பகிர்வுகள்

உலகம் சுற்றும் ஒரு இசைக்கலைஞர், ஹடயோகாவில் வாழ்வின் லயத்தை அறிகிறார்

நார்வே தேசத்தை சேர்ந்த இசைக்கலைஞரான ராவ் சிரா, ஈஷா ஹடயோகா ஆசிரியராக தான் பரிணமித்த பயணத்தை நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகிறார். சத்குருவின் யூ டியூப் காணொளிகளைக் காண நேர்ந்ததன் விளைவாக, ஈஷா ஹடயோகா கற்றுக்கொண்டு, தொடர்ந்து பயிற்சிகளை செய்கிறார் ராவ். வெகுவிரைவிலேயே ஈஷா ஹடயோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் இணையும் அளவிற்கு அவரது ஆர்வம் உந்தப்பட, அவரது வாழ்க்கை ஒரு எதிர்பாராத, உற்சாகமூட்டும் திருப்பத்தைச் சந்திக்கிறது.

இசைப் பயணத்தில்

நார்வேயின் தலைநகர் ஓஸ்லோவை சேர்ந்த கலைக்குடும்பத்தில் பிறந்தவர் ராவ் சிரா. இசை, கால்பந்து, மீன் பிடித்தல் போன்றவை அவரது பள்ளிக்கால வாழ்வினை முழுமையாக்குவதாக இருந்தன. இசையின் மீது கொண்ட தீரா ஆர்வத்தால், முழுநேர இசைக்கலைஞராவதை தன் வாழ்க்கையாக அவர் தேர்வு செய்தார். 2014 ல், கொடார்ட்ஸ் ராட்டர்டாம் கலை பல்கலைக்கழகத்தில், உலக இசைத் துறையில் அவர் இணைந்து, ப்ரேசில் தேச இசையில் சிறப்புத்தகுதி பெற்றார். இசை மீது அவர் கொண்டிருந்த காதலும், அதன் பல்வேறு வடிவங்களை உள்வாங்குவதில் அவருக்கிருந்த சிரத்தையும், அவரை தொலைதூர தேசங்களுக்கு அழைத்துச் சென்றது.

அவரது பட்டப்படிப்பு நாட்களிலும், அதற்குப் பிறகும், ப்ரேசில், எல் சால்வடார், மொசாம்பி, ஸ்காட்லாந்த் மற்றும் நெதர்லாந்த் ஆகிய இடங்களுக்கு சென்று, பல்வேறு இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டு, பெரும் இசை விழாக்களில் கச்சேரிகள் நடத்தினார். “வெறுமனே ஒரு பொழுதுபோக்குக்காக இல்லாமல், இசையை என் வாழ்வாதாரமாகவே கொண்டிருந்தேன். எனது உள்ளம் எதை நாடுகிறது எனபதை நான் கண்டுகொண்டேன் என்பதுடன், நான் செய்ய விரும்பியதும் இதுதான்,” என்று அவர் பகிர்ந்துகொள்கிறார்.

இசை மீது அவருக்கு இருந்த பேரார்வத்தினால், அவரது தாய் நாடான நார்வே மற்றும் ஸ்காட்லாந்துக்கு இடையிலான வரலாற்றுரீதியான தொடர்புகளை ஆராய முனைந்தார். 2019 ல், ஸ்காட்லாந்தின் இரண்டு இசைக்கலைஞர்களுடன், அவர் ஒரு இசைக் குழுவை உருவாக்கி, நாடெங்கிலும் பாப் இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். அவற்றுள் குறிப்பாக, வரலாற்றுப் புகழ் மிகுந்த எடின்பரோ கோட்டையில் நிகழ்ந்த இசைக்கச்சேரி நினைவில் நிற்பதாக இருந்தது. ஈஷாவுக்கு வருவதற்கு முன்பு, பெருந்தொற்றுக் காலத்தில் 2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை நார்வேயின் சமி கிராமத்தில் ஒரு துணை இசை ஆசிரியராக இருந்ததுதான் இசையுடனான ராவின் கடைசி தொடர்பு எனலாம்.

மக்களின் கனிவும், மௌனமும் அந்த நாட்களை எளிதாக்கினாலும், குளிர் காற்றும், 24 மணி நேரங்கள் தொடர்ந்த இருளும் கைகோர்த்து, அவரது உடல்ரீதியான மற்றும் மனரீதியான வரம்புகளை சோதனைக்கு உட்படுத்தின. “ஹடயோகா பயிற்சிகள் ஒரு மாபெரும், விலைமதிப்பில்லா ஆதரவாகக் கைகொடுத்தது,” என்று ராவ் நினைவுகூர்கிறார்.

