சிறப்புக் கட்டுரை

கர்மவினையை கரைப்பதற்கான சிறந்த வழி  - விரைவில் கரைக்கத் தொடங்குவதன் பயன்

பல்வேறு விதமான கர்மவினைகள், உங்களது கர்ம பாரத்தை சம்யமா தியானம் எப்படி குறைக்கிறது மற்றும் உங்களின் எந்தவித சேகரிப்புகளைக்காட்டிலும், உண்மையான உணர்திறன் மற்றும் விழிப்புணர்வின் சக்தி ஏன் மதிப்பு வாய்ந்ததாக உள்ளது என்பதை சத்குரு ஆராய்கிறார்.

சேகரிப்புகளின் சுமை

அறிவாற்றலுக்கும், அறிந்திருத்தலுக்கும் இடையில் வேறுபடுத்துப் பார்க்கும் திறன், ஒருவரது வாழ்வில் நிகழக்கூடிய மாபெரும் வாய்ப்பாக இருக்கிறது. அறிவாற்றல் உங்களை எப்போதும் புத்திசாலியாகத் தோன்றச் செய்கிறது. உங்களைச் சுற்றிலும் இருக்கும் மக்களிடம் இல்லாதவகையில், ஏதோ ஒன்றைக்குறித்த ஞாபகம் உங்களுக்கு இருக்குமேயானால், அவர்களைவிட அதிக புத்திசாலியாக இருப்பதுபோல் நீங்கள் தோன்றுவீர்கள். புரிந்துணர்தலையும், கூர்கவனத்தையும்விட, ஞாபகம் அதிக மதிப்புடையது என்ற கண்ணோட்டத்தை உருவாக்கியதன் மூலம், மனித குலத்துக்கு எதிராக நாம் ஒரு குற்றம் இழைத்துள்ளோம்.

மழலையர்பள்ளியிலிருந்தே, உங்களது ஞாபகத்துக்காகத்தான் நீங்கள் வெகுமதி அளிக்கப்பட்டீர்கள். ஆசிரியர் கூறியதில் என்ன தவறு இருந்தது என்று நீங்கள் புரிந்துணர்ந்த காரணத்துக்காக, யாரும் உங்களுக்கு மதிப்பெண்கள் வழங்கவில்லை. ஆகவே காலப்போக்கில், ஞாபகம்தான் மிகுந்த மதிப்பு வாய்ந்தது என்ற நம்பிக்கைக்கு நீங்கள் வந்துவிட்டீர்கள். அறிவாற்றல் என்பது ஒரு சேகரிப்பு; மற்றும் நீங்கள் சேகரிப்பது என்னவாக இருந்தாலும், அது எவ்வளவு மதிப்பு வாய்ந்ததாகத் தோன்றினாலும், அது சமூகரீதியாக மட்டுமே தொடர்புடையது. உயிரின் இருத்தலின்படி, தேடுதலுடைய ஒருவருக்கு அறிவாற்றலில் அர்த்தம் எதுவுமில்லை ஏனென்றால் அது உங்களை எந்தவிதத்திலும் மேம்படுத்துவதில்லை. அது சுற்றியிருக்கும் மக்களிடையே மட்டும் உங்களை மேம்படுத்துகிறது.

அறிவாற்றல் என்பது ஒரு சேகரிப்பு; மற்றும் நீங்கள் சேகரிப்பது என்னவாக இருந்தாலும், அது எவ்வளவு மதிப்பு வாய்ந்ததாகத் தோன்றினாலும், அது சமூகரீதியாக மட்டுமே அர்த்தமுள்ளது. உயிரின் இருத்தலின்படி, தேடுதலுடைய ஒருவருக்கு அறிவாற்றலில் அர்த்தம் எதுவுமில்லை.

