மகிழ்ச்சி பொங்கும் 2014
இன்றைய சத்குரு ஸ்பாட் புத்தாண்டிற்கு ஓர் வரவேற்பாய் அமைந்துள்ளது. தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை நமக்கு வழங்கியிருக்கும் சத்குரு, சொர்க்கம் என்பது எங்கோ இல்லை சந்தோஷமாக இருக்கும் ஒவ்வொரு மனிதனும் சொர்க்கத்திலேயே இருக்கிறான் என்கிறார். மேலும், "என்னுடைய பிரார்த்தனைகளுக்கு விடை கொடுப்பது யார்?" என்று கேள்வி கேட்டவருக்கு இங்கே விடையும் வழங்கியிருக்கிறார். புத்தாண்டு ஸ்பெஷலாய் ஈஷா 2013 வீடியோவும் உங்களுக்காக...
இன்றைய சத்குரு ஸ்பாட் புத்தாண்டிற்கு ஓர் வரவேற்பாய் அமைந்துள்ளது. தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை நமக்கு வழங்கியிருக்கும் சத்குரு, சொர்க்கம் என்பது எங்கோ இல்லை சந்தோஷமாக இருக்கும் ஒவ்வொரு மனிதனும் சொர்க்கத்திலேயே இருக்கிறான் என்று சொல்லி... தனக்கே உரிய பாணியில் 'வெறுமையான முகம்' என்னும் கவிதைக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்.
மேலும், "என்னுடைய பிரார்த்தனைகளுக்கு விடை கொடுப்பது யார்?" என்று கேள்வி கேட்டவருக்கு விடையும் இங்கு மலர்ந்துள்ளது. புத்தாண்டு ஸ்பெஷலாய் ஈஷா 2013 வீடியோவும் உங்களுக்காக...
சத்குரு:
படைப்பின் மூலத்தை உங்களுள் செயல்பட அனுமதித்தால், நீங்கள் மகிழ்ச்சியாக மட்டுமே இருக்க முடியும்.
ஒருவர் சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமென்றால், சொர்க்க வாசலில் உங்களிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்படும் என்று எகிப்த்திய பாரம்பரியம் சொல்கிறது. இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில்கள் "ஆம்" என்று இல்லாவிட்டால், சொர்க்கத்திற்கு அனுமதி இல்லை. முதல் கேள்வி, "உங்கள் வாழ்வில் சந்தோஷத்தை உணர்ந்திருக்கிறீர்களா?" இரண்டாம் கேள்வி, "உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு சந்தோஷத்தை விளைவித்திருக்கிறீர்களா?" இதற்கு உங்கள் பதில் "ஆம்" என்று இருந்தால், நீங்கள் ஏற்கனவே சொர்க்கத்தில்தான் இருக்கிறீர்கள் என்றே நான் சொல்வேன்.
சந்தோஷமான மனிதராக மாறுவதே உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ள உயிர்களுக்கும் நீங்கள் செய்யக்கூடிய சிறப்பான விஷயம். கோபமும், காழ்ப்புணர்ச்சியும், சகிப்புத்தன்மை இன்மையும் இன்று மனித மனங்களில் அகோர ரூபமாய் வடிவம் பெறத் துவங்கிவிட்டது. இதனைத் தவிர்ப்பதற்கு சந்தோஷமான மனிதர்கள்தான் ஒரே மூலதனம். சந்தோஷமாக வாழ்வதன் அருமை உணர்ந்தவர்கள் மட்டுமே எங்கெங்கும் இனிமையை பரப்பும் முயற்சியில் ஈடுபடுவர்.
நீங்கள் தொடும் ஒவ்வொன்றும் சந்தோஷமாய் மாறும் நிறைவினை நீங்கள் உணர்வீர்களாக.
விடியும் இந்தப் புத்தாண்டு, ஓர் அர்ப்பணிப்பாக மலர்ந்து, தழைக்கட்டும். உங்களை அர்ப்பணிக்கும் மனப்பான்மையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு உங்களால் செய்யக்கூடிய சிறப்பானவற்றையே செய்யுங்கள். இந்த நிலையில்தான் நீங்கள் முயற்சியில்லாமல் ஒளிர்வீர்கள். வாழ்வின் அழகே நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதில் அல்ல, எப்படி இருக்கிறீர்கள் என்பதிலேயே உள்ளது. நீங்கள் தெய்வீகத்தைப் பெற தகுதி வாய்ந்த அர்ப்பணமாக ஆவீர்களாக, இதன் மூலம் தெய்வீகத்தை தொடுவீர்கள்.
தெய்வீகத்தின் ஆனந்தத்தை உணர்வீர்களாக.
