வெயிலுக்கு கூலா ஒரு ஹலோ சொல்லலாம் வாங்க!
100, 101... 105ன்னு இப்படி நாளுக்கு நாள் ஏறிக்கிட்டே இருக்கு... இதென்ன டி20 ஸ்கோரா? இல்லங்க நம் ஊரு வெயிலுதான்! இதுக்கு மேல பவர் கட், அதோட அக்னி நட்சத்திரம் வேற தாங்க முடியல! சரி, அதுக்குத்தான் உங்களுக்காக ஜில்லுன்னு குடிக்க தர்பூஸ் கூலன்ட், அப்புறம் இரவில் கூலா சுவைக்க வெள்ளரி மோர் குழம்பு! வாங்க வெயிலுக்கு இதமா ஒரு ஹலோ சொல்லலாம்.
ஈஷா ருசி
வெள்ளரியும் தர்பூஸும் குளர்ச்சியான பழங்கள், அதோடு வெயில் காலத்தில் எளிதில் கிடைக்கக் கூடியவை கூட. மேலும் கோடை காலத்தில் தோன்றும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு இவையிரண்டும் மிகச் சிறந்த நிவாரணிகளாக விளங்குகின்றன.
இதோ மிக மிக சுவையான, குளிர்ச்சியான வெள்ளரி மோர் குழம்பு மற்றும் தர்பூஸ் கூலன்ட் ரெசிபி உங்களுக்காக!
தர்பூஸ் கூலண்ட்
Subscribe
தேவையான பொருட்கள்
தர்பூசணி - விதை நீக்கி நறுக்கியது - 5 கப்
புதினா - 1/4 கப்
உப்பு, மிளகு தூள், ஜல்ஜீரா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
அனைத்தையும் ஜூஸரில் போட்டு நன்றாக அரைத்து, வடிகட்டி பருகவும்.
வெள்ளரி மோர் குழம்பு
தேவையான பொருட்கள்
வெள்ளரி - 3
தேங்காய் -அரை மூடி
தேங்காய் எண்ணெய் - தாளிக்க
சீரகம் - 1 ஸ்பூன்
தயிர் - 500 மிலி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
மிளகாய் - சுவைக்கேற்ப
கடுகு - 1 ஸ்பூன்
மஞ்சள்- 1 ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
நறுக்கிய வெள்ளரியுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும். தேங்காய், கசகசா, முந்திரி, மஞ்சளை ஒன்றாக சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை நன்றாக அடித்த தயிருடன் கலந்துக் கொள்ளவும். வெள்ளரிக்காய் வெந்தவுடன் தயிர்க் கலவையை அதில் கலக்கவும். சிம்மில் வைத்து சமைக்கவும். கொதி வரக் கூடாது.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து கொட்டி, நுரை கட்டியவுடன் இறக்கவும். எண்ணெயில் நன்கு வதக்கிய தக்காளியை தயிர்க் கலவை சேர்க்கும்போதே சேர்த்து கொதிக்க விட்டு, கெட்டியாவதற்கு அரிசி மாவையும் சேர்த்து அவியல் பதத்தில் இறக்கினால் சுவையான வெள்ளரி மோர் கறி ரெடி. இதை குழம்பு பதத்தில் இறக்கினால் மிகச் சுவையான வெள்ளரி மோர் குழம்பு ரெடி.
செய்து பார்த்து எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்!