ஈஷா அவுட்ரீச்

காவேரி கூக்குரல்: ஒரு நோக்கம், பலரின் உத்வேகம் எவ்வாறு பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது

சத்குரு அவர்களால் இருபத்தி மூன்று வருடங்களுக்கு முன்பு விதைக்கப்பட்ட ஒரு விதையிலிருந்து தழைத்து வளர்ந்துள்ள இயக்கமே காவேரி கூக்குரல். இதுவரை காவேரி கூக்குரல் என்ன சாதித்துள்ளது என்பதுடன், ஒவ்வொருவருமே எவ்வாறு தங்களின் தனித்துவமான வழிகளில் பங்களிக்க முடியும் என்பதையும் காட்டும் ஒரு ஊக்கமளிக்கும் கதை இதோ...

பொறுப்பு ஏற்றல்: ஒரு மகத்தான இயக்கத்துக்கான துவக்கம்

1990-களில் இந்தியாவின் தென்கோடி மாநிலமான தமிழகத்தில் தன்னை உணர்வதற்கான அமைதிப் புரட்சி ஒன்று மெல்ல மலர்ந்து கொண்டிருந்தது. சத்குருவால் வடிவமைக்கப்பட்ட சுய மாற்றத்துக்கான சக்திவாய்ந்த ஈஷா யோகா பயிற்சிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும், கிட்டத்தட்ட மாநிலத்தின் ஒவ்வொரு ஊரிலும் வழங்கப்பட்டது. பெரும்பான்மையான கிராமங்களையும் கூட இந்த வகுப்புகள் தொட்டு மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அதே சமயத்தில், 12000 வருட விவசாய பாரம்பரியம் உள்ள தமிழ்நாட்டில், பூமியிலேயே மிகச்சிறந்த வளமான நிலப்பரப்புகளில் ஒன்றான இந்த பகுதி மிகப்பெரிய தண்ணீர் பஞ்சத்தையும், விவசாயத்தில் இடர்பாட்டையும் சந்தித்துக் கொண்டிருந்தது. விவசாயிகள் எதிர்கொள்ள இருந்த பேரிடரின் மையமாக இன்னும் ஆழமான ஒரு பிரச்சனை உருவாகியிருந்தது - அதிவிரைவாக அழிந்துகொண்டிருக்கும் மண்ணின் வளம்.

1998-ஆம் ஆண்டு சில சுற்றுச்சூழல் அமைப்புகள் 2025-ஆம் ஆண்டில் தமிழகத்தின் 60 சதவிகித நிலங்கள் தரிசாகிவிடும் என்று கணித்தனர். இத்தகைய கணிப்புகளையெல்லாம் ஏற்பவர் அல்லவே சத்குரு! இத்தகைய கணிப்புகள் மனித இதயங்களில் துடிக்கும் உணர்வை கணக்கில் எடுத்துக்கொள்வது இல்லை என்று கூறுவார் சத்குரு. ஆனால் அந்த கணிப்பு கூறும் சூழலைப் பற்றி தானே மதிப்பீடு செய்ய அவர் பயணித்தபோது, ஐ.நா. அமைப்புகள் கணித்ததை விட நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது என்பதை காண நேர்ந்ததுடன், அவரது அனுபவமும் எதிர்வரவிருக்கும் அபாயத்தை காட்டியது. சிற்றாறுகள் மட்டும் வறண்டு போகவில்லை, ஆற்றுப்படுகைகளில் வீடுகளும் கட்டப்பட்டிருந்தன. பொதுவாக வறண்ட சூழ்நிலைகளில் கூட பிழைத்துக் கொள்ளும் பனை மரங்களுக்கு தேவையான ஈரப்பதம் கூட மண்ணில் இல்லை.

மாநிலத்தில் மிகக்கடுமையாக வளங்குன்றி வரும் மண், நீர் மற்றும் விவசாயம் ஆகியவற்றுக்கு புத்துயிர் அளித்திட ஒரு இயக்கத்தை சத்குரு தோற்றுவிக்க இது வழிவகுத்தது. அந்த காலகட்டத்தில் தமிழகத்தின் சராசரி பசுமைப்பரப்பு 16.5% தான் இருந்தது. ஆனால் தேசத்தின் எதிர்பார்ப்போ 33% ஆக இருந்தது. ஒரு சிறிய தன்னார்வலர்கள் குழுவை அமைத்த சத்குரு, வரவிருக்கும் இந்த பேரிடரை தவர்க்க ஒரே வழி, நிலத்தில் பசுமைப்பரப்பை அதிகரிப்பது தான் என்று விளக்கினார். சத்குருவின் கணிப்பின்படி, 11.40 கோடி மரங்கள் மாநிலம் முழுவதும் நடப்பட்டால் இந்த சூழலை ஓரளவு மாற்றியமைக்க முடியும். எனவே இதன் துவக்கமாக, "மக்களின் மனங்களில் மரங்களை விதைத்தார்" சத்குரு - அனைத்திலும் மிகக்கடினமான நிலப்பரப்பாயிற்றே இது! அனுபவரீதியான செயல்முறை மூலம் எவ்வாறு நம் வாழ்வும் சுவாசமும் மரங்களோடு பிணைந்துள்ளது என்று மக்கள் உணரும்படி செய்த சத்குரு, மறுசீரமைப்பின் அத்தியாவசிய தேவைக்கு மக்கள் தங்களின் இதயங்களை திறக்கச் செய்தார்.

