காசியில் சிவமயமான மயானம் !
காசி யாத்திரையின் இறுதிப் பகுதியான இந்த வாரம், மணிகர்ணிகா படித்துறையில் பிணங்கள் எரிக்கப்பட்டபோது தான் கண்டவற்றையும், அந்த அனுபவத்திலிருந்து தான் உணர்ந்த உண்மையையும் அழகாக விவரிக்கிறார் மஹேஷ்வரி! ஆண்டியும் அரசனும், சாஃப்ட்வேர் இஞ்சினியரும் சாதாரண கூலிக்காரரும் இறுதியில் வந்துசேரும் அந்த இடம் கட்டுரையாளருக்கு உணர்த்தியது என்ன?
காசி யாத்திரையின் இறுதிப் பகுதியான இந்த வாரம், மணிகர்ணிகா படித்துறையில் பிணங்கள் எரிக்கப்பட்டபோது தான் கண்டவற்றையும், அந்த அனுபவத்திலிருந்து தான் உணர்ந்த உண்மையையும் அழகாக விவரிக்கிறார் மஹேஷ்வரி! ஆண்டியும் அரசனும், சாஃப்ட்வேர் இஞ்சினியரும் சாதாரண கூலிக்காரரும் இறுதியில் வந்துசேரும் அந்த இடம் கட்டுரையாளருக்கு உணர்த்தியது என்ன?
காசி - உண்மையைத் தேடி... பகுதி 8
மஹேஷ்வரி:
என்னுள் எந்த பய உணர்வும் இல்லை. வாழ்க்கையின் உண்மையை நேருக்கு நேர் சந்திக்க தயாராகவே இருந்தேன். கங்கை நதிக்கரையில் உள்ள 'மணிகர்ணிகா காட்' மயானத்தில் (படித்துறையை காட் என்று அழைக்கிறார்கள்) மெல்ல படிக்கட்டில் ஏறி பிணங்கள் எரிக்கப்படுவதைப் பார்த்தேன். ஒரு பிணத்தின் துணி விலகி சில உடல் பாகங்களை பார்த்தேன். பிணத்தின் கால் அகோரமாக வளைந்து கிடந்த காட்சி! உடல் முழுதும் எரிந்து முடிக்கும் வரை அங்கே நின்று கொண்டு அழுது கொண்டிருந்தேன்.
உடலின் கீழ் பாகங்கள் எரிந்து முடிந்து தலைமட்டும் எரியாமல் இருக்க அங்கே இருந்தவர் தலையை கட்டையால் ஒரு குத்து குத்திவிட்டு போனார். தலை உருண்டு, முகம் ஒரு பக்கமாக எரிந்து கொண்டிருக்க கட்டியிருந்த முடி விரிந்து தலைவிரி கோலமாக காட்சியளித்தது. அந்த அகோரமான காட்சி என்னுள் பய உணர்வை ஏற்படுத்தவில்லை. வாழ்வின் நிதர்சனத்தை கண்கள் சிமிட்டாமல் கண்டு கொண்டே நின்று கொண்டிருந்தேன். “உங்களையும் இப்படிதான் ஒரு நாள் தூக்கி தூக்கி போடுவாங்க” என்று சத்குரு சொன்னது நினைவுக்கு வர நான் ஒருமுறை என் கைகளையும் கால்களையும் பார்த்துக் கொண்டேன்.
மரணம் என்ற மகா உண்மையை நேருக்கு நேர் கண்ட எனக்கு உண்மையின் சக்தியை தாங்க முடியாமலோ என்னவோ தலைச்சுற்றி மயக்கமாய் வந்துவிட்டது.
Subscribe
ஒரு நாளைக்கு சுமார் 300 லிருந்து 400 பிணங்கள் வரை எரிக்கப்படும் இந்த இடத்தின் சக்திநிலை அபாரமானது. அங்கு நிற்கும்போதே கண் திறந்த நிலையிலேயே எந்த முயற்சியும் இல்லாமல் தியானம் தானாகவே நடக்கிறது. மயானம் முழுக்க சிவமயமாய் இருப்பதை நன்றாக உணர முடிந்தது.
