தன் ஆரம்ப வருடங்களில், சமூகத்தில் நடந்த அநியாயங்களைக் கண்டு கோபம் கொண்டதையும், பிறகு அந்த நிலை எப்படி மாறியது என்பதையும் பகிர்ந்துகொள்ளும் சத்குரு, கோபம் என்பது எப்படி பல அழிவுகளுக்கு காரணமாகிறது என்பதையும் இதில் விளக்குகிறார்...

சத்குரு:

சே குவேராவின் வார்த்தைகள்...

என் வாழ்வின் ஆரம்ப வருடங்களில் பொதுவாகவே நான் கோபமாக இருந்திருக்கிறேன். குறிப்பிட்டு யார் மீதும் கோபம் கிடையாது. ஆனால் சுற்றிலும் நடக்கும் அநியாயங்களைக் கண்டு எனக்குள் கோபம் குமுறிக்கொண்டே இருக்கும். சேகுவேரா சொன்ன 'கோபம் வெடித்தால், நீ எங்களில் ஒருவர்!' (If you are outraged... you are one of us) என்ற வாக்கியத்தை மிகவும் மதித்த காலம் அது.

பொதுவாக, இளைஞர்கள் பலரும் தீவிரமாக இருப்பதற்குக் கோபம்தான் ஒரே வழி என்று நம்புகிறார்கள்.

தியானம் என் வாழ்க்கைக்குள் வந்தபோது, இது மாறியது. 'கோபம் விலக்கினால்தான் தீர்வு கிட்டும்!' (If you are out of rage only, there is solution) என்று தீர்மானமான தெளிவு வந்தது.

கோபமாக உள்ளபோது தீவிரமாக இருப்பதைக் கவனித்திருக்கிறேன். தீவிரமாக இருந்து கொண்டு கொதித்தாலும் இருக்க முடியும் என்ற புதிய பரிமாணத்தைத் தியானம்தான் எனக்குள் கொண்டு வந்தது. அது புரிந்த பின், என் வாழ்க்கையின் நோக்கம் முற்றிலும் மாறியது.

கோபம் என்பது அழிவுப் பாதை

பொதுவாக, இளைஞர்கள் பலரும் தீவிரமாக இருப்பதற்குக் கோபம்தான் ஒரே வழி என்று நம்புகிறார்கள். உண்மையில், கோபம் என்பது உங்களை நீங்களே அழித்துக் கொள்வதற்குத்தான் அடிகோலுகிறது. எந்தக் காரணத்துக்காகக் கோபம் கொள்கிறீர்களோ, அந்த அடிப்படையையே கோபம் சிதைத்து சின்னாபின்னமாக்கிவிடுகிறது!

குளிர்ந்த நெருப்பைப் போல, அமைதியாக இருந்து கொண்டே தீவிரமாக இருப்பது எப்படி என்பதைச் சொல்லித் தருவதே இப்போது என் நோக்கம். அதற்காகச் சவம் போல் அமைதியாக இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் விரும்பியதில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

என் கண்களை பாருங்கள்... உள்ளே ஓர் எரிமலை உயிரோடு இருப்பது புலப்படும். அதே சமயம், என் முகத்தில் எந்தக் கொதிப்பையும் நீங்கள் காண முடியாது. தீவிரமாகவும் இருந்து கொண்டு ஆனந்தமாகவும் இருக்க முடியும் என்பதே என் அனுபவம்.

என்னிடம் கோபம் பாராட்டியவர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள்.

என் அப்பா என்னிடம் காட்டாத கோபமா? ஆசிரியர்கள் என்னிடம் பாராட்டாத கோபமா? என்னை முன்பின் சந்தித்தேயிராத பலர் கூட என் மீது கோபமாக இருக்கிறார்கள்.

நான் கேட்கும் கேள்விகள் பலருடைய அஸ்திவாரத்தையே அசைத்துவிடுகின்றன. வசதியாக ஒரு கூட்டுக்குள் உட்கார்ந்திருப்பவர்களை என் கேள்விகள் குடைவதால், அவர்கள் என் மீது கோபம் கொள்கிறார்கள். நின்ற இடத்திலேயே நின்றுவிட்டவர்களை என் கேள்விகள் உலுக்குவதால்... அந்தத் தொந்தரவைப் பொறுக்க முடியாமல் பலர் கோபமாகிறார்கள்.

ஒன்று, அவர்கள் வெளிச்சத்தைக் காண வேண்டும். அல்லது கோபம் கொள்ள வேண்டும். ஏதோ ஒருவிதத்தில் அவர்களை உறக்க நிலையிலிருந்து தட்டி எழுப்பிவிட்டேனே, அதுவே எனக்குத் திருப்தியாக இருக்கிறது.