வெறுமையான முகம்
வௌவாலின் அந்தகத்தை
கேட்காத ஒலி மூடி மறைத்துவிட்டது.
உங்கள் அறியாமையை மறைக்க
என்ன இருக்கிறது உங்களிடம்?
போதனைகளின் படிப்பினைகளின் போலி வடிவமா நீங்கள்?
ரகசிய ஆசையை, விருப்பத்தை ஊட்டி வளர்க்கும் வஞ்சனைக்குரியவரா நீங்கள்?
அல்லது குருவின் விருப்பத்தால் செதுக்கப்படுவரா நீங்கள்?
நீங்கள் குருவருளுடன் இசைந்திருக்கிறீர்களா?
நீங்கள் வெறுமையான முகமா, அவர் அருளின் பிரதிபலிப்பா?
Subscribe
- சத்குரு
நம் பிரார்த்தனைகளுக்கு பதிலளிப்பவர் யார்?
சத்குரு:
நீங்கள் எந்தத் தொலைபேசி எண்ணை அழைக்கிறீர்கள் என்பதைப் பொருத்தது அது!
சத்குரு:
உங்கள் பிரார்த்தனை ஒர் அர்ப்பணிப்பாக இருந்தால் அதற்கு பதில் கிடைக்கிறதா இல்லையா என்று உங்களுக்கென்ன கவலை? உங்கள் பிரார்த்தனை ஒரு விண்ணப்பமாக இருந்தால் மட்டுமே, அதற்கு பதில் கிடைக்குமா இல்லையா என்ற கவலை மிஞ்சும். உங்கள் பிரார்த்தனைகள் ஓர் அர்ப்பணிப்பாக இருக்கட்டும். நீங்கள் அர்ப்பணிப்பு நிலையில் இருந்தால் உங்கள் வாழ்க்கை வேறு நிலையில் செயல்படும்.
சப்தரிஷிகள் ஆதியோகியின் முன்னால் எத்தனை நாள் அமர்ந்து அவன் அருளைப் பெற்று, பருகினர் என்று நமக்கு தெரியாது. ஆனால் அவர்கள் எதை கிரகித்து கொண்டனரோ அதை வைத்துப் பார்க்கும்போது அவர்கள் பல்லாயிரமாண்டுகள் ஆதியோகியின் முன் அமர்ந்தனர் என்று நம் மரபு சொல்கிறது. ஒரு மனிதன் தன் முழுத் திறனை அடைவதற்கான 112 வழிகளை ஆதியோகி அவர்களுக்கு வழங்கினான். ஒரு மனிதருக்கு 112 என்பது மிக அதிகம் என்பதால் ஒரு மனிதருக்கு பதினாறாக பகுத்துக் கொடுத்தான். பகுத்துக் கொடுத்தவன் அதனை உலகம் முழுமைக்கும் பகிர்ந்திடச் சொல்லி, எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்று வழியும் காட்டினான்.
அவர்கள் கிளம்பத் தயாரான அந்தத் தருணத்தில், "இத்தனை நிகழ்வுகளுக்குப் பின், நீங்கள் எனக்கெதுவும் தர மாட்டீர்களா?" என வினவினான். ஆதியோகி தங்களுக்கு வழங்கியவற்றில் திளைத்திருந்த சப்தரிஷிகள் இங்கிதங்களை மறந்து போயிருந்தனர், "நம்மிடம் என்ன இருக்கிறது இவருக்கு வழங்க?" எனப் பார்த்தனர்.
"நாங்கள் உடுத்தியிருக்கும் ஒற்றைத் துணியைத் தவிர எங்களிடம் உங்களுக்கு கொடுப்பதற்கு என்ன இருக்கிறது," என்றார் ஒருவர்.
"எனக்கு எதுவும் கொடுக்காமாலா நீங்கள் இங்கிருந்து செல்லப் போகிறீர்கள்?" என்றான் ஆதியோகி.
"நாங்கள் என்ன அர்ப்பணிக்க முடியும்? அவருக்கு நிகராக அர்ப்பணிப்பதற்கு என்ன இருக்கிறது?" என அனைவரும் திகைத்து நின்றனர்.
மனிதன் தன் உச்சநிலையை அடைய, தான் கற்ற 16 முறைகளைக் கொண்டு ஆதியோகியின் தாழ் பணிந்த அகஸ்திய முனி, "நான் பெற்றவை அனைத்தையும் உன்னிடம் சமர்ப்பிக்கிறேன்," என்றார். அகத்திய முனி செய்ததைத் தொடர்ந்து பிறரும், அதனையே செய்தனர். தாங்கள் கற்றுக் கொண்டவற்றையும், தெரிந்து கொண்டவற்றையும் சிவனின் பாதத்தில் அவர்கள் அர்ப்பணித்தனர். தாங்கள் பல வருடங்கள் முயன்று கற்றுணர்ந்தபின் மீண்டும் ஒருமுறை அவர்கள் வெறுமை ஆயினர்.
