நடப்புகள்

சத்குருவை தொடருங்கள்

கடந்த சில வாரங்களின் ஒரு கண்ணோட்டம்

4D வித் டெமி லொவெட்டோ வலையொலி நிகழ்ச்சியில் சத்குரு

4
ஆகஸ்ட்

அமெரிக்க பாடகர் - பாடலாசிரியர் மற்றும் நடிகருமான டெமி லொவெட்டோ தமது 4D வித் டெமி லொவெட்டோ வலையொலி நிகழ்ச்சியில் பங்கேற்க சத்குருவை அழைத்திருந்தார். பரிமாணங்களை கடந்து நடந்த இந்த உரையாடலின்போது, ஆனந்தமாக வாழ்வது, எது ஒருவரை மறைஞானி ஆக்குகிறது, மோட்டார் சைக்கிள்களின் மீதான தனது காதல் மற்றும் மனித உடலமைப்பின் பல்வேறு அம்சங்களைக் குறித்து சத்குரு பேசினார். அதில் சத்குரு, விழிப்புணர்வான, ஆனந்தமான மனிதர்களை உருவாக்குவதன் மூலம் விழிப்புணர்வான உலகை கட்டமைத்திட இளைஞர்கள் எழுந்து நிற்க வேண்டும் என வேண்டி கேட்டுக்கொண்டார்.

கானாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஓக்யாம் க்வாமே சத்குருவுடன் உரையாடுகிறார்

14
ஆகஸ்ட்

மேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கானா தேசத்தை சேர்ந்த இசையமைப்பாளர், ராப் கலைஞர் மற்றும் தொழில் முனைவோருமான ஓக்யாம் க்வாமே அவர்கள் சத்குருவுடன் உரையாடினார். ஆன்மீகம், கலாச்சார அடையாளம் மற்றும் வரலாறு, விழிப்புணர்வான ராப் குறித்தும் அவர் சத்குருவிடம் கேள்விகளை எழுப்பினார். தனது பாடல் ஒன்றையும் நிகழ்ச்சியின் போது அவர் பாடிக்காட்டினார். வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர, அதனால் காயப்படக் கூடாது என்று குறிப்பிட்ட சத்குரு, சமூக சவால்களுக்கு பதிலளிக்கும் விதமாக அடையாளங்களைத் தாண்டி உயர்ந்து, அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டம்

15
ஆகஸ்ட்

தன்னார்வத் தொண்டர்கள், ஹடயோகா ஆசிரியர் பயிற்சியாளர்கள், ஆசிரமவாசிகள் மற்றும் பலரும் பங்கேற்க, இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் ஆதியோகி முன்னிலையில் தேசியக்கொடி ஏற்றினார் சத்குரு. உற்சாகமும் கொண்டாட்டமும் நிறைந்த சுதந்திர தின நிகழ்ச்சியில், ஈஷா சமஸ்கிருதி மாணவர்களுடன் உரையாடலும், சத்குருவுடன் சிறப்பு அதிரடி ஃபிரிஸ்பி விளையாட்டுப் போட்டியும் இடம்பெற்றது. சிறப்புரையாற்றிய சத்குரு, "அடுத்த 25 ஆண்டுகளில் நமது சுதந்திர தின நூற்றாண்டு தினத்தைக் கொண்டாடும் வேளையில், நமது தேசம் ஒரு வலிமையான, உத்வேகமடைந்த, மீண்டெழும் திறன் மற்றும் சமநிலையான மனிதர்கள் நிறைந்த நாடாக வளர்வது மிக முக்கியமானது" என்று குறிப்பிட்டார்.

டியூக் கார்ப்பரேட் எஜுகேஷன் மற்றும் டயலாக் பத்திரிகைக்கு பேட்டி

16
ஆகஸ்ட்

டியூக் கார்ப்பரேட் எஜுகேஷன் நிறுவனத்தின் உலகளாவிய நிர்வாக இயக்குனரான மைக் கேனிங், மேலாளர்கள் மற்றும் நிறுவன தலைவர்களுக்கான இதழான டயலாக் பத்திரிகைக்காக சத்குருவை பேட்டி எடுத்தார். பல்வேறு தலைப்புகளிலும் நிகழ்ந்த உரையாடலின் போது, மனிதர்களின் சாத்தியத்தை பேணி வளர்ப்பது, நடைமுறைக்கேற்ப செயல்படும் தொழில் தலைவர்களுக்கு அதிகரித்து வரும் முக்கியத்துவம் மற்றும் கூர்மையாக கவனம் செலுத்துவது குறித்தும் ஆராய்ந்தார்கள். ஒருவரது வாழ்க்கையில் இலக்கின் பங்கு குறித்து பேசிய சத்குரு, "இலக்கை நிலைநிறுத்துவதன் மூலம் அடிப்படையாக, உங்கள் நோக்கத்தை கட்டமைக்கிறீர்கள். சுயமாக நீங்கள் எந்த நோக்கமும் வைத்திருக்கத் தேவையில்லை; வாழ்க்கை மட்டுமே ஒரே இலக்கு. நீங்கள் அதனோடு ஒரு பாகமாகிவிட வேண்டும். இந்த வாழ்க்கையில் நீங்கள் பயணிக்க வேண்டும், இதில் என்ன நடக்க வேண்டும் என்பதை உங்கள் சொந்த கற்பனையில் நீங்கள் உருவாக்கக் கூடாது" என்றார்.

