சிறப்புக் கட்டுரை

ஞானோதயம் - உங்களுக்குள் எப்போதும் இருக்கும் ஒன்றை கண்டறிவது எப்படி

ஞானோதயம் அடைந்தவர் அனைத்தையும் அறிந்தவரா? ஞானோதயம் அடைய ஒருவர் என்ன செய்ய வேண்டும்? சாதகர்களின் தீராக் கேள்வியாகவும், மர்மமாகவும் இருக்கும் இந்த உச்சபட்ச இலக்கைப் பற்றிய மாயைகளை துடைத்தெறியும் வகையில், ஒருவர் ஞானோதயத்தை எவ்வாறு அணுகவேண்டும் என்பதைப் பற்றிய தெளிவை நமக்கு தருகிறார் சத்குரு.

சத்குரு: ஞானோதயம் ஒருபோதும் நிகழ்வதில்லை. அது எப்போதும் இருக்கிறது. நீங்கள் புரியும் சாதனா அனைத்தும், அது அங்கு இருக்கிறது என்பதை பார்ப்பதற்காகதான். உங்களுக்குள் தெய்வீகத்தன்மையை உருவாக்குவதற்காக நீங்கள் சாதனா செய்வதில்லை. நீங்கள் உருவாக்குவது எல்லாம், உங்கள் அகங்காரமாகத்தான் இருக்கும். மக்கள் சுய முன்னேற்றத்தைப் பற்றி பேசுகிறார்கள். உங்கள் உடல், மனம் மற்றும் அகங்காரம் ஆகியவற்றை நீங்கள் மேம்படுத்தக்கூடும். ஆனால் சுயத்தை நீங்கள் எவ்வாறு மேம்படுத்த முடியும்? எது ஒன்று பூரணமாக இல்லையோ, அதைத்தான் நீங்கள் மேம்படுத்த முடியும். எல்லா இடங்களிலும் பரவியுள்ள, எப்போதும் நிலைத்திருக்கக்கூடிய ஒன்றை எவ்வாறு மேம்படுத்துவது?

சுயம் என்ற ஒன்றை உங்களால் மேம்படுத்த முடியாது. அதனால்தான் "சுயம்" என்று மக்கள் கூறியபோது, கௌதம புத்தர் "சுயம் அற்றது" என்றார். மக்கள் ஆத்மா பற்றி மிக அதிகமாக பேசினார்கள். எனவே அவர் நீங்கள் அனாத்மா என்று கூறினார். ஆரம்பத்தில் அவர்கள் கடவுள், நரகம் மற்றும் சொர்க்கம் ஆகியவற்றைப் பற்றி பேசியபோது, அவர், "எந்த கடவுளும் இல்லை, எந்த நரகமும் இல்லை, எந்த சொர்க்கமும் இல்லை" என்றார். அவர் அனைத்தையும் தகர்த்தெறிந்தார். ஏனெனில், தகர்க்க வேண்டிய எல்லாவற்றையும் தகர்த்தெறிய வேண்டும், அதுவே முழுமையான சாதனா.

ஞானோதயத்துக்கான வழி

சாதனா என்பது ஏதோ ஒன்றை உருவாக்குவது பற்றியது அல்ல, உங்களுக்குள் தெய்வீகத்தன்மையை உருவாக்குவதைப் பற்றியது அல்ல, ஞானோதயம் அடைவதைப் பற்றியது அல்ல. சாதனா என்பது உங்கள் கண்களை திறப்பதற்கான ஒரு வழி. விழித்துக் கொள்வதற்கான ஒரு செயல்முறை. தற்போது, நீங்கள் ஒரு நிலையிலான மெய்மையில் தேங்கி இருக்கிறீர்கள். இன்னொரு நிலையிலான மெய்மைக்கு விழித்துக் கொள்வது தானாகவே நிகழுமா? எதுவும் நிகழத் தேவையில்லை. என்ன இருக்கிறதோ, அதனோடு உங்களுடைய ஈடுபாடு முழுமையாக இருக்கும் பட்சத்தில், நீங்கள் அதைக் கடந்து செல்வீர்கள். அல்லது உங்களுக்கு முற்றிலுமாக ஈடுபாடே இல்லையென்றால், அதுவும் வேலை செய்யும். இதுவே இரண்டு வழிமுறைகள் - ஒன்று 100% ஈடுபாடு அல்லது 0% ஈடுபாடு; அதன் பின்னர் நிகழ்கால மெய்மையிலிருந்து உங்களை தளர்த்திக் கொண்டு உங்களுக்குள்ளேயே இருக்கும் மற்றொரு மெய்மையை நீங்கள் காண்பீர்கள்.

சாதனா என்பது... ஞானோதயம் அடைவதைப் பற்றியது அல்ல. சாதனா என்பது உங்கள் கண்களைத் திறப்பதற்கான ஒரு வழி.

