தற்போதைய காலகட்டம் போன்ற சூழலில் யோகா எவ்வாறு உயிர் காக்கும் அருமருந்தாகக் கூடும்

இந்த மாதம் நாம் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாட இருக்கிறோம். இத்தகைய ஒரு சவாலான காலக்கட்டத்தில், யோகா இன்னும் அதி ஆழமான முக்கியத்துவத்தை ஏன் பெறுகிறது என்பதைப் பற்றியும், வாழ்வு மற்றும் மரணத்தைத் தீர்மானிக்கும் காரணியாக யோகா இருக்கக்கூடும் என்பது பற்றியும் விளக்குகிறார் சத்குரு. சில எளிய யோகப் பயிற்சிகளைக் கற்பது குறித்தும், யோகாவைப் பற்றி நிகழும் சில ஆராய்ச்சிகள் குறித்தும், மேலும் உயிர்களைக் காக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பது குறித்தும் இங்கே வாசிக்கலாம்.

சிம்ம கிரியா

சத்குரு: உலகெங்கிலும் உள்ள பல்வேறு விஞ்ஞானிகள் மற்றும் பல முக்கியமான மருத்துவர்களோடு நான் உரையாடிக் கொண்டிருக்கிறேன். அதிலிருந்து நான் அறிந்தது - இது பொதுவான அறிவும் கூட - இந்த வைரஸ் பெருந்தொற்று அநேகமாக இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ முடிவுக்கு வந்துவிடாது. இந்தப் பெருந்தொற்றை ஒரு குறிப்பிட்ட அளவு கட்டுக்குள் கொண்டுவர வெகு சுலபமாக நான்கு முதல் ஆறு ஆண்டுகள் வரை ஆகலாம் - அதுவும் இந்த உலகம் தேவையான அளவு முதலீடுகளை செய்தால் மட்டுமே. அதோடு, நல்ல பலனளிக்கும் சிகிச்சை நெறிமுறையைக் கண்டறியும் அதிர்ஷ்டமும் நமக்கு இருந்தால்தான் அது நிகழும். அது நிகழும் வரை, இந்தப் பெருந்தொற்று அலைகளாக மீண்டும் வந்துகொண்டே இருக்கக்கூடும்.

நீங்களே கவனித்து இருப்பீர்கள், முதல் அலையை விட இரண்டாவது அலையில், இந்த வைரஸ் நமக்கு பாதிப்பு விளைவிக்கும் வகையில் இன்னும் அதி வீரியமானதாக தன்னை உருமாற்றிக்கொண்டு விட்டது. இந்த 2021 வைரஸ் மனிதர்களுக்கு தீங்கிழைப்பதில் இரண்டு அல்லது மூன்று மடங்கு தீவிரமாக இருக்கிறது. கடந்த வருடம் இளம்வயதினர் இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தது. ஆனால் இனியும் அவ்வாறு இல்லை; துரதிருஷ்டவசமாக இருபது முப்பது வயதில் உள்ளோர் பலரும் உயிரிழந்துள்ளனர். எனவே இந்த வைரஸ் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது. நாமும் அதற்கேற்ப தயாராக வேண்டும்.

சிம்ம கிரியா உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, நுரையீரல் திறனை அதிகரிக்கிறது, மேலும் ஆக்ஸிஜன் உடலில் பகிரப்படும் விதத்தையும் மாற்றியமைக்கிறது.

தற்போது பெருந்தொற்று தீவிரமாகி இருக்கும் நிலையில், முதன்மையான கவலை எப்படி நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவது என்பதுதான். ஹார்வர்டு மருத்துவப் பள்ளியில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள், சிம்ம கிரியா போன்ற எளிமையான யோகப்பயிற்சி எவ்வாறு உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது, நுரையீரல் திறனை அதிகரிக்கிறது, ஆக்ஸிஜன் உடலில் பகிரப்படும் விதத்தை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. உங்கள் ஆக்ஸிஜன் அளவை பேணுவது மற்றும் உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவது - இந்த இரண்டும்தான் நீங்கள் தற்போது செய்ய வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்.

நீங்கள் என்ன செய்தாலும், இப்போதோ அல்லது சில காலத்திற்குள்ளோ நோய்த்தொற்று உங்கள் உடலை பற்றிவிட்டு செல்லும் என்று சிலர் கூறுகிறார்கள். அது உங்கள் உடலில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு செல்லப் போகிறதா அல்லது எந்த அறிகுறியும் இல்லாமல் கடந்து செல்லப் போகிறதா என்பதுதான் இப்போது கேள்வியாக இருக்கிறது. அது அறிகுறியற்று கடந்து செல்வதற்கு உங்கள் நோயெதிர்ப்பு ஆற்றல் மிக வலிமையாக இருக்க வேண்டும்.

