மனித உடலமைப்பு குறித்து ஆதியோகி சொல்லிவைத்துள்ள கருத்துக்களும் இன்றைய விஞ்ஞானிகள் சொல்லும் கருத்துக்களும் ஒத்துப்போவது பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது! அதே வேளையில், மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய முடியுமா என்பதற்கான பதிலையும் இக்கட்டுரை தருகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

இந்த உடல் என்பது சூரியக் குயவனின் சுழலும் சக்கரத்திலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட ஒரு பானை. சூரியமண்டலத்தின் சுழற்சியைப் பொறுத்து, உடல் இயங்குகிறது. சூரியமண்டலத்தின் ஒவ்வொரு நிகழ்வும் மனித உடலுக்கும் நிகழ்கிறது. ஆதியோகி கூறினார், “ஏற்கனவே மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டான். இதற்கு மேலும் பரிணாம வளர்ச்சி ஏற்பட வேண்டுமென்றால், சூரியமண்டல அமைப்பின் அடித்தளத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே அது நிகழும், இல்லையென்றால் மனிதனுக்கு அடுத்தகட்ட பரிணாமம் நிகழ்வதற்கு வாய்ப்பில்லை”.

பரிணாமம் உடலளவில் நடந்தபிறகு, உடல் தாண்டி மற்ற நிலைகளிலும் நடக்கிறது. விலங்கிலிருந்து, ஒரு மனிதனாக மாறுவதற்கு, பரிணாம வளர்ச்சி வெவ்வேறு பரிமாணங்களில் நிகழ்ந்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, அடிப்படையான விழிப்புணர்வு மலர்ந்துள்ளது.

மனித மூளையானது மேலும் பரிணாம வளர்ச்சியடைய முடியாது என்று இன்றைய நரம்பியல் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்போது மனிதனுக்கு இருப்பதைவிட அதிகமான மூளை வளர்ச்சி பெறுவதற்கு வழியே இல்லை. மனிதன் தன் மூளையை மேலும் சிறப்பாகப் பயன்படுத்த முடியுமே தவிர, இதற்குமேல் அதை வளரச் செய்ய முடியாது. ஏனென்றால் அப்படிச் செய்வதற்கு இரண்டு வழிகளே உள்ளன. ஒன்று, மூளையிலுள்ள நரம்பணுக்களின் அளவைப் பெரிதுபடுத்தலாம் அல்லது நரம்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

நரம்பணுக்களின் அளவை (கன பரிமாணத்தை) பெரிதாக்கினால், அதற்குண்டான இணைப்புகளை மூளையால் தாங்கிக்கொள்ள முடியாது; ஏனென்றால் அதற்கு அளவுக்கதிகமான சக்தி தேவைப்படும். அல்லது நரம்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தாலோ அவைகளுக்கு இடையிலான தகவல் தொடர்பில் ஒரு ஒத்திசைவு இருக்காது. ஒரு மனிதன் அதிக புத்திசாலியாகத் திகழ வேண்டுமானால் அதிக ஒத்திசைவு தேவை. அதுதான் ஒரே வழி. அந்த ஒத்திசைவு அல்லது இணக்கம் நடக்கும்போது, அவர் மிகுந்த புத்திசாலியாகத் தோன்றுவார். ஆனால் அப்போதும் கூட உண்மையில் மூளையின் பயன்பாட்டை அதிகரித்ததால்தான் அவர் புத்திசாலியாகத் தெரிகிறார். மற்றபடி மூளை வளர்ச்சி என்பது நிகழ்ந்திருக்க முடியாது. அதாவது மூளையின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யலாம், ஆனால் மூளை வளர்ச்சியை இதைவிட அதிகப்படுத்த முடியாது. ஏனென்றால், இயற்பியல் விதிகள், மூளை வளர்ச்சி இதைக் காட்டிலும் அடுத்த படிக்குச் செல்வதற்கு அனுமதிக்காது.

ஒரு மனிதனின் பரிணாம வளர்ச்சியில், உடலளவில் பரிணாமம் நடந்தது முதல்நிலைதான். பரிணாமம் உடலளவில் நடந்தபிறகு, உடல் தாண்டி மற்ற நிலைகளிலும் நடக்கிறது. விலங்கிலிருந்து, ஒரு மனிதனாக மாறுவதற்கு, பரிணாம வளர்ச்சி வெவ்வேறு பரிமாணங்களில் நிகழ்ந்திருக்கிறது. அனைத்திற்கும் மேலாக, அடிப்படையான விழிப்புணர்வு மலர்ந்துள்ளது.

உங்களின் பெரும்பகுதியை விழிப்பான நிலைக்கு வழிநடத்தக்கூடிய பலவிதமான முறைகள் ஆன்மீகத்தில் உள்ளன. ஆன்மீகத்தின் முழு சிறப்பே அதுதான். சில யோகிகள் இயற்கைக்கு மாறான செயல்கள் - இதயத்தின் இயக்கத்தை நிறுத்துவது போன்றவை - நிகழ்த்துவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவர்கள் யோகத்தைப் பயின்றவர்கள் என்றாலும், சர்க்கஸ் கலைஞராகும் ஆசை கொண்டவர்கள். ஆனால், இதில் நீங்கள் முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இதயம் போன்ற தானாக இயங்கக்கூடிய உடல் இயக்கங்களைக் கூட ஒரு தன்னுணர்வான செயலாக மாற்றமுடியும் என்பதைத்தான். அதுபோன்ற ஒரு விழிப்புணர்வை அடைந்துவிட்டால், அதன்பிறகு எப்போதும் அது தானாக இயங்கும் ஒரு செயலாக இருப்பதில்லை.