வாழ்வின் சூட்சுமங்கள்

ஆன்மீகச் சிகரங்களில்: சக்தி நிறைந்த இமாலயங்கள்

சத்குருவின் இமாலய பயணங்கள் அவருக்கு எப்போதும் ஏன் வீடு திரும்புவதை போலவே இருக்கிறது என்பதையும், ஒவ்வொரு ஆன்மீக சாதகரும் வாழ்வில் ஒரு முறையாவது இந்த மறைஞான மலைகளை அனுபவபூர்வமாக ஏன் உணரவேண்டும் என்பதை பற்றியும் இந்த பகுதியில் வாசித்து அறியுங்கள்.

மீண்டும் மலைகளுடன்

சத்குரு: இமாலயம் - இந்த மகத்துவமான மலைகள் என் சிறு வயது முதலே என் வியப்புக்கும், ஈர்ப்புக்கும் உரியவையாக இருக்கின்றன. நான் காணக்கிடைத்த பல புகைப்படங்கள் மற்றும் புத்தகங்கள் இந்த பெரும் மலைப்பாதைகளில் மலையேற்றம் செல்ல வேண்டும் என்ற என் ஆவலை வெகுவாக தூண்டிவிட்டன. இந்த மலைகள் பலரின் மத நம்பிக்கைகள் மற்றும் ஆன்மீக ஆர்வங்களுக்கு உத்வேகம் அளித்தாலும், நான் அந்த எண்ணத்தில் இந்த மலைகளை எப்போதும் பார்த்ததில்லை.

செப்டம்பர் 1993-ல், நான் எங்கு செல்லவேண்டும் என்று தெரியாமலே ஹரித்வாரை வந்தடைந்தேன், பின்னர் பத்ரிநாத்தை நோக்கி பயணித்தேன். மலையின் மடியில் ஒரு பாம்பைப் போல வளைந்து நெளிந்து சென்ற நீண்ட பாதையில் பதினாறு மணி நேரம் ஊர்ந்து சென்ற அந்த பஸ் பயணம் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் ஒன்று - கருவறைக்குள் திரும்பும் வழியை நான் கண்டறிந்தது போல் இருந்தது. இப்போதும் கூட, கிட்டத்தட்ட அந்த சாலையின் ஒவ்வொரு வளைவும் எனக்கு அத்துப்படியாக இருக்கிறது. நான் பத்ரிநாத்தை அடைந்தபோது இருள் கவிழ்ந்து, குளிர் பரவியிருந்தது. குளிருக்காக அணியும் ஆடை எதுவும் அப்போது என் வசம் இல்லை - வெறுமனே ஜீன்ஸ், டி ஷர்ட் மற்றும் ஷூக்களை அணிந்திருந்தேன். அங்கு பனிப்பொழிவு ஆரம்பித்தபோது எப்படியோ தங்குவதற்கு ஒரு இடத்தை கண்டடைந்தேன்.

அடுத்த நாள் காலை தேநீர் அருந்துவதற்காக நான் வெளியே வந்தேன் - அந்த குளிரில் இருந்து தப்புவதற்கு அது மட்டுமே ஒரே அடைக்கலம் போல இருந்தது. கடும்குளிராக இருந்தாலும், சமாளித்துக்கொண்டு டீக்கடைக்கு செல்லும் வழியில் தொடர்ந்து நடந்தேன். குளிரினால் என் கைகள் உணர்வற்றுப் போக, என் கையிலிருந்து நான் தங்கியிருந்த அறையின் சாவி நழுவி கீழே விழுந்தது. அதை எடுப்பதற்காக கீழே குனிந்தேன். நிமிர்ந்தபோது நான் கண்ட காட்சியை கைதேர்ந்த ஒரு கவிஞனால் கூட விவரிக்க இயலாது. கும்மிருட்டாக இருந்த ஒரு பள்ளத்தாக்கில் நான் இருந்தேன். ஆனால் என் முன்னே இருந்த பனி போர்த்திய மலைச்சிகரம் பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருந்தது - தூய்மையான வெண்பனி, அதில் பட்டு தகதகக்கும் பொன்னிறமான சூரிய ஒளி. அந்த காட்சி முழுமையாக என்னை ஆட்கொண்டது. நான் அதுவரை கேட்டது, படித்தது, பார்த்தது, கற்பனை செய்தது அனைத்தும் என் கண் முன்னால் விரிந்த அந்த காட்சிக்கு முன் ஒன்றுமில்லாமல் போனது. என் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் தான் அதற்கு ஒரே பதிலாக இருந்தது - மீண்டும் இணைகையில் பொங்கும் கண்ணீர் துளிகள் அவை என்று நான் பின்னர் அறிந்துகொண்டேன்.