நெளிவுகளும், வளைவுகளும்

ராவ், தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே யோகா மீது ஆர்வம் கொண்டவராக இருந்திருக்கிறார். அவரது 16 வயதில், ஒஸ்லோவிலிருந்த ஒரு குடும்ப நண்பரிடமிருந்து “நெளியவும் வளையவும்” பாடங்களைக் கற்றுக்கொள்ளத் துவங்கினார். “உடலை இன்னும் கொஞ்சம் வேலை வாங்குவதற்கு ஒரு வாய்ப்பாக இருப்பதைத்தான் மேற்கில் அவர்கள் யோகா என்று குறிப்பிடுகிறார்கள். தொடர்ந்து கால்பந்து விளையாடுவதால், இறுக்கமாகிவிட்ட என் மூட்டுகள் மற்றும் ரணமான தசைகளுக்கு நான் நிவாரணம் தேடிக்கொண்டிருந்தேன்,” ஒரு புன்னகையுடன் நினைவு கூர்கிறார் ராவ்.

அவரது பயண அட்டவணைகள் அனுமதித்தபோதெல்லாம், ஒரு சில யோகா நிலைகளைக் கற்பதற்காக ராவ் யோகா வகுப்புகளில் பங்கேற்றார். “எனக்கு அது உதவியாக இருந்தாலும், யோகாவின் உண்மையான தன்மை மீது ஆர்வம் கொண்டிருந்த என் கவனத்தை ஈர்ப்பதாக அந்த வகுப்புகள் இல்லை,” என்கிறார். ஆனால் அந்த சமயத்தில்தான் ராவ் சத்குருவைக் காண்கிறார், “நான் யூ ட்யூப் இல் சத்குரு வீடியோக்களை பார்ப்பது வழக்கம். அவரது வார்த்தைகள் எனக்குள் ஆழமாக எதிரொலித்துக்கொண்டே இருந்ததால், நான் அவரது வீடியோக்களை அதிகம் பார்த்தேன். வெகுவிரைவில், பாரம்பரிய ஹடயோகா பற்றிய அவரது சில வீடியோக்களை எதேச்சையாக காண நேர்ந்தது. பாரம்பரிய ஹடயோகாதான் நான் உணரவேண்டியது என்று முதல்முறையாக எனக்குத் தோன்றியது அப்போதுதான்,” என்று ராவ் பகிர்ந்துகொள்கிறார்.

லாக்டவுன் முடிந்து சில மாதங்களுக்குப் பிறகு, ஹெல்சிங்கி என்ற இடத்தில், ஃபின்லாந்து நாட்டு ஈஷா ஹடயோகா ஆசிரியர் ஒருவர் நடத்திய யோகாசன வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்பினை பெற்றார் ராவ். உடனடியாக முன்பதிவு செய்த ராவ், வகுப்பில் கலந்துகொள்வதற்காக ஃபின்லாந்துக்கு பறந்தார். பாரம்பரிய ஹடயோகாவை முதன்முறையாக பயில அவருக்கு கிடைத்த வாய்ப்பு என்பதுடன் அதுவே அவர் தீர்க்கமான ஒரு முடிவை எடுக்கவும் காரணமாக அமைந்தது. ஹடயோகாவே தன் உள்நிலைத் தேடுதலுக்கான பாதை என்பதை அவர் உணர்ந்தார்.

“அதுவரை நான் அறிய முடிந்திருந்த மற்ற எல்லாவற்றிலிருந்தும் அந்த வகுப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. யோகா வழங்கப்பட்ட விதம், ஆசிரியர் தன்னை வெளிப்படுத்திக்கொண்ட விதம் மற்றும் அனைத்துக்கும் மேலாக, நான் கற்றுக்கொண்ட பயிற்சிகளின் அனுபவம் என்னை ஆழமாகத் தொடுவதாக இருந்தது,” என்கிறார் ராவ். நாள் முழுக்க தொடர்ந்து கடினமான வேலைகள் இருந்தாலும், கோடைகாலத்தின் தொல்லை தரும் ஈக்களும், கொசுக்களும் ஃபின்லாந்தில் அதிகமாக இருந்தாலும், நான் சாலையில் இருந்தாலும் சரி, எப்பொழுதும் அதிகாலையில் எழுந்து என் ஹடயோகா பயிற்சிகளை செய்துவிடுவேன்,” என்கிறார் ராவ்.

