புராஜெக்ட் சம்ஸ்கிருதி

புராஜெக்ட் சம்ஸ்கிருதி: ஈஷா சம்ஸ்கிருதி எப்படி உலகெங்கும் சென்றடைகிறது

பகுதி 4: இசைத் தொகுப்பில் திரைக்குப் பின்னால் நிகழ்ந்தவை

ஐந்து பகுதிகள் அடங்கிய இந்தத் தொடரில், சம்ஸ்கிருதி திட்டத்தின் பின்புலத்தில் நிகழும் முனைப்பான செயல்பாடுகளை, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் கண்ணோட்டத்தில் உங்கள் முன் வெளியிடுகிறோம். இந்தக் கட்டுரையில், ஈஷா சம்ஸ்கிருதி ஆசிரியை மா நடாஷா, இசைத் தொகுப்பு உருவான விதத்தை நமக்கு விவரிக்கிறார்.

இசையில் மூழ்கினேன் – எங்கேயும், எப்போதும்

22 வயதுடைய மா நடாஷா, மிகச் சிறிய வயதிலேயே இசைக்குள் பயணப்பட்டார். அவரது பெற்றோராகிய சேகர் மற்றும் சாந்தி இருவரும் இசையின்பால் பெருவிருப்பமும், திறனும் கொண்டவர்களாக, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் கச்சேரிகளில் வழக்கமாக பங்கு பெறுகின்றனர். “வீட்டில் எப்போதும் இசை நிறைந்திருக்கும் சூழலாக இருந்ததால், நான் இயற்கையாகவே அதற்கு நாட்டமுடன் இருந்தேன். நான் என் பெற்றோரால் தாக்கத்துக்கு உள்ளானதாக இல்லை; அது ஒரு இயல்பான விருப்பமாகவே என்னுள் எழுந்தது,” என்று மா நடாஷா பகிர்ந்துகொள்கிறார்.

அவர் 2008 ல் ஈஷா சம்ஸ்கிருதிக்கு மாறுவதற்கு முன்பே, அவரது பெற்றோர்கள் 2005ல் “ஹோம் பேரண்ட்ஸ்” ஆக ஈஷா ஹோம் ஸ்கூலில் இணைந்தனர். “அப்போது நடைபெற்ற வகுப்புகளுக்கு முறைப்படியான கட்டமைப்பு இல்லை. வகுப்புகள் இயற்கை சூழலில், வெளி இடங்களில், ஓடைகளுக்கு அருகில், மரங்களின் கீழ், அல்லது எப்போதேனும் நடக்கும் காம்ப் பயணங்களின்போது நிகழ்ந்தன,” என்று ஈஷா ஹோம் ஸ்கூலில் அவரது நாட்களை விருப்பமுடன் நினைவுகூர்ந்தவராகக் கூறுகிறார். “ஒருமுறை நாங்கள் மலைக்கு சென்றபோது, பலமான மழை ஆரம்பித்துவிட்டது. வகுப்பைத் தொடரமுடியாது என்ற வருத்தத்தில் நான் இருந்தபோது, என் ஆசிரியர் சட்டென்று ஒரு குடை விரித்துவிட, நாங்கள் அதன் கீழே நெருக்கி நின்றுகொண்டு இசை கற்றோம்.”

பல ஆண்டுகளாக, மா நடாஷா ஈஷா சம்ஸ்கிருதியில் மற்ற பாடங்களுடன், யோகா, களரிப்பயட்டு, கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியம் ஆகியவற்றை நுணுக்கமாக உள்வாங்கினார். இறுதியில், அவர் கர்நாடக சங்கீதத்தில் சிறப்புப் பயிற்சி பெறுவதற்கு தேர்வுசெய்தார்.

அவரது பயிற்சிப் பயணத்தின்போது, சத்குருவிடம் இருந்து அவர் நேரடி வழிகாட்டலையும் பெற்றார். வெகு வேகமாக முளைவிட்ட அவரது திறமையை மேலும் தூண்டுவதற்காக, ஈஷா சம்ஸ்கிருதிக்கு வெளியில் உள்ள வெவ்வேறு இசைக்கலைஞர்களின் மேற்பார்வையின் கீழும் கற்றுக்கொண்டு அவரது திறமைகளைப் பட்டை தீட்டுமாறு சத்குரு கேட்டுக்கொண்டார். கர்நாடக சங்கீத ஜாம்பவான் ஏ.எஸ். மூர்த்தி அவர்களிடமிருந்து புதிய பாடல்களைக் கற்றுக்கொள்வதில் ஐந்து மாதங்களுக்கும் மேலாக அவரது வகுப்புகளில் பங்கேற்று, இசையின் முறைப்படியான பயிற்சியை மா நடாஷா தீவிரப்படுத்தினார். அவர் 20 வருடங்களுக்கும் அதிகமாக கற்றுக்கொண்டு, 8 வருடங்களாக ஆசிரியப்பணியில் இருந்துகொண்டிருந்த நிலையில், எதிர்பாராத புதிய வாய்ப்பு ஒன்று அவர்முன் எழுந்தது.

