சமீபத்தில் பாரிஸ் நகரில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்கள் பெரும் துக்கத்தையும், கடுமையான கண்டனங்களையும் எழுப்பியிருக்கிறது. மனிதன் விளைவிக்கும் இம்மாதிரியான கொடும் சம்பவங்கள்,. இப்பொழுதெல்லாம், அச்சப்படும் வகையில், தொடர்ந்த இடைவெளிகளில் உலகின் பல்வேறு பகுதிகளில் நடக்கின்றன. மத சம்பந்தமான தீவிரவாதத்தைப் பற்றியும், அதைத் தடுக்க உலகத்தில் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றியும் சத்குருவின் வார்த்தைகளில்...

சத்குரு:

இன்றைய உலகில் அனைத்துத் தீவிரவாதங்களிலும் மதத் தீவிரவாதம் தான் பெரிய பங்கு வகிக்கிறது. தீவிரவாதத்தின் நோக்கம் யுத்தம் அல்ல, ஒருவித பயத்தை உருவாக்கி சமுதாயத்தை முடமாக்குவதுதான்.. இவர்களின் நோக்கம் மக்களிடையே பீதியை உண்டாக்குவது, சமுதாயத்தை பிளவு படுத்துவது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தேக்கி முட்டுக்கட்டை போடுவது, சண்டை சச்சரவை உண்டாக்குவது, வன்முறை மற்றும் சட்ட- ஒழுங்கின்மை உண்டாக்குவது - அதாவது மொத்தத்தில் ஒரு நாட்டை உருக்குலைய வைப்பதுதான் இவர்களின் நோக்கம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உலகை ஆளும் பேராவலைத் தூண்டும் மத போதனைகள், எல்லா உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் மனப்பாங்கைக் கொண்டது. மற்ற எல்லா வன்முறைகளை விட, மதம் ஊக்குவிக்கும் தீவிரவாதம்தான் மிக ஆபத்தானது. ஏதோ ஒரு விஷயத்திற்காக போராடும் மனிதனிடம் நாம் அறிவுபூர்வமாகவும், நியாயமாகவும் பேச முடியும். ஆனால் எப்பொழுது ஒரு மனிதன் தன் கடவுளுக்காக போராடுகிறானோ, அவனிடம் நியாய-அநியாயம் பற்றி பேசவே முடியாது. மனிதன் பணத்திற்காகவோ, சொத்து சுகங்களுக்க்காகவோ சண்டை போட்டால் அவனிடம் பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியம். ஏனென்றால் அது அவன் வாழ்க்கை பிரச்சினை. ஆனால் கடவுளின் பெயரில் போராடுபவனோ அல்லது கடவுளுக்காக வேலை செய்பவனோ அல்லது கடவுளின் வேலையை செய்பவனோ உயிரைத் துறக்கக் கூட தயாராக இருப்பார்கள், கூடவே மற்றவரின் உயிரையும் எடுத்து செல்வார்கள்.

அரசியல் ரீதியாக சரி என்பதைவிட நிரந்தர தீர்வின் தேவை:

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, மதக்குழுவினரால் இந்த பூமியில் உள்ள பல மக்கள் மேல் வன்முறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. மதத்தின் பெயரில் நடக்கும் வன்முறைகள் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களை ஆராய்வதற்கான காலகட்டம் இது. மக்களின் விவாதங்கள், சரியான அரசியல் நிலைப்பாடு என்பதிலிருந்து இந்த தீமைகளுக்கான தீர்வைக் கண்டறிவது என்பதை நோக்கி நகர வேண்டும். கடவுளின் சொற்கள் என்று வர்ணிக்கப்படுகிற புனித நூலிலேயே, எவர் ஒருவர் இந்த வார்த்தைகளில் நம்பிக்கை வைக்காமல் இருக்கிறாரோ அவரின் மேல் வன்முறையை தூண்டும்படியான வார்த்தைகள் உள்ளன.

இந்த மாதிரியான வார்த்தைகள் ஏதோ ஒரு காரணத்திற்காக போதிக்கப் பட்டவையாகவே இருக்கட்டும், ஆனால் எது சமுதாயத்திற்கு ஒவ்வாத ஒன்றோ அவைகளை, கடவுளின் விருப்பத்துடன், விலக்கி விடுவதற்கான தருணம் இது. கடவுள் ஒன்றும் சொல்லவில்லை என்றால், அது சம்மதத்திற்கான அறிகுறி என்று எடுத்துக்கொள்வது தவறாக இருக்காது தானே என்று நாம் கேட்கலாம். கடவுளின் போர்வீரராக யாரும் மாறத் தேவையில்லை என்பதை உறுதி செய்யும் தருணம் இது. எந்த விதமான வன்முறை செயல்களுக்கும் ஏதோ ஒரு நிலையில் தீர்வு காண முடியும், ஆனால் கடவுளின் பெயரால் வன்முறை செய்பவருக்கு எதிராக தீர்வே இல்லை. அவர்களை அந்த மனப்பாங்கிலிருந்து விலக்குவது முடியாது. ஏனென்றால் அவர்கள் எல்லையற்ற ஒன்றிற்காக போராடுகிறார்கள், அதுவே இந்த உலகிற்கு ஒரு சாபமாகவும் இருக்கிறது. எல்லா விதமான மதம் சார்ந்த அமைப்புகளும், வன்முறையைத் தூண்டிவிடும் வார்த்தைகளை தங்கள் புனித நூல்களிலிருந்து நீக்கக் கூடிய சாத்தியத்தை ஆராய முன்வரும் போதுதான் தீர்வுக்கான சாத்தியம் இருக்கும். ஏதோ ஒரு அமைப்பு மட்டும் அல்ல, எல்லோருமே அதற்குண்டான முயற்சியில் இறங்க வேண்டும். இது சுலபமான செயல் இல்லை என்றாலும், ஏதோ ஒரு தருணத்தில் தொடங்கியே ஆக வேண்டும்.