பத்ரிநாத் கோவில்

நன்றியின் அடையாளமாக

அந்த இடத்தின் முழுமையான அழகில் மயங்கிப் போயிருந்த எனக்கு பத்ரிநாத் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அப்படியே 12 கிலோமீட்டர் நடந்து வசுதாராவை நோக்கி சென்றேன் - அது மெல்லிய கோடு போல இருக்கும் 400 அடி உயரமுள்ள ஒரு அருவி. காற்றின் வேகத்தால் பெரும்பாலான நீர் பாதி வழியிலேயே காற்றோடு கலந்து பனி போன்ற நீர்த்துகள்களாக மாறி விட, மிகக் குறைந்த அளவு நீரே தரையைத் தொடும். ஒரு மிக மெல்லிய சாரல் என்னை அவ்வப்போது தொடுமாறு சிறிது தள்ளி இருந்த ஒரு பாறையின் மேல் நான் அமர்ந்திருந்தேன்.

நான் என் கண்களை மூடினேன், இதுவே எதையும் தெளிவுற நான் எப்போதும் காணும் வழி. யாரோ ஒருவர் என் பாதங்களைப் பற்றிக்கொண்டு அழுது புலம்பிக்கொண்டு இருப்பதை நான் உணர்ந்தேன். "மகராஜ்." என் கண்களை திறந்து என் முன் ஒரு சாது இருப்பதைக் கண்டேன். இந்தி அல்லாத வேறு ஒரு மொழியில் அவர் பேசினார். ஆனால் அவர் பேசியது எனக்கு தெளிவாகப் புரிந்தது. அவரை அவரின் ஆன்மீக தேக்கநிலையில் இருந்து வெளியே எடுக்க வேண்டும் என்று அவர் என்னிடம் முறையிட்டுக் கொண்டிருந்தார். நான் அவருக்கு ஷூன்ய தியானத்திற்கான தீட்சை வழங்கினேன். பொதுவாக நான் அரிதாகவே இந்தி பேசுவேன். ஆனால் அன்று மிக சரளமாக இந்தி பேசிய நான் அவரிடம், "इस पहाद के जैसे अधल हो जाव (இந்த மலைகளைப் போல அசைவற்று இருங்கள்)” என்றேன்.

அந்த சாதுவின் கன்னங்களில் கண்ணீர் பெருகி வழிய, அவர் ஷூன்ய தியானத்திற்குள் ஆழ்ந்தார். தன் நன்றியின் அடையாளமாக ஒரு பெரிய எலுமிச்சம்பழம் அளவிலான ஒரு ஏகமுகி ருத்ராட்சத்தை அவர் எனக்கு வழங்கினார். அதை என் கைகளில் எடுத்து பின்னர் என் சட்டைப் பையில் வைத்தேன். உணர்ச்சி மிகுந்த இதயத்துடிப்பைப் போல அது சக்தியோடு அதிர்ந்து கொண்டிருந்தது. மிக மிக அரிதான ஒரு ருத்ராட்சத்தோடு நான் என் அறைக்குத் திரும்பினேன்.

கேதார்நாத் கோவில்

மலையின் பக்தர்களின் வசீகரம்

அடுத்த வருடமும் இமயமலைக்கு செல்ல வேண்டுமென்ற உந்துதல் பலமாக இருந்தது. ஒரே வருடத்தில் இரண்டு முறை நான் அங்கே சென்றேன். எந்த குறிப்பிட்ட திட்டமும் இல்லாமல் நான் ஹரித்வாரை அடைந்தேன். ஆனால் ஏதோ ஒன்று என்னை கேதார்நாத் நோக்கி கொண்டு சென்றது. நான் மதியம் 3 மணிக்கு கௌரிகுண்டத்தை அடைந்தாலும், 16 கிலோமீட்டர் மலையேற்றம் மேற்கொண்டு கேதார்நாத்தை அடைய முடிவு செய்தேன். மழை மற்றும் மைனஸ் வெப்பநிலை என் எலும்புகளை உறையச் செய்த போதிலும், 16 கிலோ மீட்டர் மலையேற்றத்தை முடித்து இரவு 8 மணியளவில் கேதார்நாத் சென்றடைந்தேன்.

பல்வேறு குழுக்களை சேர்ந்த பல சாதுக்களோடு அடுத்த நாளை நான் கழித்தேன். பக்திமான்களான அந்த சாதுக்கள் பொதுவாக தனியாகவே இருப்பார்கள். ஆனால் அவர்கள் என்னிடம் மிக நெருக்கமாக இருந்தனர். அவர்களில் ஒருவர் சேலத்தை சேர்ந்தவர். அவர் வெள்ளியங்கிரி மலைக்கு சென்றிருக்கிறார். அவர் மிக உணர்ச்சிவசப்பட்டு இருந்தார். நான் பேருந்தில் பயணம் செய்தபோதும் பல சாதுக்கள் என்னை திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையிலோ, தலையசைவிலோ என்னை அறிந்து கொண்டதை வெளிப்படுத்தினர். நிச்சயமாக அது வீடு திரும்புதல் தான். அந்த சாதுக்களும் சன்னியாசிகளும் அந்த இடத்தை மலைகளை விட மிக வசீகரமான ஒன்றாக மாற்றுகிறார்கள்.