பருப்பொருளான உடல் முதற்கொண்டு, நீங்கள் சேகரிக்கும் மற்ற ஒவ்வொரு விஷயம் வரைக்கும், நீங்கள் அதனை உங்களுடனேயே சுமக்கவேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, ஒரு 25 கிலோகிராம் எடையுள்ள கிரீடத்தை உங்கள் தலை மீது நாம் சூட்டினால், அது தங்கமா அல்லது பாறையா என்பது பொருட்டல்ல – சுமை ஒன்றுதான். இருப்பினும், அவ்வளவு கனமான ஒரு கிரீடத்தை நீங்கள் அணிந்திருந்தால், உங்களைச் சுற்றிலும் இருப்பவர்கள், “வாவ், இதோ ஒரு அரசி!”, என்று நினைப்பார்கள். அறிவாற்றல் உடையவர்களுக்கும் இதுதான் நிகழ்கிறது; அது பிழைப்பு நோக்கங்களுக்கும், உங்களைச் சுற்றிலும் செயல்கள் நடைபெறவும் பயன்படலாம், ஆனால் உள்தன்மையின் பரிமாணங்களில் நீங்கள் யார் என்பதில் அதற்கு மதிப்பீடு கிடையாது. அங்கே உங்களுக்கு என்ன தெரிந்திருக்கிறதோ, அதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்; மற்றும் உங்களுக்கு என்ன தெரியவில்லையோ, அதனை நீங்கள் அறியவில்லை – அவ்வளவுதான்.

உங்கள் கோப்பையை வெறுமையாக்குவதன் அவசியம்

ஒரு முறை இது நிகழ்ந்தது. சங்கரன்பிள்ளை மனோவியல் சிகிச்சை மேற்கொண்டார். கடினமான, மிகக் கூடுதல் கட்டணத்துடன் ஆறு மாதங்கள் சிகிச்சை எடுத்தபிறகு, ஒரு நாள் மன நல மருத்துவர் அறிவித்தார், “இப்போது நீங்கள் உண்மையிலேயே நன்றாக இருக்கிறீர்கள். இனிமேல் இந்தச் சிகிச்சையை நீங்கள் தொடரவேண்டியதில்லை.” சங்கரன்பிள்ளை மிகவும் வருத்தமாகக் காணப்பட்டார். மனநல மருத்துவர் கேட்டார், “ என்ன பிரச்சனை? உங்களது மனநோய் மறைந்துவிட்டது. ஏன் வருந்துகிறீர்கள்?” சங்கரன்பிள்ளை பதிலளித்தார், “ ஆறு மாதங்களுக்கு முன்பு, நான் கடவுளாக இருந்தேன் இப்போது நான் எதுவுமில்லை.” அறிவாற்றல் இப்படித்தான் இருக்கிறது.

நீங்கள் கடவுள் என்று உங்களிடம் கூறமுடியும், நீங்களும் சிறிது காலத்துக்குப் பெருமையுடன் சுற்றிவரலாம், ஆனால் வாழ்க்கைக்கு அதற்கே உரிய வழிகள் உண்டு. அறிவாற்றல் மற்றும் அறிதலுக்கு இடையே வேறுபடுத்துவதற்கு, “அறிவாற்றல் என்பது என்ன? அறிதல் என்பது என்ன?” என்று காரணரீதியாகப் பிரித்துப் பார்ப்பதால், அதை நீங்கள் செய்யமுடியாது. உங்களில் பெரும்பாலோர் ஜென் கதைகள்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். பிரபலமான ஒரு கதையில், அறிஞர் ஒருவர் ஜென் குருவிடம் செல்லும்போது, அவர்களது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஜென் குரு, தேநீரை கோப்பைக்குள் ஊற்றத் தொடங்குகிறார். கோப்பை நிறைந்து வழியும்போதும் அவர் தொடர்ந்து ஊற்றுகிறார். உடனே அறிஞர் குருவிடம், “உங்களுக்கு என்னவாயிற்று? கோப்பை ஏற்கெனவே நிறைந்து வழியும்போது, மேலும் ஏன் ஊற்றிக்கொண்டே இருக்கிறீர்கள்?”, என்று கேட்கிறார். குரு பதில் கூறுகிறார், “ ததும்பி வழியும் ஒரு கோப்பையுடன் நீங்கள் வந்தால், நான் அதற்குள் என்ன ஊற்றமுடியும்? அது வீணாகத்தான் போகும்”.

