கிருஷ்ணனுக்கு இன்னும் நேரம் இருந்திருந்தால்...

லீலா - 155
நம் வாழ்க்கையில் விளையாட்டுத்தனத்தை கொண்டுவருவதன் மகத்தான நன்மை என்ன, கிருஷ்ணனின் வாழ்க்கையில் இன்னும் கொஞ்சம் நேரம் இருந்திருந்தால் என்ன செய்திருப்பான் என்பதைப் பேசும் இப்பதிவில், உலகிலுள்ள அனைத்து உயிர்களையும் ஒன்றாக பார்க்கும் ஓர் ஆன்மீக செயல்முறையையும் அறியலாம்!

உங்களுக்கெல்லாம் ஒன்று கூறுவேன்!

வாழ்க்கையில் கொஞ்சம் லீலையைக் கொண்டு வாருங்கள். விளையாட்டுத்தனமாய் இருங்கள். விளையாட்டுத்தனமாய் வாழுங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன், உற்றார் & பெற்றோர், உறவுகளுடன் விளையாட்டுத்தனமாகவே இருங்கள். அவ்வளவுதான் விஷயம்!

இதன் மூலம் நாம் எங்கே சென்றடைவோம் என்றெல்லாம் எண்ண வேண்டாம். வாழ்க்கையில் விளையாட்டுத்தனத்தைக் கொண்டுவந்து விட்டால், அப்புறம் நீங்கள் எங்கே போய்ச் சேரவேண்டுமோ அங்கே உங்களைக் கொண்டு சேர்ப்பது என் வேலை. உங்களுடைய அறுதியான இலக்கை எட்டவைப்பது குருவின் வேலை.

கட்டக் கடைசியில் கிருஷ்ணன் இந்த உலகில் ஐயமற எதை நிலைநாட்டுவதற்காக வந்தான்? கிருஷ்ணனுடைய வாழ்க்கையின் சாரம்தான் என்ன?

அவன் தன்னையே ஒரு வாழும் வரலாறாக, பல வழிகளில் முன்னுதாரணமாக மக்களை உத்வேகப் படுத்தும் பொருட்டு தன்னைத் தானே தோலுரித்துக் காட்டினான். தன்னை ஒரு திறந்த புத்தகமாகக் காட்சிப்படுத்தினான். எதை நிலை நாட்டுவதற்காக?

தெய்வீகம் எல்லா உயிர்களிலும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதை நிலைநாட்டுவதற்காகத்தான்! எல்லா உயிர்களிலும் தெய்வீகம் இருக்கிறது என்பதை உலகுக்கு அறிவிக்க அவன் போராடினான்.

க்ஷத்திரியர்களான ஆளும் வர்க்கத்தையும், அந்தணர்களான ஆன்மிக வர்க்கத்தையும் ஒருங்கிணைக்கப் பாடுபட்டதிலேயே அவன் காலம் முழுக்கக் கரைந்துவிட்டது.

போதுமான நேரம் இருந்திருந்தால் அனைத்து உயிர்களுக்குள்ளும் தெய்வீகம் இருப்பதை அனைவருமே எளிதில் உணர்ந்து கொள்ளக் கூடிய ஒரு முழுமையான போதனை முறையை அவன் வகுத்து அளித்திருப்பான்.

வாழ்க்கை அனுபவத்தில், ஒவ்வொரு உயிரிலும் சூட்சுமமாகப் பொதிந்து இருக்கும் தெய்வீகத்தை வெளிக்கொணர்வதிலும், அவ்வாறு தங்களில் இருக்கும் தெய்வீகத்தை உணர விரும்பும் மக்களுக்கு உதவுவதிலுமே அவன் கவனம் மொத்தமும் குவிந்திருந்தது.

நமக்குள் தெய்வீகம் இருப்பதை உணர்வதற்கு ஒரு சிறு பயிற்சியை மேற்கொள்ளலாம்.