கோவிட் காலகட்டத்தில் ஆன்லைனில் பயிற்றுவிக்க கற்றுக்கொள்வது

2020 ஆண்டின் துவக்கத்தில், ஈஷா சம்ஸ்கிருதியின் தற்போதைய மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் மிகப் பிரம்மாண்டமான திட்டத்தை மேற்கொள்வார்கள் என்று சத்குரு அறிவிப்பு செய்தார். இந்திய சாஸ்திரீய இசை மற்றும் கலைகளை உலகின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்வதுடன், அதற்கான பாடத் தொகுதிகளையும், கற்றுக்கொடுக்கும் தொழில்நுட்பங்களையும் தாங்களாகவே வடிவமைக்கும் சாத்தியத்தை வழங்கினார். இது ஒவ்வொரு சம்ஸ்கிருதி மாணவருக்குள்ளும் மடைதிறந்த வெள்ளமென உணர்ச்சிகளைத் திறந்துவிட்டது. இதுவரை ஒரு தீவிரமான ஆனால் இயற்கையோடு நெருக்கமான ஆசிரமத்தில் வாழ்ந்திருந்தவர்கள், இப்போது நிதர்சனமான உலகிற்குள் அடியெடுத்துவைக்க வேண்டியுள்ளது.

கோவிட்-19 வெளிப்பட்ட 2020ம் ஆண்டில் புராஜெக்ட் சம்ஸ்கிருதியின் சக்கரம் சுழலத் தொடங்கியது. வகுப்புகளின் ஒவ்வொரு அமர்வுக்கான விரிவான தொகுதிகளையும், அந்தந்த வகுப்புகளையும் வடிவமைத்த எழுத்துபூர்வ குழுவினருடன் மா நடாஷா இணைந்தார். கேமராவைக் கையாளும் தொழில்நுட்பக் குழுவின் ஒரு பாகமாக பொறுப்பெடுத்துக்கொண்ட மா க்ஷீரஜா, மாதிரி அமர்வுகள் நடத்தி, வகுப்புகளின் தொழில்நுட்ப அம்சங்களை முடிவு செய்வதுடன், புராஜெக்ட் சம்ஸ்கிருதி செயலாக்கத்துக்கு வந்தபொழுது வகுப்புகளையும் நடத்தினார்.

இந்திய சாஸ்திரீய சங்கீதம் குறித்து எதுவும் அறியாத மக்களுக்கு, இசையை கற்றுத்தருவது கடினமாக இருக்கும் என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தனர். ஆனால், பங்கேற்பாளர்களுக்கு சரியான உச்சரிப்பைக் கற்றுத்தருவது பெரும் சவாலாக இருப்பதை அவர்கள் விரைவில் உணர்ந்துகொண்டனர்.

“நிறைவே ஷக்தி” என்று துவங்கும் தமிழ்ப்பாடலில், மாணவர்கள் “ழ” என்ற சிறப்பு ழகரத்தை உச்சரிக்க வேண்டியிருக்கிறது. அந்த உச்சரிப்புக்கான போராட்டத்தின் ஞாபகத்தில், மா க்ஷீரஜா தனது தலையை உலுக்கியவாறு, நினைவுகூர்கிறார்,” ழகர உச்சரிப்பை எப்படி விளக்கிக் கற்றுக்கொடுப்பது என்ற முயற்சியில் பல அமர்வுகள் எங்களுக்கு தேவைப்பட்டன. அதை உச்சரிப்பதற்கு நாக்கு எந்த இடத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை துல்லியமாக விளக்குவதில் முடிவில்லாமல் நாங்கள் விவாதித்தோம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு, அதைப்பற்றிய நினைவுகூட இல்லாமல் அது இயற்கையாக வருகிறது.” எண்ணற்ற அமர்வுகளுக்குப் பிறகு, இறுதியில் அந்த உச்சரிப்பின் ஒவ்வொரு பகுதியையும் விளக்குவதற்கான எல்லா வழிகளையும் அவர்கள் கண்டுபிடித்தனர்.

