புராஜெக்ட் சம்ஸ்கிருதி

பக்தியின் தாள லயம்:

மிருதங்க வித்வானாக மிளிரும்
ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்

ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவரான அஷ்வின் சுப்ரமணியன், ரிதத்தில் தனக்கு ஆழமான ஈடுபாடு ஏற்பட்ட ஆரம்ப காலத்திலிருந்து, இந்திய பாரம்பரிய இசைக்கருவியான மிருதங்கத்தின் நுட்பமான அம்சங்களை தனக்குள் பதிந்து கொண்டது, மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, வாழ்வே ஒரு பாடமாக இருப்பது வரையிலான தனது ஆழமான அனுபவத்தை நாமும் அறிந்துகொள்ள அனுமதிக்கிறார்.

மிருதங்க கலைஞரின் வாழ்க்கை

ஈஷா சம்ஸ்கிருதி வளாகத்தை நாம் நெருங்குகையில் மிருதங்கங்களின் தாள லயத்திற்கு பக்கவாத்தியம் போல மாணவர்களின் சிரிப்பொலி சத்தமும் இணைந்தே கேட்கிறது. மஹாசிவராத்திரிக்கு முன் நாம் சென்றிருந்ததால், இளம் கலைஞர்கள் தங்கள் சுவாசமாகவே மாறிவிட்டிருந்த திறனை மெருகேற்றிக்கொண்டு சர்வதேச அளவில் பார்வையாளர்களுக்கு நம் பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் முனைப்புடன் இருந்தனர். மாணவர்கள் சற்று இடைவெளி எடுத்துக்கொண்டு பந்து விளையாட கிளம்ப, அந்த இடைவெளியில் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள வந்து அமர்ந்தார் ஈஷா சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர் அஷ்வின்.

இந்திய பாரம்பரிய இசை அல்லது நடன நிகழ்ச்சிகளின் போது, பார்வையாளர்கள் நடன கலைஞர்களின் அழகிய நடன அசைவுகளிலோ அல்லது பாடகர்களின் இனிமையான குரல் வளத்தின் மீதோ தங்கள் கவனத்தை செலுத்தக்கூடும். இருந்தாலும், பார்வையாளர்களின் அனுபவத்தை முழுமையடையச் செய்வதில் ஒரு திறன் வாய்ந்த தேர்ந்த மிருதங்க கலைஞரின் பங்களிப்பு முக்கியமாகிறது.

கர்நாடக வாய்ப்பாட்டு மற்றும் பரதநாட்டிய நடன நிகழ்ச்சிகளுக்கு பக்கபலமாக, 'பக்காவான' பக்கவாத்தியமாக திகழ்வது என்றால் அது மிருதங்கம் தான். "வாத்திய கலைஞர்களின் நேரடியான பங்களிப்பு நடன கலைஞர்கள் அல்லது பாடகருக்கு சக்தி ஊட்டுவதுடன் ஒட்டுமொத்தமாக நிகழ்ச்சியின் உணர்வை மேம்படுத்துகிறது" என பகிர்ந்து கொள்ளும் அஷ்வின் தொடர்கிறார், "உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடன கலைஞர் சோகத்தை வெளிப்படுத்த முயற்சிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சமயத்தில், மேடையில் ஓரமாக அமர்ந்திருக்கும் வாத்திய கலைஞர் அந்த சோகத்தின் ஆழத்தை அப்படியே பார்வையாளர்களுக்கு எடுத்து செல்லக்கூடியவராக இருக்கவேண்டும்."

தாள லயத்துடன் ஒன்றிணைதல்

நேரடியாக பங்கேற்கும் ஒரு நிகழ்வில் இப்படி நுட்பமாக விவரங்களை உள்வாங்கி, உணர்ந்து இசையாக வெளிப்படுத்துவது என்பது அவ்வளவு லேசான விஷயமல்ல. பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொள்ளும் பயிற்சி மற்றும் ரிதத்தின் மீது கலைஞருக்கு உள்ள இயற்கையான ஈடுபாடுமே மக்கள் ரசிக்கும்படியான இசை பிறக்க காரணமாகிறது. அஷ்வினுக்கு ஐந்து வயதிருக்கும் போதே அவரது பெற்றோர்கள் ஆசிரமவாசிகளாக மாற, அப்போது முதல் ஆசிரமமே அஷ்வினுக்கு வீடாகிறது. "எனது தந்தை அவ்வப்போது மிருதங்கம் வாசிப்பார். எனவே நானும் இயல்பாக ரிதம் மற்றும் இசைக்கருவிகள் வசம் ஈர்க்கப்பட்டேன். ஆனால் ஆசிரம சூழலில் வாழ கிடைத்த வாய்ப்புதான் எனக்குள் பலமடங்கு ரிதத்தை ஊட்டியது. தொடர்ந்து அதை கவனித்து வந்ததில் ரிதத்தின் மீது ஒரு பெரும் ஆர்வமே எனக்குள் உருவானது" என தன் இளம்பிராயத்தை நினைவு கூறுகிறார் அஷ்வின்.

