புராஜெக்ட் சம்ஸ்கிருதி

புராஜெக்ட் சம்ஸ்கிருதி: ஈஷா சம்ஸ்கிருதி எப்படி மக்களுக்கு நன்மை பயக்கிறது

பகுதி 2: களரிப்பயட்டு கற்பித்தலின் பின்புலக் காட்சிகள்

ஐந்து பகுதிகள் அடங்கிய இந்தத் தொடரில், புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டத்தின் பின்புலத்தில் நிகழும் முனைப்பான செயல்பாடுகளை, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களின் பார்வையில்  உங்கள் முன் வெளியிடுகிறோம். இதோ, முன்னாள் சம்ஸ்கிருதி மாணவரும், களரிப்பயட்டு ஆசிரியருமான லோகேஷ் ஜகதீசன்,  ஆன்லைன் வழியாக பயிற்சியளிப்பதில் சவாலான ஒன்றாக இருந்த களரிப்பயட்டு பகுதியின் பின்புலக் காட்சிகளை நம்முன் கொண்டுவருகிறார்.

புராதன போர்க்கலை மீது நாட்டம்

துடிதுடிப்பு, வேகம், கூர்மை – இதுதான் லோகேஷ் ஜகதீசன் என்று கூறும் அளவுக்கு அவர் அறைக்குள் பிரவேசிக்கும் கணமே அவரின் உக்கிரமான உடல்மொழி சட்டென்று புலனாகிறது. ஈஷா நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை நீங்கள் தொடர்ந்து கவனித்து வந்திருந்தால், ஈஷா ஹடயோகா மற்றும் களரிப்பயட்டு பயிற்சிப் புகைப்படங்களில் அவரை கவனிக்காமல் தவிர்த்திருக்கும் வாய்ப்பு குறைவுதான். சப்தரிஷி அகத்தியரால் இந்தியக் கலாச்சாரத்திற்குள் நெய்யப்பட்ட மிகப் பழமையான போர்க்கலையாகிய களரியில் சிறப்புப் பயிற்சி பெற்றிருக்கிறார், முன்னாள் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர் லோகேஷ்.

லோகேஷ் தனது குழந்தைப்பருவம் முதல், எல்லா வகையான போர்க்கலை வடிவங்கள் மீதும் ஆர்வம் காட்டி வந்தார். அவர் ஈஷா சம்ஸ்கிருதியில் இணைவதற்கு பெற்றோர் முதலில் ஆலோசனை அளித்தபொழுது, லோகேஷ் சம்மதம் தெரிவிக்கவில்லை. விருப்பமுள்ள மாணவர்களை மட்டுமே சம்ஸ்கிருதியில் அனுமதித்த காரணத்தால், வரமுடியாது என்று கூறிவிடும் உறுதியுடன் நேர்காணலுக்குச் சென்றார். அந்த நாளை நினைவுபடுத்தியவராக லோகேஷ் ஒரு புன்னகையுடன் இப்பொழுது கூறுகிறார், “அவர்கள் எங்களை ஒரு மூன்று மணி நேர ட்ரெக்கிங் அழைத்துச் சென்றதுதான் 'பிரச்சனை', உடனே நான் ஆர்வமாகிவிட்டேன். நான் ஈஷா சம்ஸ்கிருதியில் இணைய சம்மதித்ததை என் பெற்றோரால் நம்பவே முடியவில்லை.”

ஈஷா சம்ஸ்கிருதியில் இணைந்த பிறகு, லோகேஷின் வாழ்க்கை முற்றிலும் மாறிப்போனது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக, பள்ளியின் எல்லா செயல்பாடுகளிலும் ஈடுபட்டுக்கொண்டு, இசை மற்றும் நடனம் கற்றுக்கொள்வதை லோகேஷ் முழுவதுமாக விரும்பினார். ஆனால் ஏதோ ஒன்றில் சிறப்புத் தகுதி பெறுவதற்கான நேரம் வந்தபொழுது, அவர் முடிவெடுக்க வேண்டியிருந்தது. “களரிப்பயட்டு மற்றும் யோகாவைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். ஏனென்றால் எனக்குள் ஏதோ ஒருவித சமநிலை தேவைப்பட்டது. பலரும் மற்ற பாடங்களை எனக்கு பரிந்துரைத்தனர், ஆனால் எனக்குள் இதுதான் முடிவாக இருந்தது,” என்று பகிர்ந்து கொள்கிறார் லோகேஷ்.

