குழந்தைகளின் கல்விக்காக ஒரு வேளை உணவைத் தவிர்த்த நல் உள்ளங்கள்!
ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளுக்காக புதன்கிழமை- இரவு உணவை தவிர்ப்போம் என்ற திட்டத்தில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று தங்களின் ஒரு வேளை இரவு உணவைத் தவிர்த்து அந்தத் தொகையை குழந்தைகளின் படிப்புக்காக கொடுத்து உதவி வருகின்றனர். இந்த திட்டத்தில் சேர்ந்து உதவி வரும் திரு.ரிஷி அவர்களின் பகிர்வை கீழே காண்போம்.
ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளுக்காக புதன்கிழமை இரவு உணவை தவிர்ப்போம் என்ற திட்டத்தில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று தங்களின் ஒரு வேளை இரவு உணவைத் தவிர்த்து அந்தத் தொகையை குழந்தைகளின் படிப்புக்காக கொடுத்து உதவி வருகின்றனர். இந்த திட்டத்தில் சேர்ந்து உதவி வரும் திரு.ரிஷி அவர்களின் பகிர்வை கீழே காண்போம்.
அனைவருக்கும் நமஸ்காரம்,
என் பெயர் ரிஷி. நானும் என் நண்பன் ஸ்ரீராமும் 2007ஆம் வருடம் ஈஷா யோகா வகுப்பில் கலந்து கொண்டோம். வகுப்பு எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும் ஈஷாவின் பல சமூக நலத் திட்டங்கள் எங்களை ஈர்த்தன. அதிலும் ஈஷா வித்யா பள்ளிகள் திட்டத்தை எனக்கு மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.
அதற்குக் காரணம் நானும் ஒரு கிராமப்புற பின்னணியில் இருந்து வந்தவன். அரசுப் பள்ளியில் படித்து நகரவாசி குழந்தைகளுக்கு ஈடு கொடுக்க மிகவும் சிரமப்பட்டு இறுதியில் இன்று ஒரு ஐ-டி நிறுவனத்தில் பொறியாளராக உள்ளேன். அதனால் கிராமப்புற பள்ளிகளின் உண்மை நிலையை நான் நன்கு அறிவேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஈஷா, கிராமப்புற குழந்தைகளின் கல்விக்காக பள்ளிகள் நடத்துவது தெரிந்ததும் அந்த பள்ளியைச் சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது. எனவே நானும் என் நண்பனும் விழுப்புரத்தில் உள்ள ஈஷா வித்யா பள்ளிக்குச் சென்றோம்.
அங்கு பார்த்த காட்சி எங்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. உள்ளே நுழைந்ததும் சிறு குழந்தைகள் முதல் மேல் நிலை குழந்தைகள் வரை நமஸ்காரம் சொல்லி நம்மை வரவேற்கும் அழகே தனி. அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், ஆங்கிலம் மற்றும் கணினி கற்றுக் கொடுக்கும் முறை நகரத்தில் உள்ள ஒரு Montessori பள்ளிக்கு இணையாக, இல்லை அதை விட மேலாக உள்ளது என்றே கூற வேண்டும். மேலும் மற்றுமொரு தனித்துவமான விஷயம் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் வேலை செய்பவர்களிடம் காணப்படும் அர்ப்பணிப்பு உணர்வு. நான் படிக்கும்போது எங்கள் கிராமத்தில் இப்படி ஒரு பள்ளி இல்லையே என்று தோன்றியது. கண்டிப்பாக இந்தக் குழந்தைகளுக்கு நாங்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
அந்த சமயத்தில்தான் 2009ம் வருடம் நடந்த சத்சங்கத்தில் சத்குரு "ஒரு பிடி சோறு ஒதுக்குங்கள், ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மாற்றுங்கள்" என்றார். அதாவது ஒவ்வொரு புதன் கிழமை இரவு வேளை மட்டும் சாப்பிடாமல் அந்த உணவுக்கு ஆகும் செலவை இந்தக் குழந்தைகளின் கல்விக்காக கொடுக்க வேண்டும். சத்குரு "இது வெறும் பணம் கொடுப்பது பற்றியதல்ல. இது உணர்வுப்பூர்வமான விஷயம். உங்களுக்கு மிகவும் பசி ஏற்பட்டால், அந்த ஒளி மிகுந்த அதே சமயத்தில் எதிர் காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்று தெரியாத அந்தக் குழந்தைகளின் கண்களை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள்" என்றார். அந்த வார்த்தைகள் எனக்குள் மிகவும் ஆழமாக போயிற்று. அன்றிலிருந்து நானும் என் நண்பனும் 2009 லிருந்து ஒவ்வொரு புதன் கிழமை இரவும் உணவருந்தாமல் அந்தப் பணத்தை ஈஷா வித்யா பள்ளிகளுக்கு கொடுத்து வந்தோம். இது எங்களுக்கு அப்படி ஒரு மன நிறைவைக் கொடுத்தது.