2005 ம் ஆண்டு ஈஷா ஹோம் ஸ்கூல்-ன் முதல் மாணவர்களில் ஒருவராக இணைந்து கிட்டத்தட்ட அதில் ஐக்கியமே ஆகிவிட்டார் அஷ்வின். சில ஆண்டுகளுக்கு பிறகு மாற்றம் தென்படத் துவங்கியது. "2008ம் ஆண்டு ஈஷா சம்ஸ்கிருதி துவங்கப்பட்ட போது எனது தந்தைக்கு நான் அதில் சேரவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. துவக்கத்தில் நான் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தாலும், இறுதியாக, பரிசோதிக்கும் காலமாக ஒரு வருடம் மட்டும் செல்வது என்ற முடிவை எட்டினோம்."

ஈஷா ஹோம் ஸ்கூல்-ன் கற்றல் அணுகுமுறைகளில் இருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருந்தது ஈஷா சம்ஸ்கிருதி. கல்வியுடன், கூடுதல் கலை பயிற்சியாக பாட்டு மற்றும் நடனத்தை தேர்ந்தெடுத்திருந்த அஷ்வின், நாளடைவில் இந்திய பாரம்பரிய கலைகளின் நுட்பங்களை நாள் முழுவதும் கற்க துவங்கினார். "திடீரென்று பார்த்தால் நான் பாட்டு, பரதநாட்டிய நடனம், களரிபயட்டு என நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட துவங்கியிருந்தேன். ஆனால் நாங்கள் முழு ஈடுபாட்டுடன் இருந்தாலும், எப்போதுமே ஏதாவது ஒன்றில் ஈடுபடுமாறு எங்கள் வகுப்பு நேரம் வடிவமைக்கப்பட்டு இருந்ததாலும், நாங்கள் ஏதோ நேற்றுதான் இங்கே கற்க துவங்கினோம் என்பது போலவே இருக்கிறது."

மக்களிடம் தங்களை அறிமுகம் செய்து, சம்ஸ்கிருதி உடைகளை சத்குரு வழங்கிய அந்த சத்சங்கத்தை இன்னும் பளிச்சென நினைவில் வைத்திருக்கிறார் அஷ்வின், "அந்த கணம் என் நினைவில் என்றும் பசுமையாக இருக்கும். எனக்கு அது ஒரு புதிய துவக்கமாக இருந்தது. அன்றிலிருந்து, அடுத்த பத்து வருடங்கள் வெகு வேகமாக கடந்ததுடன் என்னையும் மாற்றியிருக்கிறது."

மேடையின் ஓரத்தில் மின்னும் திறன்

துவக்கத்தில், ஈஷா சம்ஸ்கிருதி வழங்கும் அனைத்து பாடங்களையும் பயின்ற அஷ்வின், பிறகு மிருதங்கத்தில் சிறப்பு கவனம் செலுத்தத் துவங்குகிறார். ஏதேனும் ஒரு கலை வடிவத்தில் ஒருவர் தனிச்சிறப்பான இடத்தை அடைகிறார் என்றால், அவரிடம் இயற்கையாகவே இருக்கும் திறமை என்பது துவக்கப் புள்ளி மட்டுமே. அஷ்வின் தொடர்ந்து பேசுகையில், "நான் பல நுணுக்கமான விஷயங்களை கவனமாக கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனெனில், இது தனியாக 'டிரம்ஸ்' வாசிப்பது போன்றதில்லை, மிருதங்கத்திற்கு என்று ஒருவித வடிவமும் அணுகுமுறையும் தேவையாக இருக்கிறது." பெரும்பாலான கலைஞர்கள் மேடையில் நடுநாயகமாகவும், புகழ் வெளிச்சத்திலும் திகழ விரும்புக்கூடும். இங்கே அஷ்வினின் பங்களிப்பு என்பது மிக மென்மையான இயல்புடையது. இந்திய பாரம்பரிய இசை நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும், மிருதங்கம் இன்றி அது முழுமை அடையாது. இவர் மற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்களுடன் இணைந்து பயிற்சி செய்ய வேண்டியதாக இருந்தது. ஏனெனில் இசையும் நடனமும் இயைந்து ஒருங்கிணைந்த ஒரு அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

