பகிர்வுகள்

சத்குரு தன்னை வழங்கிய ஆரம்ப நாட்கள்:

ஐதராபாத்தில் விடியலின் கதிர்கள்

சாமுண்டி மலையில் சத்குரு ஞானமடைந்த அந்தப் பேரானந்த உணர்தல் நிகழ்ந்த 1982 செப்.23 ஆம் நாள் முதலாக, இந்த மகத்தான அனுபவத்தை, கூடுமானவரை அதிகமான மக்களுக்கு எந்த வகையிலாவது பரிமாறுவதிலேயே அவரது வாழ்க்கை அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தனிமனிதர்கள், தங்களது உச்சபட்ச இயல்பை உணர உதவும் முயற்சியாக, அவர் ஈஷா யோகா வகுப்புகளை நடத்தத் துவங்கினார். இந்தக் குறிக்கோளை நோக்கிய அவரது தீவிரமான ஈடுபாடு, அவரை சில தருணங்களில் நகைச்சுவை மட்டுமல்லாமல் மிகக் கடினமான சூழல்களுக்கும் உட்படுத்தியது. ஹைதராபாத்தில் தனது முதல் யோகா வகுப்பின்போது நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் சத்குரு.

வங்கி ஒன்றில் கவனத்தைக் கொள்ளையிட்ட போது

சத்குரு: குறிப்பாக, 1983 இல் ஹைதராபாத்தில் நடந்த இந்த முதல் வகுப்பு எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அறிமுகமானவர்கள் ஒருவரும் இல்லாத நிலையில் நகரில் கால் பதித்தேன். “அங்குள்ள ஒரு வங்கி மேலாளர் உங்களுக்கு உதவக்கூடும்” என்று ஒருவர் என்னிடம் கூறியிருந்தார். ஆகவே அவரை நான் சந்திக்கச் சென்றேன். அது வாரத்தின் வேலை நாளாக இருந்ததால், அவரை சந்திக்க நான் இரண்டு மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பிறகு அவரது அறைக்குள் சென்றேன். நான் யோகா வகுப்புக்கான அறிமுக உரையை வழங்க வந்திருப்பதாக அவரிடம் கூறினேன். “ஆஹா, அவர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். சற்று அமருங்கள்” என்று வரவேற்றார். “சரி” என்று கூறிவிட்டு, நான் அமர்ந்திருந்தேன்.

அப்படியே அவர் தன் வேலையில் மூழ்கிவிட்டார். பின்னர், ஒரு சிறிய இரண்டு நிமிட இடைவேளை கிடைத்தபொழுது, நான் என் இருக்கையிலிருந்து எழுந்தேன். அன்றைக்கு நான் டெனிம் பேண்ட் மற்றும் சாயம் வெளுத்த ஒரு சட்டை அணிந்திருந்தேன். மேற்கொண்டு அவரது எந்த அனுமதிக்கும் காத்திராமல், அந்த வங்கி மேலாளரின் அலுவலகத்தில், நான் எனது அறிமுக உரையைத் தொடங்கிவிட்டேன். அவர் அதிர்ச்சியடைந்தவராகக் காணப்பட்டார். நான் அப்படியே உரையை தொடர்ந்தேன். பதினைந்து நிமிடங்கள் அறிமுக உரை வழங்கினேன். அப்போது, யாரோ ஒருவர் கையில் கோப்புடன் உள்ளே வந்தார். அவரிடம் நான், “சற்றே காத்திருங்கள்” என்றேன். ஆகவே அந்த மனிதரும் அங்கேயே நின்றபடி அறிமுக உரையை கவனிக்கத் தொடங்கினார்.

திடீர் விருந்தினராக

அறிமுக உரைக்குப் பிறகு, நான் வங்கி மேலாளரிடம், “இப்போது நான் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளேன், ஆனால் என்னால் அங்கேயே தங்க இயலாது, ஏனென்றால் நான் இரண்டு மாதங்கள் ஹைதராபாத்தில் தங்கியிருக்கத் திட்டமிட்டுள்ளேன். நான் யாருடைய வீட்டிலாவது தங்கவேண்டியது அவசியம்” என்றேன்.