Subscribe
நான்கு மாதங்களுக்கு முன்னால் எங்கள் கல்லூரி நண்பர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து எங்களைக் காண சென்னை வந்திருந்தார். நான், ஸ்ரீராம் மற்றும் இன்னும் சில நண்பர்களுடன் இரவு உணவுக்காக ஒரு பிரபல உணவு விடுதியில் சந்தித்தோம். எங்கள் சிங்கப்பூர் நண்பர் தனக்கு வேலை கிடைத்ததற்காக அன்றைய உணவு தன்னுடைய treat என்றார். நண்பர்கள் அனைவரும் உற்சாகமடைந்து உணவை order செய்ய ஆரம்பித்தனர். எங்களிடம் கேட்ட பொழுது நாங்கள் சாப்பிடப் போவதில்லை என்றோம். அனைவரும் அதிர்ச்சி அடைந்து எங்கள் பக்கம் திரும்பினர். அன்று புதன்கிழமை.
நாங்கள் அவர்களுக்கு நாங்கள் சாப்பிடாததற்கான காரணத்தைக் கூறினோம். ஈஷா வித்யா பற்றி அவர்களிடம் பேச இதை ஒரு வாய்ப்பாகக் கருதினோம்.
அன்றைய விருந்து சுமார் 3 மணிநேரம் நடந்தது. நண்பர்கள் எப்படி உங்களைக் கட்டுப்படுத்தி கொள்கிறீர்கள் என்று கேட்டார்கள். நாங்கள் "இதில் கட்டுப்படுத்துவதற்கு ஒன்றுமே இல்லை. எது தேவையோ அதைச் செய்கிறோம்" என்றோம்.
ஆனால், எங்களுக்கு அந்த சிங்கப்பூர் நண்பர் மன வருத்தம் அடைவாரோ என்று தோன்றியது. விருந்து முடிந்து கிளம்பும்போது அந்த நண்பர் 1000 ரூபாயை எங்களிடம் கொடுத்து "இன்றைய இரவு உணவுக்கான செலவை நீங்கள் கொடுக்க போகிறீர்கள் என்றால் அதை நான்தான் கொடுக்க வேண்டும். இதைக் கொடுத்து விடுங்கள். மேலும் இந்தப் பணம் ஏழை குழந்தைகளின் கல்விக்குச் செல்வதில் எனக்கு மிகவும் சந்தோஷம்" என்றார்.
இந்த நிகழ்வு எங்களுக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இத்தனைக்கும் அந்த நண்பர் ஈஷா வகுப்பு செய்தது கிடையாது. இருப்பினும் அவருக்கு ஈஷா நிறுவனத்தின் மேல் உள்ள நம்பிக்கை எங்களை நெகிழச் செய்தது.
அன்றைய இரவே நானும், ஸ்ரீராமும் ஈஷா வித்யாவில் இரு குழந்தைகளை தத்தெடுக்க முடிவு செய்தோம். அதாவது அந்த குழந்தைகளின் ஒரு ஆண்டுக்கான கல்விச் செலவை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.
