புராஜெக்ட் சம்ஸ்கிருதி

புராஜெக்ட் சம்ஸ்கிருதி: ஈஷா சம்ஸ்கிருதி எப்படி மக்களுக்கு நன்மை பயக்கிறது

பகுதி 3: பரத நாட்டியம் கற்பித்தலின் பின்புலக் காட்சிகள்

ஐந்து பகுதிகள் அடங்கிய இந்தத் தொடரில், புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டத்தின் பின்புலத்தில் நிகழும் முனைப்பான செயல்பாடுகளை, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பார்வையில்,
உங்கள் முன் வெளியிடுகிறோம்.

தன்னைக் கடந்த ஒரு அர்ப்பணிப்பு

பளீரென்று, ஆனால் மென்மையாக, சுள்ளென்று அடித்த மதிய நேரத்து சூரிய வெளிச்சத்தில் அமர்ந்துகொண்டிருந்த சாயுஜாவும், ஸ்ரீமல்லியும், அப்போதுதான் வேகம் எடுத்திருந்த ஒரு பிரம்மாண்ட அலை குறித்து மெல்லிய குரலில் உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஒன்பது, பத்து வயதாக இருந்தபோது ஈஷா சம்ஸ்கிருதியில் இணைந்தது முதல், இந்திய சாஸ்திரீய நடன வடிவங்களுள் மிகவும் சிக்கலான பரத நாட்டியக் கலையை, கற்றுத் தேர்ந்திருந்தனர். இப்பொழுது, புராஜெக்ட் சம்ஸ்கிருதி மூலம், அதனை அவர்கள் உலகத்துக்கு அர்ப்பணித்துக்கொண்டு இருக்கின்றனர்.

இத்துணை அர்ப்பணிப்பும், திறமையும் கொண்ட நடனமணிகள் இருவரில், எவரும், கலைகளைக் கற்பதில் மிகுந்த ஆர்வமில்லாதவர்களாகவே ஆரம்பத்தில் இருந்தனர். “பலரும் நடனத்தைத் தேர்ந்தெடுத்தனர், அதனால் நானும் இணைந்துகொண்டேன்,” என்று ஸ்ரீமல்லி ஒரு சிரிப்புடன் பகிர்ந்துகொள்கிறார். ஆனால் அவர்கள் ஏறக்குறைய எட்டு வருடங்கள் நடனம் மற்றும் இசையில் கூர்மையாக கவனம் செலுத்தியதால், அவர்களது உணர்தல் வளர்ந்து, மாற்றமடைந்தது. ஸ்ரீமல்லி தொடர்ந்து, “ஆரம்பத்தில், அது எளிதாக இல்லை. அதற்கு அதிகமான வலிமையும், பலமும் தேவைப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு, நடனம் என்ற கலையைக் கடந்தும் அதிகமான ஏதோ ஒன்று அதில் உள்ளீடாக இருப்பதை உணர்ந்தேன். அது இல்லாத நிலையில் என்னால் எட்ட முடியாத ஏதோ ஒரு நிலையை உணரமுடிந்தது என்பதுடன், அது ஒருவிதமான ஆனந்தத்தையும் அளிக்கிறது. அதன் மிக சவாலான பகுதி என்னவென்றால், ஒவ்வொன்றையும் எப்பொழுதும் புதிதுபோல் பார்க்கவேண்டும் – அப்போதுதான், சிறந்ததைக் கொடுக்க முடிகிறது,” என்று கூறுகிறார்.

சாயுஜா, தனது பரத நாட்டிய அனுபவம் பற்றி பேசுகையில், “முதலில், எனக்குக் காட்சிகளும், வண்ணங்களும்தான் முக்கியமாக இருந்தது. ஆனால் நான் பயிற்சியைத் தொடர்ந்து செய்யும்பொழுதும், நடனமாடும்பொழுதும் உண்மையிலேயே ஏதோ ஒன்றிலிருந்து விடுபட்டதுபோல் உணர்கிறேன். அது எனக்கு வெளிப்பாடாக இருப்பதுடன், உண்மையாகவே அழகாகவும், ஊக்கமளிப்பதாகவும் உணர்கிறேன்,” என்கிறார். நடனத்தின் இந்த உயிர்ப்பு, ஆனந்தம் மற்றும் ஆழமான வாழ்வின் அனுபவத்தைத்தான், புராஜெக்ட் சம்ஸ்கிருதி என்ற ஒரு புதுமையான தளத்தின் மூலமாக உலகத்துடன் பகிர்ந்துகொள்ள அவர்கள் விழைகின்றனர்.

