சத்குரு: பூசலார் ஒரு ஞானி, மிகச்சிறந்த பக்தர், ஆனால் மிகவும் ஏழை. பிச்சை எடுத்து உணவு உண்டு வாழ்ந்தார். இது அவர் தேர்ந்தெடுத்த ஏழ்மை நிலை.
அந்த நாட்டின் மன்னர், ஒரு பெரும் பேரரசர், ஆயிரக்கணக்கான நபர்களையும், ஏராளமான பொருட்செல்வங்களையும் பயன்படுத்தி ஒரு பெரிய சிவன் கோவிலைக் கட்ட பெரும் முயற்சி எடுத்தார். அவர் பிரம்மாண்டமான ஒரு கோவிலைக் கட்டி, குறிப்பிட்ட ஒரு நாளில் பிரதிஷ்டையையும் கோவில் திறப்பு விழாவையும் நிர்ணயித்தார்.
முந்தைய நாள் இரவு, அவர் தூங்கச் சென்றபோது, அவரது கனவில் சிவன் தோன்றி, "மன்னித்துவிடுங்கள், உங்கள் கோவில் திறப்பு விழாவிற்கு என்னால் வர இயலாது, ஏனென்றால் நான் பூசலாரின் கோவிலுக்குச் செல்ல வேண்டும்" என்று கூறினார்.
அரசர் திடுக்கிட்டு எழுந்தார். சிவபெருமான் தன்னிடம் வந்து, தான் கட்டிய மிகப் பிரம்மாண்டமான கோவிலுக்கு வர முடியாது என்றும், அதை விட சிறந்த பூசலாரின் கோவிலுக்குச் செல்வதாகவும் கூறியதை அவரால் நம்ப முடியவில்லை. எனவே, அங்கு சென்று பார்க்க விரும்பினார். அவர் பூசலாரைத் தேடிச் சென்றார். நகரத்தின் எல்லையில், ஒரு சிறிய குடிசையில், பூசலார் கண்கள் மூடியபடி அமர்ந்திருந்தார்.
அரசர் உள்ளே வந்து பூசலாரை வெளியே அழைத்து சென்று, "உங்களுடைய கோவில் எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். “சிவபெருமானே நேரில் தோன்றி, உங்கள் கோவில் என்னுடையதை விட சிறப்பானது என்றும், அவர் என் கோவிலுக்கு அல்லாமல், உங்கள் கோவிலுக்குத்தான் வரப்போவதாகவும் கூறினார்” என்றார். “அவரே அங்கு செல்ல விரும்புகிறார் என்றால், நானும் அங்கு செல்ல விரும்புகிறேன். உங்கள் கோவில் எங்கே இருக்கிறது?" என்று கேட்டார். பூசலார் தர்மசங்கடத்துடன் பார்த்தார். அவர், "ஓ, என் கோவிலா? இல்லை, அது கல்லாலும் செங்கல்லாலும் ஆனது அல்ல. நான் என் இதயத்தில் தான் இந்த கோவிலை கட்டி வருகிறேன்" என்றார்.
"ஆமாம், நாளை சிவபெருமான் என் கோவிலில் பிரவேசிப்பதாக எனக்கு வாக்களித்தது உண்மைதான், ஆனால் இது உங்களுக்கு எப்படித் தெரியும்?" இந்த நிகழ்வின் பொருள் என்னவென்றால், நீங்கள் உங்கள் ஆழ்மனதில் ஒரு கட்டமைப்பை உருவாக்கி, அதை உங்கள் சக்திகளால் வலுவூட்டினால், அல்லது இன்னும் சிறப்பானதாக, உங்களை உயிரோடு வைத்திருக்கும் அடிப்படை விழிப்புணர்வால் வலுவூட்டினால், அது கற்களால் கட்டப்பட்ட கோவில்களை விட மிகவும் உண்மையானதாக இருக்கும்.
நீங்கள் எதைக் கல்லாலும் செங்கல்லாலும் கட்டுகிறீர்களோ, நம்மைச் சுற்றி நாம் உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்த புற உலக யதார்த்தங்கள் யாவையும் விட உண்மையானது அக கட்டமைப்புகள்.