கர்மவினையைக் குறைப்பதன் பலன்கள்
அனைத்து விஷயங்களையும் உள்ளபடியே நீங்கள் அறிந்திருக்கிறீர்கள் என்பதால், மனித சமூகங்களில் மற்றவர்களுடன் ஒப்பீட்டளவில் பிழைப்பு நடத்துவதற்கு மட்டும் பயன்படுகின்ற சேகரிக்கப்பட்ட அறிவாற்றலை நீங்கள் சார்ந்திருக்க வேண்டியதில்லை, ஆனால், நீங்கள் தனித்திருந்தால், அது அர்த்தமற்றது. ஒரு அறிஞர் கங்கையைக் கடப்பதற்கு படகில் பயணித்த உவமை ஒன்று இருக்கிறது. சொற்ப பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஒரு ஏழை படகோட்டி நதியைக் கடப்பதற்கு துடுப்பு போடுவான். அவனது படகில் ஏறிய அறிஞர், படகோட்டியிடம் காளிதாசரின் எழுத்துக்களைப் படித்திருக்கிறானா என்று கேட்டார். படகோட்டி, அவர் யார் என்பதே தனக்குத் தெரியாது என்று பதில் கூறினான். தற்போது படகுகள் மறைகள் மற்றும் திருகுகளால் கட்டப்படுவது போல், அந்தக் காலகட்டத்தில் கயிறுகொண்டு படகுகள் தைக்கப்பட்டிருந்தன.
படகு பாதியளவு நதியை மட்டுமே கடந்திருந்தபோது, தண்ணீர் உள்ளே கசியத் தொடங்கியது. படகோட்டி கேட்டான், “ ஐயா, உங்களுக்கு எப்படி நீந்துவது என்று தெரியுமா?” அறிஞர் பதிலளித்தார், “ இல்லை, எனக்கு எப்படி நீந்துவது என்று தெரியாது”. அதற்கு படகோட்டி, “ ஐயா, எப்படி நீந்துவது என்று ஒருவேளை நீங்கள் காளிதாசரிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கலாம்”, என்று கூறிவிட்டு, தண்ணீரில் பாய்ந்து நீந்திச் சென்றுவிட்டான். இப்படித்தான், பிழைப்புக்குக்கூட, அறிவாற்றலைவிட உங்களது உணர்திறன் மிக அதிக முக்கியமானதாக உள்ளது. அறிவாற்றல் உபயோகமானதுதான், ஆனால் அது உங்களை முழுமையடையச் செய்யாது.
உலகத்தை நீங்கள் கவனித்துப்பார்த்தால், துன்பமான, இறுக்கமான, வாட்டமான முகங்களைச் சுமந்திருப்பவர்கள் படித்தவர்களா அல்லது படிக்காதவர்களா? அப்படிப்பட்ட முகங்களுக்குச் சொந்தக்காரர்கள் படித்தவர்களாகத்தான் இருக்கின்றனர், ஏனென்றால் அவர்கள் அறிவாற்றலின் தரிசு நிலங்களாக உள்ளனர். தங்களுக்கு எல்லாமே தெரியும் என்று அவர்கள் எண்ணுகின்றனர், ஆனால் அவர்கள் இந்தக்கணம் சுவாசித்துக்கொண்டிருக்கின்றனரா, இல்லையா என்பதுகூட அவர்களது உணர்வில் இல்லை. துரதிருஷ்டவசமாக, அவர்களது வாழ்வின் பெரும்பாலான நேரங்களில், அவர்கள் சுவாசிக்கின்றனரா, இல்லையா என்பதை பெருவாரியான மக்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களுக்கு ஆஸ்துமா அல்லது கோவிட் இருக்கும்போது மட்டும்தான் சுவாசிப்பதைக் குறித்து அவர்கள் அறிகின்றனர்.
ஆகவே, உங்கள் சஞ்சித கர்மாவின் பாரத்தை நீங்கள் குறைத்தால், உங்களுக்கு நிகழும் முதல் விஷயம் என்னவென்றால், நீங்கள் அமைதியாக அமர்ந்தகணமே, வெளிப்படையான விஷயங்களாகிய உடலின் சுவாசம், இதயத்துடிப்பு, மற்ற உங்களது உணர்வுகளைப்பற்றி நீங்கள் விழிப்புணர்வு கொள்வீர்கள். இதற்குக் காரணம், நீங்கள் உங்கள் கர்மவினையின் இருப்பைக் (stock) குறைத்துள்ளீர்கள். நீங்கள் வெறுமனே அமர்ந்திருக்கும்போது, குறைந்தபட்சம் நீங்கள் சுவாசித்துக்கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியவேண்டும்.