அவர் ஈஷா சம்ஸ்கிருதியில் இணைந்ததிலிருந்து, களரிப்பயட்டு அவரது முதல் விருப்பத்தேர்வாக இருந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கு வருடங்களாக லோகேஷ் ஈஷா ஹடயோகா மற்றும் களரிப்பயட்டு ஆசிரியராக இருக்கிறார்.

வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் களரிப்பயிற்சி எப்படி தாக்கத்தினை ஏற்படுத்துகிறது

லோகேஷ் மற்றும் அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் அவர்களது பள்ளி நாட்களில் நான்கு வித்தியாசமான பாணிகளில் களரி கற்றுக்கொண்டதால், அந்தக் கலை குறித்த ஒரு முழுமையான புரிதலில் இருப்பதுடன், களரியின் ஒரே பாணியோடு அவர்கள் நின்று விடுவதில்லை. களரி பயிற்சி செய்வதன் விளைவுகள் குறித்துக் கேட்டபொழுது, “உடல் மற்றும் மனதின் தாங்குதிறன் வளர்ச்சியடைகிறது. ஒவ்வொரு வருடமும் என் எல்லைகளை மேன்மேலும் விரிவுபடுத்த முடிகிறது. நிச்சயமாக, வளையும் தன்மையும், வலிமையும் அதிகரிக்கிறது, ஆனால் களரி குறித்த ஒரு தனித்துவமான விஷயம் என்னவென்றால், அது ஒரு போர்க்கலையாக, சண்டையிடும் முறையாக இருந்தாலும், அது அதற்கானது மட்டுமல்ல – வாழ்வின் ஒவ்வொரு அம்சத்திலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒன்றாக களரி இருக்கிறது. அழுத்தம் நிறைந்த சூழல்களிலும், பொதுவாக மற்ற எல்லா விஷயங்களிலும் ஆழ்ந்து சிந்திக்கக்கூடிய எனது தெளிவு அற்புதமாக மேம்பட்டுள்ளது” என்று கூறுகிறார் லோகேஷ்.

ஒரு நாள் பின்னிரவில், புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டம் குறித்து லோகேஷூக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தபொழுது, அத்திட்டத்தின் முக்கியத்துவத்தினால் அச்சமும், பிரமிப்பும் எழுந்த கணத்தில், மனதின் இந்தத் தெளிவு சாதகமாக மட்டுமல்லாமல், அத்தருணத்தின் தேவையாகவும் இருந்தது.

பிரம்மிப்பான திட்டத்தின் துவக்கம்

சம்ஸ்கிருதி திட்டத்தை சத்குரு அறிவித்த பிறகு, அடுத்த ஐந்து நாட்களுக்குள் ஆறு பகுதிகளுக்கும் முன்பதிவு நிறைவடைந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. “சத்குரு ஏதோ ஒன்றை அறிவித்தால், பெரிய அளவிலான பங்கேற்புகளை அது ஈர்க்கும் என்பது எங்களுக்கு தெரியும். 51 நாடுகளிலிருந்து 600 க்கும் அதிகமான முன்பதிவுகளை நாங்கள் பெற்றோம்,” என களரி பயிற்சியைக் கற்றுக்கொள்ள விரும்பும் மக்களின் ஆர்வத்தை லோகேஷ் வெளிப்படுத்தினார்.