உயிரானது பல்லாயிரக்கணக்கான உடல் வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துகிறது. நம்முடைய அனுபவத்தில் பிற மனிதர்களுடைய உயிரைத்தான் உயிராக உணர்கிறோமே தவிர மற்ற உயிர்களை மனிதர்கள் அளவுக்கு அங்கீகரிப்பதில்லை.

நம்மைத் தவிர மற்ற மனிதர்கள் மட்டுமே நமக்குச் சமமான பிற உயிர்கள், மற்ற உயிரினங்களோ...?

நாய்கள்? ஓரளவுக்கு அவற்றுக்கும் உயிர் இருக்கின்றன.!

பூனைகள்.. ம்ஹ்ம்.. பரவாயில்லை, அவற்றையும் இன்னொரு வகை உயிரினங்களாக என்று ஏற்றுக் கொள்ளலாம்!

பூச்சியினங்கள்..? பூச்சியினங்களா... ஓஹ்... அவை இறப்பதற்காகத்தானே பிறப்பு எடுத்திருக்கின்றன...?

பாம்புகள்... ஐயோ... பாம்புகளா? அவற்றை எங்கே பார்த்தாலும் உடனே கொன்றாக வேண்டும்.

மனிதர்களின் புரிதல் மற்றும் வாழ்க்கை அனுபவங்களுக்கு ஏற்ப பிற உயிர்கள் எல்லாம் இப்படித்தான் வகைப்படுத்தப்பட்டிருக்கின்றன.

மனிதன் உயிர்களுக்குள் இத்தனை பாகுபாடுகளை உருவாக்கியிருக்கிறான். ஓர் உயிரை உயர்வாகவும், இன்னோர் உயிரைத் தாழ்வாகவும் கருதுகிறான்.

மனிதர்களின் இந்தப் பாரபட்சமான நடத்தை அவர்களுடைய முன்னேற்றப் பாதையில்தான் பெரிய தடைச்சுவரை ஏற்படுத்தி இருக்கிறது.

வாழ்க்கையின் முடிவான இலக்கை நாம் அறிந்து கொள்ள வேண்டுமெனில் இந்தத் தடைச்சுவரை ஒழித்துக் கட்டவேண்டும். அதனைக் கடந்தாகவேண்டும்.

இந்த உலகில் உயிர் என்று ஒன்றைப் புரிந்து கொள்வது வெகு எளிது. உலகில் வெகு சிலரே அதை உயிர் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது நாம் உயிர் தரித்திருப்பதற்குப் பல வகைகளில் காரணமான நாம் உண்ணும் உணவேதான் அது!

ஒரு நாள், ஒரே ஒரு நாள் உணவை உட்கொள்ளாவிடில் நாம் கடவுளைப் பற்றி ஒரு கணப்பொழுது கூட நினைக்க மாட்டோம். உணவைப் பற்றித்தான் நினைப்போம். கடவுளே கண்ணெதிரில் வந்து விட்டாலும் ‘குறைவில்லாமல் சாப்பாடு குடுப்பா’ என்பதுதானே நமது கோரிக்கையாக இருக்கும்?

உங்கள் வாழ்க்கை அனுபவத்தை வைத்துப் பார்த்தோமானால், உணவானது கடவுளைக் காட்டிலும் முக்கியமான அங்கம் வகிக்கிறது.

கடவுளிடம் கோரிக்கை வைத்தால் வாழ்நாள் முழுக்கத் தடையின்றி உணவு கிடைக்கும் என்று உங்களிடம் யாரோ கூறியிருக்கிறார்கள். ‘கடவுளே எனக்கு ஒவ்வொரு வேளையும் உணவு அளி’ என்பதுதானே உலகம் முழுக்க, மக்கள் கடவுளிடம் சமர்ப்பிக்கும் பிரார்த்தனையாக இருக்கிறாது.

