துன்பத்திலும் புன்னகைக்க மறக்காத உள்ளங்கள்… வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 8
ஈஷா தன்னார்வலர்களின் அயராத உழைப்பும், நம்பிக்கையை உண்டாக்கும் அவர்களின் இருப்பும், கிராம மக்களின் உள்ளத்தில் கருணையையும் பரிவையும் உருவாக்கியுள்ளது. வைரஸை வெல்வோம் என்ற முனைப்போடு போராடிவரும் அவர்களின் சில முயற்சிகள் உங்கள் பார்வைக்காக இங்கே.
கைத்தடி
பிரதாப் என்ற ஈஷா தன்னார்வலர் புத்தூர் கிராம மக்களுக்கு உணவு விநியோகிப்பது மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவது என தினமும் செயல்பட்டு வந்தார். அன்று வயதான மூதாட்டி ஒருவர் அவரை அணுகினார். அந்த மூதாட்டி அவரோடு மிகப் பரிச்சயப்பட்டவர் போல பேசினார். எனவே அந்த சந்திப்பு அந்த தன்னார்வலருக்கு ஒரு ஆழமான உணர்வை ஏற்படுத்தியது.
தன் துயரங்களை தன்னார்வலர் பிரதாப்போடு பகிர்ந்துகொண்ட அந்த மூதாட்டி, தன்னால் சரியாக நடக்க முடியாத சூழ்நிலையை விளக்கி, தான் எழுந்திருக்கும் போதெல்லாம் விழுந்து விடுவோமோ என்று தோன்றுமளவு உணர்வதாக கூறினார். "நாளை வரும்போது எனக்கு ஒரு கைத்தடி கொண்டு வா" என பிரதாப்பிடம் அவர் கேட்டுக்கொண்டார். அதைக் கேட்ட நம் தன்னார்வலர், அந்த மூதாட்டி வெகுநாள் பரிச்சயப்பட்டது போல ஒருவித சௌகரிய உணர்வுடன் தன்னுடன் உரையாடியதைக் கண்டு ஆச்சர்யம் கொண்டார்.
ஆழமான ஒரு அனுபவத்தைப் பெற்ற பிரதாப்பின் உள்ளம் கருணையில் திளைத்தது. பின்னர் மற்ற தன்னார்வலர்களை சந்தித்தபோது அந்த மூதாட்டி தன்னை ஒரு குடும்ப உறுப்பினராக உணர்ந்து உரையாடியதைப் பற்றி குறிப்பிட்டார். எல்லா கிராமத்தினரும் ஈஷா தன்னார்வலர்களை இப்போது தங்களின் சுற்றமாகவே கருதுவதாக அவர் கூறி சிலாகித்தார். இந்த உணர்வின் உந்துதலாலேயே அந்த மூதாட்டி அவரிடம் அந்த உதவியைக் கேட்டிருக்க வேண்டும் - முக்கியமாக உதவிக்கு யாரும் இல்லாத இந்த கடுமையான காலத்தில்.
மேலும், ஈஷா தன்னார்வலர்கள் மேல் அந்த மூதாட்டி கொண்டுள்ள அசையா நம்பிக்கையையே இது காட்டுகிறது என்று அவர் உணர்ந்தார். "மற்ற கிராமத்தினர் போலவே, நாம் கண்டிப்பாக அவருக்கு உதவ முயற்சிப்போம் என்று இந்த மூதாட்டியும் நம்புகிறார்" என்று தன்னோடு இருந்த மற்ற தன்னார்வலர்களிடம் பிரதாப் கூறினார்.
இளம் கன்றின் எல்லையில்லா சக்தி…
நிலவேம்பு கசாயம் விநியோகிக்கும்போது, ஈஷா தன்னார்வலர்களுக்கு பெரும் ஆச்சர்யம் காத்திருந்தது. தன் பெற்றோர்களிடம் இருந்து அனுமதி பெற்று எட்டு வயதான சிறுவன் பிரசாந்த் ஆர்வத்தோடும் உற்சாகத்தோடும் தன்னார்வலர்களோடு சேர்ந்து சிறிது நேரம் கசாயம் விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டான். கையுறை மற்றும் முகக்கவசம் அணிந்து கொண்டு சமூக விலகலை கடைப்பிடித்து பிரசாந்த் அங்கு குழுமியிருந்த கிராம மக்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டான். அந்த சிறுவனின் ஆர்வமும், அளப்பரிய சக்தியும், கிராம மக்களையும் ஈஷா தன்னார்வலர்களையும் பெரும் களிப்படையச் செய்தது.
வைரஸை வெல்வோம் என்ற முனைப்போடு சென்னனூர் கிராமத்தினர் ஈஷா தன்னார்வலர்களோடு இணைந்துள்ளனர். தங்கள் வாழ்வை கட்டமைக்க பெரிதும் பாடுபட்டு உழைத்த இம்மக்கள், இந்த ஊரடங்கால் தற்போது எந்த ஒரு வாழ்வாதாரமும் இன்றி முடங்கியுள்ளனர்.
சென்னனூர் கிராமத்தில், வாழ்நாள் முழுக்க உழைத்து வாழ்ந்து வந்த ஆண்களும் பெண்களும், ஈஷா தன்னார்வலர்கள் வழங்கும் தினசரி உணவினை பெறுவதற்கு வரிசையில் நிற்கிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு வரை, அவர்களின் வாழ்க்கையில் சீரமைப்பும் ஒழுங்கும் இருந்தது. வைரஸ் அவையனைத்தையும் மாற்றிவிட்டது. pic.twitter.com/SsFce14Aq8
— Project GreenHands (@PGH_Isha) April 30, 2020
Subscribe