ஒருபோதும் ஞானோதயத்தைத் தேடாதீர்கள். நீங்கள் அதைத் தேட ஆரம்பித்த அந்த தருணத்திலேயே இப்போதைய மெய்மையில் வேரூன்றி விடுவீர்கள். நீங்கள் தேடினால், சிக்கிப் போய்விடுவீர்கள். நீங்கள் எதையும் தேடாமல், இருப்பினும் முழுத்தீவிரத்தோடு, முழுமையாக சாதனாவில் ஈடுபடும்போது, பிறகு ஒரு வழி பிறக்கும். மிகச்சரியாக அதைத்தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். பொதுவாக, அடைவதற்கு எதுவுமில்லை எனும்போது, மக்களால் தீவிரமாக இருக்க முடியாது. அடைவதற்கு எதுவுமில்லை எனும்போது, எதனோடும் ஈடுபாட்டுடனோ, தீவிரமாகவோ இருக்க விடாத ஒரு மனதை மக்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதால்தான் ஆன்மீகம் என்னும் முழு செயல்முறையும் தேவையாக இருக்கிறது. அதனாலேயே இது பெரும் போராட்டமாக தோன்றுகிறது. "எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற இந்த ஒரு கணக்கை அகற்றிவிட்டு, உங்களைச் சுற்றியுள்ள அனைத்திலும் உங்களை நீங்கள் வெறுமனே ஈடுபடுத்திக் கொண்டால், உங்களின் 90% சாதனா ஒரே வீச்சில் முடிந்துவிடும்.

புத்தர் மிகத் தீவிரமாக தேடி, பல வழிகளில் தன்னையே முட்டாளாக்கிக் கொண்டார். அவருடைய 6 வருட சாதனாவில் தன்னையே கொன்றுவிடும் அளவிற்கு சென்றார். அது எல்லாவற்றிலும் எந்தவொரு அர்த்தமும் இல்லை என்பதை அவர் கண்டதும்தான் ஞானோதயம் அடைந்தார். "இதற்கு அர்த்தம்தான் என்ன? நான் எதைத்தான் தேடுகிறேன்? எல்லாம் இங்கு இருக்கும்போது என்னைப் பற்றி நான் எதை அறிந்துகொள்ள முயல்கிறேன்?" என்பதை அவர் கண்டுகொண்டார். சுய ஞானம் என்ற ஒன்று இல்லை. சுயம் மட்டுமே இருக்கிறது, அவ்வளவுதான். சுயத்தைப் பற்றிய ஞானத்தை வளர்த்துக்கொள்வது என்ற ஒரு கேள்வியே இல்லை. வெறுமனே அசைவற்று இருப்பதுதான் நோக்கம். நீங்கள் அசைவற்று இருக்கும்போது அனைத்தும் சுயமாக ஆகிவிடுகிறது.


அறிதலும் காண்பதும்

யாரோ ஒருவர் ஞானோதயம் அடையும்போது, அவர் அடிமுட்டாளாக மாறிவிடுகிறார். அக்கணம் முதலே, அவர் எதுவுமே தெரியாதவர் ஆகிவிடுகிறார். எதையாவது  தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற அக்கறையும் அவரிடம் இருப்பதில்லை. மற்றவர்கள் பல விஷயங்களையும் தெரிந்திருக்கும்போது, ஞானோதயம் அடைந்த ஒருவர் எதையும் அறிந்திருக்க மாட்டார், ஆனால் அனைத்தையும் அது எப்படி உள்ளதோ, அப்படியே உள்ளது உள்ளபடி பார்ப்பார். மற்றவர்கள் அனைத்தையும் தெரிந்திருப்பார்கள், ஆனால் தங்களுக்கு முன் என்ன இருக்கிறது, தங்களுக்குள் என்ன நடக்கிறது என்பதை அவர்களால் காண முடியாது. இதை மட்டும் நீங்கள் கண்டுவிட்டால், அதன் பிறகு வேறு எதையாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் உங்களிடம் இருக்காது, ஏனெனில் நீங்கள் தெரிந்து கொண்டது என்பது நீங்கள் கொண்டுள்ள முன்முடிவுகள் ஆகும். இது வெறுமனே காண்பதைப் பற்றியது. உங்களால் தெரிந்துகொள்ள முடியாது‌ என்பதுடன், உண்மையில் தெரிந்து கொள்வதற்கு எதுவுமே இல்லை.


ஞானோதயம் அடைந்த ஒருவர் எதையும் அறிந்திருக்க மாட்டார், ஆனால் அனைத்தையும் அது எவ்வாறு இருக்கிறதோ, அவ்வாறே காண்பார்.

நீங்கள் சுவாசிக்கும் காற்றைப் பற்றி அறிந்துகொள்ள என்ன இருக்கிறது? ஒரு விஞ்ஞானி, இது ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு என்றெல்லாம் கூறுவார். இது அனைத்தையும் அறிவது உங்களுக்கு உயிர் கொடுக்காது. எவ்வாறு சுவாசிப்பது என்பதை அறிவதன் மூலம் உயிர் வந்துவிடாது. மற்ற ஏதோ நோக்கத்துக்காக ஆக்சிஜன், நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியவற்றைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்ளலாம். ஆனால் உயிர் வாழ்வதற்கு இதையெல்லாம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. எவ்வாறு மூச்சை உள்ளே இழுப்பது, அதை எவ்வாறு தக்கவைப்பது, பின்னர் எவ்வாறு வெளியே விடுவது, அதில் என்னென்ன வித்தைகளை நாம் செய்யலாம் என்பதையெல்லாம் நாம் அறிந்திருக்கிறோம். இது உயிரை மேம்படுத்தும்.

