பகிர்வுகள்

சந்தீப் நாராயண்: இமயத்தில் மேற்கொண்ட சாகசப் பயணம், ஆன்மீக அனுபவமானதன் ரசவாதம்

அனைவராலும் விரும்பப்படும் கர்நாடக வாய்ப்பாட்டுக் கலைஞர் சந்தீப் நாராயண், இமயத்தின் பனிச்சிகரங்களில் சத்குரு மற்றும் சிலருடன் இருசக்கர வாகனத்தில் மேற்கொண்ட சாகசப் பயணத்தை நம்முடன்‌ பகிர்ந்துகொள்கிறார். தன் எல்லைகளைப் பின்னுக்குத் தள்ளிய ஒரு கணத்தில், ஆன்மீகத்தின் சுவையை ருசித்த அவரது உணர்வுடன் நாமும் சற்று இணைவோம்.

பேட்டியாளர்: முதன்முறையாக இருசக்கர வாகனத்தில் இமாலய பயணம் மேற்கொண்டிருக்கிறீர்கள், உங்கள் அனுபவம் எப்படி இருந்தது?

எல்லைகள் பின்வாங்கின

சந்தீப்: இரு சக்கர வாகனத்தில் மட்டுமல்ல, இமயமலைப் பகுதிகளுக்குள் நான் சென்றதும் இதுவே முதல்முறை. இது எனக்கு முற்றிலும் புதியதொரு அனுபவமாக இருந்தது. புதிதாக இருந்தது இந்த ஒரு விஷயம் மட்டுமல்ல. அவ்வப்போது‌ ஏதோ ஒரு‌ நண்பரின் பின் அமர்ந்தபடி, நான் மட்டும் தனியாக என இருசக்கர வாகனத்தில் சிறு பயணங்களை மேற்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வித்தியாசமான ஒரு நிலப்பகுதியில், இவ்வளவு தொலைதூரப் பயணம் என்பது இதுவரை நான் மேற்கொள்ளாத ஒன்று.

காவேரி கூக்குரல் துவங்கியபோது, மக்களின்‌ ஆதரவை திரட்டும் பிரம்மாண்ட பேரணியின் பல பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் பின் இருக்கைப் பயணியாக இணைய‌ எனக்கு‌ வாய்ப்பு கிடைத்தது என்பதுடன், அப்போதிலிருந்து பைக்கில் பயணம் செய்வதை விரும்பவும் தொடங்கினேன். பேரணியின் போது வழிநெடுகவும் பைக் ஓட்டியவர்கள் என்னிடம், "வண்டி ஓட்டுவதற்கு நீங்களும் கற்றுக்கொள்ள வேண்டும்," என்று கூறியவாறு இருந்தனர். ஆகவே, காவேரி கூக்குரல் இயக்கம் முடிந்ததும், ஒரு நண்பரின் பைக்கைப் பெற்றுக்கொண்டு, சென்னை நகருக்குள் ஓட்டத் துவங்கினேன். இந்த வருட துவக்கத்தில், சாகச பைக் ஓட்டுமளவுக்கு முன்னேறினேன்.

அதற்கு முன்னதாக, நான் சத்குருவிடம், "இமாலய பைக் பயணத்தில் நானும் பங்கேற்கட்டுமா? அப்படிப்பட்ட ஒரு நிலப்பகுதியை என்னால் சமாளிக்க முடியுமா?" என்று கேட்டிருந்தேன். அவர், நான் போதுமான அளவுக்கு நன்றாகவே வண்டி ஓட்டுவதாக உறுதிப்படுத்தியதுடன், இமாலய மலைத்தொடரின் சாலைகளில் வண்டி ஓட்ட அசாதாரண திறமைகள் தேவையில்லை என்றும் கூறினார்.

எனது முதல் பைக் பெனெல்லி லியோன்சினோ 500, பைக் ஓட்டிய முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு அது ஒரு அற்புதமான பைக். சத்குரு அதை வேடிக்கையாக, "மோட்டார் பொருத்திய சைக்கிள்" என்று கூறியது எனக்கு நினைவிருக்கிறது, ஏனென்றால் அது பார்க்க பெரிய சைக்கிள் போலவே இருக்கும். இது மிகவும் வேகமானது மற்றும் சவாரி செய்ய எளிதானதும்கூட. ஆரம்பத்தில் வண்டியுடன் நல்ல பழக்கம் ஏற்படவும், எளிதாகக் கற்றுக்கொள்ளவும் அது எனக்கு உதவியது.