உலகெங்கும் பங்கேற்பாளர்களைச் சென்றடைந்து, ஆன்லைனில்  களரிப்பயட்டு வகுப்பு இப்போது சுமூகமாக நிகழ்ந்துவரும் நிலையில், இது முற்றிலும் முதல்முறையான ஆன்லைன் வகுப்பு என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது. இந்தப் புராதனப் பயிற்சியை மக்களின் வீடுகளுக்கே கொண்டு சேர்க்கும் ஒட்டுமொத்த 12 மணி நேரப் பகுதியையும், சம்ஸ்கிருதி முன்னாள் மாணவர்களே அதன் ஆரம்பப் புள்ளியில் இருந்து வடிவமைத்தனர். வெவ்வேறு சம்ஸ்கிருதி திட்டத்தின் பகுதிகளுள், களரிப்பயட்டு பகுதி மிகுந்த விரிவானதும், நுணுக்கமானதுமாக இருக்கிறது. இதில், பயிற்சி, செயல்முறை விளக்கம், மற்ற வீடியோக்கள், பயிற்சியில் திருத்தம் செய்யும் அமர்வுகள், பயிற்சியாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் மற்றும் கேள்வி-பதில் அமர்வுகளின் நேரலை என்று பல கட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

பல முன்னேற்பாடுகளும், இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சத்துக்கும் தேவைப்பட்ட மிகுதியான கவனமும் அதில் ஈடுபட்டவர்களுக்கு அடுக்கடுக்கான சவால்களையும், கற்றல் அனுபவங்களையும் வழங்க, திட்டம் உயிர் பெற்றது.

சவால்களைக் கடந்து வெற்றி

மக்கள் விரும்பும் வகையிலும், அதிலிருந்து பலனடையும் விதமாகவும் இந்தக் கலை வடிவத்தை வழங்க வேண்டும் என்பது முற்றிலும் புதிய அணுகுமுறையாக இருந்ததால், அதற்கு பன்முனை விவாதங்கள் தேவைப்பட்டது. களரிப்பயட்டு ஒரு நுட்பமான போர்க்கலையாக இருக்கும் நிலையில், போதுமான இடவசதி போன்ற பல தேவைகளுக்கு பொருந்திப் போகும் வகையில்  பயிற்சி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

திட்டத்தின் மற்ற பயிற்சி வடிவங்களின் தரத்துக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, உறுதியுடனும் பொறுப்புணர்வுடனும், களரி குழுவினர் தங்கள் பகுதியை படிப்படியாகக் கட்டமைத்தனர். அவர்களது நிபுணத்துவம் மற்றும் பல வருடப் பயிற்சியும் துணை நிற்க, அடிப்படைகள், தரம் மற்றும் பலன்களுடன் எந்த சமரசமும் செய்துகொள்ளாமல், வழக்கமான ஒரு வீட்டின் அளவுகளுக்குள் கற்றுக்கொள்ள ஏற்றவிதமாக, குழுவினர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்கி, பயிற்சியை வடிவமைத்தனர்.

பயிற்சி என்பது  ஒரு கலந்துரையாடல் போல இருக்கவேண்டும் என்பதற்காக, திருத்தங்கள் மேற்கொள்ளும் தன்னார்வலர் குழு ஒன்றை உருவாக்கினார்கள். பங்கேற்பாளர்கள் கவனித்து, துல்லியமான உடல் அசைவுகளைக் கற்றுக்கொள்வதற்காக, செய்முறை விளக்கக் காணொளிகளைப் பதிவு செய்வது களரி குழுவினர் முன் இருந்த மிகப் பெரிய சவால்களுள் ஒன்றாக இருந்தது. இதனைத் தொடர்ந்து, பின்னணிக் குரல் பதிவு செய்வது மற்றொரு கடினமான பணியாக இருந்தது. இந்தப் பெரும்பணி லோகேஷ் வசம் ஒப்படைக்கப்பட, திட்டம் முழுமையடைவதற்கான முயற்சியில் மற்ற இரண்டு தன்னார்வலர்களுடன், அதிகாலை வரை அவர்கள் ஒலிப்பதிவு அறையில் அமர்ந்திருந்து தேவையான ஒலிக்கோர்ப்புடன் காணொளிகளை தயார்செய்து முடித்தார்கள்.  