புகழ்பெற்ற இந்தக் கதை முன்பு எப்போதையும்விட இப்போது மிகவும் ஏற்றதாக உள்ளது. அறிவாற்றலுடன் நீங்கள் தேங்கிப்போனால் அல்லது அடையாளப்பட்டால், உங்களால் அறிவாற்றலைப் பயன்படுத்தமுடியாது. இது ஒரு நிலையில் உண்மை, ஆனால் கோப்பை காலியாக இருக்கும் அல்லது நிறைந்திருக்கும் செயல்பாட்டின் நுட்பம் என்னவென்றால், அது வெவ்வேறு விதமான சேமிப்புப் கிடங்குகளில் உங்களுக்குள் சேமிக்கப்பட்டுள்ளது. மரபியல் ஞாபகம், மற்றும் பரிணாம வளர்ச்சி ஞாபகம் போன்று உடல்தன்மையான இயல்புடைய பல விஷயங்கள் உண்டு. இந்த பூமியில் நீங்கள் இயங்குவதற்கு, உங்களுக்குள் இருக்கும் உடல்தன்மையான ஞாபகம் தேவைப்படுகிறது.

கர்மவினையின் கண்ணாடித் தடுப்பினூடாக தகர்த்துச் செல்வது

உங்களால் என்ன செய்யமுடியும் மற்றும் செய்யமுடியாது என்பதைத் தீர்மானிக்கும் அல்லது எல்லைகள் அமைக்கும் கர்மவினை உங்களுக்குள் உள்ளது. உங்களை முன்னேற்றமடையச் செய்வதற்கு, நீங்கள் சில முயற்சிகள் செய்திருந்தால், நீங்கள் கடுமையாக முயற்சித்து, அது ஒரு இரண்டு நாட்களுக்கு பலனளிப்பதை நீங்கள் கண்டுபிடித்திருக்கலாம், ஆனால், பிறகு மீண்டும் நீங்கள் அதே சூழலுக்குள் திரும்புகிறீர்கள். இது ஏனென்றால் நீங்கள் என்ன செய்யமுடியும் மற்றும் என்ன செய்யமுடியாது என்பதை கர்மவினை முடிவு செய்கிறது.

நீங்கள் விழிப்புணர்வுடன் அதனை அணுகினால் தவிர, உங்களால் கடக்கமுடியாத எல்லைகளை உங்களது கர்மவினை உருவாக்கும். இந்த எல்லைகள் பருப்பொருளாக இல்லை, ஆகவே உங்களால் அவற்றைப் பார்க்கமுடியாது; அவைகள் கண்களுக்குப் புலப்படாத ஒரு கண்ணாடித்தகடு போன்றவை. பல நேரங்களில், பறவைகளும், பூச்சிகளும் கண்ணாடி ஜன்னலை நோக்கிப் பறக்கின்றன, ஏனென்றால் கண்ணாடி என்பது என்ன என்று புரியாமல், அவைகள் அதன்மீது மோதி, தங்களையே மாய்த்துக்கொள்கின்றன.

நீங்கள் விழிப்புணர்வுடன் அதனை அணுகினால் தவிர, உங்களால் கடக்கமுடியாத எல்லைகளை உங்களது கர்மவினை உருவாக்கும்.

