யோகா & ஞானம்

குருபூஜை - தெய்வீகத்தை வரவேற்கும் அழைப்பிதழாகுமாறு உங்களை அர்ப்பணித்தல்

தீர்க்கமான தர்க்கம் மற்றும் விஞ்ஞானபூர்வமாக சோதனை செய்யக்கூடிய செயல்முறைகள் மூலம் சத்குரு ஆன்மீகத்தை சுய மாற்றத்துக்கான ஒரு தொழில்நுட்பமாக நிறுவியுள்ளார். அதே சமயம், ஆன்மீக செயல்முறையின் முக்கிய அம்சமான குருபூஜை எனும் சடங்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஈஷாவில் வழங்கப்படுகிறது. இது எப்படி பொருந்திப் போகிறது? அறிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்.

நீங்கள் யார் என்பதன் பிரவாகம்

சத்குரு: இங்கே நடத்தப்படும் பூஜை, வெளியே பொதுவாக செய்யப்படும் பூஜையைக் காட்டிலும் வித்தியாசமான ஒரு தன்மையை கொண்டுள்ளது. தியானத்தில் இருக்கும் ஒருவர் பூஜை செய்தால் அது ஒரு வித்தியாசமான தன்மையைக் கொண்டிருக்க வேண்டும். பூஜை என்பது வெறுமே இறைஞ்சுவதற்கான ஒரு செயல்முறையாக இருந்தால் அதில் பெரிதாக முக்கியத்துவம் ஒன்றும் இல்லை. மிக கவனமாக செய்யப்பட்டால் அந்த செயல்முறையே சக்திவாய்ந்த வழிமுறையாக மாறும். மிக கவனமாக செய்ய வேண்டிய தேவை இருந்தாலும் இது ஒரு உடற்பயிற்சியை போன்றதல்ல. குருபூஜை என்பது நீங்கள் யார் என்பதன் ஒரு பிரவாகமாக இருக்க வேண்டும்.

நீங்கள் நம்பும் ஒரு சிலைக்கு செய்யும் பூஜைக்கும், உயிர்ப்போடும், உணர்வு அளவில் உங்களுக்கு உண்மையாகவும் இருக்கும் ஒன்றை நோக்கி செய்யும் பூஜைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அப்படி பார்த்தோமானால், பூஜை செய்யப்படும் அந்த பொருள் உயிர்ப்போடு இருந்தால்தான் எந்த பூஜையும் உயிர்ப்பானதாக மாறும். அவர்களளவில் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிற்கு - வெளியிலும் அவர்களுக்குள்ளும் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிற்கு - ஒருவர் பூஜை செய்தால், அந்த பூஜை வேறு வகையான ஒரு முக்கியத்துவத்தை அடைகிறது.

விரைவான வழி

நிறைய விஷயங்களை நீங்கள் தானாகவே கற்றுக்கொள்ள இயலாது. இந்த உயிர் என்ன என்பதைப் பற்றி கற்றுக்கொள்ள ஒருவருக்கு ஒரு ஆயுட் காலம் போதுமானதாக இருக்காது. குறிப்பிட்ட சில மனிதர்களிடம் பல ஜென்மங்களாக சேகரிக்கப்பட்ட ஞானம் இருக்கிறது. அதைப் பெற்றுக்கொள்ள, நமக்குள் சரியான சூழலை நாம் உருவாக்க வேண்டும். அவ்வாறு உருவாக்குவதற்கு குருபூஜை ஒரு சிறந்த வழி. நான் எனக்குள் கொண்டிருக்கும் புரிதலை நீங்களாகவே பெறுவதற்கு உங்களுக்கு பல ஜென்மங்கள் எடுக்கக்கூடும். சிலர் நூறு ஜென்மங்களை கடந்து அடைந்த ஒரு குறிப்பிட்ட ஞானத்தை நாம் பெற்றுக்கொள்ள முடியும். அவர்கள் வழங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதைப் பெறுவதற்கு நாம் சரியான சூழலை உருவாக்க வேண்டும். பெற்றுக்கொள்வதற்கான அந்த தன்மையை உங்களுக்குள் உருவாக்குவதற்கு உதவும் மிக முக்கியமான சக்தி வாய்ந்த கருவியாக குருபூஜை இருக்கிறது.

குருபூஜை செய்ய சரியான வழி

நீங்கள் குருபூஜை செய்யும்போது, முழுமையாக நீங்கள் அங்கு இருக்க வேண்டும் - வேறு எதுவும் இருக்கக் கூடாது. முழு செயல்முறையும் சரியான வகையில் செய்ய நீங்கள் கற்றுக்கொள்வது ஏனென்றால், இடையில் யோசிக்க வேண்டிய தேவையே ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான். நீங்கள் சிந்திக்கத் துவங்கும் தருணமே, அங்கு தியானம் இருக்காது. அதைப்போலவே, நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி சிந்திக்கத் துவங்கும் தருணமே அங்கு பூஜை இருக்காது. அதன் காரணத்தினால்தான், பூஜையை துவங்குவதற்கு முன், அனைத்தும் சரியான வகையில் தயாராக இருக்க வேண்டும். அனைத்தும் அதனதன் இடத்தில் சரியான வகையில் இருக்க வேண்டும், பூஜையானது ஒரு பிரவாகமாக வெளிப்பட வேண்டும். குருபூஜை என்பது நீங்கள் செய்யும் ஏதோ ஒரு செயல் அல்ல, அது வெறுமனே உங்களிலிருந்து பிரவாகமாக வெளிப்பட வேண்டும்.