சிக்கலான நடன தாளக்கட்டுகளை எளிதாக்கி வழங்குவது

இந்திய சாஸ்திரீய கலைகளை, அதன் தூய்மை மாறாமல் வழங்கி, விருப்பமுள்ள அனைவருக்கும் அவைகள் கிடைக்கும்படி செய்வதுதான், புராஜெக்ட் சம்ஸ்கிருதியின் முயற்சியாக இருக்கிறது. இதனை நோக்கிய முதல் படிகளுள் ஒன்றாக நடனப் பகுதி செயல்படுகிறது. அவ்வளவு வளமும், மதிப்பு வாய்ந்ததுமான கலாச்சாரத்தை எடுத்துசெல்லும் அளப்பரிய பொறுப்பை மேற்கொண்டாலும், உலகெங்கும் உள்ள பங்கேற்பாளர்களுக்கு சாஸ்திரீய நடனத்தை வழங்கும்போது, இந்த இளம் மாணவர்கள் சாந்தமும், அமைதியுமாக இருக்கின்றனர். “கற்றுக்கொடுத்தல் எங்களுக்கு புதியது அல்ல, ஏனென்றால் இளம் வயதிலிருந்தே, எங்களுக்கு இளையவர்களுக்கு நாங்கள் நடன வகுப்புகள் எடுப்பது வழக்கம்,” என்று ஸ்ரீமல்லி விளக்கமளிக்கிறார்.

புராஜெக்ட் சம்ஸ்கிருதி தொடரின் முதல் இரண்டு பகுதிகளான, நிர்வாண ஷடகம் மற்றும் களரிப்பயட்டு கற்பித்தலின் முந்தைய முயற்சிகளிலிருந்து பெற்ற அனுபவம், அவர்கள் செயல்படவேண்டிய அடிப்படைக் கட்டுமானத்தை வழங்கியது. இருப்பினும், பயிற்சியின் வித்தியாசமான தொழில்நுட்ப அம்சங்களுக்கு அதிகமான யோசனையும், கவனமும் தேவைப்பட்டது. பல வருடங்களுக்கு நடனம் பயிலும் உறுதியுடன், இந்தக் கலாச்சாரத்திலேயே மூழ்கி வாழ்ந்த இளம் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களைப் போல இல்லாமல், குறைந்த கால அவகாசத்தில் கிரகிக்கும் பார்வையாளர்களுக்கு குறிப்பிட்ட அம்சங்கள் விரிவாக விளக்கப்பட வேண்டியிருந்தது. மேலும், இவை அனைத்தும் ஆன்லைனில், அவர்களுக்கு முற்றிலும் புதியதொரு ஊடகத்தின் மூலம் செய்யப்பட வேண்டியிருந்தது.

“உதாரணமாக, பாரம்பரியமான பெயர்கள் கொண்ட அசைவுகள் உண்டு,” சாயுஜா பகிர்ந்தார்,” அப்படித்தான் நாங்கள் சம்ஸ்கிருதி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். நாங்கள் முத்திரையை மட்டும் காண்பிப்போம், அவர்கள் அதைப் புரிந்துகொள்வார்கள். ஆனால் இங்கே, நாங்கள் விரிவான குறிப்புகள் தரவேண்டும். உதாரணமாக, அவர்களது ஆள்காட்டி விரலின் நுனியையும், கட்டை விரல் நுனியையும் அழுத்துமாறு நாங்கள் அவர்களுக்கு கூறவேண்டியிருந்தது.”

ஸ்ரீமல்லி மேற்கொண்டு விளக்குகிறார், “பொதுவாக, இந்தக் கலையைப் பொறுத்தவரை, மாணவர்கள் கவனித்து, உள்வாங்கினால் போதுமானது. ஆனால் ஆன்லைன் பகுதிக்கு, நாங்கள் பங்கேற்பாளர்களுக்கு எடுத்து ஊட்டிவிட்டு, அவர்கள் என்ன செய்யவேண்டும் என்பதை படிப்படியாகக் கூறவேண்டியிருந்தது.”