உங்களுக்குள் இருக்கும் இந்தத் தடைகளை நீங்கள் விலக்கவில்லையென்றால், நீங்கள் எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்தாலும், அவைகள் நிகழாது. கர்மவினையைப் புரிந்துகொள்வதற்குப் பல வழிகள் உண்டு. அதனை  நாம் இரண்டு அம்சங்களாகப் பிரிக்கமுடியும்: சஞ்சிதா என்பது, கர்மவினையின் கிடங்கு போன்றது, மற்றும் பிராரப்தா என்பது, தற்போது நிகழ்ந்துகொண்டிருக்கும் பரிவர்த்தனைக்குரிய கர்மவினை போன்றது. அது ஒரு கடை என்பது போல் நீங்கள் நினைத்துக்கொள்ளலாம் – உங்கள் கடையில் தற்போது இருக்கும் இருப்பை நீங்கள் செலவழிக்கவேண்டும்; இல்லையென்றால், அது குளறுபடியாகிவிடும். நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருப்பதாகக் கூறும்போது, கர்மக்கிடங்கிலிருந்து  அதிகமான இருப்பு வெளிவருவதை உறுதிப்படுத்துவது முக்கியமானது.

ஆகவே, கடையில் உங்களுக்கு அதிகமான இருப்பு இருக்கும் நிலையில், தினசரி அளவில் அதை நீங்கள் விற்பனை செய்யவில்லை என்றால், நீங்கள் மிகமோசமான குளறுபடியும், தவறான நிர்வாகம் செய்ததாகவும் உணர்வீர்கள். இதைத் தவிர்ப்பதற்கு, நீங்கள் சில்லறை விற்பனையைக் குறைத்துக்கொண்டு, கர்மவினையை எரிக்காமல், அமைதியாக வாழமுடியும். கர்மக்கிடங்கின் மதகுக்கதவுகளைத் திறந்துவிட்டால், பெருமளவு இருப்புகள்  திறந்துவிடப்படும். அதன் பிறகு, நீங்கள் உண்மையிலேயே உங்கள் வியாபாரத்தை சந்தைப்படுத்தவேண்டும். எந்த இடைவெளியும் இல்லாமல், 24 மணி நேரங்களுக்கு, நீங்கள் நிறுத்தமில்லாமல் விற்றுக்கொண்டிருக்கவேண்டும். பொதுவாக, சில்லறைக் கடைகள் அளவில் சிறியவை; ஆகவே அங்கே அளவுக்கதிகமான இருப்பு இருந்தால், அது உங்கள் தலை முழுவதும் ஆக்கிரமித்துவிடும்.

சஞ்சித கர்மா: கர்மாவின் சேமிப்புக்கிடங்கை திறப்பது

நீங்கள் 33 வயதுக்குக் குறைவாக இருக்கும்பொழுது, சஞ்சிதகர்மாவைத் திறந்து, பெருமளவு இருப்பை வெளிக்கொண்டுவருவது மிகவும் எளிது, ஏனென்றால் உடலானது ஒரு குறிப்பிட்ட விதமாக வழி நடத்தப்படுகிறது என்பதுடன் அதன் காலம் தீர்ந்துகொண்டிருக்கிறது. 33 வயதுக்குக் குறைவாக இருப்பவர்களுக்கு, காலம் எச்சரிக்கை கொடுக்கக்கூடிய ஒரு கட்டத்தை உடல் இன்னமும் அடைந்திருக்கவில்லை, ஆனாலும் அது பல வழிகளிலும் கீழிறங்கிக்கொண்டு இருக்கிறது. 33 வருடங்களுக்குப் பிறகு, மூளைத்திறன் வழக்கமாகக் குறையத் தொடங்குகிறது என்று நரம்பியலாளர்கள் இன்றைக்குக் கூறுகின்றனர். இருப்பினும், விழிப்புணர்வான உலகத்துக்கான நமது சத்குரு மையம் அமைந்திருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகம், இண்டியானா பல்கலைக்கழகம், ஃப்ளோரிடா பலகலைக்கழகம், மற்றும் ஹார்வர்ட் பலகலைக்கழகம் நிகழ்த்திய ஆய்வின் முடிவுகள், ஷாம்பவி அல்லது ஷக்தி சலன கிரியா பயிற்சி செய்பவர்களுக்கு முதுமை காரணமான வீழ்ச்சிக்குப் பதிலாக, நியூரானல் செல்கள் மேம்படுவதாகக் காட்டுகின்றன.