மேடையில் ஓரமாக இருப்பதில் அதற்கேயுரிய சவால்கள் இருக்கவே செய்கின்றன. ஒருவர் மிக வேகமாக சூழ்நிலையை புரிந்துகொண்டு, எளிதாக அதற்கேற்ப நடப்பவராக இருக்க வேண்டும். "என்னைப் பொறுத்தவரையில், ஒரு நடனத்திற்கு பக்கவாத்தியமாக வாசிப்பதையே மிக சவாலானதாக கருதுகிறேன்" என நேர்மையாக பகிர்ந்துகொள்ளும் அஷ்வின் அதற்கான காரணத்தை விளக்குகிறார், "ஏனெனில் உங்கள் சொந்த இசைத் திறனை காட்ட நீங்கள் அங்கு இல்லை. நீங்கள் ஒரு கலைஞருக்கு பக்கபலமாக இருக்கிறீர்கள். அதேநேரத்தில், மிருதங்கத்தின் அழகையும் வெளிக்கொண்டு வருகிறீர்கள். தன் இசைக்கருவியின் மீது தீரா அன்பும், தன் துறையில் ஆழமான ஈடுபாடும் கொண்டு, தன் சக கலைஞர்களுடன் அமர்ந்து, இசை கோர்ப்பின் தன்மை மற்றும் நடன கலைஞர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளுக்கேற்ப தன் வாத்திய இசையை வெளிப்படுத்த முனையும் அஷ்வின், "இசையும் நடனமும் எப்போதும் பொருத்தமாக இருக்க வேண்டும்" என்கிறார் புன்னகையுடன்.

எப்போதுமே மாணவன்

பல கணக்கீடுகளை அடிப்படையாகக் கொண்ட ரிதத்தில் துவங்கி, ஒலியின் பாங்கு, நிசப்தம் ஆகியவற்றை தனது இரண்டாம் இயல்பாக மாறும் வரை பயிற்சி செய்கிறார் அஷ்வின். "இதற்காக பல மணி நேரம் பயிற்சி எடுத்த பிறகு, பாடகரோ அல்லது நடன கலைஞரோ திட்டமிடாத ஏதோ ஒன்றை மேடையில் திடீரென்று புதிதாக நிகழ்த்த நேர்ந்தால், அதை சட்டென்று உள்வாங்கிக்கொண்டு, அதற்கேற்ப நீங்கள் வாசிக்க வேண்டும்" ஈஷா சம்ஸ்கிருதியில் மாணவர்கள் இந்த செயல்முறையில் நல்ல முறையில் வளர்கிறார்கள், ஏனெனில் அவர்கள் தொடர்ந்து பலவித அணுகுமுறை மற்றும் திறன்மிக்க ஆசிரியர்களிடம் பயில்கின்றனர்.

"நீங்கள் நேரடியாக ஒரு ஆசிரியரிடம் கற்கும்போது, அவர்கள் உங்களுக்கு ஏதோ ஒன்றை கற்றுத் தருவார்கள், அதை நீங்கள் அப்படியே மீண்டும் செய்ய வேண்டும் என்பது மட்டுமில்லை. அவர்கள் என்னென்ன செய்கிறார்களோ, அவை அனைத்தையும் நீங்கள் அப்படியே பார்க்கிறீர்கள், இசைக்கருவியை எப்படி பராமரிக்கிறார்கள், அவர்கள் எப்படி வாத்தியத்தின் இசையை மெருகேற்றுகிறார்கள், ஒரு இசை கோர்வையை எப்படி அணுகி வாசிக்கிறார்கள் என்று எல்லாவற்றையும் நீங்கள் அப்படியே கவனித்து உள்வாங்குகிறீர்கள்," என பகிர்ந்து கொண்டார் அஷ்வின்.

இதுபோன்ற நுட்பமான சிறிய விஷயங்களுக்கும் கவனம் செலுத்துபவராக இருக்கும் அஷ்வின், ஈஷா சம்ஸ்கிருதியில் தனது கல்வியை அதிகாரப்பூர்வமாக முடித்த பிறகும் தொடர்ந்து கற்றல் தனது வாழ்வில் ஒரு பகுதியாக இருப்பதை காண்கிறார். முதல்முறையாக ஒரு இசை நிகழ்ச்சியில் மேடை ஏறி வாசித்தபோது, தன் வயிற்றில் பட்டாம்பூச்சி பறந்த பதட்டமான அனுபவத்தை நினைவுகூர்ந்த அஷ்வின், "எனக்குள் இன்னும் சற்று பதட்டம் இருக்கிறது, ஆனால் அது குறைந்து வருவதுடன் எனது கவனம் மேம்பட்டிருக்கிறது. நான் எப்போதுமே என்னை எப்படி கூர்மையாக வைத்துக்கொள்வது, இன்னும் சற்று நுணுக்கமான அம்சங்களை கைக்கொள்வது எப்படி என்றே பார்க்கிறேன். ஒவ்வொரு நிகழ்வு நிறைவு பெற்றதும் நான் என்ன செய்தேன் என்பதை திரும்பிப் பார்த்து எந்த பகுதியை இன்னும் சற்று சிறப்பாக செய்திருக்கலாம் என்று சிந்திக்கிறேன்.

