கிராமப்புற மக்கள் நிலவேம்பு கசாயத்தை வரவேற்கும் 5 முறைகள்!
கிராமப்புற சமூகங்களில் நிலவேம்பு கசாயம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயலூக்கி மட்டுமல்ல, அதற்கும் மேலானது. சிலருக்கு இந்த கசாயம் மாற்றத்திற்கான மருந்தாக வேலை செய்துள்ளது. மற்றும் பலருக்கு அது நம்பிக்கையுணர்வை ஊட்டுவதோடு மட்டுமல்லாமல், சமூக ஒற்றுமையையும் மேம்படுத்தியுள்ளது.
கோவை கிராமங்களில் ஊரடங்கு அறிவித்தவுடன் நம் தன்னார்வலர்கள் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் மூலிகை பானமான நிலவேம்பு கசாயத்தை விநியோகித்த போது, அவர்கள் ஆரம்பத்தில் அதை சந்தேகத்தோடுதான் எதிர்கொண்டனர். அதன் கசப்புத் தன்மை சவாலாகத்தான் இருந்தது. மேலும், பலரும் அதனுடைய ஆரோக்கிய நலன்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. இருப்பினும் கிராமப்புற சமூகங்களில் இந்த கசாயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளவில்லை. அதனுடைய கசப்பு சுவையைப் பற்றி குறை கூறாமல், சிறியவர் முதல் பெரியவர் என அனைவரும் ஒன்றுசேர்ந்து வரிசையில் நின்று, உற்சாகத்தோடு தினமும் இந்த கசாயத்தை வாங்கி அருந்தினர். அங்குள்ள சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமன்றி அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டு இருந்தவர்களும், அரசு அதிகாரிகளும் கூட அந்த மூலிகை பானத்தை வெகுவாக பாராட்டினார். இந்த சவாலான காலகட்டத்தில் உள்ளூர் மக்கள் திறந்த மனதுடன் நிலவேம்பு கசாயத்தை வரவேற்ற ஐந்து நிகழ்வுகள் இதோ.
1. போதைப் பழக்கத்தில் இருந்து விடுதலை
பூலுவப்பட்டி கிராமத்தில் உள்ள தூய்மைப் பணியாளர்கள் பலரின் வாழ்க்கை நிலவேம்பு கசாயத்தால் மாற்றமடைந்தது. ஊரடங்கு காலத்திற்கு முன்னர், வைரஸைவெல்வோம் என்ற இந்தப் போரில் களப்பணியில் முன்னணி நிலையில் இருந்து பணியாற்றிய இந்த பணியாளர்களில் சிலர், மது அருந்திய பின்னரே தங்கள் தினசரி வேலையை ஆரம்பிப்பதை வழக்கமாய் வைத்திருந்தனர். ஊரடங்குக்கு பின்னர் அவர்கள் இந்த போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல், மூலிகை பானத்தின் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பினர். அந்தப் பணியாளர்களில் ஒருவர் நம் தன்னார்வலரிடம் இவ்வாறு கூறினார், "இந்த கசாயத்தின் சுவைக்கு நாங்கள் பெரும் ரசிகர்களாகிவிட்டோம். நாங்கள் குடியை மறக்க இது பெரும் உதவி செய்கிறது. நாங்கள் அனைவரும் இப்போது மிக நன்றாக இருப்பதாக உணர்கிறோம். மேலும் கடந்த சில நாட்களில் மிக சுறுசுறுப்போடு இருக்கிறோம்.
Subscribe
2. மெய்சிலிர்க்க வைத்த சிறுவனின் பொறுப்புணர்வு
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தை வலியுறுத்தி அரசன் என்ற சிறுவன் 'மாற்றுக் கருத்து இல்லாமல் குப்பை போடுவது நிறுத்தப்பட வேண்டும்' என்ற ஒரு தீர்க்கமான செய்தியை உள்ளூர் மக்களிடம் முன்வைத்தான். கசாயத்தை குடித்த பின்னர் அருந்திய குவளைகளை குப்பைத்தொட்டியில் போடுமாறு பொதுமக்கள் அனைவரிடமும் அந்த சிறுவன் முறையிட்டான். அவன் வயதையொட்டிய மற்ற குழந்தைகளுக்கு அரசன் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தான். மேலும், சமூகத்தில் உள்ள அனைவருக்கும் அவனது இந்த துடிப்பான செயல் பெரும் உத்வேகத்தை வழங்கியது. அரசன் மேற்கொண்ட இந்த முயற்சிகள் இருட்டுப்பள்ளம் கிராமத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. நமது தன்னார்வலர்கள் இந்த இளம் சாம்பியனை சந்திக்கச் சென்றபோது, அவன் சந்தேகவுண்டன்பாளையத்தில் உள்ள ஈஷா வித்யாவில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் என்று அறிந்து கொண்டனர்.