அந்த நேரத்தில் சத்குருவோடு நெருக்கமான செயல்களில் பங்கெடுத்துக் கொண்டிருந்தவர்கள் கூட இந்தியாவின் ஒரு மாநிலத்தில் மரம் நடும் பணியை துவங்கிய இந்த ஒரு இயக்கம், அடுத்த 20 ஆண்டுகளில் உலகளாவிய மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாக வளரும் என்று கற்பனை கூட செய்து பார்த்திருந்திருக்க மாட்டார்கள்.

ஆறு வருடங்கள் கழித்து, 2004-ஆம் ஆண்டு, சத்குரு அதிகாரப்பூர்வமாக ஈஷா பசுமைக்கரங்கள் இயக்கத்தைத் துவக்கினார். பல வழிகளில் இது ஒரு முன்மாதிரி திட்டமாக இருந்தது. இன்று காவேரி கூக்குரல் இயக்கத்தின் பகுதியாக நிகழும் மாபெரும் செயலுக்கான முன்மாதிரியாக ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் விளங்கியது.

நதிகளை மீட்போம்: உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கம்

2017-ஆம் ஆண்டில், இந்திய அரசியல் வானில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சிகளும் ஆட்சி செலுத்தும் இந்தியாவின் 16 மாநிலங்கள் வழியாக ஒரு மாத காலம் நதிகளை மீட்போம் பேரணியை முன்நடத்தி, சத்குரு 16.2 கோடி மக்களின் ஆதரவை திரட்டினார். புதுடெல்லியை அடைந்தபோது சத்குரு பிரதம மந்திரியிடம் 761 பக்க அறிக்கை - "இந்திய நதிகளின் புணரமைப்பு - கொள்கை பரிந்துரை வரைவை" சமர்ப்பித்தார். அடுத்த சில மாதங்களில், 29 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நதியை புணரமைக்கும் திட்டங்கள் குறித்த திட்ட ஆலோசனைகளை மத்திய அரசு வெளியிட்டது. அப்போது முதல், ஒடிசா, உத்திரகாண்ட் மற்றும் ஜார்க்கண்ட் போன்ற பல மாநிலங்கள் நதிகளை புணரமைக்கும் திட்டங்களை மும்முரமாக செயல்படுத்தத் துவங்கினர்.

இரண்டு வருடங்களுக்குள், மரம் சார்ந்த விவசாயம் மூலம் நதிகளுக்கு புத்துயிரூட்டும் செயல் விளக்கத்தைத் தரும் வண்ணம் காவேரி கூக்குரல் இயக்கத்தை சத்குரு துவக்கினார். விவசாயிகள் முன்னெடுத்துள்ள உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாக இது இன்று உள்ளது.

இந்த முறை, காவேரி வடிநிலப்பகுதிகளில் இரண்டு வார காலம் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு தென்னிந்தியாவின் உயிர்நாடியாக விளங்கும் காவேரி நதிக்கு புத்துயிர் அளிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார் சத்குரு. உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் பல நிறுவனங்களும் இந்த இயக்கத்துக்கு ஆதரவளித்தனர். "நம்மையெல்லாம் பேணிக்காக்கும் நிலத்தை சீரமைப்பதோடு மிகவும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை சூழல் உயர உதவும் ஒரு பெரிய அளவிலான திட்டமாகவும் காவேரி கூக்குரல் இயக்கத்தை நாம் காண முடியும்," என்று பாலைவனமாதலை தடுப்பதற்கான ஐக்கிய நாடுகள் உறுப்பினர் மாநாட்டின் நிர்வாக செயலாளர் இப்ராஹிம் தியாவ் கூறினார்.

காவேரி வடிநிலத்தின் மூன்றில் ஒரு பகுதியை பசுமை பரப்பின்கீழ் கொண்டு வந்திட ஏதுவாக, கர்நாடகா மற்றும் தமிழக விவசாயிகள் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்க உதவும் நோக்கத்துடன் காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

இதுவரை, காவேரி கூக்குரல் இயக்கத்தின் வழிகாட்டுதலுடன் 1,25,000 விவசாயிகள் மரம் சார்ந்த விவசாய முறைக்கு மாறி, 6.2 கோடி மரக்கன்றுகளை நட்டுள்ளனர். இது மண்வளம் உயரவும், விளையும் பயிர்கள் ஊட்டச்சத்தோடு இருக்கவும் வகை செய்துள்ளது. அதுமட்டுமின்றி விவசாயிகளின் வருமானம் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.

"கடந்த 15 வருடங்களாக ஈஷாவின் வழிகாட்டுதலுடன் என் பண்ணையில் மரங்களை நட்டு வளர்த்து வருகிறேன். தற்போது மரம் சார்ந்த வருமானத்தை நல்கும் பண்ணையாக அது மாறியுள்ளது. முன்பு என் நிலத்தில் உள்ள மண்ணை பரிசோதித்தபோது அதில் கரிம வளம் 0.5 ஆக இருந்தது. தற்போது அதன் கரிம வளம் 1.3 ஆக உயர்ந்துள்ளது," என்று ஈரோட்டைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் பகிர்ந்து கொண்டார்.

