'நல்லவனாக இருக்க வேண்டும்' என்று கேட்டுக் கேட்டு நாம் வளர்ந்திருக்கிறோம். என்றாலும், இதையே நாம் தவறாகக் கொள்வதற்கும் வாய்ப்பிருப்பதை இங்கே சுட்டிக் காட்டுகிறார் சத்குரு.

Question: நான் நல்ல மனிதனா இல்லையா என்பதை எப்படிக் கண்டு கொள்வது?

சத்குரு:

அது சமூகத்தின் பிரச்சினை, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது உண்மையில் நீங்கள் மனிதன் தானா, இல்லையா என்பதைத்தான். மனிதன் என்பது இந்த உடல்தான் என்று பார்த்தால், நமக்கும் விலங்கிற்கும் வித்தியாசம் ஏது? எல்லா விலங்கையும் போலத்தான் நமக்கும் உடல் உள்ளது. அப்படியென்றால் மனிதன் என்று எதைக் குறிப்பிடுகிறோம்? எது நம்மை வித்தியாசப் படுத்துகிறது? விழிப்புணர்வுடன் பகுத்துப்பார்க்கும் திறன். அது நம்மிடம் இருக்கிறது, விலங்குகளிடம் இல்லை. இந்த விழிப்புணர்வை வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் பயன்படுத்துகிறீர்களா, இல்லையா என்பதுதான், நீங்கள் 100% மனிதனா அல்லது பாதி மனிதன், பாதி விலங்கா என்பதை நிர்ணயிக்கிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
'நான் மிகவும் நல்லவன்' என எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர், இவ்வுலகில் மற்ற எவரும் சரியில்லை என்றுதான் எண்ணிக் கொண்டிருப்பார்.

இன்று நீங்கள் எப்படிப்பட்ட மனிதர் என்பதை வெளிப்புற சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கின்றன. இப்போது யாரோ ஒருவர் உங்களிடம் மோசமாக நடந்து கொண்டால் நீங்கள் அதைவிட மோசமாக நடப்பீர்கள். யாரோ ஒருவர் உங்களிடம் கோபமாக நடந்து கொண்டால் நீங்களும் அவரிடம் கோபமாக நடந்து கொள்வீர்கள். சில நேரங்களில் உடல் ரசாயனம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது, சில நேரங்களில் உங்கள் ஹார்மோன்கள்உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இப்படிப் பல சக்திகளின் வலுக்கட்டாயத்தில் செயல்படும் போது, நீங்கள் உண்மையில் ஒரு மனிதராக இருப்பதில்லை. மனித உருவில் இருக்கும் பலவற்றின் கலவையாகத்தான் இருக்கிறீர்கள்.'என்ன செய்கிறேன்' என்று முழு விழிப்புணர்வோடு இருக்கும் நொடிகளில்தான் நீங்கள் உண்மையான மனித உயிராக இயங்குகிறீர்கள்.

இந்த நொடியில் என்ன செய்கிறீர்களோ அதில் நீங்கள் முழு விழிப்புணர்வுடன் இருந்தால், இந்த உலகத்தில் நீங்கள் இயங்கும் விதம், உங்களுக்குள் நீங்கள் இயங்கும் விதம் என எல்லாவும் மிகமிக வித்தியாசமாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்முறையையும் விழிப்புணர்வுடன் உருவாக்கினால், நீங்கள் ஒரு ஆனந்தமான மனிதராக உருமாறுவீர்கள். மிகவும் மகிழ்ச்சியான, ஆனந்தமான நிலையில் இருக்கும்போது, உங்களைச் சுற்றியிருப்போருக்கு நீங்கள் ஒரு அற்புதமான மனிதராகத் தெரிவீர்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லாத நேரத்தில் உங்களை பிறர் சந்திக்க நேரிடும்போதுதான் அவர்கள் உங்களின் மறுபக்கத்தை பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