காந்த்திசரோவர்

சிவனின் இருப்பிடம்

கேதார்நாத்தில் இருந்து செங்குத்தாக ஏழு அல்லது எட்டு கிலோமீட்டர் மேலே சென்றால் காந்த்திசரோவர் என்ற ஒரு இடம் உள்ளது. அந்த ஏரியின் கரையில்தான் சிவனும் பார்வதியும் வாழ்ந்தார்கள் என்றும், அங்கிருந்துதான் கேதார்நாத்தில் வாழ்ந்த தம் பக்தர்களை சந்திக்க அவர்கள் வருவார்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. நான் காந்த்திசரோவரை நோக்கி சென்றேன். அதன் புனிதம், அமைதி மற்றும் தூய்மை என்னுடைய விழிப்புணர்வைத் துளைத்தது. மலையேற்றம், அந்த உயரம் மற்றும் அங்கிருந்த தனிமையின் அழகு என்னை மூச்சடைக்கச் செய்தது.

அந்த இடமே நிச்சலனத்தில் உறைந்திருக்க, ஒரு சிறிய பாறையில் நான் என் கண்களைத் திறந்தபடி, என்னைச் சுற்றியிருந்த ஒவ்வொரு வடிவத்தையும் எனக்குள் உள்வாங்கியபடி அமர்ந்தேன். சுற்றியிருந்தவற்றின் வடிவங்கள் மெதுவாக மறைந்து, வெறும் நாதம் மட்டுமே நிலைத்தது. அந்த மலை, ஏரி, அங்கிருந்த முழு சூழல், என்னுடைய உடல் உட்பட அனைத்தும் அதன் இயல்பான வடிவத்தில் இருக்கவில்லை, அனைத்தும் வெறும் நாதமாக இருந்தது. எனக்குள் ஒரு பாடல் எழுந்தது - நாத பிரம்மா விஸ்வ ஸ்வரூபா. எனக்கு சமஸ்கிருதம் பிடிக்கும், ஆனால் ஒருபோதும் நான் அதை கற்க முயற்சித்ததில்லை. வேதங்கள் அல்லது உபநிஷத்துகளை படித்து, அதனால் என் சுய உள் பார்வையை நான் குழப்பிக்கொள்ள விரும்பவில்லை, ஏனெனில் அது என்றைக்கும் என்னை கைவிட்டதில்லை. இருப்பினும், அந்த முழு பாடலும் சமஸ்கிருதத்தில் என்னுள் இருந்து பிரவாகமாக பொங்கியது. அந்த அனுபவம் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. மெதுவாக அனைத்தும் அதனதன் வடிவங்களுக்கு திரும்பின. என் விழிப்புணர்வு நாதத்திலிருந்து மீண்டும் ரூப-த்துக்கு வந்தது. என் கண்களில் கண்ணீர் நிறைந்தது.

பின்பு நான் குப்தகாசியிலுள்ள ஒரு சிவ ஆலயத்திற்கு சென்றேன். அந்த இடம், அந்த ஆலயம், அங்கிருந்த பூசாரிகள் அனைவரும் எனக்கு மிகப் பரிச்சயமானவர்களைப் போலவும், நான் ஏற்கனவே அங்கு சென்றிருந்ததைப் போலவும் ஒரு உணர்வு ஏற்பட்டது. அங்கிருந்து இந்திய-நேபாள எல்லையில் உள்ள ஒரு சிறிய ஊருக்கு சென்றேன். ஒரு சாது மிக அரிதான ஒரு சங்கை எனக்கு கொடுத்தார் - மூன்று சங்குகள் ஒன்றாக இணைந்திருந்த அதன் வடிவம் செழிப்பைக் குறிக்கும். எனக்கு அது தேவையில்லை என்றாலும், அவர் அதை அப்படியே என்னிடம் விட்டுவிட்டு அகன்றார். மக்கள் மிக விரும்பி நாடும் பல அரிதான பொருட்களும் தாமாகவே என்னிடம் வந்து சேர்ந்தன.

இந்த மலைகள் ஆன்மீக அதிர்வுகளால் மிக உயிர்ப்போடு இருக்கின்றன. நாம் அறிந்த, அறிந்திராத பல ஆன்மீக குருக்கள் இந்த மலைகளை தங்கள் இருப்பிடமாக தேர்ந்தெடுத்து, இந்த இடத்தை தங்கள் சக்தியின் மூலம் ஒளிரச் செய்துள்ளார்கள். ஆன்மீக சாதகர்கள் அனைவருக்கும் உயர்ந்த ஒரு அனுபவத்தை வழங்கும் ஒரு தலமாக இமயமலை நிச்சயம் இருக்கும். நீங்கள் மிக பலவீனமாகவோ, வயோதிகமோ அடைவதற்கு முன், நிச்சயமாக அன்பிற்கினிய இமயமலைக்கு சென்று அதனோடு ஒன்றுபட வேண்டும் - இதுவே என் ஆசி மற்றும் அருள்.

குப்தகாசி விஸ்வநாதர் கோவில்
கௌரிகுண்ட்
இமயமலையில் சாதுக்கள்