“சிவன் மயானத்தில்தான் வசிப்பார்” என்று கேள்விப்பட்ட வார்த்தைகளின் அர்த்தம் இன்று புரிந்தது.
“உடல் எரிக்கப்படும் இடம் ஒரு பலி பீடம் போல, அங்கிருந்து அபாரமான சக்தி வெளிப்படும், அதை நாம் நமது சாதனாவிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்,” என்று சத்குரு சொன்னது நினைவுக்கு வந்தது.
ஒருவர் சத்குருவிடம் சத்சங்கத்தின்போது “நாங்கள் மணிகர்ணிகா படித்துறையில் என்ன விதமான சாதனா செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
அதற்கு சத்குரு “அது குடும்ப வாழ்வில் இருப்பவர்களுக்கு இல்லை, பிரம்மச்சாரிகளுக்கு மட்டுமே. நீங்கள் சும்மா அதை பார்த்துவிட்டு வந்தால் போதும்,” என்றார். அதனால் அங்கு தியானம் எதுவும் செய்யாமல் திரும்பி வந்துவிட்டோம்.
ஆனால் “இங்கே எரிக்கப்படும் உயிர்கள் சிவனடி சேர்கின்றன” என்பது வெறும் நம்பிக்கை இல்லை. நான் கண்ணால் பார்த்த உண்மை!
இந்த காசி யாத்திரையில், சக்தி வாய்ந்த பல கோயில்கள் படையெடுப்பால் அழிவை சந்தித்திருந்ததைப் பார்த்தபோது, கவலையளிப்பதாய் இருந்தது. 'நளந்தா' அந்நியர்களின் படையெடுப்பால் நம் தேசத்தின் அறிவுப் பொக்கிஷம் நெருப்பில் போனதை நினைவுக்கு கொண்டு வந்தது. மரணத்தை ஞாபகப்படுத்திய 'மனிகர்ணிகா படித்துறை' மயானம், சாதானவை தீவிரப்படுத்தச் சொல்லியது.
நம் கலாச்சாரத்தின் வேராக இருக்கும் இந்தக் 'காசி', கால மாற்றத்தால் கொஞ்சம் சிதைந்திருந்தாலும் அதன் தனித்துவமும் சக்தி அதிர்வுகளும் இன்னும் மாறாமல்தான் இருக்கிறது. இந்தக் காசி யாத்திரையை முடித்து திரும்பும்போது, "இப்போது தமிழகத்தில் சத்குரு உருவாக்கியுள்ள ஈஷா எனும் கலாச்சாரம், காலத்தால் மாற்றமடையாமல் இருக்க வேண்டும்" என்பதே என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
நான் சத்குருவிடம் கேட்பதெல்லாம் இதுதான்! "எனக்கு முக்தி ஒன்றும் தேவையில்லை... மீண்டும் மீண்டும் கோவையில் பிறந்து, ஈஷாவின் தன்மை மாறாமல் பல தலைமுறைகளுக்கு இதனைக் காக்கும் பணியைத் தாருங்கள்!" என்பதே.
பயணம் முடிந்தது.
காசி புனித பயணம்
ஒளியின் நகரம் என்றழைக்கப்படும் காசி, 15000 வருடங்கள் பழமையானது. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு பின்பும், இன்றளவும் இந்நகரம் உயிரோட்டமாகவும், அதிர்வுமிக்கதாகவும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்த்த வண்ணம் உள்ளது. புனிதமான இந்நகரத்திற்கும், மேலும் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கும், ஒவ்வொரு வருடமும் ஈஷாவிலிருந்து புனிதப் பயணம் மேற்கொள்கிறோம்.
மேலும் விபரங்களுக்கு: sacredwalks.org