மஹாபாரதம் பகுதி 69: இன்றைய உலகில் பக்திக்கு இன்னும் இடம் இருக்கிறதா?
பக்தி என்பது வெறுமே இனிமையான ஒரு உணர்வா, அல்லது உச்சபட்ச உண்மையை அறிவதற்கான கருவியாக முடியுமா? மஹாபாரதம் நிகழ்வின் போது பங்கேற்பாளரின் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் சத்குரு, உணர்ச்சியின் ஆற்றல் மற்றும் பக்தியை உச்சபட்ச வேட்கையாக கொள்வது குறித்து இந்த பகுதியில் பேசுகிறார்.

பங்கேற்பாளர்: சத்குரு, வாழ்வதற்கு இனிமையான வழி என்று நீங்கள் பக்தியை குறிப்பிடுகிறீர்கள், ஆனால் உண்மையை உணர்வதற்கு பக்தியே போதுமா?
சத்குரு: நீங்கள் இந்த கேள்வியை ஒரு பெண்மணியாக இருந்து கேட்கிறீர்களா அல்லது வங்கி அதிகாரியாக கேட்கிறீர்களா?
பங்கேற்பாளர்: ஒரு பெண்ணாக தான்
சத்குரு:நீங்கள் ஒரு பெண்ணாக இருக்கையில், பக்தியே போதுமானது. நீங்கள் ஒரு வங்கி அதிகாரியாக இருந்தால், தலையும் இதயமும் நொறுங்குமளவு நாம் சாதனா செய்யவேண்டி வரும். ஆன்மீக செயல்முறை உங்களுக்கு எவ்வளவு கடினமானதாக இருக்கப் போகிறது என்பதை நீங்கள் தான் நிர்ணயிக்கிறீர்கள், இயற்கையோ உங்கள் குருவோ அல்ல. இயற்கை, படைத்தல், படைத்தவன், உங்கள் குரு, எல்லாருமே இதை எப்படி இலகுவாக, எளிமையாக, எவ்வளவு வேகமாக நடத்துவது சாத்தியம் என்றே பார்க்கிறார்கள். ஏனென்றால், நீங்கள் நீண்ட காலம் எடுத்துக்கொண்டால், அது உங்கள் வாழ்க்கை வீணாகிறதோ என்ற கேள்விக்கு இடமளிப்பதில்லை - எனது வாழ்க்கை வீணாகிறதோ என்ற கேள்விக்கே இடமளிக்கிறது. நீங்கள் விடுதலை அடையவில்லை என்றால், நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தோற்றுவிட்டீர்களோ என்ற கேள்வி தோன்றாது - நான் தோற்றுவிட்டேனோ என்ற கேள்வியே தோன்றும், அதோடு நான் எப்போதுமே தோற்கும் அணியில் இருப்பதை விரும்புவதும் இல்லை.
Subscribe
உங்கள் அடையாளங்களே உங்களுக்கு எப்படி தடைக்கல்லாகிறது
நீங்கள் இங்கே வெறுமனே ஒரு மனிதனாக இருந்தால், இது மிகவும் எளிமையானது. ஆனால் நீங்கள் இன்னும் பலவாகவும் இருக்கிறீர்கள். வங்கிகளை கையாள்வது சிரமமாக இருக்கலாம், ஏனெனில் ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் பல மறைமுக ஷரத்துகள் இருக்கிறது. அதையும் மிகச்சிறியதாக, உங்கள் கண்களுக்கே புலனாகாத அளவில் அச்சடித்திருப்பார்கள். அதைப் படிப்பதற்கே ஒரு ஆயுட்காலம் தேவைப்படும் என்பதால் பெரும்பாலான மக்கள் எதையுமே படிக்காமல் அப்படியே கையொப்பம் இட்டுவிடுவார்கள். மறைமுகமான ஷரத்துகளை எல்லாம் அழித்துவிட்டு இங்கே வெறுமனே ஒரு மனிதனாக நீங்கள் இருந்தால் போதும் - இவ்வளவுதான் இதற்கு தேவை. புத்திசாலித்தனத்தின் இன்னொரு பரிணாமமான பக்தியை இன்றைய உலகம் துரதிருஷ்டவசமாக பெருமளவிற்கு தொலைத்துவிட்டது.
