பரதநாட்டியத்துடன் நான்காம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்!
ஈஷா யோகா மையத்தில் வெகுசிறப்பாக நடைபெற்ற நான்காம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்... உங்கள் பார்வைக்கு!
ஈஷாவில் 4ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்...
ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 10 முதல் 18 வரை) விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் மட்டுமின்றி நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறுகின்றன. 9 நாட்கள் திருவிழாவில், நேற்றைய நான்காம் நாள் கொண்டாட்டத்தில் சம்ஸ்கிருதி மாணவர்களின் வாய்ப்பாட்டு கச்சேரி நடைபெற்றது.
மாலை 6:45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.
பாரம்பரிய கலையான பரதநாட்டியத்தில் பார்வையாளர்களை திளைக்கச் செய்த ஈஷா சம்ஸ்கிருதியின் நடனக்கலை நிகழ்ச்சி
ஈஷா யோகா மையத்தில் ஆசிரமவாசிகள் மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் பங்களிப்புடன் நேற்றைய நான்காம் நாள் நவராத்திரி கலைநிகழ்ச்சி தனிச் சிறப்புமிக்கதாக அமைந்தது.
லிங்க பைரவி ஊர்வலம்...
Subscribe
நவராத்திரியின் நான்காம் நாளான நேற்று, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. லிங்கபைரவியிலிருந்து துவங்கும் இந்த ஊர்வலத்தில், தியானலிங்கம் முன் நடைபெறும் ஆரத்தியில் ஈஷா பிரம்மச்சாரிகள் அக்னி நடனமாடுவது தனித்துவமான ஒன்றாக விளங்குகிறது. ஊர்வலம் முடிந்த பின்னர் ஒவ்வொரு நாளும் பக்தர்களுக்கு ஈஷா யோக மையம் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.
மஞ்சள் அலங்காரத்தில் தேவி!
நவராத்திரி விழாக் காலங்களில் லிங்கபைரவி, முதல் மூன்று நாட்கள் துர்கை அம்சமான குங்கும அலங்காரத்திலும் அடுத்த மூன்று நாட்கள் மஹாலஷ்மி அம்சமான மஞ்சள் அலங்காரத்திலும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி அம்சமான சந்தன அலங்காரத்திலும் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாகக் காட்சியளிப்பாள். அதன் அடிப்படையில் நேற்று குங்கும அலங்காரத்திலிருந்து மஞ்சள் அலங்காரத்திற்கு தேவி மாறினாள்!
விளக்கு பூஜை
உற்சவ மூர்த்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மாலை 6:30 மணியளவில் விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த வெளிநாட்டவர்கள் மற்றும் அருகாமை கிராமங்களிலிருந்து வந்திருந்த பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்பு
இந்த 9 நாட்களில், தேவிக்கு சிறப்பு அர்ப்பணிப்புகளாக நெய்தீபம், மாங்கல்ய பலசூத்ரா, அபிஷேகம், சமர்ப்பணம் போன்ற அர்ப்பணைகளை செய்வதன் மூலமும், ஒவ்வொரு நாள் மாலை நடக்கவிருக்கும் மஹா ஆரத்தி, ஊர்வலம், மற்றும் சிறப்பு மந்திர உட்சாடனைகளில் பங்குபெறுவதன் மூலமும் அளப்பரிய நன்மைகளைப் பெற முடியும். நவராத்திரி காலத்தில் தேவியை வழிபடுவது, ஒருவர் உலக வாழ்வில் நல்வாழ்வு என்று நினைக்கும் அனைத்தையும் பெற உறுதுணை புரியும். அதனுடன் ஆன்மீகத்தின் உயர்ந்த பரிமாணங்களை எட்டவும் ஒரு வாய்ப்பாக இருக்கும்.
இந்த ஒன்பது நாட்கள் நவராத்திரி திருவிழாவில் கலந்துகொள்ள, பொதுமக்கள் அனைவருக்கும் அழைப்புவிடுத்துள்ள ஈஷா யோக மையம், கோவையிலிருந்து ஈஷாவிற்கும், நிகழ்ச்சி முடிந்தவுடன் ஈஷாவிலிருந்து கோவைக்கும் இடையிலுள்ள கிராமங்களுக்கும் இலவசப் பேருந்து சேவையையும் வழங்கியுள்ளது.
இன்று…
ஐந்தாம் நாள் விழாவான இன்று (அக்டோபர் 14 ) கலை தாமரை குழுவினரின் காவடி மற்றும் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 5:30 மணிக்கு லிங்கபைரவியில் நடைபெறும் நவராத்திரி பூஜையின் நேரலை ஒளிபரப்பில் இணைந்து தேவியின் அருள் பெறுங்கள்!
நாளை...
ஆறாம் நாள் விழாவான நாளை (அக்டோபர் 15) அக்டோபர் 15 திரு.ரமணா பாலசந்தர் அவர்களின் வீணை இசை நிகழ்ச்சி நிகழவுள்ளது.
மேலும் விவரங்களுக்கு லிங்க பைரவி முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்! தேவியின் அருள் மழையில் நனைந்திடுங்கள் !