பைக் சாகசத்துக்கு தயாராவது

இமாலய பைக் பயணத்துக்கு சற்று முன்னதாகவே, சத்குரு, நெடுந்தூரப் பயணங்களுக்கு ஏற்றதாகவும், மாறும் நிலப்பரப்பின் தன்மைக்கேற்ப ஓரளவுக்கு நன்றாக கையாளக்கூடியதாகவும் ஒரு பைக் வாங்குமாறு ஆலோசனை வழங்கினார். பயணத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக, ட்ரையம்ப் டைகர் 50 ஸ்போர்ட்ஸ் மாடல் பைக் வாங்கினோம். அது பெருத்த வித்தியாசம் ஏற்படுத்தியது. ஏனெனில், இந்த பைக் மிகவும் பெரியதாகவும், ஆற்றல் மிக்கதாகவும், பயணிக்க மிக சௌகர்யமானதாகவும் இருந்தது.

ஒரு இரண்டு வருட காலங்களுக்குள், என் வாழ்க்கையில் ஒருபோதும் பைக் ஓட்டியதே இல்லை என்ற நிலையிலிருந்து, அனைவருடனும் இமாலயத்துக்கு வண்டி ஓட்டிச் செல்லும் நிலைக்கு சட்டென்று மாறினேன். அந்த இரண்டு வருடங்களில், முழு அடைப்பு காரணமாக, பைக் ஓட்ட எனக்கு வாய்ப்பில்லாமல் போனது. ஆனாலும் நான் இமாலயம் சென்றேன், பயணத்தில் நான் நன்றாக வண்டி ஓட்டிச் சென்றதாகவே எண்ணுகிறேன்! நிச்சயமாக அது மிகவும் வேடிக்கையானதாக அமைந்தது.

பயணம் எளிதாக இருந்தது என்று கூறமுடியாது; மிகவும் கடினமாக இருந்த சில மலைப் பாதைகள் இருந்தன. சிலர் வண்டியிலிருந்து விழவும் நேரிட்டது; வழியில் எந்த ஒரு விபத்தையும் சந்திக்காமல் பத்திரமாக திரும்பினேன். என்னால் சத்குருவுடனோ அல்லது முன்னே இருந்த மற்றவர்களுக்கு இணையாகவோ செல்ல முடியவில்லை என்றாலும், நான் எச்சரிக்கையாக வண்டி ஓட்டினேன். தேவைப்பட்டபொழுது நான் பாதுகாப்பாக பயணித்தாலும், பெரும்பாலான நேரங்களில் ஓரளவு மற்றவர்களுக்கு இணையாகவே இருக்க முடிந்தது. என்னை அதிக நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கிக் கொள்ளாமல் பயணிப்பதை நான் ஒரு சவாலாகவே எடுத்துக்கொண்டேன்.

இசையின் வழியே கேதார்நாத் தரிசனம்

பேட்டியாளர்: இமாலயத்தில் என்ன நிகழ்ந்தது என்பதைப் பற்றி சற்று விரிவாக எனக்கு கூறுங்கள். நிலச்சரிவு பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். அது தவிர, நீங்கள் பகிர்ந்துகொள்ள விரும்பும் வேறு ஏதேனும் இருக்கிறதா?

சந்தீப்: நாங்கள் கேதார்நாத் கோவிலை அடைந்தபொழுது, பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். அந்த சக்தியூட்டப்பட்ட வெளியை அல்லது கோவிலை நான் எப்படி விரும்பினேனோ அந்த விதமாக என்னால் உண்மையிலேயே உணரமுடியவில்லை. கூட்ட நெரிசலான இடங்களை நான் விரும்புவதில்லை என்பதால் பொதுவாக விலகி நிற்பது எனது வழக்கம். ஆனால், அறைக்குத் திரும்பியதும், எங்களுக்கு விருப்பமிருந்தால் கோவிலுக்குச் செல்லவேண்டும் என்று சத்குரு கூறினார். என்னிடம், அங்கு நான் ஒரு பாட்டு பாடவேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஆகவே நாங்கள் மீண்டும் கோவிலுக்கு சென்றோம். கோவில்களில், எந்தவித அனுபவபூர்வமான விஷயங்களும் எனக்கு நிகழ்வதில்லை என்றாலும், அந்த இடத்தில் மிக சக்தியான ஏதோவொன்றை நான் உணர்ந்தேன். அங்கே அமர்ந்திருக்கும்போதே, பாடுவதற்கான விருப்பம் எனக்குள் மேலோங்கியது. பொதுவாக, மலைகள் சூழ்ந்த வெளியில் பாடுவதற்கு நான் வழக்கமாக விரும்புவேன். என்னைப் பொறுத்தவரையில், ஆன்மீக உணர்வு என்பது எப்பொழுதும் இசையின் மூலமாகவே எழுகிறது. நான் இசைப் பயிற்சி செய்யும்பொழுது, மேடையில் கச்சேரி செய்யும்பொழுது அல்லது இசைக்குள் ஆழமாகப் பயணிக்கும் தருணங்களில், எனக்குள் ஏதோ ஒன்று மாற்றமடைந்து, நான் வித்தியாசமாக உணர்வதுண்டு.