நாம் கடவுளிடம் வேண்டிக் கொண்டால் வாழ்க்கையில் நமக்குத் தங்கு தடையின்றி உணவு கிடைக்கிறது. மெத்தச் சரி! ஆனால் நம் அனுபவத்தில் வாழ்க்கை என்பது பெரும்பாலும் உடல் சார்ந்ததாகவேதானே அமைந்திருக்கிறது?

ஏதோ ஒரு சில கணங்களில் உணர்வு பூர்வமாக வேறொரு பரிமாணத்தை உணர்ந்திருக்கலாம். ஆனால் வாழ்க்கை என்பது பெரும்பாலும் உடல் சார்ந்த அனுபவம்தான்! உங்கள் உடலைத் தான் ‘நான்’ என்று சொல்லிக் கொள்கிறீர்கள்.

ஆக உங்கள் உடலின் ஆதாரமானது உணவுதானே அன்றி கடவுள் இல்லை. எப்படி உண்கிறீர்களோ, என்ன உண்கிறீர்களோ அதுதான் உங்கள் உடலாகிறது. அதுதான் நீங்கள்!

ஆக உங்களுள் இருக்கும் தெய்வீகத்தை உணர்வதற்கு ஓர் எளிதான வழி, உணவு! நீங்கள் உண்ணும் உணவு!

இது நூறு சதவிகிதம் உண்மை! நீங்கள் உண்ணும் உணவு எத்தகையதாக இருந்தாலும், என்ன மாதிரியான உணவை உட்கொண்டாலும் அந்த உணவை, ஒரு சில மணி நேரங்களுக்குள் மனிதனாக உருமாற்றும் சக்தி உங்களுக்கு உள்ளது.

இந்த மகத்தான அற்புதமானது உங்களில் தினம், தினம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இல்லையா? ஒரு நிலக்கடலையை உண்பீர்களேயானால் பரிணாமத்தின் விதிகள் எல்லாவற்றையும் உடைத்துக் கொண்டு அந்த நிலக்கடலை மனிதனாக மாறுகிறது இல்லையா?

நிலக்கடலையானது வெறும் நிலக்கடலையாகவே இருந்திருந்தால் அதனால் இவ்வாறு உருமாறியிருக்க முடியாது. அல்லது உடலானது நுரையீரல், இதயம், சிறுநீரகம், ஈரல் போன்ற உறுப்புகளின் ஒட்டு மொத்த சேர்க்கையாகவே இருந்தாலும் இவ்வாறு நிலக்கடலை மனித உடலாக உருமாறியிருக்காது.

படைப்புக்கான ஆதாரம் என்று எதை நீங்கள் கருதுகிறீர்களோ அது இந்த நிலக்கடலையில் அதிர்வுடன் பொதிந்திருக்கிறது. அதனால்தான் அதை நீங்கள் சாப்பிட்ட உடன் சட்டென்று அது மனிதனாக உருமாறுகிறது.

அந்த நிலக்கடலையானது மிகவும் புத்திசாலித்தனமானது கூட! அதனை ஒரு பன்றிக்கு உணவாக அளித்தால் அது பன்றியாக மாறுகிறது. அதே நிலக்கடலையை ஒரு செம்மறி ஆட்டுக்குக் கொடுத்தால் அது செம்மறி ஆடாக மாறுகிறது. உங்கள் உடலுக்குள் அந்த நிலக்கடலையை அனுப்பினால் அது நீங்களாக மாறுகிறது. எனவே அது ஒன்றும் சாதாரண நிலக்கடலை அல்ல. பயங்கரமான புத்திசாலி. அதே நேரத்தில் அபரிமிதமான சக்தியை உள்ளடக்கியதும் கூட!