வெறுமனே என்ன தேவையோ அதை செய்வது

நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு கருவியும் உங்கள் வாழ்வை மேம்படுத்தவும், இன்னும் ஆழமாக்குவதற்காகவும் தான். அந்த நோக்கத்தை அது நிறைவேற்றாவிட்டால் நீங்கள் எதை உருவாக்கினாலும் அதில் எந்த பயனும் இல்லை. ஒரு கட்டிடத்தைக் கட்ட நமக்கு மின்சாரம், மோட்டார் பம்பு மற்றும் பலவும் தேவைப்படுகின்றன. நம் வாழ்வை மேம்படுத்தினால் மட்டுமே அவை அனைத்தும் உபயோகமாக இருக்கின்றன. இல்லையெனில் அவை இல்லாமலேயே இந்த உலகம் சிறப்பான ஒரு இடமாக இருக்கும். வெறுமனே ஒரு மரத்தின் கீழ் வாழ்வது சிறந்ததாக இருக்கும். நீங்கள் ஒரு கட்டிடத்தை அதிகப்படியாக கட்டும்போது அது உங்கள் வாழ்க்கையை எடுத்துவிடும். ஆனால் அதிகப்படியான மரம் என்ற ஒன்று இல்லை. அது வெறுமனே அங்கு இருக்கிறது. அதோடு நீங்களும் அந்த மரத்தின் கீழ் இருக்க முடியும்.

"இது என்ன ஒரு வாழ்க்கை?" என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் இதைவிட சிறந்த எந்த ஒரு வாழ்க்கையை மக்கள் வாழ்கிறார்கள்? ஏதோ ஒன்றோடு அல்லது யாரோ ஒருவரோடு ஒப்பிடும்போது மட்டும்தான் ஒருவர் சிறப்பாக வாழ்வது போல உங்களுக்கு தோன்றுகிறது. நீங்கள் சிறந்தவராக இருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் நினைக்கக்கூடும். ஆனால் உண்மையில், வாழ்க்கையில் சிறந்த எந்த ஒன்றை எவர் செய்கிறார்கள்? உண்பது, உறங்குவது மற்றும் இனப்பெருக்கம் செய்வது - அவ்வளவுதான். இந்த உலகத்தில் சௌகர்யத்திற்காக நாம் சில விஷயங்களை செய்ய வேண்டும். ஆனால் எந்த அளவுக்கு அதை செய்யவேண்டும் என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், இந்த வசதிகளையும் சௌகர்யங்களையும் வைத்துக்கொண்டு நாம் பல புதிய வியாதிகளை உருவாக்கியுள்ளோம் - உடல் மனம் இரண்டிலும். நீங்கள் ஒரு விஷயத்தை அதிகப்படியாக செய்யும்போது, அது தற்கொலைக்கு சமமாக மாறும்.

முழுமையான விடுதலை

உங்களை அறிந்துகொள்வது என்பதுதான் அந்த சமநிலை. அதன் பிறகு, எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் முழுமையான மனிதராக நீங்கள் வாழமுடியும். பின்னர் நீங்கள் வெளியே புரியும் செயல்கள் எல்லாம் வெறுமனே அந்த சூழ்நிலைக்கு என்ன தேவை என்பதை பொறுத்ததாக இருக்கும், உங்களுக்காக செய்வதாக இருக்காது. அந்த ஒரு விடுதலையை தான் இது உங்களுக்கு தருகிறது. ஏதோ ஒன்று உங்களுக்கு தேவை என்ற காரணத்தினால் நீங்கள் செயல்படும்போது அது உங்களை பிணைக்கிறது. மெதுவாக நீங்களே அறியாமல் அதனோடு மிக ஆழமாக சிக்கிக்கொண்டு, அதிலிருந்து வெளியேறும் வழியே இல்லாமல் செய்துகொள்வீர்கள். சூழ்நிலைக்கு தேவைப்படும் காரணத்தினால் நீங்கள் ஏதோ ஒன்றை செய்தால், இனிமேல் இது தேவையில்லை எனும் நாள் வரும்போது, நீங்கள் அனைத்தையும் நிறுத்திக்கொள்ள முடியும். மேலும் அதில் எந்த பிணைப்பும் இருக்காது.

சுய ஞானம் அல்லது ஞானோதயம் என்று நாம் அழைப்பது இதுதான். நீங்கள் எவ்வாறு இருக்கிறார்களோ அது முழுமையானதாக இருக்கிறது என்ற ஒரு விடுதலையை அது கொடுக்கிறது. நீங்கள் முழுமையடைவதற்காக எதையும் செய்ய வேண்டிய தேவையில்லை, எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டியது இல்லை அல்லது உணர வேண்டியதும் இல்லை. நீங்கள் உங்களளவில் முழுமையாக இருக்கிறீர்கள்.