அவர்களது மாணவர்களுக்கு கற்றுத்தரவேண்டிய பாடல்களின் தேர்வும் சமஅளவுக்கு கடினமாக இருந்தது. பெருத்த ஆலோசனைக்குப் பிறகு, குழுவினர் இரண்டு பாடல்களை – “நிறைவே ஷக்தி” (தமிழ்) மற்றும் “நிர்பய் நிர்குண்” (ஹிந்தி) - முடிவு செய்தனர்

அவர்களின் முதல் அர்ப்பணிப்புகளில் ஒன்றாக, சுப்பிரமணிய பாரதியாரின் ‘நிறைவே ஷக்தி’ பாடலைத் தேர்ந்தெடுத்தமைக்கு மூன்று முதன்மையான காரணங்கள் உண்டு. முதலில், அதன் வேர்கள் தமிழ் கலாச்சாரத்தில் உள்ளன, மற்றும் ஈஷா தியான அன்பர்கள் பலரும் தேவி அல்லது ஷக்தியுடன் இயல்பாகவே ஈர்க்கப்படுகின்றனர். அதைத் தவிர, தமிழ்கவியும், சமூக சீர்திருத்தவாதியுமான பாரதியாரின் 100வது நினைவு ஆண்டாக 2021 குறிக்கப்படுகிறது. அவருக்கான ஒரு அர்ப்பணிப்பாக, ‘நிறைவே ஷக்தி’ பொருத்தமானதொரு தேர்வாகத் தோன்றியது,” என்று சந்தீப் நாராயணன் பகிர்கிறார். இவர் விருது வென்ற கர்நாடக வாய்ப்பட்டுக் கலைஞராகவும், புராஜெக்ட் சம்ஸ்கிருதி குழுவின் ஒரு அங்கத்தினராகவும் இருக்கிறார். “மறைஞானக்கவியும், புண்ணிய புருஷருமான கபீர் தாஸரால் எழுதப்பட்ட பிரபலமான ஹிந்தி பஜன் ‘நிர்பய் நிர்குண்’ பரந்த பங்கேற்பாளர்களின் ரசனைக்காக தேர்வு செய்யப்பட்டது,” என்று அவர் மேலும் தொடர்ந்தார்.

திரளான சவால்கள்

வகுப்பின் கட்டமைப்பை முடிவுசெய்வதும்கூட பல்வேறு கட்டங்களையும், எண்ணற்ற விவாதங்களையும் கண்டது. கலந்துரையாடல்கள், பின்னூட்டங்கள் மற்றும் முரணான கருத்துகளை பிரவாகமாக சந்தித்தது. அளவைகள் மற்றும் ஸ்வரங்களை அறிமுகம் செய்வதா, வகுப்பை எப்படித் துவக்குவது, மற்றும் ஒரு வாக்கியத்தின் எந்தெந்த வார்த்தைகள் மிகப் பொருத்தமானவை என்பதை போன்ற பலவும் விவாதிக்கப்பட்டன. அவர்களது கருத்துகளை முடிவாக எழுத்தில் பதித்துப் பின்பற்ற எண்ணியபோதே, முதலாவது மாதிரி அமர்வு அறிவிக்கப்பட்டது. அதற்கடுத்த ஆறு நாட்களும், அவர்கள் உண்மையிலேயே காலில் சக்கரம் கட்டிக்கொண்டு செயல்பட்டனர்.

மா நடாஷா, மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் உச்சாடணங்களை எளிதாக்க முயன்று கொண்டிருந்தார். மா க்ஷீரஜா, அவர் பாடுவதின் வாயிலாக கச்சிதமான உணர்ச்சிகளும், அதற்கு சமமாக உடல்மொழியும் வெளிப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டியிருந்தது. பல மாதிரி வகுப்புகள் நடத்தி, அவர்கள் தங்களது வெளிப்படுத்தலை மெருகேற்றினர். இவரது வகுப்பு ஒன்றில் கலந்துகொண்டதற்குப் பிறகு, சத்குரு தனிப்பட்ட முறையில் பாராட்டுச் செய்தி ஒன்றை அனுப்பியது, அவரது நம்பிக்கையை உயர்த்தியது. தீவிர கவனம் மற்றும் ஈடுபாட்டுடன், பாடல்கள் கற்றுக்கொடுக்கப்பட்டதை பங்கேற்பாளர்களும்கூடப் பாராட்டினர்.