இந்த படைத்தலில் பிரமாண்டமான ஒரு புத்திசாலித்தனம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளும் அளவு உங்களுக்கு புத்திசாலித்தனம் இருந்து, நீங்கள் உங்கள் அறிவை சற்று ஓரமாக வைத்துக்கொள்கிறீர்கள் என்றால் அதுதான் பக்தி. பக்தி என்றதுமே தினமும் பூஜை செய்வது என்று அர்த்தமல்ல. பக்தி என்றால் வாழ்க்கையோடு உங்களுடைய ஈடுபாடு முழுமையாக இருக்கிறது, எந்தளவுக்கு என்றால், இப்போது உங்களைப் பற்றியவற்றையே நீங்கள் பொருட்படுத்துவதில்லை. உங்களை நீங்கள் வெறுமையாக்கிக் கொண்டால் அதுவே பக்தி. இதைவிட பெரிய புத்திசாலித்தனம் வேறெதுவும் இல்லை, இதைவிட இனிமையானதும் வேறெதுவும் இல்லை. ஒரு பக்தன் அறிந்துள்ள இனிமையை எந்த ஒரு காதலரோ அல்லது இன்பத்தைத் தேடுபவரோ அறியமாட்டார்கள்.
எது முதலில் வரவேண்டும் - சாதனாவா பக்தியா?
பங்கேற்பாளர்: எதிர்பாராத விதமாக, இன்றைய நவீன காலப் பெண்ணாக இருப்பதால், எங்களிடம் அந்தளவு அப்பாவித்தனம் இப்போது இல்லை. எங்களிடம் சிந்திக்கும் மனம் இருக்கிறது. எனவே எங்கள் மனம் பக்தியில் நிலைபெறுவதற்கு முதலில் தேவையானது எது - சாதனாவா அல்லது பக்தியா?
சத்குரு: பக்தியைப் பற்றி நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பக்தி என்றால் "யே தேவி" என உச்சாடனம் செய்வது என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அது பக்தியின் ஒரு சிறு வெளிப்பாடு மட்டுமே. "யே தேவி" என்று உச்சரிப்பதற்கு இரண்டு நிமிடங்கள் மட்டுமே போதுமானது, ஆனால் அந்த இரண்டு நிமிட உச்சாடனத்தில் வெளிப்படும் உணர்வில் நீங்கள் உருகும் நிலைக்கு வருவதற்கு சில காலம் எடுத்துக்கொள்ளும். அப்படி நீங்கள் உருக்கமாக உச்சரிக்கையில் உங்கள் வாயிலிருந்து வருவது வெறும் சப்தமல்ல, உங்கள் உயிர் கரைந்து நீங்கள் குறிப்பிடும் தன்மையுடன் தொடர்பு ஏற்படுகிறது.
உங்கள் வேட்கை பிரகாசமாக ஒளிர்கிறதா?
"எங்களுக்கு சிந்திக்கும் மனம் இருக்கிறது" என்று நீங்கள் கூறுகிறீர்கள். இன்றைய நவீன மக்கள் ஏதோ தாங்கள் மட்டுமே சிந்திப்பதாகவும், இதற்கு முந்தைய தலைமுறையினர் யாரும் சிந்திக்கவே இல்லை என்பது போலவும் முட்டாள்தனமாக நம்புகிறார்கள். அவர்களுக்கு சிந்திப்பதற்கு நேரம் இன்னும் நிறையவே இருந்தது, அவர்கள் உங்களை விட அதிகமாகவே சிந்தித்தார்கள். இன்று உங்களுக்கு கிடைத்துள்ள சௌகர்யங்களும், பலன்களும் அவர்களின் சிந்தனையில் உருவெடுத்தவைதான். இன்றைய நவீன வாழ்க்கை முறையிலுள்ள சிக்கல் என்னவென்றால், நீங்கள் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி - பணிவு என்பது அருகி வருகிறது. பணிவைப் பயிற்சி செய்யுங்கள் என்று நாம் உங்களிடம் கூறமாட்டோம், ஏனென்றால் பயிற்சி செய்து பணிவு காட்டுவது ஆங்காரத்தைவிட மோசமானது, அது ஏமாற்றத்தைத் தரும்.