விழிப்புணர்வுடன் இருக்கும் நொடிகளில், உங்களுக்குள் எந்த வருத்தமான சூழ்நிலையையும் நீங்கள் உருவாக்கிக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் வருத்தமாக இல்லாதபோது, மற்றவருக்கும் வருத்தத்தைத் தரமாட்டீர்கள். தெரிந்தோ தெரியாமலோ, நல்ல எண்ணங்களுடனோ அல்லது கெட்ட எண்ணங்களுடனோ நீங்கள் வருத்தமாக இருந்தால், அதே வருத்தத்தை மற்றவர் மீதும் திணித்துவிடுவீர்கள். அதனால் நல்ல எண்ணங்களும், உங்களை நீங்களே நல்லவரென்று எண்ணிக் கொள்வதும் மட்டும் உங்கள் வாழ்க்கையை அழகாக்கி விடாது. உண்மையாகவே ஆனந்தமானவராக நீங்கள் மாற வேண்டும். அப்போதுதான் உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிற்கும் உங்களால் மகிழ்ச்சியளிக்க முடியும். இல்லை என்றால் முடியாது.

Question: அப்படியானால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டுமெனில் நீங்கள் முதலில் மகிழச்சியாக இருங்கள் என சொல்ல வருகிறீர்கள், சரியா?

சத்குரு:

உங்களைச் சுற்றி நடப்பதைப் பொறுத்து இல்லாமல், இயல்பாகவே நீங்கள் ஆனந்தமானவராக இருக்கவேண்டும். அப்படி நீங்கள் இருந்துவிட்டால், பின்னர் உண்மையாகவே நீங்கள் விரும்பினால், நல்லமனிதர் என்ற பட்டத்தையும் கூட வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் நல்லமனிதராக இருப்பதை விட ஆனந்தமான மனிதராக இருப்பதே சிறந்தது.

Question: நல்ல மனிதராக இருப்பதில் அப்படியென்ன தவறு?

சத்குரு:

ஒன்றை நல்லதென நீங்கள் சொல்லும் அக்கணத்திலேயே வேறொன்றை கெட்டது என்று நீங்கள் வைத்திருக்க வேண்டும், இல்லையா? ஏதோ ஒன்றை கெட்டது என நீங்கள் தீர்மானித்தால் தான், மற்றொன்றை நல்லது எனப் பார்க்க முடியும். 'நான் நல்லவன்' என்று நீங்கள் நினைக்க நினைக்க, மற்றவர்களெல்லாம் சரியல்ல என்று பார்ப்பீர்கள். 'நல்லது' என்பது எதன் அடிப்படையில் முத்திரை குத்தப்படுகிறது என்பதை தயவுசெய்து பாருங்கள். 'நான் மிகவும் நல்லவன்' என எண்ணிக் கொண்டிருக்கும் ஒருவர், இவ்வுலகில் மற்ற எவரும் சரியில்லை என்றுதான் எண்ணிக் கொண்டிருப்பார். உலகத்தில் யாரும் சரியில்லை என நினைத்தால், அது நோயின் அறிகுறி.

Question: இல்லை, ஒருவர் தன்னை நல்லவர் என்று எண்ணிக் கொள்ளும்போது மற்றவர்களும் நல்லவர்கள் என்பதைப் பார்க்கிறார்.

சத்குரு:

‘நல்லது’ எனும் சிந்தனை எப்போது வரும்? கெட்டது என்று ஒன்றை ஒதுக்கினால் தானே? ‘கெட்டது’ இல்லாமல் ‘நல்லது’ என்பதற்கு அர்த்தம் கிடையாது. நீங்கள் எவ்வளவுதான் பூசி மெழுகினாலும், ‘நல்லது’ என்னும் சிந்தனையே ஏதோ ஒன்றை ‘கெட்டது’ என்று எண்ணுவதால்தான் வந்தது. ‘நல்லது’ என்பதுடன் நீங்கள் எந்த அளவு உங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறீர்களோ, அந்த அளவிற்கு ‘கெட்டது’ என்பதுடன் தடையை உருவாக்கி கொள்கிறீர்கள். இந்ததடையினால், நான் நல்லவன் என்று நீங்கள் சொல்லும் அந்தக்கணமே, இந்த உலகை இரண்டாகப் பிரிக்கிறீர்கள். இப்படிப் பிரிவினை செய்யும் போது, சேர்த்துக் கொள்வதற்கான வாய்ப்பேது? உங்களை நீங்களே விலக்கி வைத்துக் கொள்ளத்தான் முடியும்.