தனது திறனை மெருகேற்றும் வாய்ப்பாகவே ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பார்க்கும் அஷ்வின், "நான் பங்கேற்க கிடைக்கும் ஒவ்வொரு மேடையும் எனக்கு புத்தம்புதிய அனுபவமாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறையும் முதல்முறையாக கலந்துகொள்ளும் உணர்வே எழுகிறது" என பேசும்போதே கண்களில் உற்சாகம் மின்னுகிறது.

பிற மிருதங்க கலைஞர்களுடன் இணைந்து வாசிக்க கிடைக்கும் வாய்ப்பு அல்லது பிறரின் வாசிப்புகளை கேட்க கிடைக்கும் வாய்ப்புகளில் தனது தனித்த திறனை மெருகேற்றி வரும் அஷ்வின். "ஒரு குறிப்பிட்ட நிலையை நீங்கள் அடைந்த பிறகு, உங்களுக்கு பிடித்த ஒரு இசை கோர்வையை கேட்கும்போதே அந்த இசைக்கலைஞர் என்ன செய்கிறார் என்பதை நீங்கள் உணர முடியும். அதை உங்கள் பாணியில் எடுத்து வாசிக்க வேண்டியதுதான். இதை யாராவது வந்து கற்றுத்தரும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டியதில்லை. அந்த வகையில் பார்த்தால், இந்த செயல்முறை என்றும் பசுமையானதாக, கற்றுக்கொள்ள எல்லையே இல்லாததாக இருக்கிறது."

பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் பரிமாற

"முன்பு மிருதங்கத்தின் உடல் பகுதி மண்ணால் செய்யப்பட்டு வந்தது. மக்களின் வாழ்க்கை முறை மாறுதலுக்கு உட்பட்டதைப் போலவே, மிருதங்கத்தையும் மரத்தால் உருவாக்கத் துவங்கினர். இன்று மீண்டும் காலமாற்றம் காரணமாக புதிய தளங்களில் மிருதங்க இசை தடம் பதிக்க துவங்கியிருக்கிறது. இந்த முறை, எப்படி இசை பரிமாறப்படுகிறது என்பதில் புதுமை புகுந்திருக்கிறது. பெரும்பாலான மக்களை எளிதாக சென்றடைய, ஆன்லைனிலேயே கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பிறந்திருக்கிறது. புராஜெக்ட் சம்ஸ்கிருதியின் இசை பிரிவில் ஆன்லைன் வகுப்புகளை உருவாக்க உதவியுள்ளதன் மூலம் இந்திய பாரம்பரிய இசை உலகின் மூலை முடுக்கெல்லாம் எட்டுவதற்கு உறுதுணையாக இருக்கிறார் அஷ்வின்.

"மக்கள் நேரலையில் கலந்துகொள்ளும் போது அவர்கள் உள்வாங்கும் தன்மை வேறு இயல்பில் இருக்கும் என்பதால் நாங்கள் என்ன வெளிப்படுத்துகிறோம் என்பதிலும், எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதிலும் இன்னும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது." தங்களது கலை வடிவத்தில் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கொண்டுள்ள திறனும், அவர்கள் ஈடுபடும் எந்த செயலிலும் காட்டும் பக்தியும் இந்த புதிய தளத்தில் கலை வடிவங்களின் தூய்மை மற்றும் நேர்மையைப் பராமரிக்க அனுமதிக்கிறது.

கற்றுத்தரும் அணுகுமுறை மாறுகிறதே தவிர, உள்ளடக்கம் என்பது பழங்காலம் தொட்டே அப்படியே இருக்கிறது. "தங்களை அந்தளவு ஈடுபடுத்திக்கொள்ள நேரம் கிடைக்காத மக்களுக்கென்று நாம் சிலவற்றை வழங்க முடியும். பாரம்பரிய கலை வடிவத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழி, அவர்களுக்கு நாம் என்ன கற்றுத்தர முடியும் என்பதிலும், அதிலிருந்து அவர்களால் எவற்றை உள்வாங்க முடிகிறது என்பதிலும் மட்டுமே இருக்கிறது. இந்த கலை வடிவங்கள் மறைந்து போகக்கூடாது என்பதற்காக, இந்த கலை வடிவங்களில் பொதிந்துள்ள அழகை மக்கள் பார்ப்பதற்கு நாம் முயற்சி செய்கிறோம்" என நம்பிக்கையுடன் நிறைவு செய்கிறார் அஷ்வின்.