“ஆன்லைன் வகுப்புக்கு முன்னேற்பாடாக, பரத நாட்டியம் குறித்த முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு நாங்கள் மாதிரி வகுப்புகள் நடத்தினோம். நாங்கள் குறிப்புகள் கொடுப்போம், பிறகுதான் எங்களுக்குத் தெளிவான ஒன்று அவர்களுக்குத் தெளிவில்லாமல் இருந்ததை நாங்கள் உணர்வோம்.” புன்னகையுடன் சாயுஜா விளக்குகிறார். பங்கேற்பாளர்களுக்கு இயன்ற அளவுக்கு எல்லாவற்றையும் எளிதாக, தெளிவாக, இனிய அனுபவமாக செய்வதற்காக, கடைசி நிமிடம் வரையிலும் உரைகள், வீடியோக்கள் மற்றும் காட்சிகள் இடையறாமல் சீர்திருத்தம், மறுதிருத்தம் செய்யப்பட்டன. கற்றுக்கொள்பவர்கள் எளிதாக உள்வாங்குவதற்காக, விரல் முத்திரைகளின் மீது கேமரா எவ்வளவு வெளிச்சம் காட்டவேண்டும் என்பதைப் போன்ற மிகச் சிறிய நுணுக்கங்கள்கூட கவனிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டன.

அவர்களின் இதயபூர்வமான நடனம்

ஒவ்வொரு அமர்வும் ஒரு மணி நேரத்துக்கு, ஒன்பது நாள் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த ஒன்பது நாட்களில், பங்கேற்பாளர்கள் சிவ ஸ்துதி பைரவி நந்தனம் பாடலுக்கான நடன அசைவுகளைக் கற்றுக்கொள்கின்றனர். அனைவரும் செய்யக்கூடிய வகையில் அது கொரியோகிராஃப் செய்யப்பட்டதுடன், அடிப்படை அசைவுகள் அனைவருக்கும் புரியும் வகையில் படிப்படியாகக் கற்றுத்தரப்பட்டது. இதுவரைக்கும் 200 க்கும் அதிகமாக, அதில் 50 க்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில், பெரும்பாலும் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலிருந்து பங்கேற்றுள்ளனர். ஆன்லைன் பங்கேற்பாளர்கள் உற்சாகமாகவும், பல எதிர்பார்ப்புகளையும் மிஞ்சுமளவுக்கு இருக்கின்றனர். “நாங்கள் எதிர்பார்த்ததைவிடவும் அவர்கள் வேகமாகக் கற்றுக்கொள்வதால், திரும்பத் திரும்ப பயிற்சி அளிப்பதை நாங்கள் குறைத்துவிட்டோம்,” என்று ஸ்ரீமல்லி பகிர்ந்துகொள்கிறார்.

வகுப்புகளில் செலுத்தப்பட்ட கவனம் உரிய அங்கீகாரம் அடைந்தது. முதலாவது வகுப்பில் பங்கேற்ற நாடியா, நாட்டியப் பகுதி குறித்த அவரது பிரகாசமான அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார், “வகுப்புகளில் ஆர்வம் பொங்கி வழிந்தது! ஒவ்வொரு அம்சமும், ஆசிரியருக்கான முன்னேற்பாடுகளிலிருந்து, வீடியோக்களின் தேர்வு வரை, உங்களுக்குள் நாட்டியத்தை அக்னி குஞ்சாகப் பற்றவைக்கிறது. பாடலும், நடன அமைப்பும் என்னை பக்தியால் நிறைத்துவிட்டது. அவர்கள் படிப்படியாக, ஒரு மாபெரும் கலை வடிவத்தை எனக்குள் புகுத்தியதைப்போலவே நான் உண்மையில் உணர்ந்தேன்.”

அசைவின் வழியே ஒரு பரிபாஷை

பரத நாட்டியம், ஒருவிதமான அசைவாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட காட்சி அமைப்புடைய நடனமாகவோ மட்டும் பங்கேற்பாளர்களுக்கு கற்றுத்தரப்படுவதில்லை. ஒன்பது நாட்களில், சாஸ்திரீய இந்திய நடனத்தின் உயிர்த்தன்மையை இயன்ற அளவுக்குப் பரிமாறுவதே வகுப்பின் நோக்கமாக இருக்கிறது.

“அடிப்படையில் நடனம் என்பது பாவம் அதாவது உணர்ச்சி, ராகம் மற்றும் தாளம் இவற்றின் கலவையாக இருக்கிறது,” சாயுஜா விளக்குகிறார். “கைகளின் சைகைகளுக்கு அர்த்தங்கள் உள்ளன. ஒவ்வொரு சைகையிலும் வெவ்வேறு விஷயங்களை எடுத்துரைக்கலாம். அதனால், சைகைகளைப் பயன்படுத்தி தினசரி உரையாடல்களை அவர்கள் எப்படி மேற்கொள்ளலாம் என்பதை நாங்கள் அறிமுகம் செய்தோம், ஏனெனில் பரத நாட்டியம் ஒரு மொழியைப் போன்றது.” நாட்டிய நிகழ்ச்சியின்போது, பங்கேற்பாளர்கள் புதிய வழிகளில் தங்களை வெளிப்படுத்தும் திறனை வளர்த்துக்கொள்ள முடிவதுடன், நாட்டியத்தின் மூலமாக வித்தியாசமான சாத்தியங்களையும் காணமுடியும்.