"நீங்கள் கிளம்புவதற்கான நேரம் வந்துவிட்டது," என்றார் சிவன்.
கிளம்புவதற்கு முன், "நாங்கள் உங்களை நினைத்த மாத்திரத்தில் நீங்கள் எங்களுடன் இருக்க முடியுமா," என்று சப்தரிஷிகள் கேட்டனர்.
"நீங்கள் இதுபோல் இருந்தால், நான் உங்களுடன் என்றும் இருக்கிறேன். நீங்கள் இப்போது இருப்பதுபோல் என்றும் வெறுமையாக இருந்தால், நான் உங்களுடன் எப்போதும் இருக்கிறேன்," என்றார். அவர்கள் நினைத்த மாத்திரத்தில் தன்னை தருவிக்கும் சில முறைகளையும் கற்றுக் கொடுத்தார். அந்த ஏழு பேரும் முழுமையான வெறுமை நிலையில் சென்றதால், தாங்கள் கற்ற 16 வழிகள் மட்டுமல்ல 112 வழிகளும் அவர்களுக்கு உரியதாகும், ஆனால் எதுவும் அவர்களுக்கு சொந்தமாகாது. அவர்கள் ஆதியோகியைப் பிறருக்கு வழங்கும் ஓரு செயற்கருவியாக மாறினர்.
தன் வாழ்நாள் முழுவதும் செலவழித்துக் கற்ற அத்தனை அம்சங்களையும் அவருக்கு அர்ப்பணித்தனர். தாங்கள் கற்ற 16 வழிகளை குருதட்சிணையாக இவர்கள் அர்ப்பணித்தாலேயே இன்றும் குருபூஜை செய்யும்போது நாம் 16 விதமான அர்ப்பணிப்புகளை செய்யும் பாரம்பரியம் இருக்கிறது. இதை 'ஷோடஷ உபசாரம்' என்கிறோம். 16 வழிகளும் அவனுக்கே திரும்ப வழங்கப்பட்டது. இதனை நீங்கள் வெறுமையாக செய்தால் அந்தத் தெய்வீகம் உங்களுடையதாகும். நீங்கள் 'படைத்தல்' என அழைக்கும் அனைத்தும் உங்களுடையதாகும். இல்லாதபட்சத்தில், நீங்கள் சில்லறைகளை சேர்த்துக் கொண்டு, வாழ்க்கையில் வெற்றியடைந்துவிட்டதாக, சாதித்துவிட்டதாக நினைத்துக் கொள்வீர்கள்.
பெரும்பாலான மக்கள் வாழும்போது கற்பதில்லை, மரணம் நேரும் தருவாயில் மட்டுமே உணர்கின்றனர். மரணம் நெருங்கும்போது, நீங்கள் சேகரித்த அனைத்தும் உங்களைப் பார்த்து கொடூரமாய் ஏளனம் செய்யும். அப்போதுதான் வாழ்க்கை வீணாய்ப் போய்விட்டதை நீங்கள் உணர்வீர்கள். தற்சமயம், உங்கள் வாழ்க்கை அருகில் இருப்பவருடன் போட்டி போடுவதில் உள்ளது, உங்கள் வாழ்க்கை முழுவதுமே மற்றொரு முட்டாளைவிட சற்றே மேம்பட்டவராய் விளங்குவதிலேயே உள்ளது.
வெறுமை நிலையில் வெளியே சென்ற சப்தரிஷிகள், இவ்வுலகின் மீது மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தினர், இது அழிக்க முடியாதவாறு நிலைபெற்றுவிட்டது. சப்தரிஷிகளுக்கு தாங்கள் கற்றதை அவன் பாதத்தில் படைக்கும் குணம் இருந்ததால், பல கோடி வழிகளில் ஆதியோகி தன்னை அவர்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டான்..
"எனக்கு இது வேண்டும்" எனக் கேட்கும் மனிதர் வெகு தொலைவிற்கு செல்ல மாட்டார். இன்று என்ன நடக்க வேண்டுமென்று நீங்கள் தெய்வீகத்திற்கு சொல்வது முதிர்ச்சிபெறாத நிலையையே காட்டுகிறது. துரதிர்ஷடவசமாக, இன்று பிரார்த்தனை செரிவற்ற சமாச்சாரமாகிவிட்டது. ஒருவேளை நீங்கள் பிரார்த்தனை செய்ய நேர்ந்தால், அது அர்ப்பணிப்பாக இருக்கட்டும், விண்ணப்பமாக அல்ல.