உயிர் காக்கும் யோகப் பயிற்சிகள்

ஈஷா தியான அன்பர்களாகிய நீங்கள், இத்தகைய காலகட்டங்களில் உங்களுக்கு பயிற்றுவிக்கப்பட்ட யோகப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்வது மிக அவசியமான ஒன்று. இந்த யோகப் பயிற்சிகள் ஆன்மீக ரீதியாக உங்களை மேம்படுத்தும், உங்கள் முதுகு வலி அல்லது தலை வலியை நீக்கும், அன்றாட வாழ்க்கையின் செயல்திறனை மேம்படுத்தும் என்று பல்வேறு விஷயங்களை நீங்கள் நினைத்திருக்கக்கூடும். ஆனால் அவற்றை உயிர் காக்கும் கருவிகளாக நீங்கள் ஒருபோதும் பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் மிகச்சரியாக அவை அவ்வாறுதான் இருக்கின்றன. உங்கள் பயிற்சி தொடர்ந்து நடப்பதாக இருந்தால், எல்லா நேரங்களிலும் நீங்கள் அதை உயிர்ப்போடு வைத்திருந்தால், வைரஸால் ஏற்படக்கூடிய பாதிப்பை மற்றவர்களைக் காட்டிலும் உங்கள் உடல் நிச்சயம் சிறப்பாகவே எதிர்கொள்ளும்.

யோகப் பயிற்சிகளோடு சேர்த்து நிலம் மற்றும் பிற பஞ்சபூதங்களோடு தொடர்பில் இருப்பது, மிகப்பெரிய ஒரு வித்தியாசத்தை உருவாக்கும். அதன் பயன்களை உணர்ந்தவர்கள் கட்டாயம் பயிற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 90-120 நிமிடங்கள் ஏதாவது பயிற்சிகளை கட்டாயமாக செய்ய வேண்டும் - அது சூரிய கிரியா, சக்திசலன கிரியா, ஷாம்பவியாக இருக்கலாம் அல்லது குறைந்தபட்சம் சிம்ம கிரியா, சாஷ்டாங்கா மற்றும் மகராசனாவாக இருக்கலாம். குறிப்பாக உங்களில் சக்திசலன கிரியா பயிற்சி செய்பவர்களுக்கு, உங்கள் உடல் அமைப்பு தன்னைத்தானே சீரமைத்துக் கொள்ளும் விதத்தில் ஒரு மாபெரும் வித்தியாசம் இருக்கும்.

யோகக் கருவிகளை உலகுக்கு அர்ப்பணித்தல்

இன்னும் சில நாட்களில் சர்வதேச யோகா தினம் வர இருக்கிறது. இந்த வருடம், முற்றிலும் வித்தியாசமான ஒரு முக்கியத்துவத்திற்கு இது உயர்ந்திருக்கிறது. உலகில் யோகப் பயிற்சிகளின் முக்கியத்துவம் குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்து வருகிறது. எனவே நாம் இணையவழியாக யோக வீரர் பயிற்சி செயல்முறையை வழங்கவுள்ளோம். உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கானவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு, இந்த பயிற்சிகள் முடிந்தவரை பலருக்கும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.

"நான் நன்றாக இருக்கிறேன்" என்பது இந்த காலக்கட்டத்திற்கு போதாது. ஏனெனில் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் பலரும் நோயுற்று இருக்கிறார்கள் என்றால், ஏதோ ஒரு வகையில் அதை அவர்கள் நமக்கும் கொடுக்கக்கூடும். எனவே நம்மை சுற்றியிருக்கும் அனைவரும் நன்றாக இருப்பதுவும் கூட மிக முக்கியமான ஒன்று. இது நிகழ்வதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், நாம் அளித்துள்ள நோயெதிர்ப்பை மேம்படுத்தும் உணவு மற்றும் பயிற்சி உதவிக் குறிப்புகளை நீங்கள் பின்பற்றுவதுடன், முடிந்தவரை அத்தனை பேரிடமும் பகிர்வதுதான். இதுதான் தற்போது மிக முக்கியமாக தேவைப்படும் ஒன்று.

சரியானவற்றை செய்யுங்கள்

நீங்கள் தனித்தன்மையானவர் என்பது நீங்கள் உருவாக்கியுள்ள ஒரு மாயை. உயிருக்கு உலகளாவிய தன்மை உள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த வைரஸ் அதை மிக கடுமையான முறையில் கற்றுக் கொடுக்கிறது. உயிர்கள் எவ்வாறு ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை கற்றுக்கொள்ள இதுவே தருணம். எனவே குறிப்பிட்ட நேரத்தை செலவழித்து இந்த கருவிகளை தினமும் மூன்றிலிருந்து ஐந்து பேர்களிடமாவது பரப்புங்கள். உங்களால் அதிகமாக முடியும் என்றால், தயவுசெய்து உங்கள் திறனைப் பயன்படுத்துங்கள்.

நீங்கள் வெறுமனே எளியதொரு பயிற்சியைக் கற்பிக்கவில்லை - இதன் மூலம் நீங்கள் மக்களின் உயிரையே காப்பாற்றக்கூடும்.

நீங்கள் அனைவரும் கருவிகளாக மாற வேண்டியது மிக அவசியமாகிறது. ஏனெனில், நீங்கள் வெறுமனே எளியதொரு பயிற்சியைக் கற்பிக்கவில்லை - நீங்கள் மக்களின் உயிரையே காப்பாற்றக்கூடும். தயவுசெய்து இது உங்களுக்கும் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நிகழச் செய்யுங்கள்.

நாம் எத்தகைய மனிதர்களாக இருக்கிறோம், எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறோம் என்பதை எழுந்து நின்று காட்டுவதற்கு இதுவே தருணம். இது விரக்தி, மனஅழுத்தம் அல்லது நம்பிக்கையின்மைக்கான நேரம் அல்ல. இது அமைதியாக, சமநிலையோடு இருந்து சரியானவற்றை செய்வதற்கான நேரம்.