ஜூன் 3ல் சென்னையில் பெண்களுக்கான மருத்துவ முகாம்!
பெண்கள் உடல்ரீதியாக சந்திக்கும் பிரச்சனைகளில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்சனைகள் பிரதானமாக உள்ளது! சென்னை ஆதம்பாக்கம் ஈஷா ஆரோக்கியாவில் நடைபெறவுள்ள சிறப்பு மருத்துவமுகாமில், கர்ப்பப்பை வாய் புற்றுநோய்கான பிரத்யேக பரிசோதனைகள் நிகழவுள்ளன. இந்த முகாம் பற்றிய விவரங்களையும், இந்நோய் பற்றிய விழிப்புணர்வு தகவல்களையும் தொடர்ந்து படித்தறியுங்கள்!
ஆண்களுக்கு பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டும்விதமாக இன்று பல்வேறு துறைகளிலும் தங்கள் திறமை வெளிப்படுத்தி பெண்கள் முன்னிலை வகிக்கும் அதேவேளையில், உடல்நிலையில் பெண்களுக்கு பிரத்யேகமாக ஏற்படும் சில உபாதைகளுக்கு அதிக கவனமும் விழிப்புணர்வும் தேவையாக இருப்பதை மறுப்பதற்கில்லை!
இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் முக்கியமான நோய்களில் கடுமையான பாதிப்பை உண்டாக்குவது கர்ப்பப்பை வாய் புற்று. இதிலுள்ள பெரிய பிரச்சனை என்னவென்றால் நோய் முற்றும்வரை நோய்க்கான அறிகுறிகள் சாமானியமாக தெரியாது. நோயின் ஆரம்ப நிலையில் கண்டுபிடிப்பது சிரமம், அதேவேளையில் நோய் முற்றியநிலையில் குணமாக்குவது அதைவிட சிரமமானதாக உள்ளது!
நோய் இருப்பின், யோனியில் அளவுக்கு அதிகமான குருதி போக்கும், கடுமையான இடுப்பு வலியும் இருக்கலாம். ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சையும், முற்றிய நிலையில் வேதி சிகிச்சையும்,கதிரியக்க சிகிசையும் தேவை படும்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்பது?
கர்ப்பப்பைக்கு கீழே பெண்ணுறுப்புக்கு இடையிலுள்ள ஒரு பகுதிதான் கர்ப்பப்பை வாய். இந்த இடத்தில் வரும் புற்றுதான் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எனப்படுகிறது. இந்த நோய்க்கான 90% காரணம் HPV எனப்படும் human papilloma virus உள்ளது.
மேலும், புகைப்பிடித்தல், குறைவான நோய் எதிர்ப்பு ஆற்றல், குடும்ப கட்டுப்பாடு குளிகைகள், மிக இளைய வயதில் உடலுறவு, பலருடன் உறவு போன்றவையும் காரணமாக இருக்கலாம்.
நோய்க்கான அறிகுறிகள்
மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமான இரத்தப் போக்கு இருக்கலாம். உடலுறவின்போது இரத்தப்போக்கு மற்றும் வீக்கம், இடுப்பு மற்றும் யோனி பரிசோதனையின் போது இரத்தப் போக்கு இருக்கும்.
பெண் உறுப்பிலிருந்து வெளியேறும் வெண்ணிற கசிவு அதிகம் இருத்தல்; இது பெண்ணுக்கு பெண் மாறுபடும். சிலருக்கு அதிக துர்நாற்றம் இருக்கும். சிலருக்கு கெட்டியாக இருக்கும். எனவே மருத்துவரை அணுகும்போது இந்த அறிகுறிகள் இருந்தால் கட்டாயம் தெரியப்படுத்தவும்.
Subscribe
நோய்க்கான அறிகுறிகள் மாதவிடாயின் போது இடுப்பு வலி , அடிவயிற்று வலி கட்டாயம் இருக்கும். இதுவும் பெண்ணுக்கு பெண் மாறுபடும்; சிலருக்கு சிலமணி நேரம் இருக்கும் ,சிலருக்கு நாள் முழுக்க இருக்கும்; சிலருக்கு குறைந்த அளவு வலி இருக்கும்; சிலருக்கு மிக அதிகமாக இருக்கும்.