அவர் என்னை ஏற இறங்க, அளவெடுப்பது போலப் பார்த்தார். அவர் ஏன் அப்படிப் பார்த்தார் என்று அப்போது எனக்குப் புரியவில்லை, ஆனால் பிற்பாடு, அது ஏன் என்பது விளங்கியது. அவருக்கு வீட்டில் நான்கு மகள்கள் இருந்தனர், நான் ஒரு இளைஞனாக இருந்தேன். என்னை வீட்டிற்கு அழைத்துச் செல்லலாமா, வேண்டாமா என்று யோசனை செய்தார். பிறகு என்ன நினைத்தாரோ, “சரி, என்னுடன் வீட்டுக்கு வா” என்று கூறிவிட்டார். நான் இரவு உணவுக்கு மட்டும்தான் அவரது வீட்டிற்கு அழைக்கப்பட்டேன். வீட்டில் அவரது மனைவியும், நான்கு பெண் பிள்ளைகளும் இருந்தனர் - மூத்த பெண்பிள்ளைக்கு பத்தொன்பது வயதும், அனைவரிலும் இளையவளுக்கு ஒன்பது வயதும் ஆகியிருந்தது. இரவு உணவின்போது, நான் மீண்டும் ஒருமுறை அறிமுக உரை அளித்தேன். அறிமுக உரைக்கு பிறகு அவர்கள், “உடனடியாகச் சென்று உங்கள் உடைமைகளை எடுத்து வாருங்கள்” என்றார்கள்.

நான் அன்றிரவே ஹோட்டல் அறையைக் காலி செய்துவிட்டு, அவர்கள் வீட்டில் தங்கத் தொடங்கினேன். அடுத்த இரண்டரை மாதங்கள் அவர்களுடன் தங்கி இருந்தேன். அந்தக் குடும்பம் முழுவதும் என்னுடைய ஒரு பாகமாகவே ஆகிவிட்டனர்.

தனி ஒருவனாக

எனது துண்டுப்பிரசுரங்கள், ஒலிபெருக்கிகள், மைக்ரோஃபோன் - இவை அனைத்தையும் மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு, ஒவ்வொரு இடமாகச் சென்று, அறிமுக உரைகள் நிகழ்த்தியவாறு இருந்தேன். பத்து நபர்கள், பதினைந்து நபர்கள், நூறு நபர்கள் அல்லது ஐநூறு நபர்கள் - எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. ஒரு குறிப்பிட்ட நாளன்று, 37 அறிமுக உரைகளை நான் நிகழ்த்தியது என் நினைவில் இருக்கிறது.

ஒரு வகுப்புக்கான பங்கேற்பாளர்களை நான் சேகரித்தேன். அந்த நேரத்தில், ஈஷா யோகா வகுப்பு 14 நாட்கள் நடத்தப்பட்டது. ஆனால் நான், ஒரு நாள் விட்டு ஒரு நாள் வகுப்பாக திட்டமிட்டு, ஒரு நாளில் நான்கு வகுப்புகள் என மொத்தம் எட்டு வகுப்புகளை ஒரே சமயத்தில் நடத்தினேன். ஆகவே வகுப்பு 28 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் என் முதல் வகுப்புக்கு, எட்டு பிரிவாக, 462க்கும் அதிகமான மக்களை பங்கேற்பாளர்களாக கொண்டிருந்தேன்.

நான் கண்களை மூடினால், நாட்கள் பறந்துவிடும்; எனவே செயல் செய்வதற்கான தேவை எங்கே இருக்கிறது? ஆனால் நான் யோகா கற்றுக்கொடுக்கத் தொடங்கியபோது, தரைவிரிப்பை விரிப்பதிலிருந்து, கதவு திறப்பது, இடத்தைச் சுத்தம் செய்வது, மின்சாதனங்கள் ஏற்பாடு செய்வது, மிதியடிகள் ஒழுங்கு செய்வது வரைக்கும், எல்லாமே ஒரு நபரால் செய்யப்பட்டது. அந்த தனி ஒருவன் நான்தான்.

அதிகாலை ஐந்து மணிக்கு சிக்கடபள்ளியில் முதல் வகுப்பு துவங்கும், பத்து மணி வகுப்பை அமீர்பேட்டையில் எடுத்தேன், மீண்டும் சிக்கடபள்ளியில் மதிய வகுப்பு, பிறகு மாலை வகுப்பு செகந்திராபாத்தில் இருந்தது. தரை விரிப்புகளிலிருந்து, மைக்ரோஃபோன்கள் மற்றும் ஒலிபெருக்கிகள் வரை அனைத்தையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு என் மோட்டார் சைக்கிளிலேயே எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது.

ஹைதராபாத்தின் போக்குவரத்து ஒரு முழுமையான குளறுபடியாக இருந்தது. அதிகாலை வகுப்பு நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 9.30 மணியளவில் நான் கிளம்பி, பித்துப்பிடித்தது போன்றதொரு வேகத்தில் அடுத்த இடம் நோக்கி செல்வேன். அங்கே, கட்டிடத்தின் நான்காவது தளத்தில் வகுப்பு நடந்தது. நான்கு தளங்கள் படியேறி எல்லா சாதனங்களையும் எடுத்துச் சென்று சேர்ப்பதற்குள், நான் வியர்வையில் நனைந்திருப்பேன். அது கோடை காலமாதலால், தரை விரிப்பை விரித்து வகுப்பைத் தயார்செய்து முடிக்கையில், அவ்வளவுதான், முழுவதுமாக வியர்வையில் ஊறியிருப்பேன். என்னால் அப்படியே வகுப்புக்கு செல்ல முடியாததால், அங்கேயே வகுப்பிலேயே, நான் என் உடைகளை மாற்றிக்கொள்வேன்.