நிகழ்ச்சி குறித்து பங்கேற்பாளர்கள் என்ன கூறுகின்றனர்

களரியின் முதல் பகுதிக்காக, அடிப்படைகளில் கவனம் செலுத்துவது என்ற முடிவுடன், களரியைப் பயிற்சி செய்யும் எல்லா தரப்பினரும் பயன்பெறும் வகையில், ஒரு சமமான பயிற்சியை குழுவினர் வடிவமைத்தனர். பொதுமக்களுக்கு நிகழ்ச்சியை வழங்குவதற்கு முன்பாக, ஈஷா தன்னார்வலர்களுக்கு முன்னோட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவர்களுள் 40 தன்னார்வலர்கள், பங்கேற்பாளர்களுக்கு உறுதுணையாக இருக்க முன்வந்துள்ளனர். தங்களது நேரத்தை மக்களுக்கு வழங்க முன்வந்துள்ள அவர்களது உறுதி இந்த பயிற்சியை அனைவருக்கும் வழங்குவதை சாத்தியமாக்கியுள்ளது.

முன்னோட்ட பங்கேற்பாளர்களுள் ஒருவரான ஸ்ராவந்த் வல்லுரு, கடந்த 11 வருடங்களாக யோகப்பயிற்சி செய்து வருகிறார். களரிப் பயிற்சி சவாலாக இருக்கப்போகிறது என்பதை எதிர்பார்க்கவில்லை என்று கூறியவர் மேலும் தொடர்ந்து, “என் உடல் எந்த விதத்திலும் பலமான தாக்கத்துக்கோ அல்லது அழுத்தத்துக்கோ உள்ளானதாக நான் உணரவில்லை, ஆனால் நிச்சயமாக என் உடலின் ஒவ்வொரு தசையும் பயன்படுத்தப்பட்டது. இதற்காக இதுவரை நான் வழக்கமாக பயன்படுத்தியிராத ஒரு முறையில் என் உடலைப் பயன்படுத்த வேண்டியிருந்தது. அது என் உடலின் எல்லைகளை விரிவடையச் செய்தது. நான் சுவாசிக்கும் விதமே மாறியதையும் நான் கவனித்தேன்” என்கிறார்.

ஸ்ராவந்த் ஓரளவு போதுமான உடல்தகுதியுடன் இருப்பதாக உணர்ந்தாலும், களரி பயிற்றுனர்களின் உடல்கள் முற்றிலும் வித்தியாசமான நிலையில் இருப்பதையும் கவனித்துள்ளார். “தசைகள் மட்டுமல்ல, அவர்களின் உடல் அமைப்பே வேறு தளத்தில் இருக்கிறது. இந்த அளவுக்கான உடல் தகுதியை வெளிப்படுத்தக்கூடிய இந்த விதமான பயிற்சியை அவர்கள் உங்களுக்கு வழங்கினால், நிச்சயமாக நீங்கள் அதைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று கூறுகிறார் ஸ்ராவந்த்.

மற்றொரு முன்னோட்ட பங்கேற்பாளரான அஷ்வினி சத்தி, தோள்பட்டை வலியினால் அவரது தீவிரமான யோகப் பயிற்சிகளில் சிலவற்றை நிறுத்தி வைத்திருந்ததாகவும், இருந்தாலும் களரிப் பயிற்சி செய்வது அவருக்குமே சாத்தியமாக இருந்தது என்றும் கூறுகிறார். “செயல்முறை விளக்கக் காணொளிகளை கண்டபொழுது, சில விஷயங்களை அவர்களைத் தவிர சாதாரண மக்களால் செய்யவே முடியாது என்பதுபோல தோன்றியது. சில நிலைகளுக்கு பயிற்சி தேவை, ஆனால் சில நிலைகள் எளிதில் நிகழ்ந்தன. உங்கள் உடலை அப்படி ஒரு நிலைக்கு எடுத்துச் செல்ல முடியும் என்பதுகூட உங்களுக்கு தெரியாது, ஆனால் முயற்சி செய்தால், அது நடக்கிறது” என பேசுகையிலேயே உற்சாகம் ததும்புகிறது.  இப்பொழுது ஒரு களரி விசிறியாகவே மாறிவிட்டிருக்கும் அஷ்வினி, மற்ற களரிப்பயட்டு தொடர்கள் வெளிவரும்பொழுது, அவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புவதாக பகிர்ந்து கொண்டார்.