நீங்கள் நல்ல உடல் நிலையில் இருந்து, இந்தத் திசையில் செல்வதற்கான அவசரத்தில் இருக்கும்போது, அதை நீங்கள் தள்ளிப்போடக்கூடாது.

கர்ம சம்யமா குறித்த சம்யமா வகுப்பில் பங்கேற்றவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான ஆராய்ச்சியும் இருக்கிறது. மூன்று மாத பயிற்சிக்குப் பிறகு, BDNF போன்ற பல்வேறு அம்சங்களை அளவீடு செய்தபோது, பங்கேற்பாளர்கள் அவர்களது செல்லுலார் நிலையில் சராசரியாக 6 ½ ஆண்டுகள் இளமையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இளமையாக இருப்பது என்றால், நீங்கள் அதிக பாரம் சுமக்க முடியும் என்பதுடன் கர்மக்கிடங்கிலிருந்து நாம் அதிகமாகவும் விடுவிக்கமுடியும். கிடங்கிலிருக்கும் இருப்பை நீங்கள் அப்படியே வைத்திருந்தால், நீங்கள் செய்வதெல்லாம் விற்பனையைத் தள்ளிப்போடுவது மட்டுமே. நீங்கள் நல்ல உடல் நிலையில் இருந்து, இந்தத் திசையில் செல்வதற்கான அவசரத்தில் இருக்கும்போது, அதை நீங்கள் தள்ளிப்போடக்கூடாது.

இந்த வாய்ப்பு மீண்டும் வருமா என்பது நமக்குத் தெரியாது. பெரும்பாலான மக்களுக்கு, அவர்கள் இறந்தபிறகு நிகழும் ராம நாம சங்கீர்த்தனம் மட்டும்தான் ஆன்மீகமாக இருக்கிறது. வாழ்வின் இறுதிகட்டத்தில்தான் அது வருவதாக அவர்கள் நம்புகின்றனர். அது ஆரம்பத்தில் வந்துவிட்டால், அதை சாத்தியமாக்குவது சிறந்தது. வாழ்க்கை மிகவும் சிக்கலானதாகவும், தொந்தரவு தருவதுபோலவும் தோன்றினால், அது பரவாயில்லை ஏனென்றால் தொல்லைகளைக் கையாள்வதற்கு நம்மிடம் கருவிகள் உள்ளன. உங்களுக்குள் இருக்கும் எதனையும் நீங்கள் தவிர்க்காமல் இருப்பது முக்கியம்; அவை அனைத்தும் இப்போதே வரட்டும். நீங்கள் ஆரோக்கியமாகவும், நன்றாகவும், திறனுடனும் இருக்கும்போது, எல்லா முட்டாள்தனங்களும் உங்களிடம் வரட்டும்.

ஒரு நட்சத்திரமாக மாறுவதற்காக எரிவது

நீங்கள் அதைத் தள்ளிப்போட்டால், பிறகு மற்ற பிரச்சனைகள் இருக்கின்றன. மக்கள் எதனை “அற்புதமான வாழ்க்கை” என்று கூறுகிறார்களோ, அப்படி நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கலாம்; இருப்பினும், நீங்கள் சலிப்பினால் இறந்துகொண்டிருப்பீர்கள் என்பதுதான் இதற்கான அர்த்தம். பொதுவாக, இதற்கு அர்த்தம் என்னவென்றால், நீங்கள் இந்தியாவில் இளங்கலைப்பட்டம் பெற்று, பிறகு அமெரிக்காவில் முதுகலைப்பட்டம் பெற்றீர்கள். அதன் பிறகு வீட்டிற்குத் திரும்பி, திருமணம் செய்வதற்கு முன்பு, அமெரிக்காவில் மூன்று வருடங்கள் பணி புரிந்தீர்கள். உண்மையிலேயே தொந்தரவாக இருக்கக்கூடிய இரண்டு குழந்தைகள் உங்களுக்கு உண்டு. தினமும், நீங்கள் பணியிலும், மற்றும் குழந்தைகளைக் கவனிப்பதிலும் மும்முரமாக இருக்கிறீர்கள்.,  

நீங்கள் ஒரு நட்சத்திரமாகிவிட்டீர்கள் என்றால், வாழ்வில் ஒளியும், தெளிவும் வந்துவிடுகிறது.