பல வழிகளிலும், இது வெறுமே ஒரு துவக்கம்தான். காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம், 12 வருட காலத்தில் 52 லட்சம் விவசாயிகள் 742 கோடி மரங்களை நட வழி செய்வதுதான். இது காவேரி நதியை புணரமைப்பதோடு மட்டுமல்லாமல் மண்வளத்தையும் மீட்டமைக்கும். அதோடு, காவேரி வடிநில பகுதி விவசாயிகளின் வருமானம் 300 சதவிகிதத்தில் இருந்து 800 சதவிகிதம் வரை அதிகரிக்கவும் வழி செய்யும். எல்லாவற்றுக்கும் மேலாக, உலகின் ஒட்டுமொத்த வெப்பமண்டல பகுதிகளுக்கும் பொருளாதாரமும் சுற்றுச்சூழலும் எதிரெதிரானதாக இல்லாமல், ஒன்றோடு ஒன்றாக இணைந்து வேலை செய்யும் என்பதை காட்டும் ஒரு முன்னுதாரணமாக அமையும். இந்த உறுதியான அஸ்திவாரத்தின் மீதே காவேரி கூக்குரல் இயக்கம் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பங்களிப்பும் முக்கியமாகிறது என்பதற்கான ஒரு உத்வேகமூட்டும் உதாரணம்

தொழில் முறையில் எலெக்ட்டிரிக்கல் என்ஜினியராக இருந்தாலும், கலைத்துறையில் ஆர்வமிக்க இளைஞரான விவேக் விஸ்வநாதன், 2020-21 ல் ஈஷா யோக மையத்தில் நிகழும் 7 மாத சாதனா பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியின் நிறைவுக்கு பிறகு அவர் நீண்ட கால தன்னார்வலராக ஆசிரமத்திலேயே இருக்கிறார். மிக விரைவில் அவருக்கு காவேரி கூக்குரல் இயக்கத்தில் தன்னார்வத் தொண்டு புரியும் வாய்ப்பு கிடைத்தது. அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளோடு சேர்த்து, இளவயது முதலே அவரது விருப்பமான சித்திரங்களையும் அவர் வரையத் துவங்கினார்.

தன் பணிகளுக்காக அவர் எங்கெல்லாம் சென்றாரோ, அங்கெல்லாம் அவர் சந்தித்த மக்களை ஓவியமாக வரையத் துவங்கினார். "ஒவ்வொரு ஓவியத்திற்கும் நான் ஒரு மரக்கன்றை நன்கொடையாக வேண்டினேன். நான் இதை வேடிக்கையாக துவங்கினேன். ஆனால் முதல் நாளே எனக்கு 100 மரக்கன்றுகள் கிடைக்க, அது என்னை இன்னும் உற்சாகம் கொள்ளச் செய்தது. எனவே நான் தொடர்ந்து உற்சாகத்தோடு இந்தப் பணியில் ஈடுபடத் துவங்கினேன்." அடுத்த சில நாட்களிலேயே அவர் 500க்கும் மேற்பட்ட மக்களை ஓவியமாக தீட்டி அதன்மூலம் 2000த்திற்கும் அதிகமான மரக்கன்றுகளுக்கான நன்கொடையைப் பெற்றார்.

அந்த வெற்றியின் மூலம் உற்சாகமடைந்தவர், தான் வரைந்த படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவேற்றம் செய்தார். அதை கண்டு அவருடைய நண்பர்கள் மட்டுமின்றி இதுவரை அவர் சந்தித்திராத பலரும் அவரை வெகுவாக பாராட்டினர். ஆகையால் தன் செயல்பாடுகளிலிருந்து அவர் பின்வாங்க இடமேயில்லை. காவேரி கூக்குரல் இயக்கத்தில் அவர் இரண்டு பொறுப்புகளை எடுத்து செயல்பட்டு வருகிறார் - முழுநேர மேலாளர் மற்றும் பகுதிநேர ஓவியர்!

"நான் காவேரி கூக்குரல் இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து, என் வாழ்க்கை அதிக தீவிரத்தோடும் அதிக கவனக்குவிப்போடும் மாறியுள்ளது. என்னுடைய எல்லா செயல்பாடுகளையும் ஒரு சாதனாவாகவே நான் செய்யத் துவங்கினேன். காவேரித் தாயின் புணரமைப்புக்கான செயல்களில் ஈடுபட எனக்கு வாய்ப்பளித்த சத்குருவுக்கு நான் மிகுந்த நன்றியோடு இருக்கிறேன். எல்லா நன்கொடையாளர்களுக்கும், என்னை தொடர்ந்து பாராட்டி உற்சாகமூட்டும் மக்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்," என்று நிறைவு செய்தார் விவேக்.

காவேரியை மீட்க நீங்களும் பங்களித்து உதவலாம்!