ஐந்து மாதகால தளர்வில்லா முன்னேற்பாட்டிற்குப் பிறகு, செப்.3 அன்று, முதலாவது களரிப்பயட்டு நிகழ்ச்சி ஆன்லைனில் அரங்கேறியது. இப்பொழுது 9 நாட்களில், 9 அமர்வுகளை கொண்ட ஒரு பயிற்சி முறையாக வழங்கப்படுகிறது. "பங்கேற்பாளர்கள் உண்மையிலேயே பொறுப்பும், முனைப்பும் காட்டுவதுதான் இந்த நிகழ்ச்சியின் மிகுந்த நிறைவை தரும் அம்சம். வெவ்வேறு நேர மண்டலங்களில் இருந்து பங்கேற்பாளர்கள் இருப்பதால், நள்ளிரவுக்கும், அதிகாலை 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலும் லாக்-இன் செய்து பலர் இணைந்து பயிற்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்துகின்றனர்” என்று பகிர்ந்தார் லோகேஷ்.

இது ஒரு ஆரம்பம் மட்டுமே

இந்தியாவிலிருந்து ஒரு ஆழமான, புராதன போர்க்கலை உலகளாவிய தாக்கத்தினை உருவாக்கி வருகிறது, ஆனால் இது ஒரு ஆரம்பம் மட்டுமே. தங்கள் முயற்சிகளும், சத்குருவின் தொலைநோக்குப் பார்வையும், மலர்ச்சி அடைவதைக் கண்டு குழுவினர் அளவற்ற ஆனந்தம் கொள்கின்றனர். "'களரிப்பயட்டு குறித்து விழிப்புணர்வு ஊட்டுவது’ என்ற எளிமையான ஒரு கருத்திலிருந்து ஆரம்பித்ததுதான், இப்போது உலகெங்கும் உள்ள மக்களின் வாழ்வை மாற்றவல்ல ஒரு விஷயத்தை செயல்படுத்தும் பெருமிதமான பணியில் இங்கே நாங்கள் ஈடுபட்டுள்ளோம்,” என்கிறார் லோகேஷ்.

பங்கேற்பாளர்களின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டினால் உந்தப்பட்ட குழுவினர், களரியின் பலனை அள்ளிப்பருக போதிய நேர அவகாசம் இல்லாமல், ஒரு துளியேனும் ருசித்திட விழையும் மக்களுக்கும் கற்றுக் கொடுக்கக்கூடியவாறு,  10 – 15 நிமிடங்கள் மட்டும் கொண்ட மிகச் சிறிய பயிற்சித் தொகுதிகளை உருவாக்கும் முயற்சியில் இப்பொழுது ஈடுபட்டுள்ளனர்.

“புராஜெக்ட் சம்ஸ்கிருதி திட்டம் துவங்கியபொழுது, குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் நாங்கள் அதில் ஈடுபடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டோம், ஆனால் நீண்ட காலத்துக்கு இதில் ஈடுபட தேவையிருக்கும் என்பதை நாங்கள் அறிந்திருந்தோம். நவம்பர் 2021 ல் நான் சம்ஸ்கிருதியிடம் இருந்து விடைபெறத் திட்டமிட்டிருந்தேன், ஆனால் இப்போது, பின்வாங்குதல் இல்லை,” என்று முடிக்கிறார்.