இருப்பினும், உங்களுக்கு அற்புதமான ஒரு வாழ்க்கை கிடைத்திருப்பதாக ஒவ்வொருவரும் நம்புகின்றனர். இந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது என்பதில்லை, ஆனால் அந்த அற்புதமான வாழ்க்கையில் உங்களைத்தவிர அனைத்தும் நிகழ்கிறது. ஒட்டுமொத்த நாடகமும் நிகழ்கிறது, ஆனால் நீங்கள் மலர்வதில்லை. “ அற்புதமான வாழ்க்கை” உங்களுக்கு வேண்டுமென்றால், அது பொருளாதாரத்துக்கு நல்லது. ஒரு “அற்புதமான வாழ்க்கை” என்றால், நீங்கள் எப்போதும் எதையாவது வாங்கிக்கொண்டும், மேலும்மேலும் வங்கிக்கடன் பெற்றுக்கொண்டும் இருக்கிறீர்கள், மற்றும் அதனால் பொருளாதாரம் செழித்துக்கொண்டிருக்கிறது.

உங்களுக்கு ஒரு அற்புதமான வாழ்க்கை கிடைத்திருந்தால், அதற்கு அர்த்தம், நீங்கள் அதிகமாகப் பொருட்களை வாங்குகிறீர்கள், மற்றும் உங்கள் பக்கத்து வீட்டுக்காரரைக் காட்டிலும் உங்கள் வீட்டிற்கு அமேசான் விற்பனையாளர் அடிக்கடி வருகிறார் என்பதால், அது பொருளாதாரத்துக்கு நல்லது. பொருளாதாரத்தை மலரச் செய்வதற்கு, நீங்கள் இயன்ற அளவுக்கு கடினமாக உழைக்கவேண்டும். கடின உழைப்பு சௌகரியமான விஷயம் அல்ல, ஆனால் கடினமாக உழைப்பதுதான் ஒரு நட்சத்திரமாகமுடியும். உங்களுக்கு ஒரு அற்புதமான வாழ்க்கை இல்லாமல்போகலாம், ஆனால் நீங்கள் உழைத்தால், உங்களால் ஒரு நட்சத்திரமாகமுடியும், அது நல்லதும்கூட. நீங்கள் ஒரு நட்சத்திரமாகிவிட்டீர்கள் என்றால், வாழ்வில் ஒளியும், தெளிவும் வந்துவிடுகிறது.

கர்மவினையைக் குறைப்பதன் பலன்கள்

அனைத்து விஷயங்களையும் உள்ளபடியே நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்பதால், மனித சமூகங்களில் மற்றவர்களுடன் ஒப்பீட்டளவில்  பிழைப்பு நடத்துவதற்கு மட்டும்  பயன்படுகின்ற சேகரிக்கப்பட்ட அறிவாற்றலை நீங்கள் சார்ந்திருக்க வேண்டியதில்லை, ஆனால், நீங்கள் தனித்திருந்தால், அது அர்த்தமற்றது. ஒரு அறிஞர் கங்கையைக் கடப்பதற்கு படகில் பயணித்த உவமை ஒன்று இருக்கிறது. சொற்ப பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு ஏழை படகோட்டி நதியைக் கடப்பதற்கு துடுப்பு போடுவான். அவனது படகில் ஏறிய அறிஞர், படகோட்டியிடம் காளிதாசரின் எழுத்துக்களைப் படித்திருக்கிறானா என்று கேட்டார். படகோட்டி, அவர் யார் என்பதே தனக்குத் தெரியாது என்று பதில் கூறினான். தற்போது படகுகள் மறைகள் மற்றும் திருகுகளால் கட்டப்படுவது போல், அந்தக் காலகட்டத்தில் கயிறுகொண்டு படகுகள் தைக்கப்பட்டிருந்தன.