“நாங்கள் வரிகளின் அர்த்தத்துடன், அசைவுகளையும்கூட விவரிக்கிறோம். ஆகவே, ’நீங்கள் ஒரு மலரைப் பறிப்பது போல் அல்லது நீங்கள் எதையோ அர்ப்பணிப்பதுபோல் செய்யுங்கள்,' என்று கூறுவோம். ஏனெனில், இது இல்லையென்றால் உணர்ச்சி பாவத்தைக் காண்பிக்க முடியாது. அர்த்தம் தெரிந்தால் தவிர எதையும் வெளிப்படுத்த முடியாது. முக பாவங்களைச் செய்வதற்கு குறிப்பிட்ட முறை இல்லாததால், நாங்கள் அதைப்பற்றியும் பேசுகிறோம்.” ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, பங்கேற்பாளர்களால் பாவங்களை உணரமுடிவதுடன், அவர்களுக்கே உரிய புரிதலுக்கேற்ப அர்த்தங்களை இணைத்துக்கொள்ளவும் முடியும்.

பரத நாட்டியம் கற்றுக்கொள்ளும் ரோமா கஷேல்கரின் குழந்தைப் பருவத்துக் கனவு சமீபத்தில் மெய்ப்பட, அவர் பகிர்கிறார்,” இதுவும் ஒருவகை நடனம்தான் என்ற முறையில் இந்த வகுப்பு அர்ப்பணிக்கபடவில்லை – குறிப்பாக அது தேவி பைரவிக்கான அர்ப்பணிப்பு என்பதால், அது ஆழமான உணர்வுடன் இருந்தது. ஒரு குறுகிய காலத்துக்குள் நுட்பமான நடன வடிவத்தை முழுமையாக உள்வாங்குவது சாத்தியமில்லாமல் இருப்பினும், வகுப்பின் முடிவில், ஒரு குறிப்பிட்ட நாட்டியப் பகுதியை முழுக்கக் கற்றுக்கொண்ட பெரும் திருப்தி எழுந்தது. பல்வேறு முத்திரைகள், நாட்டிய நிலைகள் குறித்த புதியதொரு புரிதலை அது வழங்கியது. இப்போது, நான் ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்கும்பொழுது, நடனமாடுபவர்களின் வெவ்வேறு நிலைகளை கவனித்து, அதில் கூறப்படுவது என்ன கதை என்பதை என்னால் எளிதில் கூறிவிடமுடியும்.”

நாளைய மேடைகளில் நாட்டியம்

எதிர்காலத் திட்டம் குறித்து அவர்களிடம் நாம் கேட்டபோது, புராஜெக்ட் சம்ஸ்கிருதியில் ஈடுபட்டிருக்கும் மற்ற மாணவர்களைப்போல், சாயுஜாவும், ஸ்ரீமல்லியும் புன்னகையுடன் மௌனம் காத்தனர். இப்போதைக்கு, நிறைய பாடல்கள், அடுத்தக்கட்ட வகுப்புகளை அவர்கள் வெளிப்படுத்தினர், ஆனால் அவர்களின் கண்ணோட்டம், மேலும் பல ஆச்சரியங்கள் காத்திருப்பதை நமக்கு உணர்த்துகிறது.

புராஜெக்ட் சம்ஸ்கிருதியை உலக மேடைக்கு எடுத்துச் சென்று, வளமான இந்தியக் கலைவடிவங்களாக இருக்கும் இவைகளை மக்களுக்கு அர்ப்பணிக்க சத்குரு விரும்புகிறார். தொலைவிலிருந்து அதிசயிப்பதற்கான, உயரிய அல்லது மறைபொருளான கலாச்சாரமாக இல்லாமல், ஒவ்வொருவரும் பங்கேற்கத்தக்கதாக, தொடர்புகொள்ளக் கூடியதாக, அவர்களது வாழ்க்கைகளுக்குள் பின்னிப்பிணைந்திருக்கும் கட்டமைப்பாக இருக்கவேண்டும் என்பது அவரது விருப்பமாக இருக்கிறது.

விழிப்புணர்வான உலகம் இயக்கத்தின் ஒரு பகுதியாக, அவர்களது ஆனந்தம், அர்ப்பணிப்பு மற்றும் பக்தியின் பலனைப் பகிர்ந்தவாறு, சர்வதேச மேடைகளில், புராஜெக்ட் சம்ஸ்கிருதி விரைவில் வலம் வரும்.