கிராமப்புற மக்களுக்காக களமிறங்கிய விவசாயப் பெருமக்கள்!
பிரபு, வேலுமயில்சாமி போன்ற விவசாயிகள் பசியில் இருக்கும் தங்கள் சமூகங்களுக்கு உணவு கொடுப்பதில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வழங்கினர். அரிசி, தக்காளி, சுரைக்காய் மற்றும் புத்தம்புது காய்கறிகளை நன்கொடையாக வழங்கிய அவர்கள், பாதிக்கப்படும் சமூகங்களுக்கு உரிய உதவிகள் சென்றடைவதில் தங்கள் பங்கைச் சிறப்பாக வழங்கினர்.
பரந்தமனம் கொண்ட விவசாயி
இந்த கடந்த சில மாதங்கள் கிராமப்புற சமூகங்களுக்கு மிகவும் கடினமாகவே இருந்தன. பல குடும்பங்கள், தங்களது அடுத்தவேளை உணவு எங்கிருந்து வரும் என்று தெரியாத நிலையில், மன அழுத்தத்தில் இருந்தன. ஆனால், தேவைப்படுபவர்களுக்கு உதவிபுரிவதற்கு தன்னைப் போன்ற விவசாயிகள் நினைத்தால் முடியும் என்று பிரபு தீர்மானித்தார். நரசீபுரத்தைச் சேர்ந்த இந்த பரந்தமனம் கொண்ட விவசாயி, தொற்றுநோய் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள தனது சமூகத்திற்கு உதவ நினைத்தபோது, தனது அந்த விருப்பத்தை முதலில் ஈஷாவிடம் தெரியப்படுத்தினார்.
Subscribe
ஒரு பாரம்பரிய விவசாயியான பிரபு, விவசாயம்தான் தனக்கான பணி என்பதை கண்டுணர்வதற்கு முன்னர், மென்பொருள் துறையில் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பிரபுவின் குடும்பத்தைப் பொருத்தவரை, விவசாயம் இரத்தத்தில் ஊறிப்போனது. கோயம்புத்தூரில் ஈஷா மையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில்தான் பலவகையான பழ மரங்கள் மற்றும் காய்கறி சாகுபடியைக் கொண்டிருக்கும் அவரது 12 ஏக்கர் நிலம் அமைந்துள்ளது.
2012 முதல் ஒரு ஈஷா தன்னார்வத் தொண்டராக உள்ள விவசாயி பிரபு கூறும்போது, "இத்தனை ஆண்டுகளாக இந்த சமூகம் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் துணைநின்று வருகிறது. இப்போது அந்த நன்றியை உதவியாக திருப்பி செலுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது" என்றார்.
சமூகத்திற்கு உதவும் உள்ளம்
செல்லப்பக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த வேலுமயில்சாமி என்ற விவசாயி, மக்களுக்கு அன்றாட உணவு கிடைக்க உதவுவதே தற்போதைய தேவை என்பதை அறிந்திருக்கிறார். ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது, அவர் உடனடியாக ஈஷாவை அணுகினார். ஈஷா தன்னார்வலர்கள் மூலம் தனது சமூகத்தில் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு உணவு சென்றடைகிறது என்பதை அவர் அறிந்திருந்தார். "எங்கள் சமூகங்களில் பலர் சிரமத்தில் இருந்ததால், அந்த காலகட்டத்தில் ஏதாவது நாம் நிச்சயம் செய்ய வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்திருந்தோம்," என்று அவர் கூறினார்.
இந்த கிராமப் புறங்களில், நெஞ்சை நெகிழச் செய்யும் சிறிய செயல்கள் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி, முழு சமூகத்தையும் உத்வேகப்படுத்துகின்றன. ஆலந்துரை பஞ்சாயத்தைச் சேர்ந்த உழவன் உற்பத்தியாளர் அமைப்பின் உறுப்பினர் தனசேகர், அருகிலுள்ள சமூக மக்களுக்கு உதவும் விதமாக 500 கிலோ அரிசியை நன்கொடையாக வழங்கினார். நல்லூர்வயலைச் சேர்ந்த விவசாயி வினோத், ஈஷாவுக்கு 200 கிலோ தக்காளியை வழங்கினார். அவர் நமது தன்னார்வத் தொண்டர்களை தனது பண்ணைக்கு அழைத்ததோடு, அங்கு அந்த பெரிய தக்காளி மூட்டைகளை நன்கொடையாக வழங்கினார். தொண்டாமுத்தூர் கிராமத்தில் ஒரு சிறிய விவசாயி 15 கிலோ சுரைக்காயை நன்கொடையாக அளித்தார்.
தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில், இந்த விவசாயிகள் தங்கள் சமூகங்களுக்கு உணவளிப்பதற்காக தங்களின் முக்கிய பங்களிப்பை உறுதிசெய்தனர். கருணைமிக்க இதயம்கொண்ட இத்தகைய உதாரண மனிதர்களை இந்த கிராமப்புற பகுதிகளெங்கும் காணமுடிகிறது எனவே, இந்த கிராமப்புறங்களில் உள்ள பல குடும்பங்களின் சுமைகள் பெரிதும் குறைக்கப்படுகின்றன.