பாடுவது ஒரு ஆன்மீக அனுபவமாக உருமாறும்பொழுது

நான் அங்கு பாடும்பொழுது, நீண்ட நேரம் கண்களை மூடியபடி அமர்ந்திருக்க முடிவதை என்னால் உணர முடிந்தது. ஒரு கோவிலில் கண்கள் மூடிய நிலையிலேயே நெடுநேரம் அமர்ந்திருக்கும் விதமான ஒரு நபரல்ல நான். ஆனால், அன்று எனக்குள் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தேன். அதனால் இரண்டாவது பாடலும் பிறந்தது – அது ஒருவிதத்தில் என்னிலிருந்து வெளிப்படுவதற்கு முயலுவதைப் போன்று, எனக்குள் இருந்து அதை வெளியேற்றத் தேவைப்பட்டது. நான் பாடிய முதலாவது பாடல், சிதம்பரம் மற்றும் கேதார்நாத் கோவில்களை ஒப்பிடுவதாக இருந்தது. சிவனின் பண்புகளைப் பற்றியும், இந்தியா முழுவதிலும் சிவனுக்கென்று படைக்கப்பட்ட பல இடங்களும் சக்தி அளவில் எப்படி ஒரே விதமாக இருக்கின்றன என்றும் கூறியது. நான் பாடிய இரண்டாவது பாடல், காசிவிஸ்வநாதர் பெருமை குறித்தது.

இந்த இரண்டு பாடல்களையும் பாடியதும், எனக்குள் எதையோ உணர்ந்தேன். ஒருசிலர் மட்டுமே அப்போது அங்கிருந்தோம், நமது தியான அன்பர்களில் சிலரும் அங்கிருந்தனர். அந்த மலைகளின் மடியில் அமர்ந்துகொண்டு நான் பாடியதைக் கேட்டது உண்மையிலேயே அற்புதமான அனுபவமாக இருந்ததாகக் கூறினர். கோவிலுக்கு வெளியே அமர்ந்தவாறு பாடிய அந்த கணத்தில் எனக்கு ஆன்மீக அனுபவம் நேர்ந்ததாக உணர்ந்தேன்.

நிச்சயமாக, மலைகளில் ஏதோ ஒன்று இருக்கிறது. மலைப்பாதைகளில் வண்டி ஓட்டிக்கொண்டு இருந்தபோதும், அதனை என்னால் உணரமுடிந்தது. பரிசுத்தமான காற்றும், பாய்ந்தோடும் நீருமாக – அந்த இடத்தில் வெறுமனே இருப்பதிலேயே ஏதோ இருக்கிறது. இதற்கு நேர்மாறாக, நான் சென்னையில் இருக்கும்பொழுது, ஒட்டுமொத்த உடலும் வித்தியாசமாக உணர்கிறது.

இமாலயங்களுக்கு இதுவே எனது முதல் பயணம். பல விஷயங்களால், பல தருணங்களில் நான் கட்டுக்கடங்காத உணர்வில் மிதந்தேன். அது அழகாக இருந்தது. பாதிப்பயணத்தில் இருந்தபோதே, எனது அடுத்த இமாலய பயணத்துக்கு நான் திட்டமிட்டுவிட்டேன். இமயத்திலிருந்து உள்வாங்கிக் கொள்வதற்கு எவ்வளவோ இருக்கிறது; ஒரே பயணத்தில் அதை உங்களால் செய்யமுடியாது. அங்கு இருக்கும்பொழுதுகூட, அந்தப் பிரம்மாண்டத்தின் ஒரு துளியைத்தான் ரசிக்க, ருசிக்க முடிகிறது என்பதையே உணர முடிகிறது.

இமயத்தின் அழைப்பு

பெருந்தொற்றின் காரணமாக, ஏறக்குறைய 2 வருட இடைவெளிக்குப் பிறகு, மேடைக் கச்சேரிகள் இப்போதுதான் துவங்கியுள்ளன. சகஜநிலைக்குத் திரும்பிய பிறகு, இமயத்துக்கு நாம் மற்றொரு பயணம் செய்யக்கூடும். சில நண்பர்களுடன், இந்தியாவில் மற்ற பல முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு பைக்கில் சென்று வர விரும்புகிறேன். ஆனால் நிச்சயமாக, மீண்டும் இமயத்துக்கு செல்வேன். அது “ஒருமுறையுடன் முடிவடையும்” வகையான ஒரு இடம் அல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. இந்த மலைகளை வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு தருணங்களில் உணர விரும்புகிறேன்.