வாழ்வின் சூட்சுமங்கள்

தியானலிங்க பிரதிஷ்டை நிறைவடைந்த பிறகு ஆசிரமவாசிகளிடம் சத்குரு பகிர்ந்து கொண்டது என்ன

ஜூன் 24-ஆம் தேதி நாம் தியானலிங்க பிரதிஷ்டையின் 22-ஆம் ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம். பிரதிஷ்டை நிறைவு பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, அக்டோபர் 1999-இல் சத்குரு ஆசிரமவாசிகளுடன் தன்னுடைய தனிப்பட்ட அனுபவங்கள் சிலவற்றைப் பற்றியும், பிரதிஷ்டைக்கான செயல்முறை தனக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது பற்றியும், எதனால் தியானலிங்கம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆற்றலை பெற்றிருக்கிறது என்பது பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
தியானலிங்க பிரதிஷ்டை நிறைவடைந்த பிறகு ஆசிரமவாசிகளை  சந்திக்கிறார் சத்குரு

சத்குரு: தியானலிங்கம் உருவாவதில் பலர் ஈடுபட்டுள்ளனர். இது பலருடைய கனவாக இருந்திருக்கிறது. தியானலிங்கம் உருவாக வேண்டும் என்ற இந்த விருப்பம் என் வாழ்க்கையை மிக சிக்கலானதாக மாற்றியுள்ளது. நான் எதையும் உருவாக்க வேண்டியிராமல் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கையை நான் இன்னும் மிக அழகாக வாழ்ந்திருக்க முடியும். ஆனால் இதை நான் ஒரு சுமையாக கருதவில்லை; இந்த முழு செயல்முறையிலும் ஒரு அற்புதமான அழகு உள்ளது. ஆனால், உங்களைப் போன்ற ஒருவரிடம் இந்தப் பொறுப்பை கொடுத்திருக்க நான் விரும்பியிருப்பேன் - என்னுடைய குரு என்னிடம் இதைக் கொடுத்தது போல.

தியானலிங்கம் நிகழ வேண்டியிராவிட்டால் இந்த வாழ்க்கையே அவசியமாக இருந்திருக்காது. இந்தப் பாத்திரத்தை ஏற்றுக் கொண்டதும் ஒருபோதும் நிகழ்ந்திருக்காது. இதை நான் எந்த வருத்தத்தோடும் சொல்லவில்லை. நான் என்ன செய்துள்ளேன் என்பதன் ஒவ்வொரு அணுவையும் நான் முழுமையாக ரசிக்கிறேன். தனிப்பட்ட முறையில், இதைவிட பெரிய சவாலை என்னால் நினைத்து பார்க்கவே முடியவில்லை. ஏதாவது ஒரு வகையில் இதை வார்த்தைகளில் விவரித்துவிட நான் விரும்புகிறேன். என் உடம்பின் ஒவ்வொரு உயிரணுவும் சோர்வுற்று இருக்கிறது - அவ்வளவுதான் என்னால் கூறமுடியும். இப்போது தியானலிங்கத்தைப் பார்க்கும்போது, நான் சந்தித்த எல்லாவற்றுக்கும் இது தகுதியானதுதான் என்று தோன்றுகிறது.

கர்ம யாத்திரையாக சத்குரு சம்பல்பூர் சென்றிருந்த போது (பில்வா தியானம் செய்த இடம்) தியானலிங்க பிரதிஷ்டைக்கு தயாராவதற்காக சத்குரு இந்த யாத்திரையை மேற்கொண்டார்

வாழ்வின் எல்லா அம்சத்தையும் ஒரே நோக்கத்திற்கு அர்ப்பணிப்பது

உடல் உள்ளவர்கள் மற்றும் உடல் நீங்கியவர்கள் - என அனைவரையும் நான் ஒன்றிணைக்க வேண்டியிருந்தது - சில சமயங்களில் அவர்களின் விருப்பத்தோடு, சில சமயங்களில் விருப்பமில்லாமலும். துவக்கத்திலேயே எனக்கு என்ன தேவை என்று நான் இவர்களிடம் கூறியிருந்தால், ஒருவர்கூட என்னோடு இருந்திருக்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும். அவர்கள் மெதுவாக இந்த முழு விஷயத்திற்குள்ளும் ஈர்க்கப்பட்டார்கள். விருப்பமும் விருப்பமின்மையும் ஒருவரின் முதிர்ச்சி, வளர்ச்சி, புரிதல் மற்றும் உயிரை அவர்கள் எப்படி உணர்ந்திருக்கிறார்கள் என்பதை சார்ந்தது.