மாற்றத்துக்கான நேரம்

சூரிய கிரியா மற்றும் யோகாசனங்களை சில வாரங்கள் பயிற்சி செய்ய, இயல்பாகவே, தீவிரம் மற்றும் ஓய்வுநிலை, சமநிலை மற்றும் சக்தி என மிகச் சரியான கலவை அவருக்கு சாத்தியமானது. அவரது பெரும்விருப்பத்துக்குரிய இசையை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, 7500 கிமீ தொலைவு பயணம் செய்து, 21 வார ஈஷா ஹடயோகா ஆசிரியர் பயிற்சி வகுப்பில் இணையும் முடிவை எடுப்பதற்கு அதுதான் முக்கிய தூண்டுதலாக இருந்தது. "ஹடயோகாவின் நுட்பங்களையும், அது எப்படி படிப்படியாக மாற்றத்தைக் கொண்டுவருகிறது என்பதையும் அனுபவபூர்வமாக நான் புரிந்துகொள்ள விரும்பினேன்" என தன் ஆர்வத்திற்கான காரணத்தை விளக்கினார் ராவ்.

கோவையில் இருக்கும் ஈஷா யோக மையத்திற்கு, பயிற்சி துவங்குவதற்கு இருபது நாட்கள் முன்னதாகவே ராவ் வந்து சேர்ந்தார். இந்திய பருவநிலை மற்றும் உணவின் மசாலாக்களுடன் இசைந்து செல்வதற்கு அவருக்கும், அவரது உடலுக்கும் அது தேவையான அவகாசம் அளித்தது.

அவருக்கான முதல் கற்றல் சத்குருவிடமிருந்தே துவங்கியது. பயிற்சியின்போது, பயிற்சியாளர்கள் ஆசிரியர்களாவதற்காக இந்த பயிற்சி வகுப்பில் இணையவில்லை, ஆனால் யோகாவின் ஆழத்தையும், ஆழ்ந்த பொருளையும் உள்வாங்கவே வந்திருக்கிறார்கள் என்பதை சத்குரு வலியுறுத்தினார். “பயிற்சி குறித்த என் பார்வையை அது மாற்றி, பயிற்சிகளுக்குள் ஆழமாக என்னை ஈடுபடுத்திக்கொள்வதற்கு உதவியது,” என ராவ் பகிர்ந்துகொள்கிறார்.

விரைவிலேயே, பயிற்சியானது கவனமுடன் எந்த விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் கண்டுகொண்டார். பங்கேற்பாளர்கள் ஒவ்வொரு பயிற்சியையும் முழுமையாக உள்வாங்கிய பிறகே, அடுத்த பயிற்சிக்குச் செல்லும் வகையில், அது மெல்லமெல்ல வேகமும், தீவிரமும் அடைகிறது. ராவ் கூறுகிறார், “உதாரணமாக நாங்கள் முதலில் அங்கமர்தனா கற்றுக்கொள்ள துவங்கியபொழுது, என் உடலின் ஒவ்வொரு தசையும், சவ்வும் வலித்தது. ஆனால் அது என் உடலை யோகாசனத்துக்கு ஆயத்தப்படுத்த உதவியது. அது உடலின் நீண்டுசுருங்கும் தன்மை மற்றும் வலிமையையும் கட்டமைத்தது.”

வாழ்வின் ஆழமான ஓர் அனுபவம்

பயிற்சி காலத்தில், ஈஷா யோக மையத்தின் பல்வேறு அம்சங்களையும், மக்களுக்கு ஈஷா யோக மையம் வழங்கி வரும் அர்ப்பணிப்புகளையும் அறிந்துகொள்வதற்கான வாய்ப்பு ராவிற்கு கிடைத்தது. யோகா மையத்திலேயே தங்கி, பங்கேற்கும் பாவ ஸ்பந்தனா மற்றும் ஷூன்ய தியான வகுப்பு அவரது கவனத்தைப் பெரிதும் ஈர்த்தது. இடையறாத “மன ஓட்டம்” ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து ஷூன்ய தியானம் அவருக்கு விடுதலை வழங்கியது. “ஷூன்யா தீவிரமாக இருந்தது,” என்று ராவ் நினைவுகூர்கிறார். “ஷூன்ய தியானம், நான் உண்மையிலேயே ஏங்கிக்கொண்டிருந்த ஒன்றுமற்ற தன்மையினை சுவைக்கக் கொடுக்கிறது. நான் அதைப் பயிற்சி செய்யத் தொடங்கியதிலிருந்து, என்னுடைய தினசரி உறக்கத்தின் தேவை நான்கு மணி நேரமாகக் குறைந்துள்ளது."

நிச்சலனத்தின் ஒரு புதிய பரிமாணத்தை அவருக்குள் ஷூன்ய தியானம் தூண்டிவிட்ட நிலையில், பாவ ஸ்பந்தனா அவருக்கு “விவரிக்க இயலாத” ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. “என்னைச் சுற்றிலுமிருந்த அனைவருடனும் மற்றும் அனைத்துடனும், முற்றிலும் அறிமுகமில்லாதவர்களுடனும்கூட ஆழமான அன்பு மற்றும் நன்றியுணர்வை என்னால் உணரமுடிந்தது. மதுவோ அல்லது போதைப் பொருட்களோ இல்லாமல் நான் ஒரு போதை நிலையில் இருந்தேன்,” என்கிறார் ராவ்.

