அன்பிற்குரிய சத்குரு, ஈஷா யோகா வகுப்பு செய்ததிலிருந்து எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. நான் ஈஷா யோகா, பாவ ஸ்பந்தனா, சம்யமா, சம்யமா சாதனா போன்ற வகுப்பு செய்தவர்களைப் பார்த்திருக்கிறேன். பிரம்மச்சாரிகளையும் பார்த்திருக்கிறேன், ஆனால் உங்களைப் போல் ஆவது எப்படி? முடிந்தால் உங்களை மிஞ்சுவது எப்படி?

சத்குரு:

நீங்கள் பலரையும் பார்த்து கழித்து கட்ட துவங்கிவிட்டீர்கள். ஈஷா யோகா வகுப்பு செய்தவர்களை, பாவ ஸ்பந்தனா செய்தார்களே அவர்களை, சம்யமா செய்தவர்களை, பிரம்மச்சாரிகளை எல்லாம் நீங்கள் கழித்து கட்ட துவங்கிவிட்டீர்கள்! நீங்கள் அடுத்த ஈஷா யோகா வகுப்புக்கு சென்று தன்னார்வத் தொண்டு செய்ய வேண்டும், சரியா? அந்த வகுப்பின் கடைசி நாளில் மக்கள் எப்படி இருக்கிறார்களோ, நீங்கள் ஒரு மாதத்திற்கு அவ்வாறு இருக்க வேண்டும். பிறகு பாவ ஸ்பந்தனாவிற்குச் செல்லுங்கள். பாவ ஸ்பந்தனாவின் நிறைவு நாளன்று மக்கள் எப்படி இருக்கிறார்களோ அதுபோல் ஒரு மாதத்திற்கு இருங்கள். பிறகு சம்யமாவை முயற்சி செய்து பாருங்கள். அதற்குள் நான் என்ன பேசுகிறேன் என்பது உங்களுக்கு புரிந்துவிடும், நிலைமாற்றம் என்றால் என்ன என்பது உங்களுக்கு பிடிபடும்.

நிலைமாற்றம் என்றால் குறிக்கோளோ அல்லது வெறும் பேரார்வமோ அல்ல, அது பரிணாம வளர்ச்சி. நீங்கள் சரியானவற்றைச் செய்தால், வளர்வீர்கள். நீங்கள் ஆர்வமாய் இருப்பதாலோ அல்லது குறிக்கோள்களை கொண்டிருப்பதாலோ வேறொன்றைப்போல் ஆகிவிட முடியாது. இந்த உயிர் வளர நீங்கள் அனுமதியளிக்க வேண்டும். ‘இந்த உயிர்’ வளர்ந்தால், அது ஒரு சாத்தியமாய் மாற்றம் பெறும்.

நீங்கள் வளர்ச்சியுற ஆர்வம் கொண்டால், நீங்கள் எட்டியுள்ள உயர்ந்த முகட்டிலேயே நிலைத்து நிற்க வேண்டும். உங்களுக்குள் ஏதுவான சூழலை உருவாக்கிக் கொண்டால், நீங்களும் அதுபோல் வாழ முடியும். இல்லாதபோது, நீங்கள் சிறப்பான ஒரு வகுப்புக்குச் சென்று, அங்கே சில விஷயங்களைச் செய்து, பின்னர் வீட்டிற்குச் சென்றவுடன் உங்கள் பழைய கசடுகளையே தொடர்ந்து செய்வதில் சிறப்பொன்றும் கிடையாது. பாவ ஸ்பந்தனாவில் நீங்கள் உணர்ந்ததுதான் உங்களுடைய உயர்ந்த அனுபவம் என்றால், ஒரு மாதத்திற்கு அந்த நிலையில் எப்படி நிலைப்பது என்று பாருங்கள். அதன்பின் அடுத்த படிக்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் உயரச் சென்று மறுபடியும் கீழே விழுந்து, மீண்டும் உயர்ந்த அனுபவத்திற்கு நாட்டம் கொண்டால், அதில் அர்த்தமே இல்லை. ஒரு அடி முன்னே, ஒரு அடி பின்னே என்று நடப்பவருக்கு எங்கு செல்வதற்கும் நோக்கம் இல்லை என்றே சொல்ல வேண்டும்.

உச்சநிலையில் நிலைத்து நிற்பதே நம் வகுப்புகளின் அடிப்படை நோக்கம். அதனை உங்கள் வாழ்வில் செயல்படுத்துங்கள். அதன்பின் அடுத்தபடி, அடுத்தபடி என முன்னேறிச் செல்வது நிஜமாகும். இல்லாதுபோனால், இது ஒரு வெற்றுக் கனவே. எங்கோ ஒர் இடத்திற்கு செல்ல வேண்டும் என்ற தீவிரமான முனைப்பு உங்களிடம் இருந்தால், எதையாவது அடைய நீங்கள் விரும்பினால் இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும். பூஜ்யத்தில் இருக்கும் ஒரு மனிதரிடம் கோடிகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால் அது வேலை செய்யாது. படிப்படியாக, படிப்படியாக… நீங்கள் மேலே ஏற வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.