தேவி அருள் பெற சிவாங்கா விரதம் !
லிங்கபைரவியின் அருளில் திளைக்க பிரத்யேகமாக பெண்களுக்கென சத்குரு வழங்குகிற 21 நாட்கள் சிவாங்கா சாதனாவைப் பற்றி இங்கு சில பகிர்தல்களும் தகவல்களும்.
லிங்கபைரவியின் அருளில் திளைக்க பிரத்யேகமாக பெண்களுக்கென சத்குரு வழங்குகிற 21 நாட்கள் சிவாங்கா சாதனாவைப் பற்றி இங்கு சில பகிர்தல்களும் தகவல்களும்.
டிசம்பரில் வரும் சங்கராந்தி தினத்திலிருந்து (சங்கராந்தி என்பது இரவும் பகலும் சரிசமமாக வரும் நாள்) அதற்கடுத்து வரும் இரண்டு அமாவாசைகள் கழித்து, அதன் பின் வரும் பௌர்ணமி வரையிலான காலகட்டத்தில், மற்ற நேரங்களை விட, வாழ்க்கை மிக எளிதாக கனிந்து பலனளிக்கிறது. இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட சாதனா செய்யும்போது, அது நம்மை சிவனின் ஒரு அங்கமாகவே மாற்றிவிடுகிறது. எனவே அத்தகைய ஒரு சாதனாவை சத்குரு இங்கு பெண்களுக்காக வழங்குகிறார். சத்குருவின் வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால் - இது ‘வெண்ணையைக் கடைந்தெடுக்கும்’ சாதனா அல்ல, இது ‘திரண்டிருக்கும் வெண்ணையைக் கையிலெடுப்பதைப்’ போன்ற சாதனா.
பெண்களுக்காக, சத்குரு வழங்கும் சிவாங்கா சாதனாவிற்கான தீட்சை, இந்த வருடம் ஜனவரி 18ஆம் தேதியன்று வழங்கப்பட உள்ளது. லிங்கபைரவி யந்திரத்தை கழுத்தில் அணிந்து, ஒரு வேளை உணவைத் தவிர்த்து, 21 நாட்கள் விரமிருந்து, தைசப்பூச நாளன்று லிங்கபைரவியிடம் வந்து அவள் அருளில் திளைக்கச் செய்கிறது இந்த சிவாங்கா சாதனா.
சூரியன் வடக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவங்கும் உத்திராயண காலம், அருளை உள்வாங்க உகந்த காலமாக உள்ளது. 21 நாட்கள் சிவாங்கா விரதமிருந்து, உத்திராயணத்தின் துவக்கமாக அமையும் தைபூசத் திருநாளில் லிங்கபைரவிக்கு வரும்போது, பெண்கள் தேவியின் அருளை முழுமையாய் பெற முடியும். சத்குருவின் வழிகாட்டுதலில் ஒவ்வொரு ஆண்டும் பெண்களுக்காக இந்த சாதனா வழங்கப்பட உள்ளது.
Subscribe
சென்ற வருடம் சிவாங்கா தீட்சை பெற்று தேவியின் அருளை ஏந்திச் சென்ற சாதகர்களின் பகிர்தல்கள் இங்கே!
கல்பனா - சென்னை
"நான் வங்கி ஒன்றில் பணிபுரிகிறேன். எனக்கு அல்சர் இருப்பதால் விரதத்தை எப்படி கடைப்பிடிப்பது என்று எனக்குள் பெரிய தயக்கமாக இருந்தது, ஒருவேளை உணவு தவிர்த்தாலே என் உடம்பு தாங்காது. விரத நாட்களில் பன்னிரெண்டு மணிக்கு தான் சாப்பிடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். அதன்படியே விரதம் இருந்தேன். காலையில் மிளகு, தேன், கற்பூரவல்லி இலை சாப்பிட வேண்டும் எனக் கூறியிருந்தார்கள். எனவே அவற்றை மட்டும் சாப்பிட்டுக்கொண்டேன். ஆனால், நாள் போக போக எனக்கு இருந்த அல்சரின் தாக்கம் காணாமல் போனபோது, எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. உடல் சுறுசுறுப்பாக இருந்தது.
தேவி தண்டம், ஸ்துதி சொல்லும்போது, தேவி நம் உடனே, வீட்டில் இருப்பதை உணர்ந்தேன். மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏதும் இல்லை.
இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால், ஈஷா யோகா வகுப்பு செய்யாதவர்கள் கூட இந்த பக்தி சாதனா மேற்கொள்ளலாம் என்று சத்குரு அறிவித்திருந்தார். எனவே காஞ்சிபுரத்தில் இருக்கும் என்னுடைய தோழி ஒருத்தியையும் சாதனாவில் பங்கேற்கச் செய்திருந்தேன். அவள் என்னைவிட இன்னும் தீவிரமாக இருந்ததைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த சாதனாவை முடித்தபிறகு, ஈஷா யோகா வகுப்பு செய்ய வேண்டும் என்று அவள் என்னிடம் தெரிவித்தாள்.
S.பகவதி - செம்மேடு கிராமம்
சென்ற வருடம் முதன் முதலாக நானும், என் பெண்ணும் சிவாங்கா மாலையணிந்து விரதமிருந்தோம். அந்த 21 நாட்களும் தேவி ஸ்துதியும், தேவி தண்டம் மூன்று முறையும் இருவேளைகளிலும் மேற்கொண்டோம். பொதுவாக என்னால் பசி தாங்க முடியாது. ஆனால் சத்குரு கொடுத்த சாதனாவை நிறைவு செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தினால் காலை உணவு தவிர்த்து நான் விரதம் இருந்தேன். பசி என்பதே ஏற்படவில்லை. என் பெண்ணுக்கு வயது பதினான்கு ஆகிறது. அவளும் என்னைப் போலவே காலையில் சாப்பிடாமல் விரதம் மேற்கொண்டு பள்ளிக்குச் சென்றாள்.
ஏழாவது நாளில் சிவாங்கா சாதனா மேற்கொண்ட பெண்கள் அனைவரும் எங்கள் வீட்டில் மாலை வேளையில் ‘‘தேவி பூஜா’’வை நடத்தினோம். அங்கே தேவி ஸ்துதி சொல்லும்போது சிவாங்கா சாதனா மேற்கொண்ட பெண்களின் முகத்தில் ஒரு தேஜஸை பார்க்கமுடிந்தது.
2013 டிசம்பர் 27ஆம் தேதி துவங்கவிருக்கும் சிவாங்கா விரதத்தை இந்த முறை ஊரில் அன்னதானத்தோடு துவங்கலாம் என்றும், மாலை வேளையில் ‘‘தேவி ஊர்வலம்’’ நடத்தலாம் என்றும் முடிவு எடுத்துள்ளோம். அத்துடன் தேவிக்கு சிவாங்கா மாலையணிந்த பெண்மணிகள் அனைவரும் யாத்திரையாக லிங்கபைரவி வரலாம் என்றும் முடிவு எடுத்துள்ளோம்.
சிவாங்கா தீட்சை பெற...
சிவாங்கா தீட்சை ஜனவரி 18ம் தேதி தமிழகம் உட்பட உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெற உள்ளது. இந்த 21 நாள் விரதம் பிப்ரவரி 8 தைப்பூசத்தன்று நிறைவுபெறும்.
தொடர்புக்கு: 83000 83111
இ -மெயில் : shivanga@lingabhairavi.org