உங்கள் சஞ்சித கர்மாவின் பாரத்தை நீங்கள் குறைத்தால், உங்களுக்கு நிகழும் முதல் விஷயம் என்னவென்றால், நீங்கள் அமைதியாக அமர்ந்தகணமே, கண்கூடான விஷயங்களாகிய உடலின் சுவாசம், இதயத்துடிப்பு, மற்ற உணர்ச்சிகள் உங்களது விழிப்புணர்வுக்கு வரும்.

படகு பாதியளவு நதியை மட்டுமே கடந்திருந்தபோது, தண்ணீர் உள்ளே கசியத் தொடங்கியது. படகோட்டி கேட்டான், “ ஐயா, உங்களுக்கு எப்படி நீந்துவது என்று தெரியுமா?” அறிஞர் பதிலளித்தார், “ இல்லை, எனக்கு எப்படி நீந்துவது என்று தெரியாது”. அதற்கு படகோட்டி, “ ஐயா, எப்படி நீந்துவது என்று ஒருவேளை நீங்கள் காளிதாசரிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கலாம்”, என்று கூறிவிட்டு, தண்ணீரில் பாய்ந்து நீந்திச் சென்றுவிட்டான். இப்படித்தான், பிழைப்புக்குக்கூட, அறிவாற்றலைவிட உங்களது உணர்திறன் மிக அதிக முக்கியமானதாக உள்ளது. அறிவாற்றல் உபயோகமானதுதான், ஆனால் அது உங்களை முழுமையடையச் செய்யாது.

உலகத்தை நீங்கள் கவனித்துப்பார்த்தால், துன்பமான, இறுக்கமான, வாட்டமான முகங்களைச் சுமந்திருப்பவர்கள் படித்தவர்களா அல்லது படிக்காதவர்களா? அப்படிப்பட்ட முகங்களுக்குச் சொந்தக்காரர்கள் படித்தவர்களாகத்தான் இருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் அறிவாற்றலின் தரிசு நிலங்களாக உள்ளனர். தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று அவர்கள் எண்ணுகின்றனர், ஆனால் அவர்கள் இந்தக்கணம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றனரா, இல்லையா என்பதுகூட அவர்களது உணர்வில் இல்லை. துரதிருஷ்டவசமாக, அவர்களது வாழ்வின் பெரும்பாலான நேரங்களில், அவர்கள் சுவாசிக்கின்றனரா, இல்லையா என்பதை பெருவாரியான மக்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு ஆஸ்துமா அல்லது கோவிட் இருக்கும்போது மட்டும்தான் சுவாசிப்பதைக் குறித்து அவர்கள் அறிகின்றனர்.

ஆகவே, உங்கள் சஞ்சித கர்மாவின் பாரத்தை நீங்கள் குறைத்தால், உங்களுக்கு நிகழும் முதல் விஷயம் என்னவென்றால், நீங்கள் அமைதியாக அமர்ந்தகணமே, வெளிப்படையான விஷயங்களாகிய உடலின் சுவாசம், இதயத்துடிப்பு, மற்ற உங்களது உணர்வுகளைப்பற்றி நீங்கள் விழிப்புணர்வு கொள்வீர்கள். இதற்குக் காரணம், நீங்கள் உங்கள் கர்மவினையின் இருப்பைக் (stock) குறைத்துள்ளீர்கள். நீங்கள் வெறுமனே அமர்ந்திருக்கும்போது, குறைந்தபட்சம் நீங்கள் சுவாசித்துக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியவேண்டும்.