நுட்பமான ஒரு சக்தியுடன் தொடர்பில் இருப்பது

இந்த பூஜை மிக சக்தி வாய்ந்த ஒரு செயல்முறையாக இருக்க முடியும். தொடர்பு கொள்வதற்கான எளிய வழிமுறை இது. இன்றைய நவீன விஞ்ஞானம், நாம் பருப்பொருள் என்று அழைப்பது வெறும் சக்திதான் என்று தெளிவாக கூறுகிறது. இந்த அடிப்படையிலேயே, நாம் மனித உடலை ஏழு சக்கரங்களாக பார்க்கிறோம். இந்த ஏழு சக்கரங்களும், ஏணிப்படியில் உள்ள ஏழு படிகளைப் போன்றவை. அல்லது திடமான ஒன்றிலிருந்து நுட்பமான ஒன்றை நோக்கிச் செல்வதற்கான செயல்முறை. இந்த சக்தியின் திடமான ஒரு வெளிப்பாடு, மனித உடல். அதே சக்தி நுட்பமானதாக மாறினால் நாம் அதை பூத உடல், ஆவியுடல், மன உடல், ஆன்மீக உடல் என்றெல்லாம் அழைக்கிறோம். நாம் குரு என்று அழைக்கும் ஒன்று, நுட்பமான ஒரு வடிவம் அல்லது ஒரு அரிதான இருப்பு. பூஜை என்ற செயல்முறை மூலம் அதை நீங்கள் திடமான ஒரு வெளிப்பாடாக அல்லது உண்மைக்கு மிக அருகாமையில் கொண்டு வருகிறீர்கள்.

காளியோடு இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து நீங்கள் அறிந்திருக்கக்கூடும். அவரது பூஜை மிக தீவிரமான நிலையில் இருந்ததால் அவள் உருவமாக வெளிப்பட்டாள். பூஜை என்ற விஞ்ஞானம் சரியான அணுகுமுறையோடு, சரியான முறையில் கையாளப்பட்டால், மிகப்பெரிய அளவில் விஷயங்கள் நிகழும். நமக்குள்ளும், நாம் யோகா என்று அழைக்கும் அனைத்துக்குள்ளும் இன்னும் ஆழமாக செல்வதற்கு அதை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

சோடச உபசாரம் - குருபூஜையின் சாராம்சம்

பூஜையின் அர்ப்பணிப்பு பகுதி சோடச உபசாரம் என்று அறியப்படுகிறது. குருவை உபசரிப்பதற்கான பதினாறு வழிமுறைகள் இவை. பூஜையானது பாடப்படும் பாடலில் இல்லை, ஆனால் அர்ப்பணிப்பில் உள்ளது. உண்மையான ஒரு அர்ப்பணிப்பாக நீங்கள் பூஜையை நிகழ்த்தினால், நீங்கள் எதை அர்ப்பணித்தாலும் அது உங்களை அர்ப்பணிப்பதே. பின்னர் பூஜை வேறு வகையான ஒரு தன்மையைப் பெறுகிறது. திடீரென உங்களை சுற்றி வேறு விதமான சூழல் மற்றும் சக்தி உருவாகும். பெரும்பாலான மக்களுக்கு உயிருள்ள ஒரு குருவுக்கு பூஜை செய்யும் பேறு கிடைப்பதில்லை - அவர்கள் இறந்த குருவையே கொண்டிருக்கிறார்கள். ஆனால் குரு உயிரோடு உங்களோடு இருக்கும் போது, பூஜை மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக மாறக்கூடும். நாம் செய்த சில பூஜைகளில் நம்மில் சிலர் கண்டிருப்பதை போல, முற்றிலும் வேறு ஒரு பரிமாணத்தில் நிகழும்படியான அரிதான தருணங்கள் அமையக்கூடும்.

கடவுள் போல மாறுவது

எந்த உணர்வோடும், விழிப்புணர்வோடும் நீங்கள் இந்த அர்ப்பணிப்பை அளிக்கிறீர்கள் என்பது மிக முக்கியமான ஒன்று. உங்களால் எதை வழங்க முடிந்தாலும் அதை வெறுமே கொடுக்க வேண்டும், அவ்வளவுதான். குருபூஜை என்பது ஒரு பிரார்த்தனை அல்ல - அது ஒரு பிரதிஷ்டை. உங்களுக்குள் உயர்ந்ததாக இருக்கும் ஒன்றை தூண்டிவிடுவதற்கான ஒன்று. குருமார்களை வரவேற்று, சேவை புரிந்து, கடவுளின் நிலைக்கு அவர்களை உயர்த்தி, அந்த செயல்முறை மூலம் நம்மையும் அதே நிலைக்கு உயர்த்துவதே குருபூஜை. கடவுள் இந்த உலகை ஆள்பவர் அல்ல. கடவுள் என்பது ஒரு அர்ப்பணிப்பு. அனைத்தும் வெறுமனே அர்ப்பணிக்கப்பட்டு இருக்கின்றன. அவர் இந்த உலகை ஆளவில்லை, நாம்தான் இந்த உலகை ஆள்கிறோம். கடவுளாக இருப்பது என்பதற்கு அர்த்தம் தலைவராக மாறுவது என்பதல்ல. கடவுள் ஒரு தலைவர் அல்ல - அவர் நமது சேவகன். ஒவ்வொரு நாளும் நம் உயிர் நிகழ்வதற்கு அவர் நமக்கு சேவை செய்து கொண்டிருக்கிறார். குருபூஜை என்பது அந்த விழிப்புணர்வை ஒருவருக்குள் கொண்டுவருவது.