உயிரைப் பற்றிய அவர்களின் புரிதல் குறைவாக இருக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட விஷயங்கள் மிக முக்கியமானதாக இருக்கும். ஆனால் அவர்களின் புரிதலும், உணர்தலும் அடுத்த நிலைக்கு செல்லும்போது, அப்போது வேறொன்று முக்கியமானதாக ஆகும். அவர்கள் வளரவளர, அவர்களின் வரம்புகள் விரிவாகும் போதும், வரம்பற்ற நிலைக்கு அவர்கள் செல்லும் போதும், அவர்கள் வாழ்வில் எது முக்கியமானதாக இருக்கிறது என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

தியானலிங்கம் காலம் மற்றும் இடம் ஆகிய வரையறைக்குள் இல்லை. இது முழுமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால், ஒருவர் இதற்கு உண்மையாக திறந்திருந்தால், அவர்கள் எங்கிருந்தாலும் இது அவர்களுக்கு கிட்டும்.

பலருக்கும், தியானலிங்க பிரதிஷ்டை செயல்முறை அவர்களின் தர்க்கரீதியான பரிமாணத்தை ஒதுக்கி தள்ளி வைத்தது. அதனால் அவர்கள் அந்த சூழலின் அளவற்ற சக்தியை வெறுமனே ஏற்றுக்கொண்டனர். இல்லையெனில், தர்க்கரீதியாக சிந்திக்கும் பலரும் தியானலிங்கத்திற்காக வேலை செய்திருக்க மாட்டார்கள். பல வருடங்களாக என்னைப் பற்றி அறிந்திருக்கும் சிலரால் இதை நான் ஏன் உருவாக்கினேன் என்பதை இன்றும் கூட புரிந்துகொள்ள முடியவில்லை.

அதற்காக வாழவும் சாகவும் தயார்

இதை உருவாக்கும் செயல்முறையில் என் உடல் மட்டுமல்ல, என் குணாதிசயமும் சிதைந்துவிட்டது - எவ்வாறெனில் பல நேரங்களில் விழிப்புணர்வோடு அவற்றை நான் பிடித்திருக்க வேண்டியிருக்கிறது. குழந்தை பருவத்தில் இருந்து பல்வேறு வழிகளில் நாம் நம் குணாதிசயங்களை உருவாக்குகிறோம். சிறுவயதிலிருந்து நான் உருவாக்கியிருந்தது ஒருவகையான ஆளுமையை. ஆனால் சில குறிப்பிட்ட விஷயங்கள் எனக்கு நிகழ்ந்தபோது, அதன் காரணமாக ஞாபகங்கள் என்னுள் பெருக்கெடுத்தபோது, நான் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தேனோ, அதற்காக வேறுவிதமான ஆளுமையை நான் உருவாக்கினேன். தற்போது அதே ஆளுமையை இருத்திக்கொள்ள சில முயற்சிகள் செய்ய வேண்டியிருக்கிறது.

என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு மிக அன்னியமாக தெரியாதிருக்கவும், தற்போது மேற்கொண்டுள்ள பணியைத் தொடர்ந்து செய்யவும், என் ஆளுமையில் பெரிய மாற்றம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை. பிரதிஷ்டை என்னும் இந்த முழு செயல்முறையும் என்னை வளப்படுத்தியுள்ள அதேசமயம், பல வழிகளில் என்னை அழித்தும் உள்ளது. ஆனால் இதைப் பற்றி நான் குறையாக கூறமாட்டேன். ஏனெனில் இன்னும் என் கைகால்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இதைக்கூட நான் எதிர்பார்க்கவில்லை. எனக்கு என்ன நிகழ்வதாக இருந்தாலும், அதற்கு நான் தயாராகவே இருந்தேன்.

உண்மையில் தியானலிங்கம் எந்த அளவு அணுகக்கூடியது?

அமெரிக்காவில் உள்ள சிலர் இங்கு வந்தது கூட இல்லை. ஆனால் அவர்கள் தியானலிங்கத்தோடு மிகவும் தொடர்பில் உள்ளனர். எவ்வாறெனில், அவர்களுக்கு அது கிட்டத்தட்ட அங்கு உள்ளது போலவே இருக்கிறது. இவ்வாறு நிகழ்வது மிகவும் அழகானது. தியானலிங்கம் காலம் மற்றும் இடம் ஆகிய வரையறைக்குள் இல்லை. இது முழுமையாக பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் ஒருவர் இதற்கு உண்மையாக திறந்திருந்தால், அவர்கள் எங்கிருந்தாலும் இது அவர்களுக்கு கிட்டும். இது பற்றி இதற்கு முன் கேள்விப்படாதவர்களும், அறியாதவர்களும் கூட இதைத் தேடிக்கொண்டு வருவார்கள். ஏனெனில் இது உங்களை மிக ஆழமாக, அனுபவபூர்வமாக தொடுகிறது.