பக்தி என்பது வேட்கையின் அதீத நிலை. இப்போது உங்கள் வேட்கை மெழுகுவர்த்தியின் ஒளி போல இருக்கிறது. காட்டுத்தீயாக உங்கள் வேட்கை கனன்று கொண்டிருந்தால், நீங்கள் பக்தியில் இருப்பீர்கள். இப்போது உங்கள் வேட்கை அலுப்பாக இருக்க காரணம், உங்கள் அறிவு உங்கள் எல்லைகளைப் பற்றி பெருமை கொள்கிறது. எப்போதும் எல்லைகளை நிர்ணயிப்பதற்கு நவீன கல்வி முறை உங்கள் அறிவிற்கு கற்றுக் கொடுத்துள்ளது. எல்லைகளை வகுப்பது அறிவின் அடையாளமல்ல - உங்களில் ஊர்வன விலங்கினத்தின் மூளை இருப்பதன் அடையாளம் அது. நீங்கள் எல்லை வகுத்துக் கொள்வதற்கு காரணம் உங்களுக்குள் இருக்கும் பிழைத்திருத்தல் உணர்வு வேலை செய்கிறது. எப்படியாவது பிழைத்திருக்க வேண்டும் என்ற உணர்வை தள்ளி வைத்துவிட்டால், நீங்கள் எதை செய்வதற்கும் தயங்கமாட்டீர்கள். அதுதான் வேட்கை. வேட்கை என்றதுமே அது காதல் கொள்வதோ, இருபாலருக்கு இடையேயானதாகவோ அல்லது அதுபோன்ற எதுவாகவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. வேட்கை என்றால் முழு உயிர்ப்புடன் பிரகாசமாக ஒளிர்வது. பக்தி என்றால் உணர்ச்சியை அதன் அதீத எல்லைக்கு எடுத்துச் சென்று தன்னையே எரியும் பொருளாக்கிக் கொள்வது.
உணர்ச்சிகளைக் கண்டு நீங்கள் ஏன் அஞ்சக்கூடாது
நீங்கள் கல்வி அறிவு பெற்றிருந்தால், புன்னகை செய்யக்கூடாது, அன்பு காட்டக்கூடாது, அழகாக தோற்றமளிக்கக் கூடாது, அதோடு உங்கள் கண்களில் இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வெளிப்படக் கூடாது என்று மக்கள் நினைத்துக் கொள்கிறார்கள். மனித இனத்துக்கே உரித்தான உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதை நீங்கள் ஏன் அவமானமாக கருதுகிறீர்கள்? ஏனென்றால் உங்கள் தலைக்குள் பலவிதமான முரட்டு கருத்துக்களை ஏற்படுத்தியிருக்கிறீர்கள், அதை சுதந்திரம் என்றும் எண்ணுகிறீர்கள். அது அப்படியல்ல. அன்பு, ஆனந்தம், வலி அல்லது கவலையோடு ஒரு துளி கண்ணீரை சிந்தவும் முடியாத அளவுக்கு நீங்கள் ஆழமாக அடிமைப்பட்டிருக்கிறீர்கள். உங்கள் உணர்ச்சிகளைப் பற்றி அவமானம் கொள்வதில் எந்த புத்திசாலித்தனமும் இல்லை. உங்களது அறிவு உங்களை மேம்படுத்துவதில் எந்த தவறும் இல்லை என்று நினைக்கிறீர்கள், அதுபோலவே உங்கள் உணர்ச்சிகள் உங்களை மேம்படுத்த உதவினால் என்ன தவறு இருக்கிறது? உங்கள் உணர்ச்சிகளால் நீங்கள் முடங்கினால், அவை தவறான உணர்ச்சிகள். அப்படி இருக்கும் பட்சத்தில் நீங்கள் அவற்றில் மாற்றம் ஏற்படுத்த தேவையிருக்கிறது.
உங்கள் புத்திசாலித்தனத்தை விட உங்கள் உணர்ச்சிகளே உங்கள் உயிருக்கும் இருப்புக்கும் மிகவும் நெருக்கமானவை. அவை எளிதாக மாறக்கூடியதாகவும் மிக நெகிழ்வாகவும் இருக்கிறது. ஆனால் புத்திசாலித்தனத்தின் அந்த ஒரு பரிணாமத்தை நீங்கள் அடக்கி வைத்திருக்கிறீர்கள். ஒரு பெண்ணாக இருப்பதில் உங்களுக்கு ஒரு அணுகூலம் இருக்கிறது. ஏனென்றால், இயற்கை பெண்மைக்கு பிரத்யேகமாக வழங்கியிருக்கும் ஒரு பொறுப்பும் ஒரு சாத்தியமும், நீங்கள் ஒரு ஆண்தன்மையுள்ள உடலோடு இருந்திருந்தால் நடப்பதைவிட மிக வேகமாகவும் மிக எளிமையாகவும் உங்களுக்கு செயல்கள் நடப்பதற்கு அனுமதிக்கிறது. அதுவே உங்களது புத்திசாலித்தனம். தயவுசெய்து அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தொடரும்...
மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.