தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை பகுதி 5

ஆன்மீக அருள் வழங்குவதே தியானலிங்கத்தின் நோக்கம் என்றாலும், பொருள் உலகில் மனிதனின் தேவைகளோ ஏராளம்! ஏராளம்! செல்வம், வெற்றி, ஆரோக்கியம் என மனிதன் அடைய நினைப்பதை அடுக்கிக்கொண்டே செல்லலாம். தியானலிங்கம் வெறும் ஆன்மீக அருளைப் பெறுவதற்கு மட்டும்தானா? இதுபோன்ற பலன்களை வழங்காதா? ஏன் இல்லை...! இதோ பலன்களை அடுக்குகிறார் எழுத்தாளர்.

பட்டுக்கோட்டை பிரபாகர்:

தியானலிங்கத்தை எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஒருவித உறுதியும் மென்மையும் சரிசமமாகக் கலந்து தெரிகிறது. கட்டிட அமைப்பின் காரணமாக கருவறைக்குள் எழும் ஒரு சிறிய சப்தம்கூட பெரிய அளவில் எதிரொலிக்கிறது. அதனாலேயே நாதத்தின் வழியாக நிகழும் நாத ஆராதனையின்போது வாசிக்கப்படும் இசைக் கருவிகளில் இருந்து எழும் மெல்லிய இசை, எதிரொலி சேர்ந்து காதுகளில் தவழ்கிறபோது... லிங்கத்தின் அதிர்வுடன் இசையின் அதிர்வும் சேர்ந்து மனதில் சிலிர்ப்பான ஆன்மீக அதிர்வுகளை ஏற்படுத்துகிறது.
4

3

எத்தனையோ கடவுள்களுக்கு சிறப்பான கோவில்கள் இருந்தாலும்... யோகத்துக்கும் தியானத்துக்குமான திருத்தலமாக விளங்கும் தியானலிங்கம் முற்றிலும் தனித்தன்மையும் சிறப்பும் மிக்கது.

வாரத்தின் ஏழு நாட்களில் ஒவ்வொரு நாளும் தியானலிங்கத்திலிருந்து விதவிதமான அதிர்வுகள் வெளிப்படுவதால், மனிதர்களின் எந்தெந்தத் தேவைகளுக்கு எந்தெந்த நாட்களில் தியானலிங்கத்தை தரிசிப்பது உகந்தது என்று சத்குரு விளக்கியுள்ளார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திங்கள்: ஆன்மீக முயற்சிகளை முதன்முறையாக துவங்க விரும்புபவர்களுக்கு உகந்த கிழமை இது. மன பயம், மரண பயம் நீங்க, குழந்தைப் பேறு அடைய... திங்கட்கிழமை சிறந்தது.

செவ்வாய்: உற்பத்தி, படைப்பாற்றல் மேன்மைக்கும், உறவுகளை வளர்த்தல், மனத் தூய்மை ஆகியவற்றுக்கும் உகந்த நாள் செவ்வாய்.

புதன்: உடல் நலம் பெருக, பொருளாதாரச் சிக்கல் தீர, தன்னம்பிக்கை வளர சிறந்த தினம் புதன். குறிப்பாக நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்ற கிழமை.

வியாழன்: அன்பு, பக்தி, இறையுணர்வுத் தேடல் மிகுந்தவர்களுக்கு உகந்த கிழமை வியாழன். கர்ம வினைகளிலிருந்து விடுபட உதவும் நாள் இது.

வெள்ளி: நினைவுத்திறன், பொறுமை, நம்பிக்கை போன்ற பண்புகள் உயர்ந்திட உதவும் நாள். மேலும் சாபம் மற்றும் தீய சக்திகளிடமிருந்து விடுதலை வழங்கும் நாள் வெள்ளி.

சனி: ஞானத் தேடல் உள்ளவர்களுக்கு, ஐம்புலன்களைக் கடக்க விரும்புவர்களுக்கு வழி செய்யும் கிழமை இது.

ஞாயிறு: ‘தான்’ என்கிற மாயையை உடைக்கவும், குருவின் அருளைப் பெறவும், புலன் கடந்த பேரானந்தம் உணரவும் உதவும் நாள்.

தவிர... அமாவாசைகளில் தியானலிங்கத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் ஆண்களுக்கு நலம் தரும். ஆகவே அந்த நாட்களில் இரவு ஒரு மணி வரை தியானலிங்க வளாகத்தில் ஆண்கள் தியானம் செய்யலாம். அதே போல பௌர்ணமி தினங்களின் அதிர்வுகள் பெண்களுக்கு அதிக நலம் தருமென்பதால், அந்த நாட்களில் இரவு ஒரு மணி வரை பெண்கள் இங்கே தியானம் செய்யலாம். தியானலிங்கத்தைத் தரிசிக்க வருபவர்களில், விருப்பமுள்ளவர்களுக்கு மதியம் 12.30 முதல் 1.15 வரை ஓங்கார தீட்சை வழங்கப்படுகிறது. இந்த மந்திரத்தை அறிந்து தியானம் மேற்கொள்பவர்களுக்கு உடல் மற்றும் மன நோய்கள் குணமாகும் வாய்ப்புள்ளது.
5

இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் தொன்மையான புகழ்பெற்ற கோயில்கள் நிறைய உண்டு. பல கோயில்களுக்கு அதன் அமைப்பாலும் அங்கு கிடைக்கும் அதிர்வுகளாலும் சிறப்புகள் உண்டு. தஞ்சை பெரிய கோயிலின் சிறப்பு, அந்தக் கோயிலின் கோபுர நிழல் தரையில் விழாது. சிதம்பரம் நடராஜர் கோயிலின் சிறப்பு, மனிதனின் ஒரு நாள் சுவாசத்தின் எண்ணிக்கையான 21,600 தான் கோவிலின் கூரையில் உள்ள ஓடுகளின் எண்ணிக்கை. உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்க வேண்டும் என்று கருத்து திரட்டப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு, அந்தத் தகுதி உண்டு. மிக அதிகமான பக்தர்கள் வருகை தரும் கோயில் என்கிற சிறப்பு, திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்கு உண்டு.

இப்படி எத்தனையோ கடவுள்களுக்கு சிறப்பான கோவில்கள் இருந்தாலும்... யோகத்துக்கும் தியானத்துக்குமான திருத்தலமாக விளங்கும் தியானலிங்கம் முற்றிலும் தனித்தன்மையும் சிறப்பும் மிக்கது.

மக்களுக்கு இத்தனை விதமான நன்மைகளை அருளும் அற்புதமான தியானலிங்கத்தை இங்கே இப்படி அமைக்க வேண்டும் என்று சத்குருவுக்கு ஏன் தோன்றியது? சக்திப் பெட்டகமாக இதை உருவாக்கும் மகா சக்தி சத்குருவுக்கு எப்படிக் கிடைத்தது?

அடுத்தவாரம்...

'பில்வா' முதல் 'சத்குரு ஸ்ரீபிரம்மா' வரை சத்குருவின் முற்பிறவி நிகழ்வுகளை சுருக்கமாகவும் சுவையாகவும் விவரித்து, தியானலிங்கம் அமைவதற்கு காரணமான ஸ்ரீபழனி ஸ்வாமிகளைப் பற்றியும் கூறுகிறார் திரு.பிரபாகர். சுவாரஸ்யம் நிறைந்த அந்தப் பகுதிகளுக்காகக் காத்திருங்கள்!

இத்தொடரின் பிற பதிவுகள்: தியானலிங்கம் - இது மூன்று பிறவிக்கதை