வெளிநாட்டு இறக்குமதி என்றால் தனிமதிப்புதான் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு மாயை பொதுவாக இருப்பதைப் பார்க்கிறோம். மரங்கள் நடுவதிலும் கூட நம் நாட்டு மரங்களை விட்டுவிட்டு வெளிநாட்டு மரங்களை நடும் வழக்கம் உள்ளது. இக்கட்டுரை நம் நாட்டு மரங்களை நடுவதிலுள்ள நன்மைகளை உணர்த்துகிறது!

தமிழகம் முழுக்க பரவலாக 2016ல் பருவமழை பொய்த்துப்போக, இது வரலாறு காணாத வறட்சி என்றும், இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வறட்சி என்றும் பலரும் பலவிதமாகக் கூறிவருகிறார்கள். எந்த ஒரு செயலுக்கும் அதற்குச் சமமான எதிர்வினை உண்டு என்கிறார் நியூட்டன் தன் மூன்றாம் விதியில். இந்த வறட்சியும் நாம் முன்பு செய்த வினைகளின் எதிர்விளைவுதான் என்பது சற்று கவனித்துப் பார்த்தால் புரியும்.

காகம், மைனா போன்ற பறவைகளின் எச்சத்தில் ஆங்காங்கே விழுந்து முளைத்துக் கிடக்கும் வேம்பு, புங்கன், வாகை, ஆலம், அரசு போன்ற மரக்கன்றுகளை சேகரித்து, நமது வீடுகளின் முற்றத்திலும் விவசாய நிலங்களின் ஓரங்களிலும் நடலாம்.

அதிக அளவிலான மக்கள் தொகை, அதற்கேற்ப மரங்கள் அழிப்பு என மனித இனம் செய்த செயல்களே இன்றைய நிலைக்குக் காரணம் என்பது நமக்குப் புரிந்தாலும், தற்போது நாம் செய்ய வேண்டியது என்ன என்ற கேள்வி நம் முன்னால் நிற்கிறது! மரங்கள் நடுவதே இதற்கான தீர்வு என்பதை நம்மாழ்வார் போன்ற இயற்கை விஞ்ஞானிகள் மட்டுமல்லாது இயற்கை ஆர்வலர்கள் பலரும் முன்வைத்து வருகின்றனர். ஆனால், இப்படியொரு வறட்சியில் எங்கே கொண்டுபோய் மரம் நடுவது. நட்டாலும் அந்த மரங்கள் வறட்சியைத் தாங்கி உயிர்பிழைத்து வளருமா என்ற கேள்விகள் எழுவது இயல்பானதுதான்! இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் நமக்கு தீர்வாய் நம் கையில் இருப்பதுதான் நம் நாட்டு மரங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நாட்டு மரங்களில் குறிப்பிடத்தக்கவை வேம்பு, புங்கன், பூவரசு, நாட்டு வாகை, புளிய மரம், அரசு, ஆலமரம் போன்ற மரங்களாகும். எண்ணற்ற மர வகைகள் இருக்க, இவற்றை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது ஏனென்றால், இதுபோன்ற மரங்கள் கோடை வெப்பத்தை தாங்கி, குறைந்த அளவு நீரை எடுத்துக்கொண்டு வளர்வதோடு, நல்ல நிழல் தந்து சுற்றுப்புறத்தைக் குளுமையாக்குகின்றன. இவை நல்ல டிம்பர் வேல்யூ உள்ள மரங்களாகவும் உள்ளன.

நாட்டு மரங்கள் என்பவை நம் மண்ணிற்கு ஏற்ற மரங்களாகும். அதாவது, நம் ஊரின் சீதோஷண நிலைக்கு ஏற்ப வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவை. நீங்கள் பொதுவாகக் கோடைகாலங்களில் மரங்களைப் பார்க்கும்போது வேம்பு, புங்கன் போன்ற மரங்கள் மட்டும் பசுமையான இலைகளுடன் தளைத்து இருப்பதையும் பிற இறக்குமதி செய்யப்பட்டுள்ள மரங்கள் கோடையில் இலைகளை உதிர்த்துவிட்டு வாடி இருப்பதையும் பார்க்கமுடியும்.

குறிப்பாக தமிழகத்தில் வேப்ப மரத்திற்கு தனித்துவமான இடம் உண்டு! கோயில் திருவிழா என்றால் ஊரைச் சுற்றி காப்பு கட்டுவது முதற்கொண்டு, நாட்டு வைத்தியத்தில் நோயை விரட்டும் மூலிகையாக இருப்பது வரை வேம்பு முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.

வேப்பிலையைப் பற்றி சத்குரு அவர்கள் சொல்லும்போது, அபாரமான சக்தியைக் கொண்டது வேப்பிலை என்று குறிப்பிடுகிறார். ஈஷா யோகா மையத்தில் தினமும் காலையில் யோகப் பயிற்சிகளுக்கு முன்பு அனைவரும் சுண்டைக்காய் அளவு வேப்பிலை மற்றும் மஞ்சள் உருண்டைகளை உட்கொள்கின்றனர்.

வேப்பிலைகள் மட்டுமல்லாமல், வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவையே! நம் அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு வேப்பமரம் இருப்பது அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமமானதாகும்.

கோடைகாலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. காகம், மைனா போன்ற பறவைகளின் எச்சத்தில் ஆங்காங்கே விழுந்து முளைத்துக் கிடக்கும் வேம்பு, புங்கன், வாகை, ஆலம், அரசு போன்ற மரக்கன்றுகளை சேகரித்து, நமது வீடுகளின் முற்றத்திலும் விவசாய நிலங்களின் ஓரங்களிலும் நடலாம். இதற்கெல்லாம் நேரமில்லாதவர்கள் 'ஈஷா பசுமைக் கரங்கள்' உருவாக்கியுள்ள நாற்றுப் பண்ணைகளிலிருந்து மரக்கன்றுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாம் ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமான அடுத்த தலைமுறைகளைப் பெறமுடியும் என்பது உறுதி. தமிழகத்தின் பருவநிலையும் மண்ணும் வேம்பு வளர்வதற்கு உகந்ததாக அமைந்துள்ளதால், வேப்ப மரங்களைப் பராமரிப்பதற்கு பெரிதாக நாம் மெனக்கெடத்தேவையில்லை.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

ஈஷா அறக்கட்டளை பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு செயல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ள பசுமைக் கரங்களின் தன்னார்வத் தொண்டர்கள், எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் பிரத்தியேகமாக தயார் செய்து வழங்குகிறார்கள்.

வேம்பு, புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.7) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் குறைந்த விலையில் பல அரிய வகை மரக்கன்றுகளைப் பெறுவதற்கு 94425 90062 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.