நாட்டு மாடுகளின் சிறப்பை பறைசாற்றிய ஈஷா மாட்டுப்பொங்கல்!
இந்த ஆண்டு ஈஷா மாட்டுப் பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அந்த நாள் தங்கள் வாழ்வின் மறக்கமுடியாத நாளாக இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை! பாரம்பரிய வாசத்தை வீசிச்சென்ற அந்த கொண்டாட்ட தருணங்களின் சிறப்பம்சங்கள் பற்றி இங்கே ஒரு பார்வை!

"நாட்டு மாட்டின் பால், சாணம், கோமியம் மருத்துவ குணமிக்கவை" -சத்குரு
ஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிலை முன்பாக ஜனவரி 16ம் தேதி பொங்கல் திருவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நாட்டுமாடுகள் மற்றும் நாட்டுநெல் வகைகளைக் கண்டு மகிழ்ந்தனர்.
மதியம் 3 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் பொங்கல் வைத்தல், விளையாட்டுப் போட்டிகள், கோலப்போட்டிகள் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறின. ஆசிரமவாசிகளும் தன்னார்வலர்களும், இணைந்து 31 பானைகளில் பொங்கல் வைத்து நாட்டு மாடுகளுக்கு படையலிட்டு வழிபட்டனர். வழுக்குமரம் ஏறுதல், உறியடித்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் நடைபெற்றன.
ஈஷாவிற்கு அருகாமையிலுள்ள செம்மேடு கிராம பொதுமக்கள் தப்பாட்டம் இசைமுழக்கி அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தினர்.
Subscribe
விழாவில் அனைவரின் உற்சாகக் குரல்களுக்கு மத்தியில், சத்குரு நாட்டு மாடுகள் பூட்டப்பட்ட மாட்டு வண்டியை ஓட்டியபடி வந்து கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். மாலை 6:30 மணிக்கு ஈஷா சம்ஸ்கிருதி மற்றும் ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் வழங்கிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவிகள் தெம்மாங்கு பாடலுடன் கோலாட்டம் ஆடி அசத்தினர்! உழவர் திருநாளின் சிறப்பினைக் கூறும் வகையில் நாட்டுப்புற பாடலுடன் ஈஷா சம்ஸ்கிருதி மாணவ மாணவிகள் வழங்கிய கிராமிய நாட்டிய நிகழ்ச்சி அனைவரின் அபிமானத்தையும் பெற்றது!
விவசாய கலாச்சாரமான நம் தமிழ்க் கலாச்சாரத்தில் கால்நடைகளின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் விதத்தில் அமைந்த மாட்டுப்பொங்கல் திருவிழாவில் 11 வகையான நாட்டுமாடுகள் பொதுமக்கள் பார்வைக்காக நிறுத்தப்பட்டிருந்தன. இதில் காங்கயம், ஓங்கோல், சிவப்பு சிந்தி, ஹள்ளிகர், கிர், தார்பார்க்கர், வெச்சூர், ரதி, கான்கரேஜ், சாஹிவால் உள்ளிட்டவை அடங்கும். மேலும் 300க்கும் மேற்பட்ட நாட்டு நெல் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இயற்கைமுறையில் உருவாக்கப்பட்ட காய்கறி விதைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
சத்குரு அவர்கள் பேசுகையில், “நம் மண்ணை வளப்படுத்தும் ஒரே வழி மண்ணில் போதுமான அளவு கால்நடைகள் வைத்திருப்பதே! நம்நாட்டில் 120 வகையான உள்நாட்டு மாடுகள் இருந்தன. ஆனால் தற்போது வெறும் 37 வகை மட்டுமே உள்ளன. இவற்றை பாதுகாப்பது மிகவும் அவசியம். இவை அழிந்துகொண்டிருக்கின்றன என்ற விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படுத்துவது அவசியம். நாட்டு மாடுகளின் பால் மருத்துவ குணமுள்ளது, மேலும் அதன் சாணமும், கோமியமும் மருத்துவ குணமுடையவை என்று விஞ்ஞானபூர்வமாக கூறப்படுகிறது. மேலும் இந்த கால்நடைகள் விவசாயத்திற்கு மிகவும் பயனுள்ளவை” என்று கூறினார்.
மேலும் அவர், பொதுவாக இன்று பலவிதமான நோய்களுக்கு காரணம் A1 வகை பால் என்றும் நாட்டுமாடுகளின் பால் A2 வகை என்றும் விளக்கினார். தொடர்ந்து பேசுகையில், நாட்டு மாட்டுப்பால் பொதுவான ஆரோக்கியம் வழங்கவல்லது. புற்றுநோய் தடுப்பிற்கும் உதவுவதோடு, குழந்தைகள் வளர்ச்சிக்கும் உதவும் என்றும் கூறினார்.
துரதிர்ஷ்டவசமாக நாம் மேல்நாட்டு மாடுகள் உயர்ந்தரகம் என்று நினைத்துவிட்டோம். ஆனால், இன்று உள்நாட்டு மாடுகளே உயர்ந்த ரகம் என்று விஞ்ஞானப் பூர்வமாக கூறப்படுகிறது. கால்நடைகள் நம் வீட்டின் ஒரு அங்கமாக இருந்தவை. இன்று பலரும் கிராமங்களில் இருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்துவிட்டனர். வீட்டில் கால்நடை வைத்திருப்பதற்கு அனைவருக்கும் வாய்ப்பில்லை. அதனால் வருடத்தில் இந்த ஒருநாள் கால்நடைகளுக்கு நமது நன்றியை வெளிப்படுத்துவதற்காக இந்த விழா என்றார் சத்குரு!
“ஈஷாவில் தற்போது 250 மாடுகள் உள்ளன. இவை அனைத்துமே உள்நாட்டு மாடுகள். அழிந்துகொண்டிருக்கும் 37 ரக மாடுகளையும் வளர்க்க முனைகிறோம். மேலும் உள்ளூர் விவசாயிகளை நாட்டு மாடுகள் வளர்க்க ஊக்கப்படுத்துகிறோம். உள்நாட்டு மாடுகளை பாதுகாக்க பெருமளவில் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறோம். தற்போது இதை சிறிய அளவில் நடைமுறைப்படுத்தி வருகிறோம்!” என்றும் சத்குரு கூறினார்.