3. நிலவேம்பு முதலில் யாருக்கு... ஒரு விளையாட்டு
இந்த கசப்பான மூலிகை கசாயத்தை வினியோகிக்கும் எல்லா கிராமங்களிலும் நீண்ட வரிசைகளில் நின்று மக்கள் அதை வரவேற்றனர். ஆனால், எப்போதும் வரிசையில் முதலாவதாக நின்று இந்த கசாயத்தை அருந்துவது அங்குள்ள குழந்தைகள்தான். அந்த கசாயம் அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போகவே அதிலிருந்து ஒரு விளையாட்டையே அவர்கள் உருவாக்கி விட்டனர் - யார் முதலில் நிலவேம்பு கசாயத்தை அருந்தினாரோ அவரே வெற்றியாளர் என்னும் விளையாட்டு. அந்த குழந்தைகளின் துடிப்பான செயல்கள் கிராமங்களில் உள்ள பல பெரியவர்களையும் கசாயத்தை தினமும் அருந்த ஊக்குவிக்கிறது. தீத்திபாளையத்தில் உள்ள சிறுமி சாதனா மற்றும் நான்கு குழந்தைகள் எப்போதும் வரிசையில் முதலாவதாக நின்று தினமும் அந்த கசாயத்தை பெரும் விருப்பத்துடன் வாங்கி அருந்துவார்கள். "கசாயம் இனிப்பாக உள்ளது, அது கசக்கவே இல்லை. மேலும் அதை அருந்துவதால் நான் மோசமாக உணரவில்லை," என்று சாதனா கூறினாள்.
4. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயலூக்கி
பல உள்ளூர்வாசிகளுக்கு நிலவேம்பு கசாயத்தின் ஆரோக்கிய பலன்கள் தெள்ளத்தெளிவாக புரிந்துவிட்டது. இந்த கிராமங்களில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் என அனைவருக்கும் இந்த கசாயம் ஒரு விருப்பமான பானமாக மாறிவிட்டது. ஜாகீர்நாயக்கன்பாளையத்தில் வாழும் ஒரு பெண் இவ்வாறு கூறினார், "இந்த கசாயத்தின் உதவியால் என் குழந்தைகளின் பசியார்வம் மேம்பட்டிருக்கிறது. மேலும் அவர்கள் இந்த நாட்களில் ஒழுங்காக உணவு உண்ணுகிறார்கள்." இந்த சவாலான காலகட்டத்தில் இந்த கசாயம் மக்களின் நோயெதிர்ப்பு தன்மையை உயர்த்துவதால் அவர்கள் அன்புடன் இதை 'கொரோனா தேனீர்' என்று அழைக்கின்றனர். பூலுவப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர் இவ்வாறு கூறினார், "நாங்கள் அனைவரும் இப்போது மிக ஆரோக்கியத்தோடும் உடல் வலிமையோடும் இருப்பதாக உணர்கிறோம்." அவரைப் போலவே பல கிராமவாசிகள் இந்த மூலிகை கசாயம் தங்களின் பல்வேறு நோய்களை குணப்படுத்தும் என்று நம்புகின்றனர்.
5. கசாயத்துக்கான நீண்ட பயணம்
ஆலந்துறையில் வாழும் வெங்கடேஷ் அண்ணா தன் தினசரி வேலைக்காக கிராமம் கிராமமாக பயணிப்பவர். ஒருமுறை நிலவேம்பு கசாயத்தை விநியோகித்துக் கொண்டிருந்த சில ஈஷா தன்னார்வலர்களை அவர் கடந்து செல்ல நேரிட்டது. கிராம மக்கள் இந்த நோய்த்தொற்றை எதிர்த்து போராடும் வண்ணம் அவர்களுக்கு இந்த மூலிகை கசாயத்தை வினியோகித்து வருவதாக அவரிடம் விளக்கிக் கூறினர். அந்த கசாயத்தின் தாக்கத்தை உணர்ந்த அந்த அண்ணா, தினமும் நிலவேம்பு கசாயத்தை அருந்துவதற்காக பத்து கிலோமீட்டர் தன் சைக்கிளில் பயணிக்கத் தொடங்கினார். தற்போது வெங்கடேஷ் அண்ணா ஈஷா தன்னார்வலராக மாறி நிலவேம்பு கசாயம் விநியோகிப்பதில் உதவியும் வருகிறார்.