உங்களையே மாய்த்துக்கொள்ள விரும்புவது எதற்காக?

நான் நடந்தபடி பேசிக்கொண்டே வகுப்பை நடத்துவது வழக்கம். பெரும்பாலான நேரங்களில் மைக்ரோஃபோன்கள் வேலை செய்யாது, அதனால் நான் உரத்த குரலில் ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம், இடைவெளியில்லாமல் பேசிக்கொண்டிருப்பேன். இதனால் இரவில், என் தொண்டையில் ரணம் ஏற்பட்டு இரத்தம் வடியும். உஷ்ணம் அதிகமாக இருந்ததனால், அருந்துவதற்குரிய பானங்கள் எங்கே கண்ணில் பட்டாலும், உடனே அதைப் பருகுவேன். வகுப்பின் பாதி நாட்களே கடந்திருந்த நிலையில், ஏதோ பாதிப்பு உண்டாகி, கடுமையான காய்ச்சல் தொடங்கிவிட்டது.

அங்கு மகாத்மா காந்தி ஹால் என்ற பெயர் கொண்ட ஒரு பெரிய மண்டபம் இருந்தது. அதிகாலை சுமார் 4.00 மணிக்கு அந்த இடத்தில் ஹடயோகா வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் அதிகாலையில் அங்கு சென்றேன். ஒருவர் எனக்காக ஐந்து நிமிடங்கள் ஒதுக்கி, அறிமுக உரை வழங்க அனுமதித்தார். என்னுடைய ஐந்து மணி யோகா வகுப்புக்கு முன் இதைச் செய்ய வேண்டியிருந்தது. நான் கடுமையான காய்ச்சலுடன், தலை முதல் பாதம் வரை வியர்த்துக்கொண்டு, அங்கே நின்றபடி ஐந்து நிமிட உரையை நிகழ்த்தினேன். அந்த மனிதர் என்னையே பார்த்தார். அவர் ஆயுர்வேத மருத்துவராகவும் இருந்தார். ஆகவே நான் அவரிடம், காய்ச்சலுக்கு என்ன செய்வது என்று கேட்டேன்.

அவர் என்னை ஜல தௌத்தி செய்யுமாறு கூறினார். அதாவது, ஏழு தம்ளர் உப்பு நீரைக் குடித்துவிட்டு, பிறகு வாந்தி எடுப்பது. நான் அவர் கூறியபடியே நீர் அருந்தி, வாயிலெடுத்தேன். அதை நான் நான்கு நாட்கள் செய்தேன் நான் சோர்வாக உணர்ந்தேன், ஆனால் இன்னமும் காய்ச்சல் இருந்து கொண்டிருந்தது. அதன் பிறகு நான் என் வகுப்பை முடித்துவிட்டு நேராக ஒரு மருத்துவரிடம் சென்று, சில ஆன்டிபயாடிக் மாத்திரைகளை விழுங்கினேன்.

இதற்கிடையில், இந்தக் காய்ச்சல் ஒரு சாதகமான விஷயத்தையும் செய்தது; அதிகமான மக்களை வகுப்புக்குப் பதிவு செய்ய வைத்தது. ஒரு ஹோட்டலின் ரூஃப் டாப் உணவகத்தில், வெகுஜன மக்களுக்காக அறிமுக உரை நிகழ்த்தினேன். சுமார் 200 பேர் அங்கே குழுமியிருந்தனர். கடுமையான காய்ச்சலினால் நான் தலை முதல் பாதம் வரை வியர்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் எனது அறிமுக உரையைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். அங்கிருந்த பாதிப்பேர் அடுத்து நடைபெறவிருந்த வகுப்புகளுக்குப் பதிவு செய்துகொண்டனர்.

“இந்த மனிதர் எதற்காகவோ தன்னையே மாய்த்துக்கொள்ளும் விருப்பத்துடன் இருக்கிறார், இது என்னவாக இருக்கும்?" என்று அவர்களுக்குள் ஒரு ஆச்சரியக் கேள்வி முளைத்திருந்தது. "இவர் என்ன கற்றுத்தரப் போகிறார் என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் இந்த மாதிரி ஒரு நிலையில், இவர் இங்கே வந்து நின்றுகொண்டு தெளிவாகவும், காரண அறிவுக்கு ஏற்பவும் பேசிக்கொண்டிருக்கிறார் - அது என்ன என்று வந்துதான் பார்ப்போமே” என்கிற ஒரு எண்ணத்தில் அவர்கள் வகுப்பில் பங்கேற்றார்கள்.

அதன் பிறகு எல்லா வகுப்புகளும் பங்கேற்பாளர்களால் நிரம்பியிருந்தன.