மேற்கண்ட அறிகுறிகளோடு, சிறுநீர் கழிக்கும்போது வலி அல்லது நீர்ப்பையில் வலி இருக்கும். கூடவே, பசியின்மை, உடல் எடை குறைதல், சோர்வு, இடுப்பறையில் வலி, முதுகு வலி, கால் வலி, ஒற்றைக் கால் வீக்கம், பெண்ணுறுப்பில் அதிகமான இரத்தப்போக்கு, சிறுநீரோ மலமோ பெண்ணுறுப்பில் இருந்து கசிதல் போன்றவை.
பரிசோதனை மூலம் கண்டறிதல்
உலகம் முழுவதிலும் பேப் ஸ்மியர் எனும் பரிசோதனை இந்நோயை கண்டறிவதற்கான சிறந்ததொரு பரிசோதனையாக உள்ளது. ஆரம்ப நோய்நிலையில் கண்டுபிடிக்க உபயோகமாக இது இருக்கும்! தேவைப்பட்டால் வருடம் ஒருமுறை இந்த பரிசோதனையை செய்துகொள்ளலாம். இந்த பரிசோதனை பெரும்பாலும் திருமணமான பெண்களுக்கு செய்யபடுகிறது. நோய் அறிகுறி இல்லாதநிலையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனை செய்யத் தேவையில்லை!
நோயிருப்பதை உறுதி செய்வதற்கு கர்ப்பப்பை வாய் உடல் திசு (biopsy) ஆய்வு செய்தல் உபாயகமாக இருக்கும்.
மருத்துவ சிகிச்சைகள்:
நோய் இருப்பதை கண்டறிந்த பின், அறுவை சிகிச்சை மூலம் கர்ப்பப்பையுடன் சேர்த்து கர்ப்பப்பையை சுற்றியுள்ள தசைகள்,சினைப்பை பெலோபின் குழாய், நிணநீர் முடிச்சு போன்றவை நீக்கப்படும். இவைதான் குணப்படுத்துக்கூடிய வழிமுறை.
அறுவை சிகிச்சைக்குப் பின் எஞ்சிருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்க வெளிப்புற கதிர்வீச்சு (Radiation ) உதவும்.
வராமல் தடுப்பதற்கான முறைகள்:
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு பெரும்பாலான படித்த பெண்களிடத்தில்கூட அதிகமாக இருப்பதில்லை. எனவே பெண்களிடத்தில் இந்நோய் பற்றிய விழ்ப்புணர்வை உண்டாக வேண்டும். ஊடகங்கள் மூலமாக விழிப்புணர்வு பிரச்சாரங்களை அதிகமாக செய்யவேண்டும்.
உணவு பழக்கவழக்கம்:
வைட்டமின் A,C,E சத்து நிறைந்த உணவுகள், போலிக் ஆசிட், கரோட்டீனாய்டுகள் நிறைந்த உணவுகள் மற்றும் கடலிலிருந்து கிடைக்கும் உணவு உட்கொள்வது நன்மைபயக்கும்.
ஈஷா ஆரோக்கியா நிகழ்த்தும் மருத்துவ முகாம்
வரும் ஜூன் 3 ஞாயிற்றுக்கிழமையன்று சென்னை ஆதம்பாக்கத்தில் ஈஷா ஆரோக்கிய மருத்துவமனையில், ‘பெண்மை’ என்ற பெயரில் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது!
இதில், இரத்த பரிசோதனை (CBC), சுய மார்பக பரிசோதனை, (Self Breast Examination), கர்ப்பப்பை வாய் புற்றை கண்டறியும் பேப் ஸ்மியர் பரிசோதனை (Utrus-cervical Cancer Screening), வயிற்றுப் பகுதிக்கான Abdomen Ultra sonogram(USG) Scan எனும் அதிநவீன பரிசோதனை மற்றும் பெண்களுக்கான சிறப்பு மருத்துவர் மற்றும் சித்த மருத்துவர்களின் ஆலோசனைகள் ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் மிக குறைந்த கட்டணத்தில் நிகழ்த்தப்படவுள்ளது!
பெண்மை முகாமில் கலந்துகொண்டு இந்த அரிய வாய்ப்பினை பெண்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!
தொடர்புக்கு: 9442590099 , 044 42128847