பகிர்வுகள்

குருவின் மாயம்

இதயத்தின் கண்ணீரால்
கடிதம் ஒன்று எழுதினேன்

இரக்கமிக்க குருவோ
இயற்றினார் ஒரு கவிதையை
காட்டினார் என் மறுபக்கத்தை
அருளினார் ஒரு துளி விபூதியை

மாதங்கள் உருண்டன
முடிவற்ற செயல்களாக...
சாதனாவும் தொடர்ந்தது -
சில தடங்கல்கள், ஆனாலும்
சரியான தடத்தில்...

நந்தி, எனக்கிருந்த ஒரே ஊக்கம்
"சிவனின் கட்டளைகளை
கடைபிடி, வெறுமனே காத்திரு"

வாய்த்தது ஒரு வாய்ப்பு - சில நாட்கள்
மௌனத்தில் இருக்கும் தருணம், அப்போது
மலர்ந்தது குருவின் மாயம்

தியானலிங்க திருத்தலத்தில்
நானென்று இதுவரை எண்ணிய
எல்லாவற்றுக்கும் எனக்கும் இடையே
இடைவெளி ஒன்று உருவானது

உள்ளத்தில் பல காலமாக என்னை
உருக்கிக் கொண்டிருந்த வேதனை
கரைந்து பேரானந்தம் மலர்ந்தது

இதயத்தின் கண்ணீர் துளிகள்
இன்று நன்றிப்பெருக்காய்
மாற்றம் கொண்டது

- ஒரு ஈஷா ஆசிரமவாசி