சிறுதானிய இட்லியுடன் மணத்தக்காளி சட்னி! - சாப்பிட ரெடியா?
உணவுக்குப் பின் மருந்து சாப்பிடும் கலாச்சாரம் பெருகிவரும் இன்றைய சூழலில், உணவே மருந்தாக அமைந்திருந்த நமது பாரம்பரிய உணவுமுறையை நினைவூட்டும் விதமாக இங்கே இரண்டு ரெசிபிகள் உங்களுக்காக!
ஈஷா ருசி
உணவுக்குப் பின் மருந்து சாப்பிடும் கலாச்சாரம் பெருகிவரும் இன்றைய சூழலில், உணவே மருந்தாக அமைந்திருந்த நமது பாரம்பரிய உணவுமுறையை நினைவூட்டும் விதமாக இங்கே இரண்டு ரெசிபிகள் உங்களுக்காக!
Subscribe
மணத்தக்காளி சட்னி
தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி பழம், காய் சம பங்கு - 1 கப்
ஆப்பிள் தக்காளி - 2
வரமிளகாய் - சுவைக்கேற்ப
சீரகம் - அரை டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - அரை டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தேங்காய் துருவல் - கால் கப்
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் சிறிதளவு ஊற்றி சூடானவுடன் சீரகம், மிளகாய், தக்காளி மூன்றையும் போட்டு வதங்கியவுடன், மணத்தக்காளி காய் மற்றும் பழம் இரண்டையும் போட்டு மெதுவான தீயில் வதக்கவும். இதில் தேங்காய் துருவல், கொத்தமல்லி தூள், உப்பு சேர்த்து இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்து, பின்னர் அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து கொட்டவும். இந்த சட்னியை சாதத்திற்கும், இட்லி, தோசைக்கும் சாப்பிடலாம்.
இந்நாட்களில் வயிறு சம்பந்தமான பிரச்சனை இல்லாதவர்களே இல்லை எனலாம். வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மணத்தக்காளி அற்புதமான மருந்து.
சிறுதானிய இட்லி
தேவையான பொருட்கள்:
கேழ்வரகு - 2 கப்
கம்பு - 2 கப்
குதிரைவாலி - 1 கப்
உளுந்து - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
கேழ்வரகு, கம்பு, குதிரைவாலி அரிசி மூன்றையும் 6 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். உளுந்தை தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும். அரைத்த 2 மணிநேரத்தில் இட்லி ஊற்றலாம். சுவையாக இருக்கும்.