கோபத்தில் நியாயம் தேடுபவர்கள்...

ஓர் அரசியல்வாதியிடம் கேளுங்கள்; பிச்சைக்காரனிடம் கேளுங்கள்; கொள்ளையடிப்பவனிடம் கேளுங்கள்; சிறு திருட்டுகள் செய்பவனிடம் கேளுங்கள்; தத்துவவாதியிடம் கேளுங்கள்; யாராக இருந்தாலும் தங்கள் கோபத்தில் ஒரு நியாயம் இருப்பதாகவே சொல்வார்கள்.

உண்மையில், வன்முறையை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வர்கள் கோழைகள். அன்பை முன்வைத்து வாழ்க்கையை வாழ்பவர்களே வீரமானவர்கள்.

ஒரு தாவரமோ, மிருகமோ, பூச்சியோ அடுத்தவர்களைத் தங்களைப்போல் மாற்றிவிடத் திட்டம் தீட்டுவதில்லை. மனிதன் மட்டும்தான் தன் கொள்கைகளை மற்றவர் மீது திணிக்க முற்படுகிறான். சரிப்பட்டுவராதவர்களுடன் அவனுடைய போராட்டம் துவங்கிவிடுகிறது.

மதத்தின் கௌரவத்துக்காகக் கொலை செய்வது கூட நியாயமான கோபம் என்று சொல்லிக் கொள்ளப்படுகிறது. வன்முறையில் ஈடுபடும் பல தீவிரவாதிகளிடம் கேட்டால், அவர்களும் தங்கள் கோபம் நியாயமானது என்றே சொல்வார்கள். கோபத்துக்கு நியாயம் கற்பிப்பது எந்த விதத்திலும் புத்திசாலித்தனமல்ல.

கோபம் என்பது ஒரு சக்தி மிகுந்த ஆயுதம் என்று, பலரும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அந்த ஆயுதத்தை அடுத்தவர் மீது ஏவும்போது, ஏவியவர் மீதே அல்லவா அது அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது? அவர் எதிர்பார்த்த முடிவு மோசமாக அல்லவா மாறிப்போகிறது?

வன்முறையின் முதல்படி...

தனி மனிதர்களிடம் ஆரம்பிக்கும் இந்த வேகம் உருண்டு திரண்டு குடும்பப்பகை, சமூகப்பகை, நாட்டுப் பகை என்று விரிவடைந்து கொண்டே போய்விட்டது. பழிவாங்குவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட கலாச்சாரமாகவே மாறிவிட்டது.

குடும்பத்தில் ஆகட்டும், சமூகத்தில் ஆகட்டும், அரசியலில் ஆகட்டும், பரந்த உலகத்தில் ஆகட்டும்... நியாயமான கோபம் என்று கோபத்துக்கு லைசென்ஸ் கொடுத்தால், அராஜகம்தான் தலைதூக்குகிறது. வன்முறை நிறைந்த தீவிரவாதத்துக்குக் கோபம்தான் முதல்படி.

தங்கள் மொழிக்காக, தங்கள் இனத்துக்காக, தங்கள் மாநில மக்களுக்காக நியாயம் கேட்பதாகச் சொல்லிக் கொண்டு, மற்றவர் மீது குரூரமான வன்முறையை அவிழ்த்துவிடும் நபர்களைப் பல இடங்களில் காண முடிகிறது.

அடுத்தவருக்கு வலியை ஏற்படுத்துவதுதான் சந்தோஷம் என்று எப்போது புத்தி வேலை செய்கிறதோ, அப்போதே வாழ்க்கையின் நோக்கம் சிதைந்து போகிறது. வளர்ச்சியே நின்றுவிடுகிறது.

உண்மையில், வன்முறையை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வர்கள் கோழைகள். அன்பை முன்வைத்து வாழ்க்கையை வாழ்பவர்களே வீரமானவர்கள்.

அறியாமை அதிகமாக அதிகமாக கோபம் அதிகமாகிறது. கோபம் என்ற நோய் உள்ளே புகுந்துவிட்டால், அது உங்களையே தின்று ஒன்றுமில்லாதவராக ஆக்கிவிடுகிறது.

உங்கள் சந்தோஷத்தை இப்படி வெளிச்சூழ்நிலைகளுக்குப் பணயம் வைக்காமல், உள்ளே அமைதியாக இருக்கக் கற்றுக் கொண்டால்தான், உங்கள் திறமை முழுமையாக வெளிப்படும். வெற்றிகள் உங்களைத் தேடிவரும்!