நான் office போய் keyboard தட்டுவதில் ஒரு கிராமப்புற குழந்தைக்கு தரமான கல்வி கிடைப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆயினும் எனக்கு ஒரு குழந்தைக்கு தாய், தந்தை ஆனதைப் போன்ற ஒரு உணர்வு.
இந்த வாய்ப்பை எங்களுக்கு வழங்கிய சத்குரு மற்றும் ஈஷா வித்யாவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
வணக்கம்,
ரிஷி மற்றும் ஸ்ரீராம்
ஈஷா வித்யா பள்ளிகள் ஒரு பார்வை
தரமான கல்வி ஏழைகளைச் சென்றடைவது மிக கடினமானதாகிவிட்ட நிலையில், கிராமத்தில் வசிக்கும் மக்களின் நிலை மிகவும் பின்தங்கியே காணப்படுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப, பெற்றோர் பலவிதமான சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள், தரமான பள்ளிக்கூடங்கள் இல்லை. இருக்கும் பள்ளிக்கூடங்களில் வசூலிக்கப்படும் கட்டணம் மிகுதியாக இருப்பதால் ஏழைகளை சென்றடைவதில்லை.
இந்தியாவின் முன்னேற்றம் கிராமங்களின் வளர்ச்சியில்தான் இருக்கிறது என்ற எண்ணத்தின் அடிப்படையில், உருவாக்கப்பட்டதுதான் ஈஷா வித்யா பள்ளிகள். தமிழகம் மற்றும் ஆந்திராவில், மொத்தம் ஒன்பது ஈஷா வித்யா பள்ளிகள் இயங்கி வருகின்றன.
ஈஷா வித்யாவின் இந்த முயற்சியால் கடந்த பத்து ஆண்டுகளில், சுமார் 50,000 கிராமப்புற குழந்தைகளின் வாழக்கைத்தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, சுமார் 7000 குழந்தைகள் இந்த பள்ளிகளில் பயின்று வருகிறார்கள். இதில் 70% பேர் முழு உதவித்தொகை மூலம் கல்வி கற்பவர்கள். இது கிராமப்புற குழந்தைகள் தங்கள் மேற்படிப்பை நல்லமுறையில் தொடங்க வழிவகை செய்கிறது.
ஒரு குழந்தையின் கல்விக்காக, புதன்கிழமை இரவு உணவு தவிர்ப்போம்
ஈஷா வித்யா பள்ளிகள், பெரும்பாலும் நன்கொடை மூலமாகவே செயல்படுகிறது. பல வழிகளில் இந்த மாபெரும் திட்டத்திற்கான நிதி திரட்டப்படுகிறது. அதில் ஒன்று “ஒருவேளை உணவை தவிர்ப்போம்” திட்டம். வாரத்தில் ஒரு நாள், ஒரு வேளை இரவு உணவைத் தவிர்த்து, அதற்கு உண்டான தொகையை சேர்த்து வைத்து, நன்கொடையாய் ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கலாம். இதனால், முறையான வாழ்க்கைச்சூழல், உணவு, உறைவிடம் இல்லாத குழந்தைகளின் வாழ்வில் நீங்கள் ஒளியேற்றுவீர்கள்.
பலரின் ஆர்வத்தைத் தூண்டிய இந்தப் பிரச்சாரம் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபெற்று தங்களின் புதன்கிழமை இரவு உணவை தவிர்த்து, அந்தத் தொகையை ஈஷா வித்யா பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காக கொடுத்து உதவி வருகின்றனர்.
இது நம் தேசம், இவர்கள் நம் குழந்தைகள் - வாருங்கள் அவர்களது வாழ்வில் ஒளிவிளக்காய் இருப்போம்.
இத்திட்டம் பற்றி மேலும் அறிய: http://ishavidhya.org/donate-now/skip-a-meal.html