துணிகர முதலீட்டாளர் தேஷ் தேஷ்பாண்டே மற்றும் தொழில் முனைவோர் டே வீர்லபட்டி ஆகியோருடன் உரையாடல்

16
ஆகஸ்ட்

SU Tech நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டே வீர்லபட்டி மற்றும் ஸ்பார்ட்டா குரூப் LLC நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தேஷ் தேஷ்பாண்டே இருவரும், நாளைய தொழில்முனைவோர்களுக்கு உத்வேகமளிப்பது குறித்து சத்குருவுடன் கலந்துரையாடினார்கள். ஈடுபாடு நிறைந்திருந்த இந்த உரையாடலின் போது, தொழில்நுட்பம் பல்வேறு தரப்பினரையும் இணைப்பது, புத்திசாலித்தனமும் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பாங்கும் மற்றும் வாழ்வின் தனிப்பட்ட முறையில் உணரும் பரிணாமங்கள் குறித்தும் கலந்துரையாடினார்கள். தன்னை எது செலுத்துகிறது என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் தன் இயல்பான நகைச்சுவை உணர்வை வெளிப்படுத்திய சத்குரு, "நீங்களே பாருங்கள், என்னை எதுவும் செலுத்தவில்லை. நான்தான் எல்லாவிதமான வாகனங்களையும் செலுத்துகிறேன், எனவே நான் நன்றாகவே இருக்கிறேன்" என்றார்.

பிரிட்டிஷ் இராணுவ அமைச்சகத்தின் ‘Mindfulness Symposium’ நிகழ்விற்கு சத்குருவின் வீடியோ

16
ஆகஸ்ட்

பிரிட்டிஷ் பாதுகாப்புத்துறை அமைச்சகத்திற்கான வீடியோவுக்காக பேசும்போது, பாதுகாப்பு படையினர் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும், அவர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து இந்த பூமியில் அமைதியை நிலைநாட்ட உதவுவது குறித்தும், அவர்களது இருப்பின் முன்னிலையில் அமைதி காக்கப்படுவது குறித்தும் பேசினார் சத்குரு. அதி அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளை கையாளும் பணியில் உள்ளவர்கள் தியானத்தில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் பற்றிப் பேசிய சத்குரு, வருங்காலங்களில் படைபலத்திற்கான தேவை குறையக்கூடும் என்ற தன் நம்பிக்கையை வெளிப்படுத்தினார். "படைவீரர்கள் என்பவர்கள் ஏதோ இயந்திரங்களோ. ரோபோக்களோ அல்ல; அவர்கள் மனிதர்கள். அவர்கள் மனிதர்களாக நடத்தப்பட வேண்டும். அவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு மனிதத் தன்மையோடு இருக்கிறார்களோ, அப்போது அவர்கள் இன்னும் சிறப்பான வீரர்களாக இருப்பார்கள்" என்று குறிப்பிட்டார் சத்குரு.

முழு நிலவில் அருள் மடியில் சத்சங்கம்

22
ஆகஸ்ட்

இந்த மாத 'முழு நிலவில் அருள் மடியில்' பௌர்ணமி சத்சங்கத்தில், பஞ்ச வாயுக்கள் குறித்து - உடலில் சக்தி ஓட்டம் குறித்து விரிவாக பேசினார் சத்குரு. துடிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கு பிராண வாயுவை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பேசிய சத்குரு, பௌர்ணமி நிலவின் உற்சாகத்தை ஒருவர் தன் அடிப்படையான அனுபவக்கோடாக வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், ஏற்கனவே சக்தி சலன கிரியா கற்றுக்கொண்டுள்ள சாதகர்களுக்கு பயிற்சிக்கு புத்துயிர் ஊட்டுவதற்காக சக்தி சலன கிரியா மறுதுவக்க வகுப்பு நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்பதையும் அறிவித்தார்.