சிறிய நன்கொடைகளில் வெளிப்படும் பெரிய உள்ளங்கள்! வைரஸை வெல்வோம் - ஈஷா டைரி - பாகம் 25
தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் 75 கிலோ அரிசியை நன்கொடையாக ஈஷா தன்னார்வத் தொண்டர்களுக்கு வழங்கினார்; வியாபாரிகள் குளிர்பானங்களை நன்கொடையாக வழங்கினர். வயதில் மூத்த குடிமகன் ஒருவர் களத்தில் நம்முடன் துணை நிற்க இணைந்தார். இவ்வாறு கிராமப்புற சமூகங்கள் உறுதியுடன் கொரோனா வைரஸை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
சிறிய நுங்கு பெரிய உள்ளம்
நமது தொண்டர்கள் நிலவேம்பு கசாயம் விநியோகித்துக் கொண்டிருந்த போது, தெருவில் வாகனத்தில் சென்று நுங்கு விற்கும் வியாபாரி திரு.பால்ராஜ் அந்த வழியாக கடந்து சென்றார். தன்னார்வத் தொண்டர் ஒருவர் அவரை நிறுத்தி ஒரு கப் நிலவேம்பு கஷாயத்தை வழங்கினார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானமான நிலவேம்பு கசாயத்தை அருந்திய பின்னர், அந்த வியாபாரி தான் புத்துணர்ச்சி பெற்றதாகக் கூறினார். நன்றியுணர்வின் வெளிப்பாடாக வியாபாரி திரு.பால்ராஜ் தன்னார்வலருக்கு சில நுங்குகளை வழங்கினார். தன்னார்வலர் அதை பெற்றுக்கொள்வதற்கு தயக்கத்துடன் மறுப்பு தெரிவித்த போதிலும், தன்னார்வத் தொண்டிற்கு பிரதிபலனாக எதையும் திருப்பி வழங்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவுறுத்திய பின்னரும், திரு.பால்ராஜ் தன்னார்வலரிடம் தனது அந்த சிறிய அர்ப்பணிப்பை ஏற்க வேண்டுமென்று திரும்ப திரும்ப வலியுறுத்தினார். இறுதியில் தன்னார்வலர் சம்மதித்து, சாறு நிறைந்த அந்த நுங்கை சாப்பிட்டபோது, தகிக்கும் வெயிலில் மணிக்கணக்கில் பயணித்த சோர்வு உடனடியாக விலகியதை உணர்ந்தார்.
வேடப்பட்டி பஞ்சாயத்தில், தெய்வாம்பாள் என்ற பெண், தன்னார்வலர்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார். அவர் கூறியபோது, "நீங்கள் அனைவரும் கடும் வெயிலில் செயல் செய்கிறீர்கள், தயவுசெய்து ஒரு இடைவெளி எடுத்து இந்த பானத்தை குடியுங்கள்” என்றார். மத்வராயபுரம் பஞ்சாயத்தில் வசிக்கும் மற்றொரு பெண்மணி தன்னார்வத் தொண்டர்களின் களைப்பை போக்கும் வகையில் விளாம்பழத்தை அன்பளிப்பாக வழங்கினார்.
ஆண்டிபாளையத்தில் களப்பணி குழுவினர் ஒரு மளிகை கடைக்கு அருகில் சுவரொட்டிகளை ஒட்டியபோது, கருணையின் வெளிப்பாடாக இன்னொரு நிகழ்வு நடந்தது. ஒரு உள்ளூர்வாசியான ராஜேந்திரன் அண்ணா, அங்கு ஒரு கடையை நடத்தி வருகிறார். அவர் தன்னார்வலர் குழுவிலுள்ள அனைவருக்கும் அவரது நன்றியின் அடையாளமாக ரஸ்னா பானத்தை வழங்கினார்.
பெருகும் நன்கொடையாளர்கள்
தற்போது தொண்டாமுத்தூர் பஞ்சாயத்தில் தங்கியிருக்கும் ஓய்வுபெற்ற ஆசிரியர் சுப்பிரமணியம் 75 கிலோ அரிசியையும், கொஞ்சம் காய்கறிகளையும் மாம்பழங்களையும் நன்கொடையாக வழங்கினார். அவர் கூறியபோது: “எனக்கு வயதாகிவிட்டது, துடிப்புமிக்க தன்னார்வலர்களைப் போல செயல்களைச் செய்ய முடியாது. ஆனால், ஈஷா களப்பணி குழுவினரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின்பால் நான் ஈர்க்கப்பட்டேன். உன்னதமான காரணத்திற்காக நானும் பங்களிக்க வேண்டுமென்ற ஆர்வத்தை என்னிடம் அதுதான் தூண்டியது. நான் நன்கொடை அளித்தவை அனைத்தும் ஏழைகளை சென்றுசேரும் என்பதை நான் அறிவேன்.”
மக்களுக்கு உதவும் கனவு
இன்னும் பலருக்கு, மக்களுக்காக உதவும் பணியை செய்ய வேண்டுமென்ற ஒரு கனவு நனவாகியது. நாகராஜபுரத்தையடுத்த KG அப்பார்ட்மெண்ட்டில் வசிக்கும் சிவராஜ் அண்ணாவிற்கு மக்களுக்கு உதவும் பணியில் தன்னார்வத் தொண்டர்களுடன் இணைவதற்கு சமீபத்தில் வாய்ப்பு கிடைத்தபோது, தனது வாழ்நாள் கனவு நிறைவேறியிருப்பதாகக் கூறினார். களப்பணி குழுவினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும்போது அவர் இப்படி கூறினார்: “நான் எப்போதும் தேவையுள்ள மக்களுக்கு உதவவேண்டும் என்று விரும்பினேன். இது ஒரு முழுமையை உணரும் அனுபவமாக இருந்தது.”
தேவராயபுரத்தில் தங்கியிருக்கும் வயதான ஒரு மனிதரின் தன்னம்பிக்கையால் தன்னார்வத் தொண்டர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். அந்த மூத்த குடிமகன் 1.5 கி.மீ.க்கு மேல் தன்னார்வலர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் நடந்துசென்று, உணவு மற்றும் நிலவேம்பு கஷாயம் விநியோகிப்பதில் அவர்களுக்கு உதவினார்.
Subscribe