நாளைக்கே இந்த உலகம் மொத்தமும் வறண்டு விட்டது என்றே வைத்துக் கொள்வோம். உங்களிடம் ஒரே ஒரு நிலக்கடலைதான் உள்ளது. இருந்தாலும் ஒரு சில ஆண்டுகளிலேயே அந்த நிலக்கடலை உலகம் முழுவதையும் பசுமையாக மாற்றிக்காட்டும். அந்த அளவுக்கு நிலக்கடலையானது சக்தி வாய்ந்தது.

இப்படிப்பட்ட தெய்வீகத்தன்மை வாய்ந்த நிலக்கடலையானது உதாசீனப்படுத்தப்பட்டே வந்திருக்கிறது. ஒரு நாளும் இது தொழப்படவில்லை. ஒரு நாளும் இது அங்கீகரிக்கப்படவில்லை.

வெகு சிலரே தங்களது உள்ளங்கையில் ஏந்தப்பட்ட சாதாரணமானதொரு நிலக்கடலையானது எவ்வளவு அதிர்வுகளை வெளிப்படுத்த இயலும் என்பதைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

உள்ளங்கையில் ஒரு நிலக்கடலையை ஏந்துங்கள். பெண்கள் இடது உள்ளங்கையிலும், ஆண்கள் வலது உள்ளங்கையிலும் ஏந்துங்கள். உள்ளங்கையை திறந்து வைத்துக் கொள்ளுங்கள்.

முழுக்கவனத்தையும் நிலக்கடலையின் மீது செலுத்துங்கள்.

இதுதான் உங்கள் உயிரின் விதை. இந்த விதைதான் உங்கள் வாழ்க்கையின் அடித்தளம். இந்த விதைதான் கோவிந்தன், கோபாலன், சங்கரன், ஷம்போ என்று அனைத்துக் கடவுளர்களின் உருவகங்களாகவும் உள்ளது. இதுதான் உங்கள் உயிருக்கு ஆதாரமான ஒன்று. இதுதான் கடவுளாகவும் வழிபடப்படுகிறது.

இந்தக் கடலை விதையை உங்கள் கண்ணுக்கு நேராக வைத்து உற்று நோக்குங்கள். எவர் ஒருவர் வாழ்க்கையின் ஆதார அம்சத்தை உதாசீனப்படுத்துகிறாரோ அவர் தமது வாழ்க்கையின் உச்ச இலக்கையும் தவற விடுகிறார்!

நிலக்கடலை விதையை மென்மையாக, நிதானமாக எடுத்து உங்கள் நாக்கின் மீது பொருத்துங்கள். கண்களை மூடிக்கொள்ளுங்கள். நிலக்கடலை விதையை நாக்கால் உங்கள் வாயின் மேலண்ணத்தில் அழுத்துங்கள். உங்கள் கவனமானது புருவங்களின் மையத்தில் நிலைக்கட்டும்.

மிக மெதுவாக இந்தத் தெய்வீக விதையைச் சுவையுங்கள். இந்த நிலக்கடலை விதையை உங்கள் உயிரின் ஆதாரமாக ஆக்குங்கள். இந்தத் தெய்வீக விதையை உங்களில் ஒரு பகுதியாக மாற்றுங்கள்.

இந்தத் தெய்வீக விதையானது உங்களுக்குள் உருகிக் கரையட்டும். தெய்வீகமானது உங்களது இயல்பாகவே மாறட்டும்.

உங்களது உடல் இப்போது தெய்வீகச் சக்தியுடன் திகழ்கிறது. உங்களது உடல் இந்தத் தெய்வீக சக்தியின் காரணமாகத்தான் மலர்ந்திருக்கிறது.

தெய்வீகமானது தன்னை இழந்து நீங்களாக மாறி உள்ளது. உங்களது உடலானது இந்தத் தெய்வீகத்தன்மைக்கு ஈடாக வாழட்டும். உங்களது வாழ்க்கை லீலையாகவே அமையட்டும்.

ஆசிர்வாதங்கள்!

(முற்றும்)