற்கு வேண்டுமானால் வாழ்வு சாவு என்பது இருவேறு விஷயங்களாக இருக்கலாம், உயிரைப் பொருத்தவரை வாழ்வும் சாவும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து, இரண்டும் ஒரேசமயம் நடந்துகொண்டிருக்கும் ஒரு விளையாட்டு. விளையாட்டு என்றால் எல்லாம் கலந்திருக்கிறது, எல்லை போட்டுவிட்டால் அது விளையாட்டாக இருக்காது.
மனித வாழ்க்கையில் சாவு மிகவும் தீவிரமானதாக இருக்கிறது. மனிதன் வாழும்போது அவன் அன்பு, ஆனந்தம், உயிர்த்தன்மை, எல்லாம் தீவிரமில்லாமல் இருந்துவிடலாம், ஆனால் சாவு என்பது தீவிரமாகவே நடக்கிறது. அதனால் தான் சிவன் மயானத்தில் உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.
மயானத்தை நாம் காயாந்தா என்று சொல்வோம், காயத்தின் அந்தம், அதாவது உடலின் முடிவு என்று அர்த்தம், உடலுடன் சேர்த்தது அனைத்தையும் விட்டுவிடும் இடமது. உடலுடனும் மனத்துடனும் மட்டுமே அடையாளம் கொண்டு வாழ்ந்துவிட்டவர்களுக்கு, இறப்பு தான் மிகவும் தீவிரமானது. உடலையும் மனதையும் கடந்து ஏதோ ஒன்றை உணர்ந்தவர்களுக்கோ, இறப்பு என்பது கடந்துபோகக்கூடிய இன்னொரு சாதாரணமான விஷயம், அவ்வளவு தான்.
உடலுடன் தவறாக அடையாளம் கொண்டுவிட்ட ஒருவரின் தவறான புரிதல்தான் சாவு, சாகாமல் இருப்பதுதான் மெய்நிலை. உடல் சாகமுடியும், உயிருக்கு சாவில்லை. மரிப்பவர்களுக்கும் மரணத்தை வென்றவர்களுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் அவர்களின் இந்த விழிப்புணர்வு மட்டுமே.
பிழைப்புணர்வு ஒருபக்கமிருக்க, எல்லையில்லாமல் விரிவடைய விரும்பும் ஏக்கம் மறுபக்கமிருக்க, மனிதர்களாகப் பிறந்தவர்கள் பிழைப்புணர்வை கீழே வைத்துவிட்டு, விரிவடையும் விழைவை துரிதப்படுத்த முடியும்.
உயிருள்ளவர்கள் நடத்தும் உயிரற்ற நாடகங்களைப் பார்த்து அலுத்துவிட்டு, சிவன், உயிர் உண்மையில் தீவிரமாக இருக்கும் மயானத்திற்கு சென்று அமர்ந்தார். உங்கள் தீவிரம் தீப்பிடிக்க அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.
பிழைப்புணர்வோடு அடையாளப்படுத்திக்கொண்டால் தவறேதும் இருக்கிறதா? தவறில்லை, ஆனால் அது எல்லைக்குட்பட்டது, அவ்வளவுதான். எல்லைக்குட்பட்டிருந்தால் தவறா? தவறில்லை ஆனால் அது வலிதருகிறது. வலி வேண்டுமானால் எல்லைக்குள் இருங்கள். ஆனால் முன்னோக்கிச் செல்ல முடிவெடுத்துவிட்டு, பின்னோக்கி சென்றால் அது புத்திசாலித்தனமில்லை, அதில் அர்த்தமுமில்லை.
எப்போதும் எல்லை போட்டுக்கொண்டே சென்றால் நீங்கள் பின்னோக்கிச் செல்கிறீர்கள். எல்லைகளை தகர்த்தெறிந்துவிட்டு குதூகலத்தில் குதித்துக்கொண்டிருந்தால், முன்னோக்கிச் செல்கிறீர்கள். இறந்தால்கூட தீவிரம் வந்துவிடமுடியும், உயிரோடு இருந்துகொண்டே எல்லைகள் போட்டுக்கொண்டிருந்தால் உயிர் தீவிரமாக நடக்காது என்பதை உணர்த்தும்விதமாக சிவன் மயானத்தில் அமர்ந்திருக்கிறார்.
அர்த்தங்களால் மட்டுமே வாழ்க்கையை உணர்பவராக நீங்கள் இருந்தால், கொஞ்சம் உற்சாகமளிப்பதற்காக, உங்களுக்கு அர்த்தமுள்ளதாகத் தோன்றும் விஷயங்கள் சிலவற்றை மட்டும் நீங்கள் செய்யலாம். உண்மையில் உயிர் என்பது அர்த்தங்கள் அனைத்திற்கும் அப்பாற்பட்டது. இதை விழிப்புணர்வில் உணர்ந்துவிட்டால் வாழ்வுமில்லை, சாவுமில்லை, உயிர் மட்டுமே...
உயிர்ப்புடன் அமர்ந்திருந்த கூட்டத்தை வணங்கிவிட்டு நடந்துசென்றார்...