பங்கேற்பாளர்கள் சொல்வது...

பங்கேற்பாளர்களுள் ஒருவரான ப்ரியா சந்தீப், பகிர்ந்துகொள்கிறார், “‘நிர்பய் நிர்குண்’ பாடல் எனக்கு மிகவும் விருப்பமானது, அதை ஆயிரம் முறைகள் கேட்டிருப்பேன், முன்பு அதை நன்றாகப் பாட முடிவதில்லை. ஆனால் இப்போது, புராஜெக்ட் சம்ஸ்கிருதி குழு கற்றுக்கொடுத்த விதத்தில், அந்த உச்சரிப்பையும், ராகத்தையும் ஒரு சில நாட்களுக்குள் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அது ஒரு-வழி வகுப்பாக இருப்பினும், நான் தவறு செய்த இடங்களில் மிகத் துல்லியமாக ஆசிரியர் இடைமறித்துத் திருத்தினார். அவர்கள் என் மனதைப் படித்துக்கொண்டு இருந்தது போலத் தோன்றியது.”

மற்றொரு பங்கேற்பாளர், ஜனனி வெங்கடேஷ் கூறுகிறார், “எனது குழந்தைப் பருவத்திலிருந்து கர்நாடக சங்கீதத்தை அவ்வப்போது கற்றுள்ளேன். வெபினார் போன்ற ஒரு வகுப்பிலிருந்து என்ன எதிர்பார்ப்பது என்றே தெரியவில்லை. ஆனால் உச்சரிப்பை விளக்குவதிலும், ஏற்ற இறக்கங்களை சரிசெய்வதிலும் நுணுக்கமாகக் காட்டப்பட்ட கவனத்தின் அளவு மற்றும் உடன் இணைந்து திரும்பத்திரும்ப பாடுவதில் உள்ள பயிற்சி ஆகியவை சாஸ்த்திரீய கலை வடிவங்களின் ஆன்லைன் வகுப்பிலும்கூட எவ்வளவு ஈடுபாடு காண்பிக்க முடியும் என்பதை எனக்கு உணர்த்தியது.

சத்குருவின் தொலைநோக்கைப் பூர்த்திசெய்வதற்கு தொய்வில்லாத உழைப்பு

ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்துக்குள் புராஜெக்ட் சம்ஸ்கிருதியால் வழங்கப்பட்ட இரண்டு பாடல்களும், தேசங்கள் கடந்து, வயது பாகுபாடின்றி, மிகப் பிரபலமான அர்ப்பணிப்புகளில் ஒன்றாகியிருக்கிறது. இன்றைய தேதி வரைக்கும், பங்கேற்பாளர்களை பதிவு செய்வதற்கு எந்தக் கூடுதல் முயற்சியும் இல்லாமல், உலகெங்கும் 1476 பேர் பங்கேற்றுள்ள 14 வகுப்புகளை இசைக்குழு வழங்கியுள்ளது. தற்காலிகமாக, மஹாசிவராத்திரிக்கான ஆயத்தப்பணிகளுக்காக, ஆன்லைன் வகுப்புகளிலிருந்து, குழுவினர் ஒரு சிறிய இடைவெளி எடுத்துள்ளனர். அவர்களது அர்ப்பணிப்புகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டுள்ளன.

ஆசிரியர்கள் உடனுக்குடன் திருத்தங்கள் வழங்க ஏதுவாக, வரவிருக்கும் இசைப் பகுதிகள் இரு-வழி வகுப்புகளாக மாற்றம் செய்யப்படுவதற்கு கவனம் மேற்கொள்ளப்படும். எதிர்கால புதிய திட்டங்கள் குறித்து கேட்டபோது, சந்தீப் நாராயண், “மஹாசிவராத்திரி அன்று, இசைக்குழு தனது மூன்றாவது அர்ப்பணிப்பாகிய – ‘ஷிவஷிவ எந்தோம்மே’ என்ற பிரபலமான ஒரு கன்னடப் பாடலை கொண்டாடப்படும் விழாவுக்கான மிகச் சரியான காணிக்கையாக வெளியிடுகிறது,” என்று கூறினார். புராஜெக்ட் சம்ஸ்கிருதி குழுவிடமிருந்து மேலும் பெறுவதற்கு எங்களுடன் இணைந்திருங்கள்.