படிப்படியாக, உயர்ந்த சக்திநிலைகள் மற்றும் தீவிரத்தை, குறிப்பாக தியானலிங்கத்தில் உணரக்கூடிய அளவுக்கு ராவின் ஹடயோகா பயிற்சிகளின் அனுபவம் வளர்ச்சியடைந்தது. ஏகாதசிகள் ஒரு கவளம் உணவுகூட இல்லாமல் முயற்சியின்றி கடந்துசெல்வது வழக்கமானது. ”ஏகாதசி தினங்களில் யோகாசனங்கள் செய்யும்பொழுது, எனது உடலின் வளையும் தன்மையும், கூர்ந்த கவனமும் மேம்பட்ட நிலைகளில் இருப்பது வியப்பாக இருக்கிறது,” என்று அவர் பகிர்ந்துகொள்கிறார். பயிற்சியின் குறிப்பிடத்தக்க அம்சமாக, பல நிர்ப்பந்தங்கள் ஆச்சரியப்படத்தக்க அளவுக்கு குறைந்துள்ளது என்றும் கூறுகிறார்.

யோக வழியில் இசையுடன் ஒரு மறுசங்கமம்

ஹடயோகா ஆசிரியர் பயிற்சியின்பொழுது, இசையைப் பயிற்சி செய்யவோ அல்லது இசை நிகழ்ச்சி நடத்தவோ மிகச் சில வாய்ப்புகளே ராவிற்கு கிடைத்தன என்றாலும், ஒட்டுமொத்த யோகப் பயிற்சி அனுபவமும், இசையுடன் அவருக்கிருந்த உறவையும் மேம்படுத்தியுள்ளது. “இசையைக் கேட்கையிலோ அல்லது இசை நிகழ்ச்சிகளில் வாசிக்கையிலோ, எந்த நிலையிலும், இசையுடனான எனது ஈடுபாடும், உறவும் இப்பொழுது மேலும் மேம்பட்டிருப்பதாகவே நான் உணர்கிறேன்,” என்றும் அவர் கூறுகிறார். மேலும் அவர், பக்தி சாதனாவின்போது, தனது பல வரையறைகளும் கரைந்துவிட்டதையும் நினைவுகூர்கிறார். “பக்தி சாதனா, என்னிடம் நெகிழ்ச்சி மற்றும் நன்றியுணர்வின் கண்ணீரைப் பெருக்கியதுடன், சாதனா செயல்முறை என்னை ஒரு மென்மையான மனிதனாக்கியுள்ளது,” என்றும் கூறுகிறார். மேலும், “என்னைச் சுற்றிலுமுள்ள மக்களுடனும், பொருட்களுடனும் ஒருவிதமான ஒத்திசைவை என்னால் கவனிக்கமுடிகிறது,” என்று மேலும் தொடர்கிறார்.

21 வார ஹடயோகா ஆசிரியர் பயிற்சி முடிவடைவதற்கு குறிப்பிட்ட ஒரு வாரத்துக்கும் முன்பாகவே, 1750 மணி நேர தீவிரமான பாரம்பரிய ஹடயோகா பயிற்சிகள் உள்ளிட்டவற்றை ராவ் வெற்றிகரமாக நிறைவு செய்தார். மேலும், பல மணி நேரங்களுக்கான வகுப்பு உரைகளை மனப்பாடம் செய்வதை உள்ளடக்கிய, மிகக் கடினமான ஒப்பித்தல் மற்றும் வாரக்கணக்கில் மாதிரி வகுப்புகள் நடத்துதல் ஆகியவற்றில் தேர்ச்சியடைந்தார். இப்பொழுது, அவர் ஐரோப்பாவுக்கு திரும்பிச் சென்று, வித்தியாசமான வடிவங்களையும், அர்த்தங்களையும் யோகா எடுத்திருக்கும் இடங்களில், பாரம்பரிய ஹடயோகாவை அதன் முழு ஆழத்திலும், சாத்தியத்திலும் வழங்குவதற்கான தயார்நிலையில் இருக்கிறார்.

“ஹடயோகாவைப் பரிமாறுவதற்கு நான் தயாராக இருப்பதாக உணர்கிறேன்,” என அவர் பகிர்ந்துகொள்கிறார். நார்வேயில் இருக்கும் ஒரு ஈஷா ஹடயோகா ஆசிரியருடன் இணைந்து, புது வருடத்தில் அவரது முதல் வகுப்புகளை ராவ் துவங்குகிறார்.